முதல் வழிபாடு என்றால் அது விநாயகருக்குதான் என்று நமக் கெல்லாம் தெரியும். எந்த பூஜை அல்லது வழிபாடு என்றாலும் முதலில், பிள்ளையார் பூஜை செய்தபிறகுதான் பிரதான பூஜைக்கு செல்வார்கள். விநாயகர் பிம்பமில்லை என்றாலும், மஞ்சளில், மண்ணில், சாணியில் என பிடித்துவைத்து பிள்ளையாரை வழிபாடுவார்கள்.
கணபதிக்குத்தான் முதலில் பூஜை என்று ஏனுங்க சொல்றாங்க என்று உங்களில் யாருக்காவது கேட்க தோன்றுகிறதா? உண்மைதான். இதுபோல சின்ன குழந்தையாக இருக்கும்போது இப்படி கேள்வி கேட்டால், துடுக்கு தனமாக கேட்கக்கூடாது என்று சொல்லி நம்மை சிந்திக்கவிடாமல் செய்துவிடுவார்கள்.
உங்களுக்கு தெரியும் மனித வாழ்வுக்கு முக்கியம் நீர்தான் ஆதாரம். சந்திரனில் கூட நீர் இருக்கிறதா என்றுதான் ஆய்வு செய்கிறார் கள். "நீரின்றி அமையாது உலகு' என்பது திருக்குறள். எல்லா உயிரினங்களுக்கும் முக்கியம் முதலில் நீர் மட்டுமே என்றால் மறுப்பவர்கள் யாரும் இருப்பார்களோ? அறிவியல்கூட இந்த உலகம் 71 சதவிகிதம் நீர் 29 சதவிகிதம் நிலத்தால் அமைந்தது என்றுதானே சொல்லுகிறது.
நீர்தான்முதல் என்பதால்தான் நீர்நிலை கள் உள்ள இடத்திலுள்ள பிள்ளையாருக்குதான் முதல்பூஜை. தண்ணீ ரைக் கண்டால் யானைக்கு அலாதி பிரியம் என்பதால்தான் அந்த ஆறுமுகனின் அண்ணன், ஆனை முகனுக்கு முதல் வழிபாடு. அறிவியலை ஆன்மிகத்தில் வைத்து அப்படியே பழக்க படுத்திவிட்டார்கள் நம் முன்னோர்கள். இதுதான் தமிழர் வாழ்வியல்முறை.
எங்கெல்லாம் நீர்நிலைகள் உள்ளதோ அங்கெல்லாம் ஒரு விநாயகர் சிலை இருக்கும். நீர் வளம் நிறைந்த செழிப்பான இடத்தில்தான் அரச மரம் வளரும். அவர் தான் அரசமரத்து விநாயகர், ஆற்றங்கரை விநாயகர் என சொல்லிக் கிட்டே போகலாம்.
இதுபோன்ற நீர் வளம் தேடும் மரங்களை விருட்சசாஸ்திரம் குறிப்பிட்டு காட்டுகிறது. ஆக ஜலநாடி ஓடும் இடங்களில் எல்லாம் பிள்ளையாரை வைத்து வழிபடுவது நீரின் ஆதாரத்தை முதன்மைபடுத்தவே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இங்கே ஐந்து விநாயகர் ஒரே இடத்திலும், கோஷ்டத்தில் ஒரு விநாயகரும், ஆகண்டல விநாயகர் என இத்தலத்து விநாயகரும், ஆக 7 விநாயகர் அமைந்த இந்த திருக்கோவில், கடல் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வைகாசி விசாகத்தன்று சூரிய ஒலி மூலவர்மீது விழும்படி அமைந்த அதிசயத்தை கொண்ட இந்த திருக்கோவில், தஞ்சைக் கோவிலைவிட பெரிய லிங்கத்தைக் கொண்ட கோவில் இதுதான் என்றால் வியப்பாக உள்ளது அல்லவா.
பானத்திற்கு 3 முழமும் ஆவுடையாருக்கு 30 முழமும் வஸ்திரம் சார்ற்றும் அளவுக்கு சுவாமி மிகப்பெரிய லிங்கமாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சோதிடரீதியாக சிலர் செவ்வாய் தோஷம் உண்டு என்றும் சிலர் அப்படி ஒன்று இல்லை என்றும் சொல்வார்கள். ஆனால் செவ்வாய்க்கு தோஷம் போக்கிய தலங்கள் தமிழகத்தில் 3 உண்டு. அதில் ஒன்று இன்றைய சிந்தனைக்கு வந்த "திருப்புனவாயில்' என்ற திருக் கோவில்.
ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்று இருந்தாலோ, நீசம்பங்கமாகி இருந்தாலோ, 4, 8, 12-ல் இருந்தாலோ, சந்திர மங்களதோஷம் இருந்தாலோ, உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் ஆலோசனைப்படி, இங்கே முறையாக வழிபாடு செய்வது அவசியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பாம்பாற்றின் வாயிலில் இந்த திருத்தலம் உள்ளதால், புனல்வாயில் என்ற இந்த திருத்தலத்தில், விருத்தபுரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். அம்பாள் சன்னதி சுவாமிக்கு இடது புறம் கிழக்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது.
தொன்மையான இந்த திருத்தலத்தில் ஸ்தல விருட்சமாக சதுரக்கள்ளி செடி இருப்பது நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது. கள்ளி எருக்கு இவையெல்லாம் ஒதுக்க வேண்டியது அல்ல என்ற குறிப்பை காட்டுகிறது. இந்த ஸ்தல விருட்சம் இங்கு ஒன்று அல்ல. குறுந்த மரம், மகிழ மரம், புன்னை மரம் உட்பட மொத்தம் நான்கு. இவை நான்கு யுகங்களுக்கு ஒன்றாக உள்ள குறிப்பை காட்டுவதாக அமைந்துள்ளது. அத்தனை தொன்மையானது இந்த திருத்தலம், வழிபடுபவர்களுக்கு மறு பிறப்பு இல்லாமல், முத்தியை தரும் முத்தி ஷேத்திரமாக உள்ளது.
திங்கட்கிழமை தோறும் அகத்தியர் பூஜித்த லிங்கத்திற்கு இங்கு, பூஜை செய்யப்படுகிறது. சந்திர மங்கள தோஷம் உள்ள ஜாதகர்கள், சர்ப்ப கிரகங்களுடன் தொடர்புபெற்ற சந்திரன் போன்ற அமைப்பு உள்ளவர்கள் திங்களன்று அகத்தியர் பூசித்த லிங்கத்தை வழிபாடுசெய்து பூஜித்து, நற்பலனைபெற உங்கள் நம்பிக்கைகுரிய சோதிடர் ஆலோசனைப்படி வழிபாடுசெய்து பலன் பெறுங்கள்.இங்கே சூரியனும் சந்திரனும் சிவனாருக்கு எதிரே இடம்மாறி அமைந்திருப் பதும் இதைதான் குறிக்கிறது இன்னொரு குறிப்பை சொல்கிறேன், காதை கொடுங்கள்.
திருஞானசம்பந்தர் அருளிய திரு எழுகூற்றிருக்கையை தினமும் படனம் செய்தால் எப்படி சம்பந்தர் பதிகம் முழுவதும் படனம் செய்த புண்ணியம் கிடைக்குமோ அதுபோல, இரண்டு சண்டிகேஸ்வரர் உள்ள இந்த திருத்தலத்தை தரிசனம் செய்துவழிபட்டால், 14 பாண்டிய நாட்டு திருத்தலத்தையும் வழிபட்ட புண்ணிய பேறு கிடைக்கும்.
வஜ்ரவனம் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவாடானை என்ற ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாகவும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாகவும் செல்லலாம்.
திருப்புனவாயிலில் இருந்து அருள்பாலிக் கும், பெரியநாயகி சமேத விருத்தீஸ்வரர் திருக்கோவில், தினமும் காலை 7 மணிமுதல் திறந்திருக்கும். இந்த திருக்கோவிலுக்கு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சென்று வழிபட்டு, நற்பேறுபெறவேண்டும் என பாலஜோதிட அன்பர்களை விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172