jothidamanswer

● சாந்தி, சென்னை.

என் மகன் பிரகாசுக்கு 30-11-2015 அன்று திருமணம் நடந்தது. என் அண்ணன் மகளைக் கட்டிவைத்தோம். ஜோதிடர்கள் பொருத்தமில்லை என்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் வேறு வழியில்லாமல் கட்டி வைத்தோம். இப்பொழுது என் மருமகள் பித்துப் பிடித்தாற்போல இருக்கிறாள். டாக்டர்கள் மனஅழுத்தம் என்கிறார்கள். எப்பொழுதும் சோர்வாக இருக்கிறாள். திடீர் திடீரென்று அழுகிறாள். சரியாகிவிடுமா?

மகன் பிரகாஷ் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். நடப்பு ராகு தசை, சனி புக்தி. மருமகள் கோமதி புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். நடப்பு புதன் தசை சுக்கிர புக்தி! இருவருக்கும் பொருத்தம் இருக்கிறது. ஆனால் கோமதிக்கு நாக தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பதால் 27 வயதில் திருமணம் செய்திருக்க வேண்டும். சொந்தம் என்பதால் 22 வயதிலேயே திருமணம் செய்துவிட்டீர்கள். அதனால் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியில்லை. பிரகாஷ் ஜாதகப்படி ராகு தசை, சனி புக்தி 2018 மே வரை. மேலும் திருமணத் தேதி 30-11-2015. கூட்டு எண் 4. அதுவும் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தேதி. எனவே அப்போது கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு, 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் (புதுமாங்கல்யம்) கட்ட வேண்டும்.

Advertisment

அத்துடன் பிரகாஷ் ஜாதகப்படி ராகு தசை நடப்பதால் சூலினிதுர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், வாரிசு உருவாக சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், புத்திரப்ராப்தி கணபதி ஹோமம் உள்பட 18 விதமான ஹோமம் செய்து அவர்கள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இதை காரைக்குடி அருகில் செய்யலாம். மற்ற விவரங்களுக்கு நேரில் அல்லது போனில் என்னைத் தொடர்புகொள்ளலாம். இது கிரகக் கோளாறே தவிர வேறு எந்தக் கோளாறுமல்ல.

● வி. பிரகாஷ், கொளப்பலூர்.

சரியான வேலையும் வருமானமும் இல்லை. சொந்தத்தொழில் செய்யலாம் என்றால் எந்த முன் அனுபவமும் இல்லை. மனைவிக்கும் பெற்றோருக்கும் அதில் உடன்பாடில்லை. என்ன செய்யலாம்?

Advertisment

பிரகாஷ் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. லாவண்யா பரணி நட்சத்திரம், மேஷ ராசி. தேவதர்ஷினி ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. தன்ஷிகா- பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 2017 டிசம்பர் சனிப்பெயர்ச்சி வரை குடும்பத்தில் கோட்சாரம் அனுகூலமாக இல்லை. ஏழரைச்சனி, அட்டமச்சனி என்று நடந்தது. பிரகாஷிற்கு ராகு தசை 2019 ஜுலை வரை. இதில் சொந்தத் தொழில் செய்வது நல்லதல்ல. கடனாளியாக்கிவிடும். வரும் குருப்பெயர்ச்சி 4-10-2018-ல். குரு மீன ராசிக்கு 9-ல் வந்து ராசியைப் பார்க்கும் காலம் தற்காலிக வேலை அமையும். கொஞ்ச காலம் அதில் பொழுதைக் கழித்துவிட்டு வேறு நல்ல வேலைக்கு மாறலாம். அல்லது ஆலோசனை பெற்று சொந்தத் தொழில் செய்யலாம். முன்னதாக மேட்டுப்பாளையம் அருகில் (சேலம்பாதை) நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக பூஜை செய்யவும். பாலாஜி, செல்: 94435 15904 அல்லது 94439 41014-ல் முன்பதிவு செய்யவும்.

jothidamanswer

● வெ. ரமேஷ், சென்னை-91.

என்னுடைய ஜாதகத்தில் முன்னோர் சாபதோஷம் எதுவும் உண்டா? அங்கீகாரம் இல்லாத மனைவியாக- ஒரு விதவைப்பெண் என்னைத் தேடி வருவாள் என்று மூன்று ஜோதிடர்கள் சொன்னார்கள். எப்போது வருவாள்? என் மகன் வெங்கட்ராமனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என் தந்தை வீட்டை இடித்து புதிதாகக் கட்ட முடியுமா?

ரமேஷ் 62 வயது நடப்பு. (6-5-1956-ல் ஜெனனம்). மகன் வெங்கட்ராமனுக்கு 20 வயது. இந்த மகனுக்கு திருமணம் எப்போது என்று கேட்கும் தந்தைக்கு அங்கீகாரம் இல்லாத மனைவி எப்போது வருவாள் என்று சபலமா? இது உங்களுக்குத் தேவைதானா? பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்தாளாம். பேரன் கேட்டதுக்கு பழைய நினைப்பு என்றாளாம். இதெற்கெல்லாம் பதில் சொல்லுமளவு நானில்லை. உங்களுக்குப் பலன் சொன்ன ஜோதிடர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும். ஜோதிடம் கேட்பவர்களிடம் இதுபோல பலன் சொல்லி அவர்களின் ஆசையைத் தூண்டிவிடுவது தவறு.

● சுந்தரேசன், காஞ்சிபுரம்.

விஷ்ணுப்பிரியாவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட வரன் அமையும்?

விஷ்ணுப்பிரியா ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னம். ராசிக்கு 8-ல் சனி. லக்னத்துக்கு 4-ல் கேது; 10-ல் ராகு. 25 வயதிற்கு மேல்தான் திருமண யோகம்.

அதுவரை முயற்சிகளைத் தள்ளிப்போடவும். பெரும்பாலும் தாயார் அல்லது தகப்பனார் யாராவது ஒருவர் இல்லாத பையனாகத் தேடவும். அந்நிய சம்பந்தம். அதுவரை வேலைக்கு அனுப்பி வைக்கலாம்.

● முத்துசுந்தர், அடையார்.

எங்கள் மகன் முத்துவெங்கடேஷுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. வெளிநாட்டில் வேலை. ஆறு மாதமாக உடல்நலக்குறைவால் சம்பளமில்லாத லீவில் சிகிச்சை பெற்று, தற்போது குணமடைந்து வேலைக்குப் போகிறார். மறுபடியும் ஏதாவது நோய் பாதிப்பு வருமா? தாய்நாடு அல்லது வேறு நாடு (வெளிநாடு) போகலாமா?

முத்துவெங்கடேஷ் துலா ராசி, சித்திரை நட்சத்திரம். இது வாக்கியப்படி கணித்தது. இதுவே சரியானது. திருக்கணிதப்படி சுவாதி சரிவராது. இதுவரை ஏழரைச்சனி இருந்ததால் ஆரோக்கியக்குறைவும் வைத்தியச்செலவும் இருந்தது. இப்போது ஏழரைச்சனி முழுமையாக விலகிவிட்டதால் இனி எந்த பாதிப்பும் வராது. மனைவி மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். அவருக்கு சனி தொல்லைகள் எதுவுமில்லை. எனவே இருவரும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் வளமாகவும் இருப்பார்கள். அடுத்த சனிப்பெயர்ச்சிவரை (2021) வெளிநாட்டிலேயே இருக்கலாம். மனைவிக்கு அட்டமச்சனி ஆரம்பிக்கும்போது தாய்நாடு திரும்பலாம்.

● ஆர். பெருமாள், பாடியந்தல்.

என் இளைய மகன் கோபால் பி.எஸ்.ஸி., பி.எட்., முடித்து சென்னை தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? 27 வயது. திருமணம் எப்போது நடக்கும்? அடுத்துவரும் சுக்கிர தசை எப்படி இருக்கும்?

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. மீன ராசிக்கு சுக்கிர தசை நல்லது செய்யாது. என்றாலும் இவருக்கு சுக்கிரன் லக்னாதிபதி.

(துலா லக்னம்). சுக்கிரன் 12-ல் நீசம்பெற்று அம்சத்தில் ஆட்சிபெற்றதால் நீசபங்க ராஜயோகமாகும். 3-ஆவது தசையாகத்தான் நீசகிரக தசை வரக்கூடாது. கோபாலுக்கு 4-ஆவது தசை சுக்கிர தசை என்பதால் கெடுக்காது. 30 வயதில் திருமணம் செய்வது நல்லது. நல்ல வேலை, நல்ல மனைவி, சொந்த வீடு, செல்வாக்கு எல்லா யோகங்களும் உண்டாகும். சுக்கிர தசை வந்தபிறகு ஒருமுறை திருநாவலூர் சென்று வழிபடவேண்டும். (உளுந்தூர்பேட்டைக்கு முன்பு கெடிலம் ரோடு அருகிலுள்ளது.)

● ஆர். கிருஷ்ணன், கோவை.

கடந்த சில வருடங்களாகவே மனஉளைச்சல்- சக்திக்கு மீறிய கடன்- திருமணம் முடிந்தவுடனே மனைவி பிரிவு. இந்த நிலை எப்போது மாறும்? உங்கள் பிறந்த தேதியும் நேரமும்தான் எழுதியிருக்கிறீர்கள். ஜாதகக்குறிப்பு எழுதியனுப்பவில்லை. நடப்பு ராகு தசை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். என்ன லக்னம்?

ராகு எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லையே. எப்படிப் பலன் சொல்லுவது? ஜாதக நகல் அனுப்பவும். ஜாதகம் எழுதவில்லையென்றால் மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து அனுப்பவும். கம்ப்யூட்டரிலும் வாக்கியப்படி கணித்து அனுப்பலாம்.

● வி. சங்கர்- நல்லூர் (வந்தவாசி).

என் மகன் கிருஷ்ணனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? பெண் சொந்தமா? அசலா? நான் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?

கிருஷ்ணன் கடக ராசி, கடக லக்னம், பூச நட்சத்திரம். 8-ல் சனி இருப்பதால் 30 வயதில்தான் திருமண யோகம். நடப்பு 25 வயது. இன்னும் ஐந்து வருடம் பொறுமையாக இருப்பதே பரிகாரம். அன்னிய சம்பந்தம்.

● விஜயா, சேலம்.

எனது மகன் மணிகண்டன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னம். புதன் தசையில், குரு புக்தி நடக்கிறது. சரியான வேலை அமையவில்லை. குடும்பத்தின்மேல் பாசமும் இல்லை. திருமணம் எப்போது நடக்கும்? எப்போது பார்த்தாலும் காசு காசு என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான். சம்பாதித்து வீட்டுக்குக் காசு கொடுப்பானா?

மிதுன லக்னத்துக்கு 2-ல் செவ்வாய் நீசம். 2-க்குடைய சந்திரனும் 6-ல் நீசம். செவ்வாயும் சந்திரனும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்கம் அடைவார்கள். என்றாலும் 30 வயது முடிந்தபிறகுதான் திருமண முயற்சிகள் கைகூடும். 7-ல் சனி இருப்பதும் தோஷம். 2021 வரை ஏழரைச்சனி முடிந்தால்தான் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். அவர் திருமணத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவர் திருமணம் பற்றி பெற்றோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம்.

● பொன்னுரங்கம், பெரியகிராமம்.

76 வயதாகிறது. உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையிலும், இளைய மகள் பெங்களூரிலும் திருமணம் செய்துகொடுத்தேன். இளைய மகள் காயத்திரி திருமணமான நாள் முதல் சந்தோஷமாக இல்லை. கணவரும் சரியில்லை. 16 வயதில் ஒரே மகன். அவள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா? பேரன் பெங்களூரில் படிக்காமல் சென்னையில் படிக்க விரும்புகிறான். அவன் தந்தை சம்மதிப்பாரா?

குடும்ப அமைதிக்கும் கணவன்- மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தஞ்சாவூர் வழி (திருவையாறு அருகில்) பெரும்புலியூர் சென்று இறைவன் வியாக்ரபுரீஸ்வரரையும், இறைவி சவுந்தர நாயகியையும் வழிபட்டு, ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள உமா சமேதமூர்த்தி சந்நிதியில் அபிஷேக ஆராதனை செய்துகொள்ளவும். தொடர்புக்கு: சுவாமிநாதன், செல்: 99409 31425, 99423 09609. அடுத்து பேரன் படிப்புக்கும், அவன் விருப்பப்படி சென்னையில் படிப்பதற்கும் செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில், சிங்கப்பெருமாள கோவில் ஸ்டாப்பிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் செட்டிப்புண்ணியம் என்ற ஊருக்குச் சென்று வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவருக்கு அபிஷேகமோஅர்ச்சனையோ செய்து வேண்டவும். அத்துடன் அங்குள்ள அணிஞ்சல் மரத்தினைச்சுற்றி பிரார்த்தனைக் கயிறு கட்டவும். தொடர்புக்கு: செல்: 86757 27999.

● வி. சங்கர், நல்லூர்.

நான் உ.ப.ஊக்., ஆசிரியர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அரசுப்பணி அமையவில்லை. ஆசிரியர் தேர்வுக்கு ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று மார்க் வித்தியாசத்தில் தோல்வி ஏற்படுகிறது. பரீட்சையில் பாஸ் ஆகவும், அரசு ஆசிரியர் பணி கிடைக்கவும் என்ன பரிகாரம்?

சங்கர் துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத்திற்கு 10-ல் கேது, அதற்கு 8-ல் சூரியன் மறைவு என்பதால் அரசு வேலை கிடைப்பது கஷ்டம்தான். வயது 46 முடிந்துவிட்டது. சனி தசை நடக்கிறது. அவரும் லக்னத்துக்கு 8-ல் மறைவு.

● எஸ். குணசேகரன், புதுச்சேரி-1.

எனது மகள் சுகன்யாவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் தடையாகுமா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னம். 8-ல் சனி, 2-ல் செவ்வாய். இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். அதுதான் பிரச்சினை. மூல நட்சத்திரம் என்பதால் பிரச்சினை இல்லை. 27 வயது முடியவேண்டும். அதன்பிறகு காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து சுகன்யாவுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கிடையே அவர் யாரையாவது விரும்பினால் திருமணம் செய்து வைக்கலாம்.

● இராதாகிருஷ்ணன், திருமுல்லைவாயில்.

எனது இரண்டாவது மகள் கற்பகம் ஜாதகப் பொருத்தம் இல்லாத ஒருவரை- வயதில் குறைந்தவரை விரும்புவதாகக் கூறுகிறாள். அவரையே திருமணம் முடிக்க திடமாக இருக்கிறாள். அவள் மனம் மாற பரிகாரம் உண்டா?

கற்பகம் கன்னியா லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். 33 வயது நடக்கிறது. ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பம். 2-ல் சனி, கேது. 7-க்குடைய குரு 5-ல் நீசம். 8-ல் ராகு. அவரது திருமணம் அவர் விருப்பப்படிதான் நடக்கும். வயதைப் பற்றியும் ஜாதி சமயத்தைப் பற்றியும் சிந்திக்காமல் சீர்திருத்தத் திருமணமாக நடத்திவையுங்கள். அவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவுமே உங்கள் திருப்தியாக ஏற்று நீங்கள் மனம் மாறுவதுதான் வழி! அதுவே பரிகாரம்! திருமணத்தேதியை 1, 3, 6-ல் அமைத்து எளிமையாக நடத்திவைக்கலாம். பேரன்- பேத்தி பிறந்தபிறகு உங்கள் மனம் சாந்தியடையும்.