மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமே சக்திவாய்ந்த கோவில்கள் என்று நினைப்பது தவறு. அதுவும் இந்த தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என சொல்வதும் முழுமையானது அல்ல.
எண்ணிக்கையில் வேண்டுமானால் தமிழகத்தில் அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சக்திவாய்ந்த நலம் தரும் திருத்தலங்கள் இருக்கிறது. அதற்கு பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது நல்லது.
எல்லாம் சரிதாங்க ஐயா, ஆனால் பாருங்க, எங்க அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை துளி அளவுகூட இல்லை. முன்னோர்களுக்கு கொடுக்கவேண்டிய திதியைகூட அவர் இதுவரை கொடுக்கவில்லை.
சோதிடர்களிடம் கேட்டால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என சொல்றாங்க. குடும்பத்தில் பல பிரச்சினைகள். எடுத்ததெல்லாம் தடை. அறிவும் திறமையும் இருந்தும், நல்ல வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுவரை திருமணம் ஆகவில்லை. என சோக கதைகளை பட்டியலிட்டு கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் இந்த பக்கம் திரும்பி கேளுங்கள்.
பித்ரு சாபம், பித்ரு தோஷம் இவைகள் எல்லாம் ஜாதகத்தில் சர்ப்ப கிரக நிலைகளைகொண்டு சொல்லிவிடலாம். பொதுவாக ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது, திருவையாறு போன்ற இடங்களில் திதி கொடுப்பது போன்றவை விசேஷமானதுதான்.
ஆடி அமாவாசை அன்று திருவையாறு விழா கோலம் காணும். அன்று அப்பருக்கு கயிலாய காட்சி கொடுத்தவிழா ஐயாரப்பா என்று சத்தமிட்டால் எதிரொலிக்கும் சிறப்பு மிக்க அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் நடக்கும். கயிலாயமே பூமிக்கு வந்ததுபோன்ற உணர்வு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைக்கும். அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்கலாம்.
இந்த பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம். நிவர்த்திக்கு வழி ஏதும் இல்லையா என்று கேட்கும் அந்த உணர்வு படிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
அவர்களுக்காகதான் இந்த வாரம் இந்த திருத்தலத்தை, இந்த தொடரில் தருகிறோம். இந்த திருத்தலம் தமிழகத்தில் இல்லை. அதற்காக வருத்தம் கொள்ள தேவையில்லை. இந்த திருக்கோவில் சிறப்பை தெரிந்துகொள்வோம் வாய்ப்பு கிடைக்கும்போது, வாழ்வில் ஒரு முறையேனும் சென்றுவருவோம்.
வடமொழியில், "தில்' என்றால் "எள்' என்பது நமக்கு தெரிந்திருக்கும். முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போது, எள்ளுடன் அரிசிதான் என்பது நமக்கு தெரிந்திருக்கும்.
ஒரு எள் எத்தனை சிறியதாக இருக்கும் அந்த அளவிற்கு ஒரு வளர்ச்சி என்றால் எப்படியிருக்கும். ஆம் இந்த திருக்கோவிலில் இருக்கும் சிவலிங்கம் எள் அளவுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வளர்கிறது என்றால் நமக்கு வியப்பாகதானே இருக்கும். அப்படியா?! அப்படியானால், இப்போ இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற கற்பனை உங்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
இந்த லிங்கம் பிரம்மாண்டமான உயரத்தில் இருக்கும். லிங்கத்தின் பானத்தை பார்க்க படி ஏறிதான் செல்லவேண்டும் என்றால் நீங்களே எண்ணிப் பாருங்கள்.
இதை படிக்கும்போதே அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும். அந்த திருக் கோவில் தில் பாண்டேஸ்வர் என்ற திருநாமத்தில் இருக்கிறது. இது வாரணாசி நகரில் சோனபுரா என்ற இடத்தில் இருக்கிறது.
பழமையான கோவில்தான் என்றாலும் இது சுயம்பு லிங்கம். ஒருசில மணித்துளிகள் இங்கு அமர்ந்து தியானம் செய்தாலே அந்த ஸ்ண்க்ஷங்யை உணரமுடியும். பலநூறு வருடங்களாக வளர்ந்துகொண்டே இருக்கும் சிவனார், கல்லால் அமைந்த லிங்கம்தான். அதனால் தான் நமக்கும் ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும்.
பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டதாக சொல்லும் இந்த திருக்கோவில் வாசலில், எள், நல்லெண்ணை முதலியவற்றை அதற்குரிய விலை கொடுத்து வாங்கி கொண்டு ஆலயத்திற்கு சென்றால் கர்ப்பகிரகத்துள் ஒரு பெரிய பாத்திரம் நிறைய கங்கை நீர் வைத்திருப்பார்கள்.
கையிலுள்ள எள்ளை அங்கே போட்டு அதன் பின்னர் கங்கை நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். இவ்வாறு நாம் செய்ய கோவில் நிர்வாகம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. அந்த கோவில் தியான மண்டபத்தில் உங்கள் வசதிக்கு ஏற்ப சில மணி நேரம் தியானம் செய்துவிட்டு வரவேண்டும். அவ்வளவுதான். இந்த வழிபாட்டை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றோர் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
நமக்கு முந்தைய தலைமுறைகளின் ஆத்மாக்கள் நற்கதி பெறவும், நீர் நிலைகளில் தர்பணம் முதலிய புண்ணிய கர்மாக்களை செய்வது, தில ஹோமம் செய்வதுபோன்ற சில நடைமுறை வழக்கம் இருந்தாலும், இந்த தில்பாண்டேஸ்வரரை முறையாக வழிபட்டால் ஜாதகத்தில் சனி குறித்து காட்டும் பித்ரு சாபம், சர்ப்பங்கள் குறித்து காட்டும் தோஷம் முதலான அணைத்தும் விலகும். தோஷநிவர்த்தி உறுதியாக கிடைக்கும்.
குறிப்பாக, வாரிசுகள் இல்லாதவர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் தில்பாண்டேஸ்வரருக்கு கங்கா ஜலம், எள் இரண்டையும் தூய மனதுடன் அர்ப்பணம் செய்து அவர்கள் சிவகதி அடைய பிரார்த்தனை செய்தால்போதும். நலமுடன் சுபிக்ஷம் உண்டாகும். சௌபாக்கியம் கிடைக்கும்.
இதுதவிர, நீர்நிலைகளில், நாம் அறிந்தோ அறியாமலோ, செய்யும் தவறுகள் ஸ்ரார்த்தம் செய்துவைக்கும் புரோகிதர் செய்யும் தவறுகள், அந்த தவறுகளால் நமக்கு ஏற்படும் தோஷங்கள் என அனைத்தும் தில் பாண்டேஸ்வரரை வழிபடுவதால் நிவர்த்தி ஆகும்.
தோஷநிவர்த்தி முறைகள் என சொல்ல தனியாக தொடரே எழுதலாம். என்றாலும் கிடைத்து இருக்கும் வாய்ப்பில் சுருக்கமாக இந்த அளவில் தெரிந்துகொள்வோம்.
இந்த காசி- வாரணாசி பயணத்தை முன்னதாகவே திட்டமிட்டுக்கொண்டு, உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடரின் ஆலோசனைப்படி, ஒரு நல்ல வழிகாட்டியுடன் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டிய புண்ணியத் திருத்தலம் இது என்பதை மனதில் குறித்துக்கொண்டு இதுவரை போக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இப்போது நிறைய போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டமையால், சுலபமாக சென்றுவரலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
நல்லதே நினைப்போம்: நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172