வாழ்க்கையில் ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால், அந்த பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் துரிதமாக ஈடுபடுவதுதான் மக்களின் வழக்கம். இது தவறல்ல என்றாலும், சரியான வழிமுறைகளை எல்லாரும் செய்வதில்லை. அதனால் அவர்களால் பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். ஒருசிலர் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைபடி சொன்னதை சொன்னபடியே செய்து பிரச்சினைகளை வென்று அடுத்த நிலைக்கு தயார்படுத்திக் கொள்வார்கள்.
ஜோதிடரீதியாக சொல்லவேண்டும் என்றால், எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு கிரக பெயர்ச்சியாக இருக்கலாம், அல்லது தசா புக்தி சரியில்லாமல் இருக்கலாம். தோஷம், சாபம், இப்படி ஏதாவது ஒன்று காரணமாக இருக்கும்.
நவகிரகங்கள் சூரியனைச் சுற்றும் ஒன்பது கோள்களும், இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை செயல்படுத்துகின்றன. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை அந்த ஒன்பது கோள்களின் நிலையை வைத்து, அவை அமைந்திருக்கும் இடத்தைகொண்டு நாட்டில், வாழ்க்கையில், தொழிலில், பங்கு சந்தையில் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் கணித்து சொல்லிவிட அறிவும் திறமையும்கொண்ட சோதிட பெரியவர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள்.
இந்த நவகிரக தொடர்பான பிரச்சினைகளுக்கு இறைவழிபாடுதான் பிரதானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், கோவிலுக்கு வெளியிலிருக்கும் நவகிரகங்கள், வணக்கத்துக்கு உரியனவே. வழிபாட்டுக்கு இறைவன் மட்டுமே என்று பலமுறை பதிவுசெய்து உள்ளோம்.
இந்த நவகிரகங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகவே, முயற்சி எடுத்து தனியாக செல்லவேண்டிய திருத்தலம் ஒன்று நம்ம தமிழ் நாட்டில் உண்டு என்றால் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அதுவும் அந்த திருக்கோவில் தண்ணீரில் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..!
ஆமாம்; அந்த திருக்கோவில் நவகிரக கோவில் அல்லது நவ பாஷாணம் என்று அழைக்கப்படும் கோவில்தான். திலகேச்வரர் கோவிலுக்கு வெளியே உள்ள கடல் பகுதியில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில்.
இந்த திருக்கோவில், கடலின் நடுவே, கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் உப்பு நிறைந்த கடல் அலைகளின் சீற்றம் குறைந்த தண்ணீரிலேயே இருக்கும். அமைதியான இந்த கடல் தண்ணீரில் உப்பு தன்மை இருந்தாலும் உப்பு கரிப்பது இல்லை. பக்கத்திலுள்ள உப்பளத்தில் உப்பு எடுத்து விடுவதால் உப்பு இல்லை என்று இன்றைய கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னாலும், தொடக்க காலத்தில் இருந்தே இங்கு இப்படிதான் என்றால் கேட்பதற்கும் நம்புவதற்கும், வியப்பாகதான் இருக்கும்.
இங்கு மற்ற கோவில்களில் இருப்பதுபோல நவகிரகங்களுக்கு உருவம் கிடையாது. ஒன்பது பாஷாண கற்களைதான் வைத்திருப்பார்கள். சோதிடரீதியாக, புதன் ஆட்சிசெய்யும் மிதுனம் அல்லது கன்னி லக்னத்தை கொண்டவர்கள், உருவத்தில் உயரம் குறைவாக இருப்பார்கள். அதுபோலவே, இங்குள்ள புதன் கிரகம் உருவத்தில் சிறியதாகவும், தண்ணீரில் மூழ்கியபடியும் இருக்கும். இதேபோல ஒவ்வொரு கிரக அமைப்புகளும் இருக்கும். அது பற்றி சொல்ல தனியாக ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
இந்த திருக்கோவிலில் நவகிரக பூஜை வழிபாடு செய்ய அருகிலுள்ள மண்டபத்தில் அரச்சகர் இருப்பார். அவரை அழைத்துவந்து வழிபாடு செய்துகொள்ளலாம். மழையில்கூட நனைந்துகொண்டே இருக்கும். இந்த நவகிரகங்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பதாலும், அர்ச்சர்கர் இருப்பதற்கு நிழலோ, குடையோ இல்லை என்பதாலும், இந்த நிலைப்பாடு.
நவகிரகங்களால் ஏற்படக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும், இந்த இடத்திற்கு வந்து நவகிரகங்களுக்கு வணக்கம் செலுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும். முதலில், கடலின் கிழக்கு பகுதியில் இறங்கி நீராடிவிட்டு, இடுப்பு அளவு தண்ணீரில் அமைந்துள்ள நவகிரகங்களை அவரவர்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்கள் ஆலோசனைப்படி வலம்வந்து நவகிரகங்களுக்கு வணக்கம் செலுத்தியபிறகு, மீண்டும் கிழக்கு பகுதியில் வந்து நீராடிவிட்டு வெளியே வரவேண்டும்.
எந்த பிரச்சினை என்பதை வைத்து என்ன செய்யவேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் சொல்வதை பூரண நம்பிக்கையுடன் கேட்டு மனதில், உள் வாங்கிக்கொண்டு அதன்படி செய்தால், பலன் உறுதியாக கிடைக்கும்.
மகாளய அமாவாசை வரும் இந்த மாத இறுதியில் வரும் சர்ப்ப கிரக பெயர்ச்சியின்போது, நன்மை கிடைக்க வும், அதனால் நற்பயன்கள் இந்த நாட்டுக்கு கிடைக்கவும் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் என்ற சிற்றூரிலுள்ள இந்த நவபாஷானத்தை வணங்கி இறைவழிபாடு செய்து பயன் பெறவேண்டும் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தடைகள் நீங்கி வெற்றிபெறவேண்டி, ஸ்ரீராம பிரானால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த தலம் என்று பழக்கத்தில் சொல்கிறார்கள். இது குறித்து கல்வெட்டு சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை, என்றாலும், மக்கள் நம்பிக்கையிலுள்ள செய்திகளுக்கு மதிப்பு கொடுத்து அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கடற்கரை அருகே உள்ள திலகேச்வரர் கோவில் சிறப்புவாய்ந்த சிவனார் அருள்பாலிக்கும் திருக்கோவில் இது சிறிய ஊர் என்பதால் வழிபாட்டு நேரம், நாம் செல்லும் நேரத்திற்கு உகந்தவையாக இல்லை என்றாலும் கடல் அலைகள் இல்லாத அதிக சீற்றம் கொள்ளாத கடலின் நடுவில், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி வணங்கி, வலம்வந்து, இறைவழிபாடு செய்வது ஒரு வித்தியாசமான அனுபவம்தான் என்பதை இங்கே வந்து செல்லும் ஒவ்வொருவரும் உணரலாம்.
அருகிலுள்ள உப்பூரில் விநாயகர் திருக்கோவில்வரை கடலின் உப்புத் தன்மை குறைவாகவே இருக்கும். இந்தியா முழுவதிலும் உள்ள சக்தி பீடங்களில் இங்கு உலகம்மை ஆலயமும் உண்டு என்றால், நம்ம இடத்துக்கு பக்கத்தில் இத்தனை சிறப்புள்ள இடம் இருக்குதா என்ற பெருமை நமக்கு நிச்சயம் வரும்.
கடல் நடுவே உள்ள நவகிரக திருத்தலம், இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தேவிப்பட்டினம் என்ற சிற்றூரில் உள்ளது. இராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதிகள் உண்டு. தேவிபட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நவகிரக கோவில் உள்ளது. இது கடல் பகுதி, நீரில் நனைந்து குளிக்க மற்றும் வழிபாடு செய்ய வேண்டுமென்பதால், போதிய மாற்று உடைகளை முன்னேற்பாடுகள் உடன் எடுத்துசெல்லுதல் நல்லது.
உடை மாற்றுவதற்கு அருகில் மண்டபம் இருப்பதாலும், உப்பு தண்ணீரில் உடலை நனைப்பதால் அரிக்கும் என்ற கவலையும் இல்லாமல் செல்லலாம். இந்த பகுதியிலுள்ள தண்ணீரில் உப்பு தன்மை குறைவாகவே இருக்கும். அது சருமத்திற்கு எதுவும் செய்யாது. நம்பிக்கையுடன் நீரில் முழ்கி வலம் வந்து நவகிரகங்களுக்கு வணக்கம் செலுத்தி இறைவழிபாடு செய்யலாம்.
பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. ஒவ்வொரு கிரகத்தின் தன்மையைகொண்டு தேவையான அளவு வெப்பமேற்றி, குளிர்வித்து, அதனதன் கதிர் வீச்சு, தன்மைக்கு ஏற்ப கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்தி என்ற குறிப்புகள் போகர் நூல்களில் காணலாம். நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவகிரகத்தின் ஆற்றல்களைப் பெற்றுவிடுகின்றன என்று இன்றும் நம்பப்படுகிறது.
அதன் பயனும் அதிகமாக இருக்கிறது என்பது அவரவர் அனுபவ உண்மை.
நவகிரக வழிபாட்டிற்கு என இந்தியாவிலேயே இதுபோன்ற அமைப்புடன், தனிச்சிறப்புவாய்ந்த இந்த திருக்கோவில் இது மட்டுமே. தினமும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை திறந்தே இருக்கும். சோதிட நம்பிக்கையுள்ள அனைவரும் பிரச்சினைகள் எதுவுமில்லை என்று சொல்லும் அன்பர்களாக இருந்தாலும் வாழ்நாளில் ஒருமுறை அவசியம் சென்று வழிபாடு செய்யவேண்டும் என விரும்பி வேண்டுகிறோம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172