● பொன்னுரங்கம், பெரியகிராமம்.
76 வயதாகிறது. உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையிலும், இளைய மகள் பெங்களூரிலும் திருமணம் செய்துகொடுத்தேன். இளைய மகள் காயத்திரி திருமணமான நாள் முதல் சந்தோஷமாக இல்லை. கணவரும் சரியில்லை. 16 வயதில் ஒரே மகன். அவள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா? பேரன் பெங்களூரில் படிக்காமல் சென்னையில் படிக்க விரும்புகிறான். அவன் தந்தை சம்மதிப்பாரா?
குடும்ப அமைதிக்கும் கணவன்- மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தஞ்சாவூர் வழி (திருவையாறு அருகில்) பெரும்புலியூர் சென்று இறைவன் வியாக்ரபுரீஸ்வரரையும், இறைவி சவுந்தர நாயகியையும் வழிபட்டு, ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள உமா சமேதமூர்த்தி சந்நிதியில் அபிஷேக ஆராதனை செய்துகொள்ளவும். தொடர்புக்கு: சுவாமிநாதன், செல்: 99409 31425, 99423 09609. அடுத்து பேரன் படிப்புக்கும், அவன் விருப்பப்படி சென்னையில் படிப்பதற்கும் செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில், சிங்கப்பெருமாள் கோவில் ஸ்டாப்பிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் செட்டிப்புண்ணியம் என்ற ஊருக்குச் சென்று வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவருக்கு அபிஷேகமோஅர்ச்சனையோ செய்து வேண்டவும். அத்துடன் அங்குள்ள அணிஞ்சல் மரத்தினைச்சுற்றி பிரார்த்தனைக் கயிறு கட்டவும். தொடர்புக்கு: செல்: 86757 27999.
● ஆர். வீரபத்ரன், ஆரணி.
என் மகன் சந்துருவுக்கு 35 வயது. திருமணம் தடைப்பட்டு வருகிறது. காரணம் தெரியவில்லை. பரிகாரமாக காளஸ்தி- ராமேஸ்வரம்- திருச்செந்தூர் போய்வந்தோம். திருமணம் எப்போது கைகூடும்?
சந்துரு கும்ப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். குரு தசை, சனி புக்தி. தற்போது ரிஷப ராசிக்கு அட்டமச்சனி ஆரம்பம். 2020 வரை. ஜாதகத்தில் சுக்கிரன் (களஸ்திரகாரகன்) நீசம். 7-க்குடைய சூரியன் (களஸ்திர ஸ்தானாதிபதி) 8-ல் மறைவு. இவர்களுடன் சனி சம்பந்தம். எனவே 37 வயதுக்குமேல் 40 வயதுகூட ஆகலாம். அதனால் காரைக்குடி அருகில் வேலங்குடி சென்று கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும். செலவாகும். வசதியிருந்தால் போனில் தொடர்புகொள்ளவும்.
● செ. பத்மப்பிரியா, சிவகாசி.
எனக்கும் என் தம்பி மணிகண்டனுக்கும் பார்வைக்கோளாறு இருக்கிறது. இருவரும் கண்ணாடி அணிந்துள்ளோம். நாங்கள் பல கோவில்களுக்கும் வேண்டியுள்ளோம். ஆனால் எந்த இறைவனும் எங்கள்மீது கண் திறக்கவில்லை. எங்கள் பார்வைக் குறைபாடு நீங்குமா?
உங்கள் இருவர் ஜாதகத்திலும் கடுமையான பூர்வபுண்ணிய தோஷம் உள்ளது. அதனால் முழுமையான நிவர்த்திக்கு இடமில்லை என்றாலும் கண்ணாடி தொடர்ந்து அணியவேண்டும். மணிகண்டனுக்கு 2020 வரை ஏழரைச்சனி. பத்மப்பிரியாவுக்கு அட்டமச்சனி முடிந்துவிட்டது. கண்பார்வைக்குறை நீங்க இரண்டு பரிகார ஸ்தலம் எழுதுகிறேன். போய் வரவும். காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள கூரம் என்ற ஊரில் கூரத்தாழ்வார் வழிபட்ட பங்கஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாளையும் கூரத்தாழ்வாரையும் வழிபடவும். ஞாயிறு, வெள்ளிக்கிழமை விசேஷம். அதேபோல சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர் மதுரமங்கலம் சென்று ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமான ஸ்ரீஎம்பார் பெருமானையும் சேவிக்கவும். ராமானுஜருடன் குருகுல வாசத்தில் உடன் இருந்தவர் கோவிந்தன். இவரே பிற்காலத்தில் எம்பார் என்ற பெயர் பெற்றார். அங்கு சென்று புனர்பூச நட்சத்திரத்தன்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும். மூன்றாவதாக சிவகங்கை அருகில் நாட்டரசங்கோட்டை சென்று கண்ணாத்தாள்கோவில் (கண்ணுடைய நாயகியம்மன்) சென்று வழிபடவும். அபிஷேக பூஜை செய்வது உத்தமம்.
● கொ. கந்தசாமி, எடப்பாடி.
நான் இன்னும் வீடு கட்டும் பணி தொடங்கவில்லை. ஏன்? சேந்தமங்கலம் குருநாதர் ஜீவசமாதிக்கும் தத்தாத்ரேயருக்கும் அபிஷேகம் செய்துவிட்டேன். வேறு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
உங்களுக்கு மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம், தனுசு லக்னம். சுக்கிர தசை, ராகு புக்தி. மகன் மோகனுக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். ராகு தசை, புதன் புக்தி. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சம ராகு நடந்தால் எல்லா முயற்சிகளிலும் தடை, தாமதம் காணப்படும். அதனால் வீடு கட்ட இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதசுவாமிக்கும் ஆரணவல்லியம்மனுக்கும் எளிய முறையில் ஒரு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யதுகொள்ளவும். வைகாசியில் தச்சுசெய்து கட்டட வேலையைத் தொடங்கலாம். வீடு கட்டிமுடித்து கிரகப் பிரவேசம் முடிந்ததும் மீண்டும் அங்கு சென்று சங்காபிஷேக ருத்ரஹோம பூஜை செய்யலாம். வசதியிருந்தால் இப்போதே மேற்படி சங்காபிஷேக பூஜையைச் செய்துவிட்டு, கிரகப்பிரவேசம் முடிந்தபிறகு சாதா அபிஷேக பூஜை செய்யலாம். விவரங்களுக்கு: ராஜப்பா குருக்கள்- செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும். திருச்சி- புதுக்கோட்டை வழி பொன்னமராவதி பஸ்ஸில் ஏறி செவலூர் பிரிவில் இறங்கவும்.
● எஸ்.எஸ். மணியன், செம்பாக்கம்.
கண்கண்ட தெய்வமே! தாங்கள் இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக கீழேவிழுந்து மூன்றுமுறை வணங்கி நிம்மதி பெற்றுவிட்டேன். நீங்கள் என் குரு மேருமலை. உங்கள் வாக்கும் எழுத்தும் வரலாறு படைத்துக்கொண்டு வருகிறது. நான் பாவப்பட்டவன், பரமஏழை. உங்கள் அருகில் வரத் தகுதியற்றவன். அருள்மிகு தாணுமாலயனையும் கன்னியாகுமரி பகவதியம்மனையும் வருடம் ஒருமுறை குலதெய்வமாக வழிபடவேண்டும் என்று வழிகாட்டியதற்கு நன்றி. நான் அனாதை!
இந்த உலகில் யாரும் அனாதையில்லை. எல்லாருக்கும் இறைவன் பாதுகாப்பாக அருள்பாலிக்கிறான். பணத்தால் பரம ஏழை என்றாலும் தூய மனதால் எல்லாரும் கோடீஸ்வரர்கள்தான். என்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் அபிமானத்துக்கும் நன்றி. அனார்கலி என்ற ஓரங்க நாடகத்தில் கலைஞர் எழுதிய ஒரு வசனம். அனார்கலி- சலீமை ஒரு சாதாரணப் போர் வீரனாக காதலிப்பாள். உண்மையில் அவன், அக்பர் பாதுஷாவின் மகன் என்ற ரகசியம் தெரிந்ததும் அனார்கலியைப் பார்க்க ஒருமுறை தாமதமாக வந்த சலீமை கொலுமண்டபத்து மனிதர்களுக்கு நேரமாவது நினைப்பாவது என்பாள். அதற்கு அவன் உன் அன்பின் பெருக்கத்தால் என் அந்தஸ்தையே உயர்த்திவிட்டாயே என்பான். அதுபோல சாதாரணமான என்னை தகுதிக்குமீறி தெய்வமாக்கிவிட்டீர்கள். உங்களைப்போன்று பாலக்காடு அன்பர் ஒருவர் (பால்ராஜ்) "அதிர்ஷ்டம்' ஜோதிடபானு சுப்ரமணியம் போற்றி என்று 108 போற்றி எழுதியனுப்பியிருந்தார். உங்களை மாதிரி ஆதரவாளர்கள் இருக்கும்வரை (விவேக், டி.வி.யில் சொல்வமாதிரி) "பாலஜோதிட'த்தை யாரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது. வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறலாம் என்ற நினைப்பு சிலசமயம் எழுந்தாலும் உங்களைப் போன்ற அபிமானிகளுக்காகத் தொடர்ந்து எழுதவேண்டும், எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வும் உற்சாகமும் மேலோங்குகிறது. நன்றி!
● என். நரேன் திரண்டதாதகாபட்டி.
19-2-2016-ல் தாங்கள் எனக்குப் பதில் கூறியபோது சுக்கிர தசையைவிட சூரிய தசை நன்றாக இருக்காது என்று எழுதியிருந்தீர்கள். அதன்படி எனக்கு தற்போது சூரிய தசை. உடல்நிலை அடிக்கடி பாதிக்கிறது. ஆயுள் பலம் எப்படி உள்ளது? தொழில் வருமானமே சரியில்லை.
மீன லக்னம், அதற்கு சுக்கிரன் 8-க்குடையவர். சூரியன் 6-க்குடையவர். அத்துடன் 2020 வரை (விருச்சிக ராசி) ஏழரைச்சனி! நல்ல வேளையாக சந்திர தசை 69 வயதில் வருவதற்குமுன்பு ஏழரைச்சனி முடிந்துவிடும். ஆயுள்காரகன் சனி 8-ல் உச்சம் என்பதால் ஆயுள் குற்றமில்லை. ஞாயிறுதோறும் நவகிரகத்தில் அல்லது சிவன் கோவிலில் உள்ள சூரியனுக்கு வெள்ளைத்தாமரை சாற்றி வழிபடவும். உடல்நிலையிலும் தொழில்துறையிலும் முன்னேற்றம் தெரியும்.
● ஜே. அன்பழகன், குரோம்பேட்டை.
பலகோடி மக்கள் மனதில் நிறைந்துள்ள அய்யா குருநாதருக்கு கோடானு கோடி வணக்கம்! சாப்பாடு, துணிமணிக்குப் பஞ்சமில்லை. இரு சக்கர வாகனங்கள் மூன்று உண்டு. சொந்த வீடு மட்டும் அமையவில்லை. வேலையில் எனக்குப் பிடித்த பணம் இன்னும் வந்துசேரவில்லை. எப்போது கிடைக்கும்? மகன் திருமணம்- மகள் திருமணம் எப்போது நடைபெறும்? மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? தனியார்துறையில் வேலைக்குப் போகலாமா?
அன்பழகன் மகர ராசி, திருவோண நட்சத்திரம். 2020 வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம். இதில் தனது புக்தி முடியவேண்டும். அதன்பிறகு சொந்த வீடு அமையும். உங்களுக்கு வேலை சம்பந்தமாக வரவேண்டிய பணம் வந்துசேர கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து கார்த்தவீர்யார்ஜுன மந்திர ஸ்லோகத்தை தினசரி ஜெபம் செய்யவும். மகன் சந்தீப், ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னம். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதால் 29 அல்லது 30 வயதில்தான் திருமண யோகம். மகள் ஷில்பா மிதுன ராசி, விருச்சிக லக்னம். 2019 மே வரை சனி தசை. ராகு புக்தி முடிந்ததும் குரு புக்தியில் திருப்தியான வேலை அமையும்.
● சேதுராமன், திருவாரூர்.
சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின கடவுளும் இல்லை. ஜோதிடபானுக்கு மிஞ்சின ஜோதிடரும் இல்லை. இறைவன் தங்களுக்கு நீண்டநெடிய ஆயுளைத் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். என் மகன் கல்வியில் சுமாராக இருக்கிறான். அவன் எதிர்காலம் எப்படி அமையும்? அஸ்ட்ரோ நியூமராலஜிப்படி 37-ல் பெயர் அமைத்துள்ளேன்.
பெயர் எண் 37, நல்ல எண். பிறந்த தேதி 2-ம், கூட்டுத் தேதி 7 என்பதால் 37 பொருத்தமானதே. மகர ராசிக்குத் தற்போது ஏழரைச்சனி என்பதால் கல்வியில் மந்தம், மறதி இருந்தாலும் ஐந்து வயதுதானே ஆகிறது. போகப் போக சரியாகிவிடும். 12 வயதுக்குமேல் தெளிவாக இருப்பான். உயர்கல்வி படிப்பான். ஏழரைச்சனி தாக்கம் குறைய 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும். ஏழரைச்சனி முடியும்வரை.
● சண்முகம், திண்டுக்கல்.
2018 புத்தாண்டு பலன் எழுதிய ஆர். மகாலட்சுமி புதுவருடம் தனுசு லக்னம் என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் கன்னி லக்னம் என்று எழுதியுள்ளீர்கள். எது சரி?
கன்னி லக்னத்தில்தான் 2018 பிறந்தது. அதுவே சரி. அதாவது 2018 என்பது- 2017 டிசம்பர் நள்ளிரவு 12.00 மணிக்குதான் ஆங்கிலப்புத்தாண்டு ஜனவரி- 1 உதயம். அந்த நேரப்படி கன்னி லக்னம்தான். காலை 6 மணி என்ற கணக்கில் சூரியன் நின்ற லக்னம் தனுசுவைக் குறிப்பிட்டது தவறுதான். சித்திரை மாதத்துக்குத்தான் சூரியனைக் கணக்கிட வேண்டும்.