என்னவோ போங்க சார்... எங்க குடும்பத்தில் எந்த ஜாதகத்தை பார்த்தாலும் பிதுர் சாபமாக இருக்கு, இல்லாவிட்டால் சர்ப்ப தோஷமாக இருக்கு, இல்லாவிட்டால் அஷ்டமச்சனி- இப்படி எதாவது ஒன்னு இருக்குங்க. எனக்கு என்னவோ, நம்பிக்கையே போச்சு என்று வருந்தி அழுபவர்கள் ஒரு பக்கம்.
எனக்கு பாருங்க.. தெரிந்தோ- தெரியாமலோ, கல்லூரி காலத்திலேயே காதல், அதுவும் ஏனோ முழுமையாக வெற்றிபெறவில்லை. பிரேக் அப் ஆயிடுச்சு. அப்புறம் வீட்டில் கல்யாணம் செய்துகொடுத்தாங்க. அதுவும் டிவேர்ஸ் ஆயிடுச்சு. இப்போ குழந்தை இருக்கு, துணைக்கு மறுமணமும் ஆகவில்லை, நிம்மதியும் இல்லையென்று புலம்பி தவிப்பவர்கள் ஒரு பக்கம்.
என்னவோ படிக்கனும்னு படிச்சுட்டேன், ஆனால் பாருங்க எதிலேயுமே interestஇல்லை. காதலும் பிடிக்கவில்லை, கல்யாணமும் பிடிக்கவில்லை, வேலைக்கு போகவும் ஆர்வமில்லை என்று எதையோ பறிகொடுத்தது போல உள்ள பல 90 கிட்ஸ் பரிதாபமாக உலகம் முழுவதும் இருக்கிறார்கள் இன்னொரு பக்கம்.
உண்மையிலேயே, இவர்களுக்கு என்னதான் பிரச்சினையாக இருக்கும் என ஜாதகத்தில் தேடிப்பார்த்தால், சர்ப்ப கிரகம் தலைதூக்கி நிற்கும். குறிப்பாக 90 கிட்ஸ் படம் வேதனைகளை பட்டியலிட்டு சொன்னால், நமக்கே பரிதாபமாகவே இருக்கும்.
சரி இருக்கட்டும்; உண்மையிலேயே சர்ப்ப தோஷத்திற்கு தீர்வே இல்லையா..? ஆண்டுக்கு ஒருமுறை வரும் குருப்பெயர்ச்சி போல, இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சி போல இப்போ ராகு- கேது பெயர்ச்சி வந்து இப்போ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.. ராகு- கேது என்றால் உண்மையிலேயே அவ்வளவு பிரச்சினையா என்று நமக்கு இப்போ சிந்திக்க தோன்றும்.
ஒன்றை சரியாக புரிந்துகொள்ளுங்கள். சர்ப்ப தோஷ பிரச்சினை இருக்கிறதோ- இல்லையோ, சர்ப்பம் தொடர்பான எந்த நிகழ்வுகளையும் சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜாதகத் தில் இருள் கிரகம் என குறிக்கப்படும் ராகு- கேதுக்களை சர்ப்பமாக நமக்கு ஜோதிடம் அடையாளம் காட்டிதரும். அதனால் அவற்றை சர்ப்ப கிரகமாகவே நாமும் அணுக பழகுவோம்.
ஷண்மதங்கள் என்று சொல்லும், கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சைவ வழிபாடு, சக்தி வழிபாடு, வைணவ வழிபாடு, சூரிய வழிபாடு என அனைத்திலும் சர்ப்பங்கள் இருக்கும். பிள்ளையார் வயிற்றில், முருகனின் காலில், சிவனின் கழுத்தில் சக்தியின் பாதத்தில், பெருமாளின் சயன கோலத்தில் குடையாக என சர்ப்பங்கள் கூடவே வரும்.
இந்த சர்ப்ப கிரக வழிபாட்டிற்கு பல திருத்தலங்களை அடையாளம் காட்டி சொல்லமுடியும் என்றாலும், சர்ப்ப கிரக தோஷம் அல்லது சாபம், கால சர்ப்பம் என இருக்கிறதோ- இல்லையோ. பொதுவாக எல்லாரும் வழிபட வேண்டிய திருத்தலம் இந்த நாக மலைதான்.
என்னது பாம்பு மலையா என்று மலைத்து போகவேண்டாம். இந்த மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் இருக்கிறது. திருப்புகழிலும் சரி, கந்தர் அலங்காரத்திலும் சரி, திருமுறைகளிலும் சரி; இந்த திருத்தல குறிப்பு இல்லாமல் இல்லை. திருச்செங்கோடு என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில் இந்த மலை இருக்கிறது.
சுமார் 1,200 படிக்கட்டுகள்கொண்ட இந்த மலைக்கு சென்றுவர கோவில் பேருந்து வசதிகளும் உண்டு என்றாலும் நடந்துசெல்லும் வழியில்தான் பாம்பு மலையை பார்க்கமுடியும். மலை உச்சிவரையில், காலில் காலணிகளுடன் செல்லலாம் என்றாலும் 60 அடி நீளத்திலுள்ள பாம்பு மலைப்பகுதி புனிதத் திலும் புனிதமாக கருதப்படுவதால், காலணிகளை கழட்டி கையில் எடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
இங்கே மலையே லிங்கமாக கருதப்படுகிறது. இம்மலையை பௌர்ணமியில் வலம்வந்தால், கயிலாயத்தை வலம்வந்த புண்ணியம் உண்டு. கிரிவலம் திருவண்ணாமலைதானே என்று யோசிப்பதற்கு முன்பாக ஒருமுறை இங்கே வந்து வலம்வந்து பாருங்கள்.
கோவிலின் உள்ளே சுவாமி அர்த்தநாரீஸ்வரராக இருந்து சுயம்புவாக அருள்பாலிக்கிறார். செங்கோட்டு வேலவன் தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். ஒருபுறம் ஆணாகவும் மறுபுறம் பெண்ணாகவும் காட்சிதரும் இந்த மலையில் அருள் பாலிக்கும் ஆண்டவர் உளிபடாத திருமேனியாக தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடதுபாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.
மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும். இத்திருத்தலத்தின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும். இது விறல் மின்ட நாயனார் அவதார திருப்பதி என்ற பெருமைக்கு உரியது. "கொடிமாடச் செங்குன்றூர்' என்று தேவாரங்களில் குறிக்கப்பட்டு இருக்கும் இந்த திருச்செங்கோடு நம்ம தமிழ் நாட்டில்தான் சென்றுவரும் தொலைவில்தான் உள்ளது.
தம்பதியர் ஒன்றுமைக்கு இந்த திருத்தலத்தை பொதுவாக சொன்னாலும், இந்த நாகமலை, நாகதோஷம், ராகு- கேது தோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம் போன்ற அனைத்துவித நாகதோஷங்களுக்கும் இந்த திருத்தலம்தான் பரிந்துரையாக சொல்லலாம்.
இப்போதெல்லாம் அவ்வப்போது வந்து நம் காலை சுற்றிவரும் கொரோனாபோல முன்பு வந்தபோதும், இந்த திருத்தல ஆண்டவனை வேண்டியே ஞான சம்பந்தர் பதிகம் பாடி வினை நீக்கி அருளினார் என்பது வரலாறு.
வாழ்க்கையில் ஏற்படும், எந்தவித சிரமமங்களுக்கும் சர்ப்ப கிரக தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பது விதி என்றபடியால், வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த திருத்தலம் சென்றுவருவது அவசியம். குறிப்பாக சர்ப்பதோஷங்கள் உள்ளவர்கள் பேருந்து பயணத்தைத் தவிர்த்து, மலைமேல் கால்நடையாகவே சென்று வரவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்..
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172