"வாரம் ஒரு திருத்தலம் என தொடர் பதிவு தருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் பாருங்கள் எங்களுக்கு ஒரு சந்தேகம்' என தொடங்கினார் ஒரு அன்பர்.

"இந்த பிரச்சினைக்க்கு இந்த திருத்தலம் என சொல்றீங்க. நல்ல விஷயம் தான். ஆனால் அதே திருக்கோவில் எங்கள் வீட்டுக்கு அருகில் அல்லது ஊருக்கு அருகில் இருக்கிறதே.. அங்கே சென்று செய்யவேண்டிய கிரியைகளைச் செய்தால் போதாதா... அந்த குறிப்பிட்டு சொல்லும் திருத்தலத்திற்குதான் செல்ல வேண்டுமா' என கேட்டு முடித்ததும்-

இது வழக்கமான திரும்பத் திரும்ப கேட்கும் கேள்விதானே என்று ஒதுக்காமல், அது பற்றிய விளக்கத்தைத் தரலாம் என்று இந்த வார சிந்தனையைத் தொடரலாம்.

ff

Advertisment

பசு உடம்பில் பால் இருந்தாலும் மடியில் கறந்தால்தான் பால் கிடைக்கும் என்பதுபோல இறைவன் எல்லா இடத்திலும் இருந்தாலும், இந்த வழிபாட்டுத் தலம் இதற்குதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்... "எந்த கோவிலுக்குப் போனாலும் எல்லா சாமியும் ஒன்றுதான்... எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லா தாயும் ஒன்றுதான்..' என்று சினிமா வசனம் பேசுவதால் பயனில்லை.

அரிசி ஒன்றுதான் அதில் செய்யக்கூடிய பலகாரங்கள் ஒவ்வொன்றும் வேறானவை, வித்தியாசமான சுவையானவை அல்லவா? எல்லாருக்கும் பிரச்சினை உண்டு.. ஆனால் எல்லாமே ஒரேமாதிரி இருப்பதிலை என்பது போல, இதை இப்படிதான் செய்யவேண்டும் என்பதால் அதை அப்படியே செய்தாகவேண்டும். மாற்றிச் செய்தால் பலன் கிடைக்காதா என்பதைவிட, நாம் விரும்பும் சுவை கிடைக்காது என்பதுதான் உண்மை.

ஒரு "கைரேகை கலைஞன்' என்ற முறையில், இந்த குறிப்பை இங்கே பதிவு செய்கிறேன். உங்கள் கையிலுள்ள ரேகை அமைப்பு உலகம் முழுவதுமுள்ள பல கோடி மக்களில் இன்னொருவருக்கு சர்வ நிச்சயமாக இருக்காது. அதுதான் விதி.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், ஒருவருக்கே ஒரு விரலில் உள்ள ரேகை அமைப்பு இன்னொரு விரலில் இருக்காது. அதனால்தான் ஒரு சமயத்தில் ஒரு மாதிரி இருப்பவர், இன்னொரு சமயத்தில் வேறொரு மாதிரி இருப்பார்.

தலைவிதி பல புள்ளிகளாக கைகளில் பதிந்திருக்கும். பல புள்ளிகளாக அமைந்த கோடுகளைதான் ரேகை என்று சொல்கிறோம். இந்த கைரேகைக் கலையில் சொல்லப்படும் பலன்களும், ஜாதகத்தை பார்த்து சொல்லப்படும் சோதிடப் பலன்களும் அநேகமாக ஒரேமாதிரியே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சூரியனை மையமாக வைத்து இயங்கும் இந்தக் கோள் மண்டலத்தில், புதனும், சுக்கிரனும் அருகருகே அமைந்திருக்கும் என சோதிட ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கும்.

வரவேற்பறை என்று சொல்லக்கூடிய ஹால் புதன்; அங்கே அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருட்கள் சுக்கிரன் இதேபோல சுண்டுவிரலுக்கு கீழ்பகுதி புதன் மேடு. அதன் எதிரில், பெருவிரலுக்குக் கீழ்ப்பகுதி சுக்கிர மேடு இப்படி ஒன்றையொன்று தொடர்பான நிகழ்வுகள் இருக்கும்.

இதுதான் சோதிடம் இதுதான் சாஸ்திரம் என தெரியாமல், பலரும், அதை தெரிந்தோ- தெரியாமலோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் வளரும் தலைமுறைகளில் சிலர், தாமாகவே இதற்கு இதுதான் பொருள், இதுதான் காரணம் என்று தங்கள் கற்பனைக்கு- கருத்துக்கு ஏற்ப சொல்லி அடுத்த தலைமுறைகளின் அறிவை செயல்படாமல், சிந்திக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் தவறானகருத்தைத் திணித்து விடுகிறார்கள் என்பதுதான் வெளிப்படையான வருத்தமான உண்மை.

"இந்த வார திருத்தல சிறப்பு சொல்லுங் களேன், என நீங்கள் கேட்பது புரிகிறது. சோதிடம் படிப்பவர்கள் அல்லது சோதிட விஷய ஞானம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் எந்தக்கோவிலுக்கு செல்லவேண்டும் அல்லது என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன்.

சோதிட ஞானம் கைவரப்பெற வேண்டும் என விரும்புபவர்கள் விருட்ச வழிபாடு செய்யவேண்டும்.. இந்த திருத்தல தொடர் நிறைவடைந்த உடன் தனியாக விருட்ச வழிபாடு பற்றிய சிந்தனையைத் தொடராக எடுத்துக் கொள்வோம். விருட்சம் என்பது மரங்கள் என்பது அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

அதனால்தான் ஒவ்வொரு மரத்திலிருந்து ஒடிக்கப்பட்ட ஒரே அளவுள்ள குச்சிகளை ஹோம சமித்தாக வைத்து வழிபாடு இயற்றுவது தொன்றுதொட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு சமித்து குச்சிகளுக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ஹோமத்திற்கு எந்த பலனை எதிர்பார்த்து செய்தல் என ஒவ்வொரு நிகழ்வுகளை தெளிவாகப் படித்து பரிந்துரை சொல்லவேண்டும்.

இதில் மாற்றிச் செய்தால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காமல் போவதுடன், வேறுமாதிரி அமைந்துவிடவும் வாய்ப்புள்ளது. பாயசம் செய்யும்போது, அதில் மஞ்சள் பொடி அல்லது உப்பு போட்டால் என்ன கிடைக்கும் என்பதுபோல சொல்லவருவது சொல்லாமலே புரியும்.

சோதிட ஞானம்பெற விரும்பும் அன்பர்கள் மரங்களின் ராஜாவான அரச மரத்தை வழிபாடு செய்யவேண்டும். இது சில பழங்கால கோவில்களில் இருக்கும். எந்த கோவிலாக இருந்தாலும் சரி- அங்குள்ள அரச மரத்தை காலை வேளையில் வலம்வந்து, நிவேதனம் படைத்து, வழிபாடு இயற்றவேண்டும்.

"என்னது? மரத்திற்கு வழிபாடா, இது பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இல்லையே' என்று எண்ணி நகைக்க வேண்டாம். மரத்திற்கு உயிர் உண்டு. ஒரு சின்ன விதையில் அடைபட்ட மரம் கண் விழிப்பதுபோல எந்த மனிதனாலும், எந்த அறிவியலாலும் செய்யமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இதைதான் முந்தைய காலத்தில், "அமாசோம' பிரதட்சணம் செய்வார்கள். அதாவது திங்கட்கிழமை வரும் அமாவாசையன்று அரச பிரதட்சணம் (வலம்வருதல்) செய்து தானம் தருவார்கள். இது பற்றி சிந்திக்க நிறைய உள்ளது.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172