வறுமை மற்றும் ஏழ்மை சூழந்த சூழலில் வாழ்ந்த ஒருவர், ஏதாவது ஒரு திருட்டு தனம் செய்து நமது குடும்ப வறுமை ஒழியவேண்டும் என்று பொய்கள் பல சொல்லி வாழ்க்கையில் முன்னேறுவிடுவார். மக்களும் அவருடைய அறிவையும் திறமையையும் பாராட்டி, அவர் செய்த பொய் பித்தலாட்டங்களை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல், அவரை மதித்து போற்றுவார்கள்.
அவருக்கு பின்னால் வரும் அடுத்த தலைமுறைகள் வசதியான சூழலில் வாழ்ந்தபடி நாம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் வாழ்க்கையை கழிப்பார்கள்.
அந்த அடுத்த தலைமுறை குடும்பத்தினர் தனது அப்பா செய்த தவறுகளையோ- பித்தலாட்டங்கலையோ செய்யாமல், அப்பா வறுமையில் இருந்ததால், நாம் வசதியாக வாழவேண்டும் என அப்படி செய்தார். இனி நாம் அதுபோல செய்யக்கூடாது என்று மனம்வருந்தி திருந்தி, தவறுகள் செய்யாமல் வாழக்கையை நகர்த்தி உயர்ந்து நிற்கவேண்டும். இதுதான் இயல்பு.
ஆனால் பாருங்கள், "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்று சொல்வதுபோல, அடுத்த தலைமுறைகளும் செல்வ வளமும், வசதியும் இருந்தும்கூட அதேபோல தவறுசெய்து பொருள் சம்பாதித்தால், மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அவர்களும் மக்கள் பணியில் இருந்தால் ஒருபோதும் நிச்சயம் ஏற்றக்கொள்ளமாட்டார்கள் இல்லையா.
இது பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங் களிலும் தனிமனித வாழ்வில்கூட இப்படித் தான் அமைந்துவிடும்.
தனிமனித வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால், ஐயகோ!.. இப்படி தவறு செய்துவிட்டேனே என்று வருந்தி அழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி வருந்தி தவறு செய்பவர்களே..!! என் செய்தேன் என்று வருந்தும்படி தவறுகளைச் செய்யாதீர்கள். ஒருவேளை அப்படி செய்துவிட்டால், மீண்டும் அது போல தவறுகளைச் செய்யாதீர்கள் என்று சொல்லவரும் இந்த கருத்தை எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று என்ற திருக்குறள் சொல்கிறது.
அது சரிங்க ஐயா, நான் தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாதா? மனம்வருந்தி திருந்தி வாழமுடியாதா? என்று ஏங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார் கள். அருணகிரிநாதர்கூட இப்படி மனம்வருந்தி திருந்திதானே திருப்புகழ் படைத்தார்.
இதுபோல தெரியாமலோ- தெரிந்தோ செய்த தவறுகளுக்காக வருந்தி அழுது கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி- நம்ம கௌரவத்தை விட்டுவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்பதா என்ற ஈகோ நிலையில் இருந்தாலும், மனதுக்குள் தவறுக்கு வருந்திகொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி; அவர்களுக்காகதான் இந்த வாரம் இந்த திருத்தலத்தை பரிந்துரை செய்கிறோம்.
அதிசயம் நிறைந்த இந்த திருக்கோவில் அதுவும் நம்ம சென்னைக்கு பக்கத்தில் என்றால் விட்டுவிடவா முடியும்.
அநேகமான சிவன் கோவில்களில் நாம் அருவுருவமாக சுவாமியை சிவலிங்கமாக பார்த்து இருப்போம். சிவனை உருவமாக பார்க்கக்கூடிய கோவில்கள் தமிழ்நாட்டிலேயே சில இருந்தாலும், பொதுவாக இப்படிதான். அந்த சிவலிங்கத்திற்கு தலைமுடி இருந்தால்...?! அப்படிகூட இருக்குமா? என்ற சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். இப்படி ஒரு திருக்கோவில் சென்னை அருகே செங்கல்பட்டிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது.
"முன்குடுமீஸ்வரர்' என்ற இந்த திருக்கோவில் பிவி களத்தூர் என்று அழைக்கப்படும் சிறிய கிராமத்திலுள்ளது. இந்த சிவலிங்கத்தில் குடுமி இருப்பதால், சுந்தரேசர் என்ற சுவாமிக்கு இந்த திருநாமம்.
கோவில் பிரசாதமாக, மன்னருக்கு அனுப்பவேண்டிய மாலையை அர்ச்சகரின் மனைவி ஒருநாள் ஆசையில், அந்த மாலையை அணிந்து மகிழ்ந்து பின் அரசனுக்கு அனுப்பிவிடுகிறார்.
பிரசாதமாக வந்த மாலையில் தலைமுடி வந்தது எப்படி என்று சினந்த மன்னரிடம், அர்ச்சகர் சுவாமி திருமேனியிலுள்ள குடுமியிலிருந்து வந்தது என பொய் சொல்லிவிட்டு, அர்ச்சகர் தன் மனைவி யுடன், ஆண்டவனிடம் மன்னிப்பு கோருகி றார்.
ஆண்டவனும் அவர்களை மன்னித்து அத்தனை நாட்களும் மொழுமொழு என இருந்த சிவலிங்க திருமேனியில், அரசனுக்கு காண்பிக்கவே, அன்று லிங்க திருமேனியில் குடுமியை காட்டுகிறார் என்பது தல வரலாறு.
அதுமுதல் சுவாமிக்கு முன் குடுமி இருக்கவே முன்குடுமீஸ்வரர் என்ற திருநாமம். இப்பவும் சுவாமி திருமேனியில் முன்குடுமி இருப்பதை காணலாம், அர்ச்சகர் அதை காண்பித்து தருவார்கள்.
தெரியாம நாம ஏதாவது தப்பு செஞ்சுட்டா ரொம்ப வருத்தப்படுவோம். கவலைப்படுவோம்... ராத்திரி தூக்கம் வராம அவதிப்படுவோம். அப்படிப்பட்டவங்க இந்த ஊருக்குவந்து, முன்குடுமீஸ்வரரை வணங்கினால் போதும். இனிமே இதுமாதிரி தப்பு பண்ணாதேன்னு மனசையும் மாத்திடுவார்.
செய்த தவருக்கு மனம் வருந்துபவர்கள், மன்னிப்பு கேட்க தயங்கி மனதுக்குள் அழுதுகொண்டு இருப்பவர்கள், மன்னிப்புகேட்க அவர் இல்லையே என மன வருத்தத்தில் இருப்பவர்கள், குடும்ப பங்காளி சண்டை கொண்டவர்கள், காதலில் பிரேக் அப் ஆனவர்கள் என வருந்தி திருந்த நினைப்பவர்கள் இந்த திருத்தலத்தை நாடி சுவாமியிடம் அழுது, தியானித்து மன்னிப்பு கோரினால், சுமை குறையும், மனபாரம் விலகும். மன அமைதி கிடைக்கும். சுவாமியை பஞ்ச புராணம்பாடி வணங்கி கும்பிட்டாலே மனசு லேசாகிடும்.
சிவலிங்கத்திற்கு குடுமி இருக்கும் இந்த திருக்கோவில் சைவமும் வைணவமும் தழைத்து ஓங்கிய தொன்மையான ஊர். அஷ்டமத்துச்சனிக்கு பரிகாரமாக சொல்லப்படும் நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் அவதரித்த திருத்தலம், சண்டேஸ்வரருக்கு பதிலாக கூற்றுவ நாயனார் பவனி வரும் கூற்றுவ நாயனார் அவதரித்த ஊர், ஞான கண்ணால் பாட்டு பாடிய அந்தக கவி வீரராகவர், படிக்காசு புலவர் என மகான்கள் அவதரித்த ஊர்தான் இந்த பொன்விளைந்த களத்தூர். இப்போதுடைய களத்தூர் என்று அழைக்கப்படுகிறது.
பொன் விளைந்த இந்த ஊரிலுள்ள இந்த திருக்கோவில் தினமும் காலை 8.00 மணிமுதல் திறந்திருக்கும். மாலையில் 5.00 மணிமுதல் 7.00 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். இங்கே ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய அம்மன் சந்நிதி மீனாட்சி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
செங்கல்பட்டில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. சிறிய ஊர் என்பதால் சாப்பாடு போன்ற மற்ற தயாரிப்புகளுடன் செல்வது சுகமான சுவாமி தரிசனத்திற்கு வசதியாக இருக்கும்.
தவறு செய்யாதவர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். உரியவரிடம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோமோ இல்லையோ. ஒருமுறை இந்த திருத்தலம் வந்து மன்னிப்பு கேட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172