● இரா. பாக்கியம், பரமக்குடி.

எனது மகள் ஜெயப்பிரதா வுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

ஜெயப்பிரதாவுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னம். லக்னத்தில் ராகு. ஏழில் கேது. நாகதோஷம் உண்டு. 2019 டிசம்பரில் 32 வயது முடியும். 39 வயதுவரை சனி தசை நடக்கிறது. 2020 மார்ச்சில் சனிப்பெயர்ச்சி வருகிறது. அதன்பிறகு திருமணம் கூடிவரும். அந்த சமயம் ஜெயப் பிரதாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை யும் கிடைப்பார். நாகதோஷ நிவர்த்திக்கு ஒரு வெள்ளிக்கிழமை நயினார்கோவில் சென்று நாக நாதருக்கும், அம்பாள் சௌந்திர நாயகிக்கும் அபிஷேக பூஜை செய்யவும். ராகு காலத்தில் செய்வது உத்தமம்.

● மரகதம், புதுக்கோட்டை.

Advertisment

6-5-1982-ல் திருமணம் ஆனது. 20-10-1983-ல் ஒரு ஆண் குழந்தையும், 20-3-1984-ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பிள்ளைக்குப் பிறக்கும்போதே ஹீமோபிலியா என்ற ரத்தம் உறையாமை நோய் இருந்தது. 17-7-1988-ல் எனது கணவர் மாரடைப்பால் காலமானார். பையனையும் பெண்ணையும் கஷ்டப்பட்டு வளர்த்துப் படிக்க வைத்தேன். என் கணவருக்கு பாத்தியதையான சொத்தை புகுந்த வீட்டில் பங்கு தர மறுத்துவிட்டனர். பங்காளி செய்வினை வைத்ததால் பையன்- தன் 28 வயதில் இறந்துவிட்டான். (3-4-2012-ல்). என்மேல் பாசமில்லாமல் மகளை மாற்றிவிட்டனர். நான் சுய தொழில் செய்ய வாய்ப்புள்ளதா? எனக்குக் கிடைக்கவேண்டிய பங்குபாகம் கிடைக் குமா? தங்களை நேரில் சந்தித்து தெளிவு பெற முடியுமா?

உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரமும் தீர்வும் சொல்லலாம். எல்லார் ஜாதகங்களையும் நேரில் கொண்டுவந்து காட்டி ஆலோசனை பெறலாம். தொலை பேசியில் முன்பதிவு செய்துவிட்டு மதுரைக்கு (கிருஷ்ணாபுரம் காலனிக்கு) நேரில் வரவும்.

● வி. கருணாநிதி, வடலூர்.

Advertisment

என் மனைவி கற்பகம் 31-12-2017-ல் காலமானார். என் மகன் கார்த்திகேயன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத் தில் வேலை பார்க்கிறார். 29 வயது நடக்கி றது. அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னம். லக்னத்தில் ராகு. 7-ல் கேது. 7-க்குடைய குரு 12-ல் மறைவு. 2021 அக்டோபரில் 30 வயது முடியும். அதன்பிறகு திருமணம் நடக்க அமைப்புண்டு. தாயார் இறந்துவிட்டதால் ஒருமுறை காளஹஸ்தி சென்று சுவாமி, அம்பாளுக்கு பச்சைக்கற்பூரம் கலந்த அபிஷேக பூஜை செய்தால் 2019 டிசம்பருக்கு மேல் பெண் அமையலாம். 2020 வைகாசிக்குள் திருமணம் நடக்கலாம்.

vvv

● சீனி. கோபாலகிருஷ்ணன், சோழன்மாளிகை.

சிறு மளிகைக்கடை வைத்துள்ளேன். மனைவி இருந்தவரை வியாபாரம் நன்றாக நடந்தது. அவர் காலமானபிறகு (28-10-2018-ல்) வியாபாரம் சரியில்லை. எங்கள் ஊரிலுள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ஆலயத்தில் ஏழாண்டுகளாக அர்ச்சகராக இருந்துவருகிறேன். இதற்கு மாதச்சம்பளம் ஆயிரம் ரூபாய் மட்டும். வேறு வருமானம் இல்லை. கடன்கள் இருக்கின்றன. எப்படி அடைப்பதென்று தெரியவில்லை. மகன் சம்பத்குமாருக்கு மனவளர்ச்சி இல்லை. (வயது 37). இப்பிறவியில் திருமணம் நடக் குமா? பிற்காலம் எப்படி அமையும்? குடும்பத்துக்கு பிதுர் தோஷம், பிதுர்சாபம் உள்ளதாகக் கூறுகிறார் கள். திலஹோமம் செய்து கலசஅபிஷேகம் செய்யவேண்டும் என்கி றார்கள். சரியா?

சம்பத்குமார் (மகன்) ரிஷப லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. லக்னத்துக்கு 2-ல் ராகு. 8-ல் புதன், கேது. குரு 7-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். 9-ல் சூரியன், சுக்கிரன் நிற்க, 9-க்குடைய சனி 6-ல் மறைவு, உச்சம் என்பதால், பூர்வீகத்தில் கடுமையான தோஷம் உள்ளது என்பது உண்மைதான். அவர்கள் சொன்னமாதிரி திலஹோமம் செய்வது நல்லதுதான். அத் துடன் பூந்தோட்டம் அருகில் செதலபதி சென்று முன்னோர் சாபதோஷ நிவர்த்திக்குப் பரிகார ஹோமம் செய்யலாம். விஸ்வநாத சிவம், செல்: 94427 14055, சுவாமிநாத சிவம், செல்: 94423 90299-ல் தொடர்புகொள்ளலாம். திருவாரூர்- மயிலாடுதுறை பாதை கூத்தனூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர்.

● அ. வடிவேலு, திருவானைக்கோவில்.

என் மகன் துரைமுருகன் தனியார் துறையில் சாஃப்ட்வேர் வேலையை விட்டு விட்டு சொந்தமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னேற்றமில்லை. திருமண முயற்சிகள் செய்யும்போது தடைப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவன் தாயாரும் (என் மனைவி) இறந்துவிட்டார். திருமணம் எப்போது நடக்கும்? செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். செய்யும் தொழிலே சரிவருமா? அல்லது பார்ட்னர் யாராவது சேர்த்துக்கொள்ளலாமா? அல்லது வேறு வேலைக்குப் போகலாமா? பரிகாரம் உண்டா?

"செய்த தொழிலை விட்டவனும் கெட்டான்; செய்யாத தொழிலை தொட்டவனும் கெட்டான்' என்பது பழமொழி. எனவே அவருக்குத் தெரிந்த தொழிலையே தொடர்ந்து செய்யட்டும். அவசியமானால் பார்ட்னர் சேர்த்துக்கொள்ளலாம். தாயார் இறந்து வருடம் திரும்பாமல் (ஒரு வருடம்) எந்தப் பரிகாரமும் செய்யக்கூடாது. மிதுன ராசி, மிதுன லக்னம். 5-ல் செவ்வாய்- சனி இருப்பது தோஷம் என்றாலும், குரு 7-ல் ஆட்சிபெற்று ராசி- லக்னத்தைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. 1984 மே மாதம் பிறந்தவர். 2019 மே மாதம் 35 வயது முடிந்தது. புனர் பூச நட்சத்திரம், மிதுன ராசி. 2020 தை முதல் திருமண யோகம் வருகிறது. ஏற்பாடு செய்யலாம்.

● எஸ். செல்வி, கொருக்குப்பேட்டை.

எனது ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகச் சொன்னதால் காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்துவிட்டேன். நாகதோஷம் உள்ள மாப்பிள்ளையைத்தான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? எப்போது திருமணம் நடைபெறும்?

ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது நாகதோஷம்தான். என்றாலும் கேதுவை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ஆனால் 4-ல் உள்ள மகரச்சனியை 9-ல் உள்ள மிதுனச் செவ்வாய் பார்ப்பதுதான் தோஷம். உங்கள் திருமணத் தடைக்கும் இதுவே முக்கியமான காரணம். (கும்பகோணம் வழி) நாச்சியார் கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் கிராமம் உள்ளது. அங்கு சென்று செவ்வாய், சனி சம்பந்த தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவும். விவரங்களுக்கு செல்: 96886 77538-ல் பேசலாம்.

● டி. கீதா, சென்னை.

என் மகன் சாய்ஹரி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு முயற்சி செய்கிறான். அவன் லட்சியம் நிறைவேற பரிகாரம் கூறவும்.

கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், துலா லக்னம். சாய்ஹரியின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதசுவாமிக்கும், ஆரணவல்லியம்மனுக்கும் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேக- சங்காபிஷேக பூஜை செய்யவும். (திருச்சி- புதுக்கோட்டை பொன்னமராவதி). அர்ச்சகர் ராஜப்பா குருக்களைத் தொடர்புகொள்ளலாம்.