முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 4.

செவ்வாய்: ரோகிணி- 4.

Advertisment

புதன்: திருவோணம்- 3.

குரு: உத்திரட்டாதி- 4.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

சனி: அவிட்டம்- 4.

ராகு: பரணி- 1.

கேது: சுவாதி- 3.

கிரக மாற்றம்:

இல்லை.

tt

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

20-2-2023 அதிகாலை 1.15 மணிக்கு கும்பம்.

22-2-2023 அதிகாலை 1.10 மணிக்கு மீனம்.

24-2-2023 அதிகாலை 3.43 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

சூரியன், சனி சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுத்த பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்கக்கூடிய பலமுண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து, அனைத்து விதமான நெருக்கடிகளும் விலகி மகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாட்களாக எண்ணிய காரியங்கள் தற்போது நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மகிழ்ச்சி யளிக்கும். புதன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். படித்து முடித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். செவ்வாய், ராகு சாதகமற்று சஞ்சரிப்பதால், முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், புதிய முயற்சிகளில் ஈடுபடுதல், புதிய சொத்துகள் வாங்குதல் போன்ற காரியங் களில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளையும் உத்தரவுகளையும் தற்போது பெறமுடியும். மறைமுகப் போட்டிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியைத் தரும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு எள்தீபம் ஏற்றுவது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். ராகு லாப ஸ்தானமான 11-ல் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு நெருக்கடிகள் சற்று குறையும். உறவினரி டம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் இலக்கை எளிதில் அடையமுடியும். மறைமுகப் போட்டிகள் சில இருந்தாலும் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபத்திற்கு எந்த விதத்திலும் குறைவிருக்காது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் செயலில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்ல நிலையை எட்டமுடியும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அதிகப் படியான அனுகூலங்கள் கிடைக்கும். மகாவிஷ்ணு வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ல் புதன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்ப தால் உங்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகும். மேலும் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்து அனுகூலமான பலன் கிடைக்கும். இந்த வாரத்தில் சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வயதில் மூத்தவர்களுடன் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் எதையும் சிறப்பாகக் கையாண்டு நல்ல லாபங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் செய்யமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப் பாக செய்துமுடிக்க முடியும். வாகனங்களில் பொறுமையோடு செல்வது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், சனி சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறா கப் புரிந்துகொள்வார்கள். எனவே பேச்சில் பொறுமை யோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குரு, சுக்கிரனுடன் 8-ல் இருப்பதால் எதிர்பார்த்த பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருக்கவேண்டிய நேரமாகும். மிகவும் நெருங்கியவர்களால் மனக் கவலைகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும், ராசிக்கு 10-ல் செவ்வாய் இருப்பதால் எதையும் சமாளித்து போட்ட முதலை எடுத்துவிட முடியும். கூட்டாளிகளை ஆலோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். சக ஊழியரிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. பெண்கள் வழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாமென்பதால் கவனமாக இருக்கவும். வாகனங்கள்மூலமாக செலவுகள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக சாதகமான பலன்கள் ஏற்பட்டு பிரச்சினைகள் சற்று குறையும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது சிறப்பு.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை

1, 2-ஆம் பாதங்கள்) ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாள் கனவுகள் வரும் நாட்களில் கைகூடி நிம்மதி ஏற்படும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் எண்ணம் தற்போது பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல வரன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், வாங்கிய கடன்களை எளிதில் பூர்த்திசெய்வீர்கள். தகுதி வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவார்கள். நண்பர்கள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த கடந்தகால நெருக்கடிகள் முழுமையாக மறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வந்து அனுகூலமான தீர்ப்பைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

tt

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சர்ப்ப கிரங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. குரு பகவான் 6-ல் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் உங்களின் தனித்திறமையால் சிறப்பாகக் கையாள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு ஈடுபட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வாகனங்களில் நிதானத்தோடு செல்வது, இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு இடையூறுகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு ஈடுபடவும். அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் ஆதரவானது நெருக்கடியான நேரத்தில் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் அனுகூலமான நாட்களாக இருக்கும். முருக வழிபாடு, துர்க்கை தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடைவீர்கள். கடன்கள் குறைவதால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். கணவன்-. மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ராகு 6-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், அடையவேண்டிய லாபத்தை எளிதில் அடையமுடியும். வேலையாட்களால் சிறுசிறு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு பணியிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி உண்டாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் கிடைக்கவேண்டிய சன்மானங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு தற்போது ஒரு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியளிக்கும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

சூரியன் 3-ல் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்லதோர் முன்னேற்றங்கள் உண்டாகும். இதுநாள்வரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். பணவரவு சிறப்பாக இருந்து கடன்கள் குறையும். உடல்ரீதியான பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களிடம் நிலவிய மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரன் 4-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும். ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினையையும் தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை விலகி நல்ல லாபங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது பயனடையப் போகிறீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பேச்சுத் திறமையால் நீண்டநாட்களாக உள்ள சிக்கல்களை எளிதில் சமாளிக்கமுடியும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். பெருமாள் வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். ஒவ்வொரு செயலிலும் நிதானத் தோடு இருந்தால்தான் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். குரு 3-லும், ராகு 4-லும் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை, சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நீங்கள் நினைப்பதொன்று- நடப்பதொன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் வீண் பிரச்சினைகள் மன அமைதியைக் குறைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பேசாமலிருப்பது நல்லது. உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்கள் வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். நீங்கள் மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக நிம்மதிக் குறைவுண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்ப தால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் இணைந்திருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் முழுமையான வெற்றிபெற்று மகிழ்ச்சியடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறலாம். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க சில இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கக்கூடிய பலமுண்டாகும். வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் வழியில் மகிழ்ச்சிதரும் இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். நவீனகரமான கருவிகளை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வெளிநபர்களிடம் தொழிலைப் பற்றிப் பேசாமலிருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகியவை அனுகூலமான நாட்களாக இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு, சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் குரு, 12ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். பொருளாதாரரீதியாக ஏற்படக்கூடிய நெருக்கடிகள் மனக் கவலையைத் தரும். ராகு 2-ல் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, பேச்சால் பிரச்சினைகள் உண்டாகும். வயது மூத்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகி மன அமைதி குறையும். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். பிள்ளைகள்வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கிய உறவினர் கள்மூலமாக ஒருசில உதவிகள் கிடைக்கும். ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில்ரீதியாக ஏற்படும் போட்டிகளை உங்கள் தனித்திறமை யால் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடி இருந்தாலும், எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். உடனிருப்பவர்கள் தேவையற்ற கருத்துகளைச் சொல்லி உங்கள் மனதைக் கலைக்கப் பார்ப்பார்கள். நீங்கள் தற்போதிருக்கும் நிலையே சிறப்பான அமைப்பாகும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்லதோர் சூழ்நிலை ஏற்பட்டு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நன்று.