ஒரு தனிமனிதனின் எதிர்காலத்தைப் பார்ப்பதற்கு ஜோதிடம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. ஒருவர் பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாதகத்தைக் கணித்து அதனைக் கொண்டு எதிர்காலப் பலன்களைக் கூறுகிறோம். ஒருவருக்கு ஜாதகப் பலனை நிர்ணயம் செய்வதில் பாரம்பரிய முறைப்படி கோட் சாரப் பலன்கள், தசாபுக்திப் பலன்கள் என இரு வகையான பலன்கள் உண்டு. வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வரும் பலன்கள் ஜென்ம ராசியை வைத்துப் பார்க்கும் கோட்சாரப் பலன்களாகும். அவை பொதுவான பலன்கள்.
ஒரு தனி மனிதனின் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணிக்க உதவுவது தசாபுக்திப் பலன்களாகும். தசா புக்தி என்பது சுழற்சி முறையில் 120 வருடங்கள் நடக்கக்கூடியது. ஒருவர் பிறந்த நட்சத்திரம் எதுவோ, அந்த நட்சத்திரத்தின் அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் தசையே முதல் தசையாக நடக்கும். அடுத்து வரிசையாக ஒவ்வொரு கிரகத்தின் தசை நடக்கும். ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் அனைத்து கிரகங்களின் புக்தியும் நடக்கும். புக்தி என்பது தசையின் உட்பிரிவாகும். அந்தரம் என்பது புக்தியின் உட்பிரிவாகும்.
நவகிரகங்களில் சுபர், அசுபர் என உண்டு. சுப கிரகங்கள் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் ஏற்றம் மிகுந்த பலன்களை ஏற்படுத்துகிறது. அசுப கிரகங்கள் 3, 6, 10, 11-ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அதன் தசா புக்திக் காலங்களில் நற்பலன்களை ஏற்படுத்தும். சுப கிரகங்கள் கேந்திரங் களில் வலுப்பெற்றால் நற்பலன் களை ஏற்படுத்தாது என ஒரு பொதுக் கருத்து இருந்தாலும், நடைமுறை யில் பார்க்கும்பொழுது கேந்திரங்க ளில் அமையும் கிரகங்கள் நற்பலன் களையே தருகின்றன. நவகிரகங் களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவிகள் சேர்க்கைபெற்ற புதன் ஆகியவை பாவ கிரகங்களாகும். குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைபெற்ற புதன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். ஜென்ம லக்னத்திற்கு 3, 6, 8, 12 ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். சுபர்கள் மறைவு ஸ்தானங்களில் அமைந்தால் நற்பலன்களைத் தருவதில்லை. பாவ கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3, 6-ஆம் வீடுகளில் அமைந் தால் நற்பலன்களைத் தரும். 8, 12-ல் அமைந்தால் நற்பலன்கள் தருவதில்லை.
மறைவு ஸ்தானங்களில் அமையும் கிரகங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அவையனைத்தும் நமக்குக் கெடுதிகளை செய்வதில்லை. மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் பொழுது நாம் பணத்தை முதலீடுசெய்து சொந்தத் தொழில்செய்வது, லாப நோக்கோடு ஏதாவது புதிய முயற்சியில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக 3, 6 ஆகிய ஸ்தானங் களில் அமையப்பெறும் கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் வெளியூர், வெளி மாநிலங்கள்மூலமும், 12-ல் அமையும் கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் வெளிநாடு மூலமும் அனுகூலங்களை அடையமுடியும். ஆக 3, 6, 12-ல் அமையும் கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் சொந்த ஊரில் இல்லாமல் வெளியூர், வெளிநாடு களிலிருந்து செய்யும் செயல்களில் ஏற்றங் களை அடையமுடியும். 8-ல் அமையும் கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது.
எந்த கிரகம் ஒருவருக்கு யோகத்தைத் தரும், எந்த கிரகம் அனுகூலங்களைத் தராது என பார்க்கும்பொழுது, ஜென்ம லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும்பொழுது ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும். லக்னாதி பதிக்கு பகை கிரகங்களின் தசாபுக்தி நடை பெறும்பொழுது எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை இருக்கும்.
நவகிரகங்களில் ஒரு கிரகத்திற்கு ஒரு கிரகம் நட்பு- பகையில் வேறுபாடுகள் இருந்தாலும், நாம் பொதுவாக எளிதில் புரிந்துகொள்வதற்காகப் பார்க்கும் பொழுது, நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகி பலன் களைத் தருகின்றன. ஒரு ஜாதகத்தில் மேற்கூறியவாறு லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் பொழுது மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 2, 11, கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்ற கிரகமும், பாவியாக இருக்கும்பொழுது 3, 6, 10, 11-ல் அமைந்த கிரகமும் அதன் தசாபுக்தி நடைபெறும்பொழுது நற்பலன்களைத் தருகின்றன. ஒரு கிரகமானது நட்பு கிரகச் சேர்க்கை, நட்புகிரகப் பார்வை பெற்று குருபோன்ற சுபகிரகப் பார்வையோடு இருந்து தசை நடைபெற்றால் மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஒரு கிரகம் பகைவீட்டில் இருந்தாலும், நீசம்பெற்றா லும், வக்ரகதியில் இருந்தாலும், மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் நற்பலன்கள் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நவகிரகங்களில் ஒரு கிரகத்தின் தசை நடைபெறும்பொழுது சுயபுக்திக் காலங்களில் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. சுயபுக்தியில் நற்பலன் ஏற்பட்டால் மற்ற புக்திகளில் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. சுயபுக்தியில் சில சோதனைகளை எதிர் கொண்டால், அடுத்தடுத்த புக்தியில் நற்பலன்கள் ஏற்படுகிறது. அதனால்தான் சுயபுக்தியில் நற்பலன்கள் ஏற்படக்கூடாது என பொதுவான கருத்தைக் கூறுவார்கள்.
தசாநாதனுக்கு புக்திநாதன் நட்புகிரக மாக இருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அதுவே தசாநாதனுக்கு புக்திநாதன் பகை கிரகமாக இருந்தால் அந்த புக்திக் காலத்தில் நல்ல பலன் ஏற்படுவதில்லை. உதாரணமாக சனி தசையில் செவ்வாய் புக்தி, சூரிய தசையில் சனி புக்தி ஆகியவை, தசாநாதனுக்கு புக்திநாதன் பகை கிரகம் என்ற காரணத்தினால், அந்த குறிப்பிட்ட காலத்தில் நல்ல பலன் ஏற்படுவதற்கு இடையூறுகள் ஏற்படும்.
ஒரு லக்னத்திற்கு நட்பு கிரகங்கள் அனுகூலமான பலனைத் தரும். லக்னாதி பதிக்கு பகை கிரகமாக இருக்கக்கூடிய கிரகங் கள் நல்ல பலனை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக, சிம்ம லக்னத்தில் பிறந்தவர் களுக்கு சனி தசையானது அனுகூலமான பலனைத் தருமென கூறமுடியாது.
அடுத்து, ஒரு கிரகம் அமையும் வீடு நட்புகிரகமாக இருந்தால் நல்ல பலனைத் தரும். அதுவே பகை வீட்டில் அமைந்து தசை நடந்தால் நல்ல பலன் தருவதில் இடையூறுகள் ஏற்படும். உதாரணமாக சனி, சூரியன் வீடான சிம்ம ராசியில் அமையும்பொழுது அவ்வளவு சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. அது போல சூரியன், சனி வீடான மகரம், கும்பத்தில் அமையும்பொழுது அவர்களுக்கு சூரியதசைக் காலத்தில் ஒரு விசேஷ பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். அது போல ஒரு கிரகம் பகை நட்சத்திரத்தில் அமையப்பெற்று தசாபுக்தி நடந்தால் நல்ல பலனை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக சூரியன், சனி, ராகு நட்சத்திரத்தில் இருக்கும்பொழுது அவ்வளவு சிறப்பான பலனைத் தருமென எதிர்பார்க்க முடியாது.
ஒருவருக்கு மூன்றாவதாக நடக்கும் தசையானது சிறப்பான பலனைத் தருவதில்லை. மூன்றாவது தசையில் உழைப்புக்கான பலனை அடைவதில் நிறைய இடையூறுகளும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. ஜோதிடத்தின் மூன்றா வது தசையை வதை தசையென்று கூறுவோம். அதனால் மூன்றாவது தசைக் காலத்தில் பெரிய முதலீடுகள்கொண்ட செயல்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசையாக நடக்கும் ராகு தசைக் காலங்களில் பெரிய அளவில் அனுகூலங் களை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. அதுபோல பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசையாக நடக்கும் கேது மகாதசையில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெற இடையூறுகள், முன்னேற்றத் தடை ஏற்படுகிறது.
ஒரு கிரகமானது லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருந்து, நல்ல ஸ்தானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தசை நடந்தால், அந்த ஜாதகர் மிகக் குறுகிய காலத்திலேயே வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அனைத்துவிதமான செல்வத்தையும் அடையக்கூடிய அதிசயத்தை, அதிர்ஷ் டத்தை அடையமுடியும். ஜோதிடரீதியாக ஒருவருக்கு லக்னாதிபதிக்கு நட்பு கிரக தசையில், அந்த கிரகம் நல்ல ஸ்தானத்தில் அமைந்திருக்கும் அமைப்பில் ஒருவர் முதலீடு செய்து தொழில் செய்தால் அந்த ஜாதகர் ஒரு உயர்வான நிலையை எட்ட முடியும்.
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்து தசை நடந்தால் அந்தக் காலத்தில் ஜாதகர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு தொழில் செய்வது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்கள் செய்வதைத் தவிர்த்தலே நல்லது. பலவீனமான கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் மற்றவர்களை சார்ந்து செயல்படுவது, வேலைக்குச் செல்வது உத்தமம். தசாபுக்திப் பலனைப் பார்ப்பது எதற்கென்றால், அந்த தசாபுக்திக் காலத்தில் ஒரு முயற்சியில் ஈடுபட்டால் அந்த செயல் வெற்றி தருமா- ஒரு தொழிலில் ஈடுபட்டால் அந்தத் தொழிலில் லாபத்தை அடையமுடியுமா என்பதை அறிந்துகொள்வதற்குதான். பொது வாக பலவீனமான கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் கவனமாக இருப்பது நல்லது.
சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவின் தசைப் பலன்களைப் பற்றிப் பார்க்கும் பொழுது, ராகு- கேது லக்னத்துக்கு 3, 6, 10, 11-ல் இருந்தால் அதன் தசாபுக்திக் காலத்தில் அனுகூலமான பலனைத் தரும். அதுபோல ராகு- கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும். ராகு- கேது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் அந்த பாவகம் தொடர்பான விஷயங்கள் பாதித்தாலும், மற்ற அம்சங்கள் நன்றாக இருக்கும். ராகு- கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்தால் ராகு- கேது தசாபுக்திக் காலத்தில் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது.