"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது தமிழ் கிழவியின் கூற்று. ஆனாலும் இன்றைய நாளில், அருகாமையில் இருக்கும் கோவிலுக்கே பிரதோஷம், கிருத்திகை வெள்ளிக்கிழமை என சில நாட்களுக்கு மட்டுமே அதுவும் சிலர்தான் கோவிலுக்கு போகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் திருத்தல யாத்திரை செய்வது நமது அடிப்படை கடமை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும். திருக்ஷேத்திர கோவை பாடிய அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் ஒரு பாட்டில் எத்தனை திருத்தலம் பட்டியலிடப்பட்டு இருக்கும் என படித்து பார்த்தால், இத்தனை தல யாத்திரை செய்யமுடியுமா என்ற வியப்பு நமக்கு ஏற்படும்.
இன்றைய அவசர உலகில், வாழ்வாதாரமே போராட்டமாக இருக்கும்போது, தல யாத்திரைக்கு நேரமில்லை அல்லது பொருளாதார சூழலில்லை. டிஜிட்டல் டெக்னாலஜிக்கு அடிமை என பல காரணங்களை சொன்னாலும், நேரில் சென்று தலயாத்திரை செய்யமுடியாதவர்களுக்காக, அதிகம் பழக்கத்தில் இல்லாத அரிய நலன்களை தரும் ஆலயங்களை தொகுத்து வாரம் ஒரு திருத்தலம் என பதிவு செய்ய எண்ணம் வந்தது.
அந்தவகையில் இந்த வாரம்முதல் நலம்தரும் திருத்தலங்கள் என்ற தொடரில் வாரம் ஒரு திருத்தலம் பதிவாகும். வழக்கம்போல அன்பர்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்து, பாலஜோதிட வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி பிடிக்கவேண்டுகிறோம்.
இந்த வாரத்தில், வாசகர்களை பாண்டிய நாட்டிற்கு அழைத்துசெல்ல போகிறேன்.
கோவில்கள் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்று பொதுவான சொல்லடை இருந்தாலும், தமிழகத்தில்தான் கோவில்களும் அதன் சிறப்புகளும் நிறைந்து இருக்கிறது. தலம், தீர்த்தம் மூர்த்தி என்ற சிறப்பு அத்துடன் சைவ திருக்கோவிலாக இருந்தால், பாடல்பெற்ற திருத்தலம் அல்லது வைப்பு தலம், என்றும், வைணவ கோவில் என்றால் மங்களாசாசனம் செய்யப்பட்டது போன்ற சிறப்பும் அந்தெந்த திருத்தலத்திற்கு உண்டு.
திருஞானசம்பந்தரால், தேவாரம் பாடல்பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலம், பிரான்மலை என இன்றையநாளில் அழைக்கப்படும் கொடுங்குன்றம்.
இன்றையநாளில் தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்கிறார்கள். அதே போல தேய்பிறை பஞ்சமியில் வாராஹி வழிபாடும் உண்டு. யார் இதை செய்ய வேண்டும்? எப்போது செய்யவேண்டும் என்ற குறிப்புகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.
இந்த பைரவ வழிபாட்டின்முதல் தொடக்கமே இந்த திருக்கோவிலில் இருந்துதான் என்றால் வியப்பாக இருக்கும். இந்த திருத்தலத்தில், மூன்று அடுக்கு என்ற நிலையில் சுவாமி அருள்பாலிக்கிறார். அதில் நடுவிலுள்ள மலையில் பைரவர் சந்நிதியும் உள்ளது. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடு உண்டு.
ஜாதகத்தில் ஆறாம் பாவம் பழுதுபட்டு இருப்பவர்கள், தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் இங்கே பைரவருக்கு உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் வழிகாட்டுதலின்படி வழிபாடு செய்தால் ஆறாம் பாவகத்தின் பழுது களையப்படும் என்பது கண்கூடு.
இந்த திருக்கோவிலின் இன்னொரு சிறப்பு தெரியுமா? எல்லா சிவன் கோவிலிலும் நந்தி நிச்சயம் இருக்கும் என்பது உங்களுக்கு சொல்லாமலே தெரியும். அதுவும் நந்தியின் காதில் எதையோ சொல்வது என செய்யக்கூடாததை பலர் செய்துகொண்டு இருப்பதும் தெரிந்திருக்கும்.
ஆனால் இந்த கொடுங்குன்றம் திருக்கோவிலில் சுவாமிக்கு எதிரே நந்தி இருக்காது. திருக்கயிலாயம் எனும் மேல் அடுக்கு கோவிலில் அகத்தியருக்கு திருமண காட்சியை கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துகொண்டு இருந்ததால், நந்தி இல்லையென்று சொல்லுவார்கள். இதேபோல இங்கே கொடிமரமும் இல்லை. பலி பீடமும் இல்லை. அஷ்டபந்தனமும் இல்லை. சுவாமிக்கு அபிஷேகமும் கிடையாது.
இத்தலத்தில் சுவாமி யோகநிலையில் காட்சிதருவதால், புனுகு மட்டும் சார்த்துவார்கள்; அபிஷேகம் கிடையாது. அதுவும் தினமும் ஒரு புத்தாடை. தான். ஒருமுறை சாற்றிய ஆடைகளை மீண்டும் சார்த்துவது இல்லை.
முதலும் முடிவும் இல்லாத இறைவன் என சுயம்புவாக அமைந்த இந்த திருத்தலத்தில், தட்சிணாயன புன்னியகாலத்தின் கடைசி மூன்று மாதமான ஐப்பசி தொடங்கி, உத்திராயான புன்னியகாலத்தின் முதல் மூன்று மாதமான பங்குனி வரையில் சூரிய ஒளி சுவாமிமீது விழுவது அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. தட்சிணாயனம் என்பது, ஆடிமுதல், மார்கழிவரையில். உத்திராயானம் என்பது தை முதல் ஆனி வரையில் எனபது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
திருஞானசம்பந்தர், தொலைவில் இருந்து மலையை தரிசித்து, "எம்பிரான் மலை' என சொல்லி பதிகம் பாடியதால் பிரான்மலை என்று அழைப்பதாக சொல்கிறார்கள்.
ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் சர்ப்பம் மற்றும் அசுப கிரகங்களால் பழுதுபட்டு இருந்தால், இந்த தலமே பரிகார தலமாக அமையும். மன முறிவு, கருத்து வேறுபாடு, தொழில் அல்லது வேலை நிமித்தம் குடும்பத்தை பிரிந்து இருத்தல் போன்ற சூழலில் இருப்பவர்கள், அவரவர்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்கள் ஆலோசனைப்படி வழிபாட்டு முறைகளை இந்த திருத்தலத்தில் செய்துவித்தால், உறுதியான பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒரு சிறப்பு
உண்டு. அந்தவகையில் பொதுவாக பாண்டிய நாட்டு திருத்தலங்களில் கேட்டது கிடைக்கும். முறையாக கேட்டால் நிச்சயம் அது கிடைக்கும் என்பதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும்.
முருகு என்றால் அழகு என சொல்லு வார்கள். அதே அழகுடன் இங்குள்ள திருமுருகப் பெருமான் வயோதிக கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். திருப்புகழ் பாடல்பெற்ற திருப்பதிகம் என்ற சிறப்பை பெறும் இந்த திருத்தலத்திற்கு வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்றுவர வேண்டுமென உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். வழக்கமாக இருக்கும் முருகன் சந்நிதிக்கு முன் இருக்கும் மயில் வாகனம் இங்கு இருக்காது. யானை வாகனம்தான் இருக்கும். இதற்கு புராண காரணங்கள் இருந்தாலும் இருக்கும் நிலையில் போற்றி வணங்க நம்மை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
வாரி வழங்கும் பாரி வள்ளல், ஆட்சிசெய்த இடம் இந்த பகுதி. சிவகங்கை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கும். சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகிலுள்ளது. திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த திருத்தலத்தில் உள்ள மணி இருக்கும். ஒலி 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது என்றால் மனதில் மணியோசை கேட்கும் உணர்வு ஏற்படுகிறதா?
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிக்காக விழா இந்த திருக்கோவிலில் நடைபெறுகிறது. அந்த சிற்பமே இந்த திருக்கோவிலில் இருக்கிறது.
இந்த திருக்கோவில் மலைப்பகுதியிலுள்ள மரம் என்ன மரம் என்றே இன்றுவரை இயற்கை ஆர்வலர்களால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இத்திருத்தலத்தின் இன்னொரு சிறப்பு.
தேனாம்பிகை உடனாய கொடுங்குன்றநாதரை இந்த ஆண்டே தரிசனம் செய்வோம் என உறுதி எடுத்துக்கொள்வோம். இன்னொரு திருத்தல சிறப்புடன் அடுத்த வாரம் தொடர்கிறோம்.
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172