ஒருமுனைப்பு என்கின்ற காமம் தோன்றி, ஆண்- பெண் இருவரையும் தூண்டி இணைதலுக்குள் தள்ளி ஒரு செயல்பாட்டை நிகழ்த்தி, பூமியாகிய பெண்ணுள் விதையாகிய ஆண், விதையை விதைத்துத் தன்னிலைக்குத் திரும்பும்வரை ஐந்து நிலைகளில் அது செயல்படும்.
இணைதலில் இறைநிலையான அல்லது பிரபஞ்ச நிலையான இனப் பெருக்க நிலையில் அந்த ஆணும், பெண்ணும் இருக்கும்பொழுது அவர்கள் இயற்கை, இறை, பிரபஞ்சமாகவே இருப்பார்கள்.
அந்த இணைதல் நிகழும்பொழுது ஆண்- பெண் இருவருமே அதனதன் பிறப்பின் தன்னிலையில்தானே இருப்பார்கள்?
அந்த பிறப்பின் தன்னிலைதான் இறை, கடவுள். ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டிருப்பது இயற்கை அல்லது இறை என்ற மூலப் பொருளால்தானே?
ஆக, படைத்தல் நிகழும்பொழுது ஆணும் பெண்ணும் இறைநிலையில்தான் இருப்பார்கள்.
பரிணாம வளர்ச்சியின் இப்போதைய நிலையான மனிதனிடத் தில். உணர்தல் என்ற ஆறாம் அறிவு, இறை வழங்கிய வரம். மற்ற உயிரினங் களிடத்தில் உணர்தல் என்ற நிலை இல்லாத காரணத்தினால் இனப் பெருக்கம் என்ற செய்கையை மட்டும் நிகழ்த்திக்கொண்டே போகும்.
உணர்வு என்ற நிலை மனிதனிடத்தில் இருப்பதால்தான் உற்பத்தி செய்யப்படும் மூலத்தின் நிலையில், உற்பத்தியில், அதே நிலையிலிருக்கும், அந்த இறையை உணர முடியும்.
உற்பத்திநிலை என்பது கடவுள் நிலைதானே?
காமத்தில் கடவுள்நிலை என்பது நம் யோகிகளாலும் உணரப்பட்டு அதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்து வைத்திருந்தாலும், அதை மறைத்தேதான் வைத்திருக்கின் றனர். ஏனெனில் கலாச்சாரம் என்ற சாதாரண நிலைப்பாட்டில் எவ்வித மாற்று விஷயங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே.
அதனால்தான் காமம் என்பது புனிதம் அல்லது ஒரு தவறான செயல் என்று பகிரப்பட்டுள்ளது. இதனுள் சென்று உணர்ந்தவரால் மட்டும்தான் இதன் உண்மை நிலைப்பாட்டை உணர்ந்துகொள்ள முடியும். அப்படி உணர்ந்தவர்கள்கூட இதை வெளியே சொல்லாததற்குக் காரணம், அவர்களுக்கு உணர்த்தப்பட்ட அந்த இறைநிலையே இவ்விஷயங்களை வெளியிட அனுமதிப்பதில்லை.
நான் இந்த நிலைகளை எழுத வேண்டுமென்று நீண்டவருடங்களாக முயற்சித்து, இறைவன் கருணையால் இப்பொழுது கடத்திக் கொண்டிருக்கி றேன். இது போய்ச் சேரவேண்டும் என்பது பிரபஞ்சத் தீர்மானமே.
சரி; இந்த கூடலில் ஒருமுனைப்பு, இணைதல், செயல், விதைப்பது, திரும்புவது என்ற ஐந்து நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு நிலைகளிலும் விழிப்புணர்வு இருக்கும்பொழுது, இந்த இயற்கையின் பஞ்சபூதத் தன்மைகளை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
இந்த ஐந்து நிலைகளை பஞ்சபூதங்கள் என்று சொன்னாலும், என்னுடைய புரிதலில் ஒருமுனைப்பு ருத்ரன், இணைதல்- அர்த்தநாரி, செயல்- நடராஜர், விதைப்பு- காலபைரவர், திரும்புதல்- சதாசிவன்.
ருத்ரன்
ருத்ரன் என்பது ஒருமுனைப்பு நிலை, எதை ஒன்றை செயல்படுத்தவோ, பயணப்படவோ, நிகழ்த்தவோ இந்த ஒருமுனைப்புதான் துணை புரியும். அது அதிவல்லமை கொண்டது.
நினைத்தது செயல்பாட்டிற்கு வரும்வரை இதன் தீவிரம் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும். அதனால்தான் தவத்தில் இருப்பவர்கள் இறையை அடையும்வரை இந்த ஒருமுனைப்பான ருத்ரனைப் பற்றிக்கொள்வார்கள்.
இது ஒரு உணர்வுநிலை. இந்த உணர்வுநிலையின் வடிவாக்கமும், கற்பனை உருவமும் ருத்ரனை பெரிய தசை வலிவுமிக்கவராகக் காட்டுவார்கள்.
மேலே குறிப்பிட்ட ஐந்து நிலைகளுமே உணர்வு நிலைகள்தான். இந்த உணர்வு நிலையை சரியான விழிப்புணர்வின் மூலமாக அறிய முடியும்.
அவ்வாறான இந்த ஒருங்கிணைப்பு, ருத்ர நிலைக்கு காமம் கொண்டுவந்து சேர்க்கும். இந்த ஒருமுனைப்பானது, உருவாக்க நிலைப்பாடுகளில், இணைதலை நோக்கி தீவிரமாகப் பயணிக்கும்.
இந்த ஒருமுனைப்பு நிலையிலேயே, அந்த தீவிரத் தன்மையை, ருத்ரனை, அதன் வலிமையை, உள்வாங்கி உணரலாம்.
அவ்வாறு உள்வாங்கி உணர்கிறபொழுது அதன் வல்லமையும் தீவிரமும் நெருப்பைவிட சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால்தான் இது நெருப்பு தத்துவமாம்.
(இன்னும் வரும்)
செல்: 73394 44035