கோள்களின் ஒன்பதுவிதமான தன்மைகள், இயக்கமாகிய பெண்ணிற்குள் இருக்கும் கருப்பையில் எவ்விதம் தன் வேலையைச் செய்கிறது என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம்.
அதேபோல் இருப்பாகிய சிவனினுள்ளும் ஒன்பதுவிதமான தன்மைகள், ஆணின் விந்துக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தன்மையை இருப்பாகிய சிவனுக்குள்ளும் இயற்கை விந்துக்குள் தக்கவைத்திருக்கிறது.
உண்ணும் உணவு சக்தியாகி, ரத்தமாகி, சதையாகி, எலும்பாகி, எலும்பு மஜ்ஜையாகி, மஜ்ஜையிலிருந்து உருவாகிற திரவத்தன்மையே விந்து.
உணவு ஜீரணித்து சக்தியாகி, ரத்தம் உருவாகுதல் படைத்தல்; எலும்பாகி, மஜ்ஜையாவது காத்தல்; எலும்பு மஜ்ஜைதான் மனித உடம்பின் ஸ்திரத் தன்மைக்கும், இயக்க நிலைக்கும் மூலம்.
அழித்தலில் இறுதி வடிவமான விந்து என்ற திரவம் வந்து, மீண்டும் இயற்கையின் விளையாட்டில் சக்தியாகிய பெண்ணிற்குள் பயணப்பட்டு அடுத்த படைத்தலுக்கு வித்திடும்.
இந்த படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலை சிவமாகிய ஆணினுள் நிகழும் காலம் எட்டு திதி (நாள்) என்று சொல்லுகிற சந்திரனின் நகர்வு.
இதுபோல பல சூட்சுமங்கள் இயற்கை என்ற கடவுளின் தன்மையில் உருவாக்கப்பட்டு, இருப்பு என்னும் சிவனாகிய ஆணாகி, இயக்கம் என்னும் சக்தியாகிய பெண்ணாகி, இந்த இரண்டும் இணைகிற இடத்திற்குத் தள்ளுதல் காமம். இரண்டு கடவுள் தன்மைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காமமும் கடவுள் தன்மைதானே. காமம் தூண்டப்பட்டு இணைதல் என்ற எழுத்தாக்கத்திற்குள்தானே இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.
இந்த இணைதலோ, அதன் மூலமாகிய காமமோ நாம் சந்திக்கின்ற, பார்க்கின்ற அனைவரிடத்திலும் ஏற்படுமா என்றால், ஏற்படாதென்று அறுதியிட்டுக் கூறமுடியும்.
குறிப்பிட்ட தன்மையுள்ள ஆண் அல்லது இருப்பானது, குறிப்பிட்ட தன்மையுள்ள பெண்ணோடுதான் இணையமுடியும்.
இது இயற்கை என்ற கடவுள் முடிவுசெய்கிற விஷயம். இதனுள்ளும் எண்ணிலடங்கா சூட்சுமங்கள் அடங்கிக் கிடக்கின்றன.
நாம் சாதாரணமாகத் தொடர்புகொள்ளும் நபருக்கும் நமக்குமே, இயற்கையின் தொடபிருந்தால்தான் பேசவே முடியும். எத்தனையோ பேரை காரணமில்லாமல் நமக்குப் பிடிப்பதில்லை என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம் அல்லவா?
நம் இயற்கையின் கட்டமைப்புக்கு ஒத்துவருகிற மற்றொரு இயற்கையின் கட்டமைப்போடுதான் நம்மால் இசைந்து பேசவே முடியும்.
இதை ஜோதிட சிறு குறிப்பாக உணர்த்த முற்படின்- நீங்கள் உங்கள் வட்டங்களிலோ அல்லது அடிக்கடி சந்திக்கும் நபர்களிடத்திலோ அவர்களுடைய ராசி, நட்சத்திரம், லக்னம், தசா, புக்தி- இவர்களின் நாதர்கள் தொடர்பு இவற்றோடு, உங்களுடைய ராசி, நட்சத்திரம், லக்னம், தசா, புக்தி நாதர்கள் ஒத்திருக்கும். இல்லையென்றால் அந்த தொடர்பே இல்லாமல் போகும்.
ஆக, காமம் என்பது இருப்பையும், இயக்கத்தையும் சலனப்படுத்துதல், சலனப்பட்டு இரண்டும் இணைந்து ஒன்றை உருவாக்குதலுக்கான தூண்டுதல். அந்த தூண்டுதல் என்பது அதற்கேற்ற கட்டமைப்பு இருப்பவர்களோடுதான் ஏற்படும் என்பதை இயற்கையான கடவுள் தன்மைதான் முடிவு செய்கிறது.
"ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற விவாதங்களுக்கு விளக்கங்களை அளிப்பதும் என் கடமை.
ஜோதிடம் என்பது- இயற்கை என்ற கடவுள் தன்மை, அவற்றின் செயல்பாடுகள், அவை பூமியில் இருக்கும் ஜீவராசிகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்கின்ற பிரபஞ்ச உண்மை, அவற்றைக் கண்டுபிடிக்கின்ற கணிதமுறைகளே அன்றி வேறில்லை. கடவுள் உண்டா இல்லையா என்பதை ஜோதிடத்தில் மட்டுமேதான் நிரூபிக்கமுடியும். ஏனெனில் ஜோதிடம் நிதர்சனம்.
நாம் இருக்கும் இடமான பூமி, பூமி இருக்கும் இடமான சூரிய குடும்பம், சூரிய குடும்பத்தின் உறுப்பினர் களான கோள்கள், அவை செயல்படும் விதம், அந்த செயல்பாடுகள் நம்மை, நாம் இருக்கும் பூமியை எவ்வாறு ஆட்கொள்கின்றது என்ற வரைபடம்தான் ஜோதிடம்.
பூமி உட்பட சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி, ப்ளுட்டோ, நெப்டியூன் என்ற கிரகங்கள் ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனை மையமாக வைத்து, தன்னையும் சுற்றிகொண்டு சூரியனையும் சீரான இடைவெளியில் சுற்றிக் கொண்டே இருக்கின் றன.
இதில் பூமிக்கு அருகிலிருக்கும் சந்திரனின் தாக்கம் மிக அதிகமாக பூமியில் செயல்படுகிறது, நம் கண்ணுக்குத் தெரியும் சூரியன், சந்திரனைக் கொண்டேதான் காலக் கணக்குகள் தீர்மானிக் கப்பட்டு, அந்தக் கணக்குகளில் உருவாகிய உடல் மற்றும் உயிர் செயல்படும் விதத்தின் கணக்குகளே ஜோதிடம்.
நம் அருகே இருக்கிற சந்திரனின் சக்திநிலை மாற்றங்கள் இரண்டு விதப் பரிமாணங்களை எடுத்திருக்கிறது.
மற்ற கோள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்திரன்கள் இருந்தாலும், காலக்கணக்குகளுக்கு நாம் வசிக்கும் பூமியில் நடைபெறுகிற தன்மைகளைத்தானே கணக்கில் கொள்ளமுடியும்.
அவ்வாறாக சந்திரன் பூமியைச் சுற்றிவருகிறபொழுது, இரண்டு இடங்களில் பூமி சூரியனைச் சுற்றும் பாதையில், சந்திரனின் பூமியை சுற்றும் பாதை வெட்டிச்செல்லும். அவ்வாறு சந்திரபாதையும், பூமி சுற்றுகிற பாதையும் வெட்டிச் செல்கிற தன்மை ஒரு பெரிய மாற்றத்தை பூமியில் தருகிறது என்பதைக் கண்டறிந்த நம் ஞானிகள், அந்த இரண்டு வெட்டுப் புள்ளிகளையும் காலக்கணக்குகளுக்குள் கொண்டுவந்து அவற்றுக்கு ராகு- கேது என பெயரிட்டனர். அவற்றின் செயல்பாடுகள் பாம்புகள்போல் வீரியமிக்கதாக இருந்ததால், அவற்றிற்கு அரவம், சர்ப்பம் என உருவங்களும் கொடுத்து, அந்த சக்தி ஓட்டத்தின் செயல்பாட்டுத் தன்மைகளைக் கணக்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறதல்லவா? அப்படி சுற்றி வருகிறபொழுது அந்த வட்டத்தின் ஒவ்வொரு வளைவும் முப்பது டிகிரி கோணத்தில் வளைந்து ஒரு முழு நீள்வட்டமாக முடிவுறுகிறது.
ஒரு முழு வட்டம் என்பது 360 டிகிரி என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்படி வளைகிற 30 டிகிரி வளைவு 360 டிகிரி ஆகிய முழுவட்ட நிலைக்கு வர 12 வளைவுகளைக் கொண்டுதானே இருக்கும். இந்த ஒவ்வொரு வளைவுகளும்தான் ராசி என பெயரிடப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.
இந்த சூர்ய குடும்பத்திற்கு மேலிருக்கும் நட்சத்திர மண்டலங்கள் ஒரு "ஏரியல்' போல இருந்து தன் சக்தி ஓட்டங்களை சூரிய குடும்பத்தின்மீது செலுத்தி வருகின்றன.
நட்சத்திரங்களை வைத்துதான் பூமியின் சூரிய வட்டப்பாதை அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த நட்சத்திரங்கள் ஒரு கூட்டமாக இருப்பதால் அந்தக் கூட்டங்களின் வெளித்தோற்ற அமைப்புகள்தான் ராசிக்கு அடையாளச் சின்னங்களாக நண்டு, சிம்மம், இரு பெண்கள் என காட்டப்பட்டிருக்கிறது.
இந்த பிரபஞ்சத்திற்கும், மனிதனாகிய நமக்கும் இருக்கும் தொடர்பு, சுவாசம் மூலம் மட்டுமேயன்றி வேறில்லை.
அப்படி காமத்தின் விளைவால், சிவன்- சக்தி இணைவால் உருவாகும் படைத்தல் என்கின்ற உயிர், இந்த கடவுள் தன்மையான இயற்கையோடு சுவாசம்மூலம்தானே தொடர்புகொள்கிறது, ஜனித்த அந்த உயிர் எடுக்கும் முதல் கடவுள் தொடர்பான சுவாசம் தான் லக்னம்.
(இன்னும் வரும்)
செல்: 73394 44035