ஜோதிடக்கலையரசி கோவை. எம். தனம்
வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் நிறைய உறவுகளை சம்பாதிக்கிறோம். அந்த உறவுகள் எல்லாம் நமக்கு நிலைக்கிறதா என்றால்... இல்லை என்றே சொல்லவேண்டும். ஒருசில உறவுகள் சிலகாலம் மட்டுமே நம்முடன் இருக்கும். சில உறவுகள் பலவருடங்கள் நம்முடன் பயணிக்கும் . அதில் ஒருசிலர் கூறும் அறிவுரைகளை நாம் ஏற்றுக்கொள்வோம்.
ஒருசிலர் கூறும் அறிவுரைகள் நல்லதாகவே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நம்மனம் இடம் கொடுப்பதில்லை.
சிலரிடம் மட்டும் நமக்கு அடிக்கடி பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதே நேரத்தில் சிலபேர் நம்மைத் தேடிவந்து பேசினாலும் அதைத் தவிர்த்துவிடுவோம்.
இதற்கு என்னதான் காரணம்?
எந்தவொரு காரணமும் இல்லாமலா இதுபோன்ற விஷயங்கள் நம் வாழ்க்கையில் நிகழும்? என்ற கேள்வி நமக்கு எழவே செய்யும்! அதற்கும் கிரகங்கள்தான் காரணமாகிறது! எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்?
நாம் அனைவரும் எல்லா விஷயத்தையும் எல்லாரிடமும் சொல்ல விரும்புவதில்லை. சிலரிடம் மட்டுமே சொல்லி அவர்களின் ஆலோசனைகளை கேட்போம். அவர்கள் சொன்னால் மட்டுமே நமக்கு திருப்தியாக இருக்கும். அவர்கள் நம் நம்பிக்கைக்குரிவர்களாகவும் இருப்பார்கள். சிலருடைய நட்புகள் வெளியூர், வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் நம் மனதிற்குள் இருப்பதாகவே தோன்றும். அந்த அளவிற்கு அந்த உறவு நமக்கு நெருக்கமாக இருக்குமல என்பதால் அந்த நட்புக்கு தூரம் என்பது ஒரு பொருட்டேயல்ல. சில நட்புகள் நம் அருகில் இருந்தாலும்கூட அவர்களிடம் பேசவேண்டும், பகிரவேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றாது.
இதற்கெல்லாம் ஜோதிடரீதியாக சில கிரகங்களின் சேர்க்கைகளும் மற்றும் பார்வைகளுமே காரணமாக இருக்கின்றன. அதைப்பற்றி பார்ப்போம்...
திருமண பந்தம்
சாதாரண நட்பு என்ற நிலைக்கும், ஆயிரம் காலத்து பயிர் என்ற திருமணத்திற்கும்கூட கிரக நிலைபாடுகளே நன்மைகளையும் செய்கிறது, பாதகவ்களையும் உண்டாக்குகிறது.
திருமண பந்தம் என்று வருகிறபோது சில தம்பதியர்கள் எப்பொழுதும் அன்னியோன்யம் குறையாமல், தொடக்க நிலையில் உண்டான அதே அன்புடனும் பரஸ்பரத்துடனும் இருப்பார்கள்.
சில தம்பதிகளுக்கு இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் அதிகமான பிரச்சினைகள், பிரிவுகள், விவாகரத்து என்றெல்லாம் ஏற்படுகிறது.
பொதுவாக அவர்களைப் பற்றி நாம் பேசும்போது, அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை. சகித்து வாழும் மனநிலையும் இல்லை. அவர்களுடைய சந்தோஷத்திற்கும், சுதந்திரத்திற்கும் மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதனால்தான், அவர்களுடைய திருமண வாழ்க்கை பிரிவினையை நோக்கிச் செல்கிறது என்போம்.
அவர்களுடைய நிலைக்கு அது மட்டுமே காரணம் அல்ல... திருமணப் பொருத்தம் பார்த்தபொழுது சில முக்கியமான விஷயங்களைப் பார்க்காமல் போவதுதான்.
இருவரின் ஜாதகத்தையும் அவர்களுடைய ஜாதகத்திலுள்ள கிரகங்களின் நிலையறிந்து சேர்த்தால் பிரச்சினைகள், சண்டைகள் வந்தாலும் அது பிரிவினையை நோக்கிச் செல்லாமல் இருக்கும். அத்தகைய பொருத்தமானது கணவனுக்கு மனைவிமேல் ஒரு ஈர்ப்பையும், மனைவிக்கு கணவன்மேல் பாசத்தையும் உண்டாக்குவதாக இருக்கும். இத்தகைய நிலைபாட்டுடன் இணைபவர்களால் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிய முடியாது.
ஒருசில தம்பதிகள் சமுதாயத்தின் பார்வைக்கு ஒற்றுமையுடன் இருப்பதுபோல் இருப்பார்கள். ஆனால், வீட்டுக்குள் அவர்களுக்குள் அன்னியோன்யம் இருக்காது. சமுதாயத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும், கடமைக்காகவும் நிறைய தம்பதிகள் இன்றும் தங்களுக்குள்ளாகவே ஒரு வளையம்போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இத்தகைய நிலைக்கூட அவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது தோல்வியில் முடிந்திருப்பதாகவே கூறவேண்டும்.
இதுபோன்ற நிலைக்கூட உண்டாகாமல் இருக்க, திருமணப் பொருத்தம் பார்க்கும்பொழுதே நாம் சில விஷயங்களை நம் கவனத்தில் எடுத்துக் கொண்டு சேர்த்தால் இதுபோன்ற பிரச்சினைகளும் ஏற்படாமல் போகும்.
அதாவது, ஒரு பெண்ணினுடைய ராசி, லக்னம். ஒரு ஆணினுடைய ராசி, லக்னத்திற்கு 6, 8 ஆக இல்லாமல் இருக்கவேண்டும்.
ஒருவருடைய லக்னம், ராசியின்மீது இன்னொருவருடைய ராகு- கேது இல்லாமல் இருக்க வேண்டும். இருந்தால் கருத்து வேறுபாடு நிறையவே வரும்.
ஒரு பெண்ணினுடைய மாங்கல்யக்காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான், ஆணினுடைய களத்திரக்காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிர பகவானுக்கு 6, 8 ஆக இல்லாமல் இருக்கவேண்டும்.
பெண்ணினுடைய ஏழாம் அதிபதியும், ஆணினுடைய ஏழாம் அதிபதியும் 6, 8 ஆக இல்லாமல் இருக்கவேண்டும்.
ஒருவருடைய ஏழாம் அதிபதியின்மீது மற்றொரு ஜாதகத்தில் ராகு- கேது இல்லாமல் இருக்கவேண்டும்.
பெண்ணினுடைய ஜாதகத்திலுள்ள செவ்வாயின்மீது ஆண் ஜாதகத்தில் ராகு- கேது இல்லாமல் இருக்கவேண்டும். அதேபோல் ஆணினுடைய ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் பாவத்தில் பெண்ணினுடைய ஜாதகத்தில் ராகு, கேது இல்லாமல் இருக்கவேண்டும். இதுபோன்ற அமைப்புகளைத் தவிர்ப்பதால் திருமண பந்தத்தில் இருவருக்கும் ஒற்றுமையான நிலையை உருவாக்கலாம்.
இந்த நிலையில், எந்தமாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் இருவரையும் சேர்க்கலாம், இருவரும் அன்னியோன்யமாக இருப்பார்கள் என்பதையும் பார்ப்போம்.
பெண்ணினுடைய ஜாதகத்தில் ராசிக்கு, லக்னத்திற்கு, திரிகோண ஸ்தானங்களில் ஆணினுடைய ராசியோ- லக்னமோ இருப்பது சிறப்பாகும்.
பெண்ணினுடைய ராசியையோ- லக்னத்தையோ ஆணினுடைய குருவின் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் பார்ப்பது மிகச்சிறப்பாகும்.
அதேபோல் ஆணினுடைய ராசியையோ- லக்னத்தையோ பெண்ணினுடைய ஜாதகத்திலுள்ள குருவின் ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகளால் பார்ப்பதும் மிகச்சிறப்பாகும்.
பெண்ணினுடைய மாங்கல்யக்காரக கிரகம் செவ்வாய் இருக்கும் பாவகத்திற்கு ஆணினுடைய களத்திரக்காரக கிரகம் சுக்கிரன் சேர்க்கைப் பெறுவதும் சிறப்பாகும்.
பெண்ணினுடைய ஜாதகத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் பாவகத்தின்மீது ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருப்பது சிறப்பாகும்.
இருவருடைய ஜாதகத்திலும் ஏழாம் அதிபதியின்மீது குருவின் பார்வை இருப்பது சிறப்பாகும்.
பெண் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு, திரிகோண ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது சிறப்பாகும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாயின் பார்வை ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் இடத்திற்கு ஏற்படுவதும் சிறப்பாகும்.
திருமணப் பொருத்தம் பார்த்து ஜாதகங்களை இணைக்கும்போது, இதுபோன்ற அமைப்புகளையும் பார்த்து ஜாதகரை இணைத்தால் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டானாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள்.
இவற்றுடன் அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசா புக்தியையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இருவரையும் இணைக்கும்பொழுது அவர்கள் நகமும் சதையுமாக வாழ்வார்கள். ஈருடல் ஓருயிராக இணைந்து வாழ்க்கையை வெற்றிகொள்வார்கள்.
90802 73877