எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 1.

செவ்வாய்: ரேவதி- 3.

Advertisment

புதன்: பரணி- 3.

குரு: கிருத்திகை- 3.

சுக்கிரன்: கிருத்திகை- 4.tt

சனி: பூரட்டாதி- 2.

ராகு: ரேவதி- 1.

கேது: அஸ்தம்- 3.

கிரக மாற்றம்:

வைகாசி 18 (31-5-2024) ரிஷப புதன் (பகல் 12.15).

வைகாசி 19 (1-6-2024) மேஷ செவ்வாய் (பகல் 3.37).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- தனுசு

27-5-2024 மாலை 4.05 மணிக்கு மகரம்.

29-5-2024 இரவு 8.06 மணிக்கு கும்பம்.

31-5-2024 இரவு 11.10 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், நெருங்கியவர்களால் அனுகூலங்கள், மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் தொழிலை சிறப்பாக செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து ஒரு கௌரவமான நிலையினை நீங்கள் எட்டுவீர்கள். விரும்பிய பதவி உயர்வுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கடந்தசில நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்களுக்கு கல்வி யில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது. முருக கடவுளை மனதார வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நற்பலனை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலமாக ஆதாயம் அடையும் வாய்ப்புகள் உண்டு. உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற மனகுழப்பங்களும், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒருநிலையும் இந்த வாரத்தில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலையாட்கள் செய்யக்கூடிய சிறுசிறு செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும் என்றாலும் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பழகுகின்றபொழுது சற்று பார்த்து பழகுவது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற நிம்மதி குறைவுகள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் முழுமையான வெற்றிகிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிக மிக நன்றாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் எளிதில் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி தரக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டமுடியும் என்றாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில நேரங்களில் சற்று பக்குவத்தோடு நடந்துகொள்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் பல்வேறு காரியங்களை எளிதில் செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தங்கள் திறமை களை வெளிக்காட்ட கூடிய போட்டிகளில் பங்கேற்று பரிசு பாராட்டுதலை பெரும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் ஒருநல்ல தீர்வு கிடைக்கும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள் மாலை, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகி உங்கள் மன அமைதியை குறைக்கும். குறிப்பாக இந்த நாட்களில் புதியமுயற்சிகளைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது கெடுதியை குறைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது எண்ணங்கள் எளிதில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களின் பெயர் புகழ் மேலோங்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர் களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் நிமித்தமாக இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதியுடன் தொழில் புரியமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த பதவி உயர்வுகள் தற்போது கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் தங்கள் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காலபைரவரை தரிசிப்பது நற்பலனைத் தரும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கங்கள் இருக்கும் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்தவரை இரவு நேர பயணங்களைத் தவிர்ப் பது தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டும். கூட்டாளிகள் அவர்களுடைய பங்கை கேட்டு உங்களுக்கு தேவையற்ற இடைஞ்சல் களை ஏற்படுத்துவார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை பேசுகின்றபொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசுவது நல்லது. ஒரு சிலருக்கு தேவையில்லாத அலைச்சல்களும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் சிக்கலான பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பெற்றோர்களிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமையன்று தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியை குறைக்கும்.

ss

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன், சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருந்து அன்றாட தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யோடு செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை வருகின்ற நாட் களில் பெறமுடியும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்பு கள் தற்போது குறையும். கூட்டாளிகளை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் சக ஊழியர் உடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு தற்போது பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய அதிர்ஷ்டங் கள் உண்டு. மாணவ- மாணவி யர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண் களை பெற்று பெரியோர்களுடைய ஆசிரியை பெறுவார்கள். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத பணஉதவிகள் கிடைத்து நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது தைரியத்தை தரக்கூடிய அமைப்பாகும். சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. சனிபகவான் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றமும் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. அசையும், அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தூரப் பயணங் களைத் தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்ற காரணத்தால் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் சூழ்நிலையை சமாளித்து நல்ல பெயர் எடுக்கமுடியும். குறிப்பாக மேல் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாமல் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த தைவிட அதிகப்படியான பணவரவுகள் வந்தடைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்தடைந்து பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 5-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க சிறுசிறு இடையூறுகள் ஏற்படும். குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலமாககூட வீண்செலவுகள் ஏற்படலாம். பொதுவாக குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகின்றபொழுது கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானமாக பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்ற காரணத்தால் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் அடைய வேண்டிய லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. பணி நிமித்தமாக கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் தற்போது சற்று குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிர்பார்க்கக்கூடிய உயர் படிப்பு வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது போன்ற செயல்களில் பரிபூரண வெற்றி கிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சர்பேஸ்வருக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், பஞ்சம ஸ்தானத் தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்குமிடத்தில் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கு இருந்து வரக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப் பாக செயல்பட்டு வாடிக்கையாளரிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது படிப்படியாக குறைத்துக்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்படக்கூடிய பலமும் கடினமான காரியங்களைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிக்க கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருப்பதால் நீங்கள் விரும்பிய இடமாற்றங் களை பெறக்கூடிய யோகங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் நிலவிய கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். மனைவி, பிள்ளைகள்வழியில் இருந்துவந்த கடந்தகால மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய பலம் உண்டாகும். பங்காளிவகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை நீங்கள் எட்டுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் ஒவ்வொரு பணியையும் நீங்கள் சுலபமாக செய்து முடிக்கமுடியும். கிளை நிறுவனங்கள் உருவாக்க நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதியுடன் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து வாழக்கூடிய ஒரு நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக செயல்படுவார்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் இருக்கும் இடத்தில் உங்கள் பெயர், புகழ் மேலோங்கக்கூடிய அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்துப் பேச வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கிடைக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியானமுறையில் பராமரித்து வைத்துக் கொள்வது தற்போதைக்கு நல்லது. குறிப்பாக வெளிநபர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் உடன் வேலைச் செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால்தான் தற்போதைய நிலையினை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் மன நிம்மதி உண்டாகும். பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு தீபமேற்றுவது நற்பலனை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். குறிப்பாக கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்பட்டால் அடையவேண்டிய அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்தால்தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் சக ஊழியருடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் எடுக்கின்ற காரியங்களை சுலபமாக செய்துமுடிக்க முடியும். பூர்வீகச் சொத்துவகையில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதியானது குறையும். மாணவ- மாணவியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய செய்தி கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது.