"நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி வீழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற் புலியைப் புழுவுங் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்' என்ற பாரதியின் கருத்து, கிருஷ்ணன் நம்பூதிரிக்கு உடன்பாடானது. விதி ஒன்றைத் தீர்மானித்துவிட்டால், அதற்கு எதிராக யார் என்ன செய்யமுடியும்? விதிவழியே மதி செல்லும். மதியின் வழியே வாழ்க்கையின் கதியாகும். பிரசன்னம் பார்க்க வந்தவர் முகத்தில் அறிவொளி, சோகத்திரைக்குப் பின்னாலிருந்தது. வந்தவர் வழக்காடு மன்றத்தின் மூத்த வழக்கறிஞர். தன்னுடன் நெருக்கமாகப் பழகிய நண்பனே தன் சொத்தை அபகரித்து, தனக்கு துரோகம் செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.ஆழியூர் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைக் கட்டமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன ஜாதகத்தில் ஐந்தாமதிபதி, ஆறு மற்றும் எட்டாம் பாவங்களுடன் தொடர்பிலிருந்ததால், நண்பன், துரோகியாக மாறியிருப்பது தெரிந்தது. ஆனாலும், ஆறாமதி பதி, பதினொன்றாம் வீட்டிலிருந்து குருவின் பார்வை பெற்றதால் தர்மமே வெல்லும்; துரோகம் வீழுமென்ற நல்ல பதில் கிடைத்தது. சனிப் பிரதோஷநாளில், மதுரை சோமசுந்தரேஸ்வரரை வணங்கினால் வெற்றிக் கனியை விரைந்து அடையலாமென்ற பரிகாரம் கூறப்பட்டது. பரிகாரம் பலன் தந்தது. தர்மம் வென்றது. துரோகம் தண்டிக்கப்பட்டது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அந்தநாளின் திதியை அனுசரித்துச்செய்வது மிகவும் முக்கியம். திதிகளை, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் பிரித்துப் பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பிரதமை, சஷ்டி, ஏகாதசி திதிகள், நந்தா திதிகளாகும். இவை நீர் தத்துவத்தைச் சார்ந்தவை. இவற்றில், கலை பயிலுதல், வீடு கட்டுதல், கேளிக்கை போன்றவை வெற்றி தரும். துவிதியை, சப்தமி, துவாதிசி திதிகள், பத்ரை எனப்படும். இவை நில தத்துவத்தைக் குறிக்கும். இந்த திதிகளில் உபநயனம், திருமணம், புதிய வாகனம் வாங்குதல் போன்றவை நலன் தரும். திரிதியை, அஷ்டமி, திரியோதசி ஆகிய திதிகள் ஜெயா எனப்படும். இந்த திதிகள் நெருப்பு தத்துவத்தைச் சார்ந்தவை. வழக்கு தொடுத்தல், வீடு கட்டுதல், மருத்துவம் பார்ப்பது போன்றவற்றுக்கு ஏற்றவை. சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி போன்ற திதிகள், ரிக்தா திதிகளாகும். இவை வாயு தத்துவத்தைச் சார்ந்தவை. மந்திரம், மாந்திரீகம், கொடூர செயல்களுக்கு சாதகமான திதிகளாக அமையும். பஞ்சமி, தசமி, அமாவாசை, பௌர்ணமி திதிகள், பூர்ணா எனபடும். இவை ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும். திருமணம், உபநயனம், பதவியேற்றல் போன்ற அனைத்து சுபகாரியங் களுக்கும் ஏற்றதாக அமையுமென் பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
இரண்டாம் திருமணம் மன அமைதி தருமா?
கேள்வி: என் முதல் மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். நான் மறுமணம் செய்து கொண்டால் மன அமைதி கிடைக்குமா?
-ஜெயச்சந்திரன், ஈரோடு.
(எண்- 7; பரணி- 3; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்.) ப் சோழி லக்னத்தின் ஒன்பதாமிடத்தில் பிரசன்ன லக்னம் அமைவது மறு மணத்தைக் குறிக்கிறது.
* ஏழாமிடத்திலிருக்கும் கேது, சுக்கிரன் தொடர்பு, முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரிவினைக் காட்டுகிறது.
* ஒன்பதாமதிபதி, சோழி லக்னத்திற்கு பன்னிரண்டிலமைவது சிறப்பாகாது.
* சோழி லக்னம், ராகு- கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால், இரண்டாம் திருமணம் செய்துகொள்வதற்குமுன் பரிகாரம் செய்வது நல்லது. களத்திர தோஷம் கடுமையாக உள்ளது.
* சனி பகவானின் பத்தாம் பார்வையும் ஏழாமிடத்தில் பதிவதால், நன்கு ஆலோசனை செய்தபின் முடிவுசெய்வதே நல்லது.
* குருபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மறுமணம் செய்துகொண்டால் வெற்றிபெறலாம்.
பரிகாரம்
திருச்சிக்கு அருகில் திருப்பைஞ்ஞீலி என்னும் இடத்திலுள்ள ஞீலிவனேஸ் வரர் கோவிலில், வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்தால் களத்திர தோஷம் நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636