பூக்கும் பூவெல்லாம், காய்த்துக் கனியானால் மரம் சுமக்காது. விதையெல்லாம், மரமானால் பூமி தாங்காது. மனதில் பல ஆசைகள் பூத்தாலும், அவையெல்லாம் கனிந்து பலன் தருவதில்லை. கோள் (கிரகம்) குறிகாட்டினால் மட்டுமே, குறிக்கோளில் வெற்றிபெறமுடியும். பிரார்த்தனையில் வெற்றிபெற, வெற்றி இலையை யும், மனமகிழ்ச்சியுண்டாகக் களிப்பாக்கையும், காயாக இருக்கும் ஆசை தேங்காமலிருக்க தேங்காயையும், முயற்சி பழுத்துக் கனிய வேண்டும் என்பதற்காக கனியையும் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறோம். மூன்றாமிடம் ஆசையையும், பதினொன்றாமிடம் ஆசை நிறைவேறுதலையும் குறிக்குமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கேள்விக்குறிகள் நிழலாடின. தான், முனைவர் பட்டம்பெறும் ஆசையால் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் வெற்றி எட்டாக் கனியாகிவிடுமோ என்ற ஐயம் உள்ளதாகவும் தெரிவித்தார். குட்ட நெல்லூர் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னம், மிருகசிரீடம் நான்காம் பாதத்தில், மிதுனத்திலமைந்தது. மூன்றாம் வீட்டோன், பதினோராமிடத்தில் உச்சம்பெற்றது. வெற்றியைக் குறிக்கும் ஆறு மற்றும் பதினொன்றாம் பாவத்தின் அதிபதியாகிய செவ்வாயே, நட்சத்திராதிபதியாக அமைந்து ஆட்சியும் பெற்றதால் போராட்டத்திற்குப் பின் வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் சனிபகவானின் பார்வை பதினொன்றாமிடத்தில் பதிவதால், காலதாமதம் உண்டாகிறது என்ற உண்மையை உரைத்தது. பிரணவத்தின் பொருளை தந்தைக்கே உபதேசம் செய்த ஸ்வாமிமலை முருகனை வழிபட்டால் வெற்றிவாகை சூடலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலனளித்தது. முனைவர் பட்டம் பெருமை சேர்த்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதருக்கு கொடுப்பினையிலும், தசாபுக்தியிலும், கோட்சாரத்திலும் கிரகங்கள், சாதகமான பலன்களைத் தருவதாக அமைகிறதா என்பதைக் கண்டறிவதே பொதுவான அணுகுமுறை. நிகழ்வு நடக்கும் முகூர்ந்தங்களை ஆளும் உபகிரகங்களால் தொல்லைகள் ஏற்படுமா என்பதையும் ஆராய்ந்தறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒருவரின் திருமணத்திற்கு சாதகமான கிரக அமைப்புகள் இருக்கும்போது உபகிரகங்களால் திருமணத்தைத் தடுக்கமுடியாது என்றா லும், அந்த திருமண நிகழ்வின் முடிவில், உறவினருக்குள் மனக்சப்பை உண்டாக்கி மகிழ்ச்சியைக் குறைத்துவிடும். முகூர்த்த லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் குளிகன் அமைந்தால், இதுபோன்ற திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும். உச்சாடனம், ஸ்தம்பனம், பேதனம் முதலான அஷ்ட கர்மம் செய்பவர்கள், உபகிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட காலத்தைக் கொண்டே மந்திரப் பிரயோகம் செய்வார்கள். அஷ்ட கர்மம் செய்யும்போது எழும் பிரசன்ன லக்னத் தில், தூமன் அமைய மாரணத்திற்கும், இந்திரதனுஷ் அமைந்தால் வசியத்திற்கும் ஏற்றவையாம். காலன், பரிவேடன், தூமன், அர்த்தபிரகணன், எமகண்டகன், இந்திரதனுஷ், குளிகன், வியதிபாதன், உபகேது ஆகிய ஒன்பது உபகிரகங்களின் காலபலத்தையறிந்தே முகூர்த்த நிர்ணயம் செய்யவேண்டுமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.
இழந்த கண் பார்வை மீண்டும் கிடைக்குமா?
கேள்வி: என் மகன், ஒரு விபத்தில், கண் பார்வையை இழந்துவிட்டான்.
அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை.
அவனுக்கு, இழந்த கண் பார்வை மீண்டும் கிடைக்குமா? பரிகாரம் உண்டா?
-வித்யாசாகர், சேலம்
(எண்- 09; கார்த்திகை- 1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- செவ்வாய்.)
* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாமிடத்தில், சூரியனும் சந்திரனும் மறைவது, பார்வை இழப்பைக் காட்டுகிறது.
* பிரசன்ன லக்னமும் பன்னிரண்டிலிருப்பதால், பாதிப்பின் தீவிரம் தெரிகிறது.
* பிரசன்ன லக்னமும் ஏழாமிடமும் ராகு- கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன.
* சனி பகவானின் மூன்றாம் பார்வை பிரசன்ன லக்னத்தில் பதிவதால்,கண் பார்வையை காலதாமதமாகத்தான் பெறமுடியும் என்று தெரிகிறது.
* ஆறாமதிபதியாகிய புதன் பன்னிரண்டாமிடத்தில் நீசம் பெறுவதால் இழுபறி நிலையாக இருந்தாலும், முடிவில் குணமாகும் என்ற ஆறுதல் கிடைக்கிறது.
* குருபகவான், மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பரிகாரம் செய்தால், நலம் பெறலாம்..
பரிகாரம்
* தேனி மாவட்டம், வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கண்ணபுரம் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு கண் மலர் தந்து வழிபட்டால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636