குடும்பம் என்பது நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும் மனிதன் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பஸ்ஸில் செல்பவருக்குக் கூட்ட நெரிசலில் சிக்கவேண்டிய நிலை, வண்டிகளில் செல்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம், பணியில் அதிகாரிகளின் கெடுபிடி, வேலைப்பளு, அலைச்சல், டென்ஷன் என ஓடிஓடி உழைத்துக் களைத்து வீடு திரும்பும் மனிதன், வீட்டில் அன்பான மனைவியின் கையால் சூடாக காபி பருகி ஐந்து நிமிடம் கண்களைமூடி இளைப்பாறினால், அவன்பட்ட அனைத்து கஷ்டங்களையும் மறந்தேவிடுவான். அதிலும் "என்னங்க ரொம்ப களைப்பா இருக்கீங்க? வேலை இன்று அதிகமா?' என மனைவியின் வாயிலிருந்து அன்பான வார்த்தைகள் வந்தால் போதும்; அவனுக்கு அதுவே சொர்க்கமாக இருக்கும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதையெல்லாம் எல்லாரது வீட்டிலும் எதிர்பார்க்க முடியாதுதான். குடும்பத்தில் கணவன்- மனைவி இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஒருவரையொருவர் முகம்பார்த்துப் பேசிக்கொள்ளக்கூட நேரம் மிகக்குறைவாகவே இருக்கிறது. இதுமட
குடும்பம் என்பது நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும் மனிதன் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பஸ்ஸில் செல்பவருக்குக் கூட்ட நெரிசலில் சிக்கவேண்டிய நிலை, வண்டிகளில் செல்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம், பணியில் அதிகாரிகளின் கெடுபிடி, வேலைப்பளு, அலைச்சல், டென்ஷன் என ஓடிஓடி உழைத்துக் களைத்து வீடு திரும்பும் மனிதன், வீட்டில் அன்பான மனைவியின் கையால் சூடாக காபி பருகி ஐந்து நிமிடம் கண்களைமூடி இளைப்பாறினால், அவன்பட்ட அனைத்து கஷ்டங்களையும் மறந்தேவிடுவான். அதிலும் "என்னங்க ரொம்ப களைப்பா இருக்கீங்க? வேலை இன்று அதிகமா?' என மனைவியின் வாயிலிருந்து அன்பான வார்த்தைகள் வந்தால் போதும்; அவனுக்கு அதுவே சொர்க்கமாக இருக்கும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதையெல்லாம் எல்லாரது வீட்டிலும் எதிர்பார்க்க முடியாதுதான். குடும்பத்தில் கணவன்- மனைவி இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஒருவரையொருவர் முகம்பார்த்துப் பேசிக்கொள்ளக்கூட நேரம் மிகக்குறைவாகவே இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் பொருளீட்டுவதற்காக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலும், பிள்ளைகள் ஓரிடத்திலும் என பிரிந்து வாழக்கூடிய நிலை ஏற்படுவதால் பாசம், விட்டுக் கொடுத்தல், அன்பாகப் பழகுதல் போன்ற எதற்குமே அர்த்தம் தெரியாமல் போகிறது.
ஜோதிடரீதியாக இதற்கெல்லாம் காரணம் என்ன என ஆராயும்போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடானது பலமாக இருத்தல் அவசியமாகிறது. குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 2-ஆம் வீடு பலமிழக்காமல் சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தால் அமைதியான குடும்ப வாழ்க்கை உண்டாகிறது.
அதுவே பாவிகளான சனி, ராகு- கேது, சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் 2-ல் அமைந்தால் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் 2-ல் இருப்பது குடும்ப ஒற்றுமையை அதிகம் பாதிக்கும். மேற்கூறிய பாவ கிரகங்கள் 2-ஆம் வீட்டில் ஆட்சி, உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்திற்கு 7-ஆம் வீட்டிற்கு 8-ஆம் வீடாக 2-ஆம் வீடு வருவதால், 2-ஆம் வீடு பலமாக இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, வாழ்க்கைத்துணைக்கு நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை போன்ற சாதகமான பலன்கள் உண்டாகின்றன.
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீட்டில் ஏதாவது ஒரு பாவகிரகம் வலுப்பெற்று இருந்துவிட்டால் வாழ்வில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சோதனையை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக 2-ல் அமையும் பாவ கிரகத்தின் தசை, புக்தி நடக்கும் காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடும்பத்தைவிட்டுப் பிரியநேரிடும். ஏதாவது ஒரு காரணத்திற்காக குடும்பத்தைவிட்டு வெளியூர் செல்லும் அமைப்பு, பணி நிமித்தமாக வெளியே தங்கும் சூழ்நிலை உண்டாகும். சில இடங்களில் எவ்வளவு வசதி இருந்தாலும் குடும்பத் தலைவர் ஓரிடத்தில், மனைவி, பிள்ளைகள் ஓரிடத்தில் இருக்க நேரிடும்.
இரண்டாம் வீட்டில் பலம்பெற்ற பாவ கிரகத்தின் தசை இளம்வயதில் வருமானால் தாய்- தந்தையரை இழக்கும் சூழ்நிலை அல்லது பிரிந்து வாழக்கூடிய நிலை உண்டாகிறது. 10 முதல் 25 வயதுவரை 2-ல் வலுப்பெற்ற பாவிகளின் தசை வருமேயானால் தாய்- தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களைவிட்டுப் பிரியும்நிலை ஏற்படும். 25 வயதுமுதல் 40 வயதுவரை பாவ தசை நடைபெற்றால் மனைவி மற்றும் பிள்ளையை இழக்கும் சூழ்நிலை அல்லது பிரிந்து வாழக்கூடிய அவலநிலை உண்டாகும். 40 வயதுக்குமேல் 2-ல் வலுப்பெற்ற பாவ கிரகத்தின் தசை நடைபெறுமேயானால் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை, உற்றார்- உறவினர்களை வெறுக்கக்கூடிய நிலை உண்டாகிறது. குடும்பத்தில் இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
லக்னத்திற்கு 2-ல் அமையும் பாவ கிரகம் எப்படி அதன் தசை, புக்திக் காலத்தில் ஒற்றுமைக்குறைவை ஏற்படுத்துகிறதோ அதேபோல சந்திரனுக்கு 2-ல் அமையும் பாவ கிரகத்தின் தசை, புக்திக் காலத்திலும் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு உண்டாகிறது. மனித வாழ்வில் பல்வேறு காலகட்டங்கள் இருந்தாலும் திருமண வயதில்- அதாவது திருமணத்திற்குப்பின் வரும் 10, 15 வருடங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்படாமல் இருப்பது அவசியம்.
திருமண வயது காலத்தில் 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் தசை நடைபெற்றால் திருமணம் கைகூட தடைகள் உண்டாகின்றன. அப்படி திருமணம் நடைபெற்றாலும் ஜாதகர் ஒரு ஊரிலும், வாழ்க்கைத்துணை ஒரு ஊரிலும் இருக்கும் சூழ்நிலை உண்டாகும். பெரும்பாலும் திருமணப்பொருத்தம் பார்க்கும்போது 2-ல் பாவிகள் இருந்து அதன் தசை நடைபெற்றால் பெரும்பாலும் திருமணத்தைத் தள்ளிவைப்பது நல்லது. சில சந்தர்ப்பத்தில் மற்ற அமைப்புகள் சிறப்பாக இருந்தால் 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் தசை அல்லது புக்தி முடியும்வரை விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம்.
2-ஆம் வீடு குடும்ப ஒற்றுமையைக் குறிப்பிடுவதுபோல 8-ஆம் வீடானது வாழ்க்கைத்துணையின் உறவினர்களைக் குறிக்கும். திருமணமான ஆணுக்கு 8-ஆம் வீட்டில் பாவிகள் அமைந்து அதன் தசை அல்லது புக்தி நடக்கும்போது நடைமுறையில் பார்த்தால் மனைவிவழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு, வீண் சண்டை சச்சரவுகள் உண்டாகின்றன. பெண் என்றால் 8-ஆம் வீட்டில் பாவிகள் அமைந்து அதன் தசை அல்லது புக்தி நடக்கும் போது கணவர்வழி உறவினர்களிடம் ஒத்துப்போகமுடியாத நிலை ஏற்படுகிறது.
2-ல் அமையப்பெற்ற பாவ கிரகங்களின் தசையோ, புக்தியோ நடைபெறும் காலங்களில் அந்தந்த கிரகங்களுக்குரிய தகுந்த இறைவழிபாடுகளை மேற்கொள்வதும், பேச்சைக் குறைப்பதும், குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும் ஓரளவுக்கு பிரச்சினைகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
செல்: 72001 63001