கோபமே வராது என்று சொல்வர்களுக்குகூட கோபம்வரும் ஒரு கேள்வி என்ன தெரியுமா? "அறிவு இருக்குதா?' என்ற கேள்விதான்.
அறிவு இருக்குதா என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால் பலருக்கும் ஒரு துறையில் இருக்கும் அறிவு இன்னொரு துறையில் அதுபற்றிய அறிவு இருக்காது என்பதுதான் உண்மை உதாரணமாக, ஒரு மிக சிறந்த மருத்துவருக்கு, சட்ட அறிவு இருக்காது. இது போல மற்ற துறைகளுக்கும். ஆக, ஒரு துறையில் அறிவு பெற்றவருக்கு இன்னொரு துறையில் அறிவு பொதுவாக இருக்காது இல்லையா. அப்புறம் ஏன் அறிவு இருக்குதா என்று கேட்டால் கோபம் வருகிறது என்று சிந்தித்து பாருங்கள்.
உடலில் உயிர் இருக்கிறது என்றால் அறிவு இருக்கிறது என்பது பொருள். அறிவு இருந்தால்தான் அது உயிர். உயிருக்கு விளக்கம் சொல்லும்போது, அறிவுடன், விருப்பம் மற்றும் செயல் இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே உயிர் என்பதை சொல்லுவோம். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் அது உயிர் இல்லை. இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.
எனவே "அறிவு இருக்கிறதா?' என்றால் கோபம் வருவதற்கு காரணம், உயிர் இருக்கிறதா என கேட்பதை குறிப்பதால்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
உயிரின்மீதுதான் எத்தனை பயம். உயிர் பயத்தை காண்பித்து எத்தனை கொடுஞ்செயல் நடந்துகொண்டு இருக்கிறது என்பதை நாம் செய்தி தாள்களில் படித்து இருப்போம். உயிரின் சிறப்பை போற்றுவதற்கு தான் முதல் ஆண்டில் ஆயுஷ்ய ஹோமம் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடு கிறார்கள். அறுபதை தொட்டவர்கள்கூட சஷ்டி அப்தி பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் என கொண்டாடுகிறார்கள்.
பொதுவாக இதுபோல ஆயுள் விருத்திக்கு வழிபடும் திருத்தலம் திருக்கடையூர் என்பது நாம் தெரிந்து இருப்போம். காரணம் இங்கே தான் மார்க்கண்டேயர் எமனை வென்று என்றும் பதினாறாய் இருந்தார் என்பது புராண வரலாறு.
நலம் தரும் திருத்தல வரிசையில், நாம் இந்த வாரம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் திருத்தலம் இதுவல்ல. எமன் சாப விமோச் சனம் பெற்ற திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலம்.
இது என்னங்க ஐயா, பெயரே படிக்க கஷ்டமாக இருக்கிறதே, எந்த மாநிலத்தில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறது என கேட்டுவிடாதீர்கள். இது தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்தில்தான் உள்ளது.
இந்ததிருப்பைஞ்ஞீலி என்ற வாழைவன நாதர் திருக்கோவிலின் சிறப்பை பார்க்கலாம். இந்த கோவிலுக்கு போகும்போது வழக்கம் போல செல்வதுபோல கோவிலுக்குள் நுழையக்கூடாது. வெளிப்பிராகாரத்தில், எமன் சந்நிதி உள்ளது. அதை முதலில் தரிசனம் செய்துவிட்டு, வலமாக வந்து கோவில் வாசலில் காலை கழுவிவிட்டு பிறகு கோவிலுக்குள் செல்லவேண்டும்.
எல்லா கோவில்களிலும் படியேறிமேல் நோக்கி செல்லும்படி இருக்கும். மாறாக இந்த திருக் கோவிலில் படியில் இறங்கி கீழ் நோக்கி செல்லும்படியாக அமைந்து இருக்கும்.
மார்க்கண்டேயருக்காக, திருக்கடையூரில் காலால் உதைபட்ட எமன், சிறை பட்டதால், மரணம் இன்றி ஜனனம் அதிகமாக, இழந்த எம பதவியைமீட்டு பெற்ற திருத்தலம் இந்த திருப்பைஞ்ஞீலி.
கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தபிறகு மீண்டும் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வரக்கூடாது என்பது இன்னொரு நியதி. எமனை வீட்டுக்கு அழைத்து வரக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்டு இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.
இந்த கோவிலிலுள்ள இன்னொரு சிறப்பு இங்கு நவகிரகங்கள் கிடையாது. தனியாக நிற்கும் ஒரு கிரக சிலைகூட கிடையாது. ஒன்பதுஅணையா விளக்குகள் ஏற்றப் பட்டு அதுவே நவகிரகமாக பாவிக்கப் படுகிறது.
இந்த திருக்கோவிலில்,உள்ள இன்னொரு சிறப்பு, எல்ல திருக் கோவிலிலும் உள்ள ஒரு ஸ்வாமி ஒரு அம்பாள் சந்நிதி இருப்பதுபோல அல்லாமல் ஒரு ஸ்வாமி இரண்டு அம்பாள் சந்நிதி இருக்கிறது. ஸ்வாமியின் திருநாமம் ஞீலிவானேஸ்வரர் என்றும், அம்பாள் பெயர் விசாலாட்சி மற்றும் நீல்நெடுங்ககண்நாயகி என்றும் திருநாமம் தாங்கி அருள்பாலிகிறார்கள்.
சுவேதகிரி என்று அழைக்கப்படுகிற, தென்கயிலாயம் என்று போற்றப்படும் இந்த திருத்தலத்தில், சப்த கன்னிகள் தவம் இயற்றி மணவாழ்வு பெற்றமையால், இதுதார தோஷம் போக்கி மனவாழ்வு தரும் தலமாக சொல்லப்பட்டாலும், எமதர்மன், இழந்த பதவியை மீண்டும் பெற்ற திருப்பைஞ்ஞீலி திருத்தலம்தான் ஆயுள் விருத்திக்கு பரிகார தலமாக பரிந்துரை செய்யப்படுகிறது.
சோதிடரீதியாக ஆயுள் நிலைப்பாடு, மரணத்தை சொல்லும் பாவகம் என 2, 7, 6, 8 போன்ற பாவகங்கள் பாதிப்பு உள்ளவர்கள் இந்த திருத்தலத்தில், சங்கல்ப்பம் செய்து உரிய பரிகாரங்கள் செய்தால், நிவர்த்தி ஏற்படும், துர் மரணம், கூட்டுமரணம் போன்ற சம்பவங்களை குடும்பத்தில் சந்திக்காமல் இருக்கவும் சிறப்பு வழிபாடு செய்து பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது தினம் தினம் செல்போனை சார்ஜ் செய்வதுபோல, உயிரை சார்ஜ் செய்து கொள்ள, வாழ்வில் ஒருமுறையாவது இதுபோன்ற திருத்தல வழிபாடு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அத னால் தல யாத்திரை மேற்கொள்ளுங்கள். அது அவசியமான வாழ்வின் அங்கம்.
அப்பர் ஸ்வாமிகள், பல திருத்தல யாத்திரை செய்து இந்த திருத்தலத்திற்கு வருகையில் வழி தெரியாமல் பசியுடன் நிற்க, அவருக்கு பொதி சோறு கொடுத்து வழிகாட்டிய இறைவன் இந்த திருத்தலத்தில் சோற்றுடை நாதர் என்ற திருநாமத்துடன் இருக்கிறார்.
ஒரு ஸ்வாமி சந்நிதி, இரண்டு அம்பாள் சந்நிதி, பங்குனி மற்றும் புரட்டாசி ஆகிய மாதங்களில் மூன்று நாட்கள் சூரிய ஒளி ஸ்வாமிமீது விழுவது, மூவர் பாடிய திருத்தல சிறப்பை பெற்றது, 5 பிராகாரங்கள், 7 தீர்த்தம் மற்றும் சப்த கன்னிகை வழிபாடு, எமன் சாப விமோச்சனம் பெற்று பதவியை மீட்டுபெற்றது, ஒன்பது நவகிரகம் இல்லாமல் திருவிளக்கை நவகிரகமாக பாவிக்கும் வழிபாடு என சிறப்புபெற்ற இந்த திருக்கோவில், திருச்சி மாவட்டத்தில், மணச்சநல்லூரில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.
திருமணத்தடை, தாரதோஷம் உள்ளவர்கள், ஆயுள் விருத்திக்கு மற்றும் எம பயம் உள்ளவர்கள் குறிப்பாக, அலுவலகம் அல்லது அரசியலில் பதவி இழந்தவர்கள் இந்த திருத்தலத்தில் எமன் சந்நிதியில் வழிபாடு செய்வது உறுதியான விரும்பிய பலனை தரவல்லது என்பதை அவரவர் அனுபவத்தில் உணரலாம். திருமணத்தடை பரிகாரத்திற்காக, இந்து மதத்தை சேராத வர்களும் இந்த திருத்தல வழிபாடு செய்கிறார் கள் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தவாழை வன நாதர் திருக்கோவில் காலை 6 மணிமுதல் மாலை 1 மணி வரையிலும்; இரவில் 8 மணிவரையிலும் தினந் தோறும் வழிபாடு, தரிசனத்திற்கு திறந்து இருக்கும்.
நல்லதே நினைப்போம்: நல்லதே நடக்கும்.
செல்: 94443 27172