"காசிக்கு போயிருக்கீங்களா?'. என்று கேட்டு பாருங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியனின் கனவும் அதுவாகதான் இருக்கும்.
இந்த எண்ணம் அன்றைய பெரியவர்கள்முதல் இன்றைய இளையவர்கள்வரை எல்லாருக்கும் இருக்கும். நமது சம காலத்தில் நூறு ஆண்டுகளுக்குள் நம்முடன் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள் காசி யாத்திரை என்று தனி புத்தகப்பதிவு செய்து இருக்கிறார். சுவாமிகளின் காசி யாத்திரை பயணமும் அனுபவமும் வித்தியாசமானது; மெய்சிலிர்க்க வைப்பது.
காசி என்றதும் முதலில், முன்பு அலாகாபாத் என்று அழைக்கப்பட்ட இன்றைய பிராயக் ராஜ் என்ற திரிவேணி சங்கமம்தான் நினைவில் வரும். காலை வேளையில், கங்கை ஆற்றில் படகு பயணம், கூடவே வரும் பறவைகள், வேத மந்திரங்கள், சயன கோலத்தில் அனுமார் என நம்மை மறந்து ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள். அங்குசென்று வரும் ஒவ்வொரு வரும் உணரலாம்.
அது சரி, காசிக்கு செல்வது இப்போது உள்ள போக்குவரத்து வசதிகளில் ஒன்றும் சிரமம் இல்லை என்றாலும், சிலரால் செல்ல முடியவில்லைதான் என்ற வருத்தம் இல்லாமல் இல்லை.
அங்கே செல்லமுடியாவிட்டாலும், காசிக்கு நிகரான தலங்கள் இங்கே இந்த தமிழ்நாட்டில் சில உள்ளது என்றால் கூட, அந்த திரிவேணி சங்கமம் இருக்கிறதா என்ற சிந்தனை உங்கள் மனதில் தோன்றாமல் இருக்காது.
அதேபோல சங்கமம் இந்த தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒரு முறையேனும் இந்த சங்கமத்தில் புனித நீராடி உயரிய பலனைப் பெற்று மகிழலாம். அப்படியா என்று ஆச்சரியமாக யோசிக்கும் உங்களுக்காகதான் நிறைந்த பலன்களை கைமேல் தரும் கூடுதுறை என்ற திருப்பதியில் அமைந்துள்ள திருக்கோவில் பற்றி சிந்திக்க கொண்டு வந்துள்ளேன். இவருடைய தந்தை இவருடன் இல்லை.
"திருநாணா' என்ற புராணப் பெயருடன் அமைந்துள்ள இந்த கூடுதுறை "தக்ஷினபிரயாகை' என்று அழைக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு கூடுதுறை, பவானி என வேறு சில பெயரும் வழக்கத்தில் உண்டு.
கங்கை, யமுனை, கண்ணுக்கு புலனாகத சரஸ்வதி கூடுமிடம் உத்திர பிராயகை என சொல்லப்படும் பிராயக்ராஜ் (அலகாபாத்) போலவே, காவிரி, பவானி, இவற்றுடன் கண்ணுக்கு புலனாகத அமிர்தநதியும் கூடுமிடம் இந்த கூடுதுறை.
அமைதியான சூழலில், ஆன்மிக மணம் கமழும் அற்புதமான திருக்கோவில் மனதை கொள்ளைகொள்ளும் எழில் அழகுடன் வருபவர்களுக்கு வாரித்தரும் வள்ளலாக அமைந்திருக்கும் இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாகும்.
சோமாஸ்கந்தர் அமைப்பில் இங்கே முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் தலம். கூடல் பெருமானை அருணகிரியார் உருகி பாடிய திருப்புகழில் வல்லிக்காக மனம் இறங்கிய பெருமான் என நம் மனதை கொள்ளைகொள்ளும்படி பாடியுள்ளதுபோலவே, திருமணமாகாத முதிர் கன்னிகள் இங்கே உரிய பரிகாரம் செய்து உறுதியாக பலன்பெறலாம்.
பொதுவாக சோதிடரீதியாக திருமணம் தடைபெறு வதற்கும், தள்ளி போவதற்கும், சர்ப்ப தோஷம் அல்லது சாபம், இதுபோல பிதுர் தோஷம்- சாபம், பிரேத தோஷம்- சாபம் என ஒன்று ஜாதகரை சுற்றிவந்து நிற்கும். இதுபோன்ற அமைப்பில் உள்ளவர்கள் இந்த திருத்தலத்தில், அவரவர்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்களின் வழிகாட்டுதலின்படி, பரிகாரம் செய்து உறுதியான பயனை பெறலாம்.
தாங்கள் விரும்பியதை பெற யாராவது கேட்க மாட்டார்களா? எனகொடுப்பதற்கு காத்திருக்கும் பெருமான், போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் கேட்பதை நானே கொடுத்துவிடுகிறேன் என சொல்வதுபோல அழகு பொருந்திய திருமுகத்துடன் முருகப் பெருமான், சிவனாருக்குமுன்பே அமர்ந்து அருள்பாலிக்கும் அமைப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
சகல தோஷநிவர்த்திக்கு தலை சிறந்த திருக்கோவில் சங்கமேஸ்வரர் கோவில் என்று சொல்லும் அளவுக்கு இந்த கூடுதுறை சிறந்து விளங்குகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருக்கோவில் இன்றள வும் பக்தி மனம் மாறாமல், அமைப்பிலும், நந்தவன பராமரிப்பிலும் சிறந்து விளங்குகிறது.
காசியில் அஸ்தி கரைக்கபடுவதுபோல இங்கும் இதுபோன்ற புனித சடங்கு நடைபெறும், கர்ம காரியங்கள் செய்யப்படுகிறது. அகால மரணம் அடைந்தவர்களுக்கு "நாரயனபலி' தருவதும், குழந்தை வரம் வேண்டுபவர்கள், அமிர்த லிங்கத்தை மடியில் கட்டிக்கொண்டு பலன் பெறுவதும், மணம் ஆகாதவர்கள், ஸ்திரீ தோஷம் உள்ளவர்கள், வாழை மர பரிகாரம், அரசங்கொத்து பரிகாரம் என செய்வது என தென் திருவேணியாக அமைந்துள்ள இந்த திருத்தலம் வரலாற்று சிறப்பு பெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லியம் காரோ என்ற கலெக்டர் இந்த பகுதியில் மழை காலத்தில், முகாமிட்டு இருந்த சமயம், பயனியர் மாளிகையில் படுத்து உறங்கி இருந்த சமயம், இத் திருதலத்து அம்மன், ஒரு சிறுமியாக வந்து, அந்த கலெக்டரை எழுப்பி கைபிடித்து வெளியே அழைத்து வந்ததுபோல கனவு. கனவு கலைந்து, வெளியே வந்து பார்க்கிறார், அடுத்த சில நிமிடத்தில், அவர் தங்கி இருந்த மாளிகை மேற்கூரை இடிந்து விழுந்ததை கண் எதிரிலேயே பார்க்கிறார்.
தன்னை காப்பாற்றியது இந்த திருத்தலத்து அம்மன் என்ற உணர்வு மேலிட வில்லியம் காரோ, நன்றியின் வெளிப்பாடாக தந்த கட்டில் ஒன்றினையும் பல்லாக்கு, ஊஞ்சல் மற்றும் ஆபரங்களையும் காணிக்கையாக (11-1-1804) தன் கையொப்பமிட்டு வழங்கி உள்ளார் என்ற வரலாற்று குறிப்பு பெற்ற இந்தத் திருத்தலத்தை தமிழ் நாட்டில் இருந்துகொண்டு ஒரு முறையேனும் தரிசிக்காமல் இருக்கலாமோ..?
மணம் ஆகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், அவசியம் இங்கேவந்து பரிகாரம்செய்து பலன்பெறலாம். வீட்டில், அகால மரணம்- துர் மரணம் அடைந்தவர்கள், பிதுர் சாப விமோச்சனம், பிரேத தோஷம் போன்ற சகலவித தோஷ பரிகாரத்திற்கும், பலமான வாழ்வு வளமாக தொடர சங்கமேஸ்வரரை உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்களின் ஆலோசனைப் படி வழிபட்டு பயன்பெறுங்கள்.
உள்ளூரிலேயே இருந்துகொண்டு இதுபோன்ற பிரசித்திபெற்ற கோவிலுக்கு போகாமல் இருக்கலாமோ? காலம் தாழ்த்தாமல், காரணம் எதுவும் சொல்லாமல், வருடத் திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற புண்ணிய தலங் களுக்கு சென்று நற்பேறு அடையவேண்டும் என்று வேண்டுகிறோம்..
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172