பயணம் மேற்கொள்வது என்பது அனைவருக்கும் இன்பம் தருவனதாகவே இருக்கும். அது ஆன்மிக பயணமாக இருந்தாலும் சரி, இன்பச் சுற்றுலாவாக இருந்தாலும் சரி.
உளவியல்ரீதியாகவே ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூர் பயணம் செல்வது உடலுக்கும் மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி தருவனவாக இருக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இப்படிதான்.
அவரவர்கள் பொருளாதாரநிலை, நேர வாய்ப்பு தெரியாத இடமாக இருந்தால் பயம், மொழி பிரச்சினை இப்படி பல காரணங்கள் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் எந்த மாநிலத்தில் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது மனநலம், உடல்நலம் இவற்றைக் கருத்தில்கொண்டு ஒரு சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்பதை உங்கள் பட்ஜெட்டில் சேர்த்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அதுபோன்ற சுற்றுப்பயணம் இறைவழிபாட்டை ஒட்டியோ அல்லது சோதிட பரிகாரங்களுக்கோ அல்லது வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலோ என எப்படியும் இருக்கலாம். அதற்காகதான் தமிழகத்தில் மட்டும் அல்லாது பிற மாநில கோவில்களை பற்றியும் அது மலைக் கோவிலாகவோ, கடல் கோவிலாகவோ, தரைக் கோவிலாகவோ இருந்தாலும், சில சிந்தனைகளை இந்த தொடரில் பதிந்து வந்திருக்கிறோம்.
அந்தவகையில் இந்த வாரம் நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் திருக்கோவில் ஒரு மலைக் கோவிலோ, கடல் கோவிலோ இல்லை. இது ஒரு குகைக் கோவில். என்னது குகையா என்று பயப்படவேண்டாம். இந்த குகைக் கோவிலும் தமிழகத்தில் இல்லை என்பதால், மொழி தெரியாதே என்ற அச்சமும் தேவையில்லை.
இந்தத் திருக்கோவிலின் பெயர் பாதாள் புவனேஷ்வர் என்பதாகும். கேட்கும்போதே மனதில் ஏதோபோல இருக்கிறதா? சரி இருக்கட்டும். இது சிவன் கோவில்தான். இந்த கோவில் தமிழகத்தில் இல்லை. உத்திராகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது.
இந்தக் கோவிலுக்கு சுமார் 20 ஆண்டு களுக்குமுன் முதன்முறையாக நான் போகும்போது, சற்று தயக்கமும் பயமும் இருந்தது என்பது என்னவோ உண்மைதான். என்றாலும் இந்தக் கோவிலின் சிறப்பம்சங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என இந்த வாரம் உங்களுக்குத் தருகிறேன்.
இந்தக் கோவிலுக்கு விமானம் வழியாக செல்லவேண்டும் என்றால், பிதௌரகரிலுள்ள நைனி சயினி விமான நிலையம்வரை சென்று அங்கிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இந்த இடத்தை அடையலாம். ரயிலில் செல்லவேண்டும் என்றால் காத்கோடகம்வரை சென்று அங்கிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் இங்கே செல்லலாம் என்றாலும், ஏப்ரல்முதல் ஜூன்வரை உள்ள காலத்தில் செல்வது நம்மை போன்ற தென்னிந்தியர்களுக்கு வசதியாக இருக்கும். பாதாள் புவனேஸ்வர் என பெயரில் உள்ளதுபோலவே பாதாளத்தில்தான் இந்த கோவில் அமைப்பு உள்ளது.
இந்த குகையின் நீளம் சுமார் 160 மீட்டர் ஆகும். இதன் ஆழம் 90 மீட்டர் ஆகும். உள்ளே நுழைய இரும்பு சங்கிலி போட்டு இருப்பார்கள். அதை பிடித்துக்கொண்டுதான் நகரவேண்டும். மர்மமான இந்த குகை சுமார் 120 மீட்டர்வரை இந்த குகை செங்குத்தான பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். அட இத்தனை பயங்கரமா என்று மர்ம நாவலில் வருவதுபோல பயப்பட தேவையில்லை.
கயிலாயத்தை பற்றி நாம் படித்து அல்லது பெரியவர்கள் சொல்லி தெரிந்து இருப்போம்.
ஆனால் இந்த பாதாள புவனேஸ்வர் குகைக் கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் கயிலாத்திற்கே சென்றது போன்ற உணர்வு ஏற்படும். இந்து புராணங்களில் குறிக்கப்பட்டு இருக்கும் இந்தக் கோவிலின் தெய்வம் சிவபெருமான்தான். இந்த குகைக் கோவிலின் எந்த பாறையை பார்த்தாலும் அங்கே லிங்க வடிவம் தோன்றும். இறைவனே இங்கே இருப்பதை உணரமுடியும்.
இதைவிட அதிசயமாக இந்தக் கோவிலிலுள்ள லிங்கத்தின்மீது, புனிதநீர் தானே வழிந்து ஓடும். இதன் அருகில் எந்த நீர்நிலைகளும் இல்லை என்பதுதான் அதிசயம். கங்கையே லிங்கத்தை விழுந்து வணங்குவதுபோல இருக்கும் அற்புதமான இயற்கை அமைப்பை கொண்டது இந்தத் திருத்தலம்.
இந்தக் கோவிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் உணர்வு நிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரமுடியும். இந்தக் கோவில் சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறையும்வரை திறந்திருக்கும். இரும்பு சங்கிலியை பிடித்துக்கொண்டே குகைக்குள் இந்த குகைக் கோவிலுக்கு சென்றவர சாதாரணமாக சுமார் ஒன்றரைமணி நேரமாகும்.
அருகில் கடைகள் எதுவும் கிடைக்காது என்பதால் வழிபாட்டுக்கு தேவையானதை நாமே முன்னதாகவே திட்டமிட்டு எடுத்துச்செல்வது நல்லது. எதுவுமே எடுத்துச் செல்லவில்லை என்றாலும் தவறில்லை.
அன்பே சிவம் என்பதை உள்ளத்தில் அன்பு ஊறி அன்பினால் ஆனந்த கண்ணீர் சொரிந்து சிவ பெருமானை வழிபட்டாலே போதும். யாவர்க்குமாம் ஒரு பச்சிலை எனபதுதானே திருமூலர் வாக்கு இல்லையா.!
சுமார் அரை அடி அகலமே வழி உள்ள சில பாதைகள், நான்கு மாடிகளை கீழ் நோக்கிகொண்ட. குகை பாறைகள், 45 டிகிரி வளைவுள்ள வட்ட வடிவ பாறைகள், தண்ணீர் வழிந்து ஓடிய சில இடங்களில் வழுக்கும் பாறைகள், பார்க்கும் இடமெல்லாம் சிவ லிங்கங்கள் என ஒவ்வொரு நகர்வும் அடுத்தது என்ன என்று யோசிக்கும்படி சாகசம் நிறைந்தபடி அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு ஒரு முறையேனும் அனைவரும் சென்றுவர வேண்டும் என்பது தான் நமது விருப்பம்.
சூரியவம்சத்தில் வந்த ருதுபர்மன் என்ற மன்னன் திரேதா யுகத்தில் கண்டு அறிந்த குகை என்று நம்பப்படும் இந்த குகையின் வழியே கயிலாயத்திற்கு செல்லவழி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த குகைக் கோவிலுக்கு அருகிலேயே வண்டி நிறுத்தும் பார்க்கிங் மற்றும் சிற்றுண்டி விடுதி, கழிப்பறை என டூரிஸ்ட் வசதிக்காக இருக்கிறது.
வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்காமல், ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு சாகசம் நிறைந்த இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு இன்பம்பெற வாழ்த்துகிறோம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172