ந்துமத வழிபாடுகளுள் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடுமென்பது அருளாளர்களின் வாக்கு.

எந்தக் காரியத்தையும் நற்காரி யமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன் முழுமுதற் கடவுளான விநாயகர். தம்மை வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு.

நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மனநிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில், ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலையாகும். விரதமிருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மையடையும்.

pp

Advertisment

விரதங்களைக் கடைப்பிடிப்பது ஆன்மிகரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல்ரீதியாகவும் உடலுக்கும், உள்ளத்துக்கும் உகந்தது. பிரார்த் தனைகளை நிறைவேற்றும் விராதாதி நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைப்பிடிப்பது இந்துக்களின் வழக்கம். சாதாரண மனிதர்முதல் சாதனையாளர்கள்வரை பிரச்சினை வந்தால், வழிபாட்டால் மட்டுமே சரிசெய்யமுடியும் என்பதை அறிவார்கள். ஆனால், எத்தகைய வழிபாட்டால் சரிசெய்யமுடியும் என்னும் சூட்சுமம் தெரிவதில்லை.

திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி உள்ளதால், பிறந்த திதிக்கான தெய்வங்களை வழிபாடு செய்துகொள்வது சிறப்பான பலன்களைத் தரும். திதியால் ஏற்படும் கிரகதோஷம் நீங்க, அதற்குரிய திதிதேவதைகளை வழிபடவேண்டும்.

அப்படி வழிபட்டால், எத்தகைய கடுமையான பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம்.

Advertisment

திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால், அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை, பிணி, பீடை, கஷ்டம் என அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச்செய்யும்.

பொதுவாக, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற குறிப்பிட்ட திதிகள், காலத்தால் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகொடுக்கும் வலிமை பெற்றவை.

அவ்வகையில், வளர்பிறை சதுர்த்தி திதியின் அதிதேவதை விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு தடை, தாமதங்கள் மற்றும் நவகிரக தோஷத்தை நீக்கும் வலிமை உண்டென்றாலும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகர் அவதரித்த நாள் என்பதால், மேலும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி சார்வரி வருடம், ஆவணி மாதம் 6-ஆம் நாள், சனிக்கிழமை (22-8-2020) வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், விரதமிருந்து விநாயகரை வழிபட ஜனனகால ஜாதகத்திலுள்ள நவகிரக தோஷங்களும் அகலும்.

விநாயகரின் சிறப்புகள்

ஓங்கார நாயகனாகத் திகழும் விநாயகரின் உடலில் நவகிரகங்களும் இருப்பதாக ஐதிகம். அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ்க்கையில் புதனும், வலது மேல்கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ்க்கையில் சுக்கிர பகவானும், இடது மேல்கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால், நவகிரகங்களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு.

மேலும், அவரது ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிப்பதுடன், "சிவாய நம:' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்துவதால் "ஐங்கரன்' என அழைக்கப்படுகிறார். அதாவது, பாசத்தை ஏந்திய கை படைத்தலைக் குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது.

அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது என்பதால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் மும்மூர்த்தியாகிறார். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிப்பதால் பராசக்தியாகவும், தும்பிக்கை ஏந்திய கை மறைத்தலைக் குறிப்பதால் எல்லாம்வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர் என்பதால், விநாயகர் தத்துவப்பொருள். முக்காலத்துக்கும் வழிகாட்டுபவர். நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் தேடிவரும்.

ஸ்வஸ்திக் சின்னமும் விநாயகரும்

எந்தச் செயலையும் தொடங்கும்முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், விநாயகர் வழிபாடு வெற்றியைத் தருவதற்கு காரணம் அவரது கையிலுள்ள மங்களம் மற்றும் வெற்றியின் சின்னமான ஸ்வஸ்திக்.

செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதிலுள்ள எட்டுக் கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும்.

ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப் படும் புள்ளி நமது ஆன்மா. மனக் கட்டுப் பாடில்லாமல் அலைபாயும் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் சக்தி ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இருக்கிறது. எனவே, விநாயகர் வழிபாடு தடையற்ற நல்வாழ்வு, பொருள், வெற்றியைத் தேடிதரும். ஸ்வஸ்திக் சின்னத்தைப் பூஜையறையில் வரையவேண்டும் அல்லது ஸ்வஸ்திக் சின்னம் கையிலுள்ள விநாயகரை வைத்து வழிபடவேண்டும்

விநாயகரும் தோஷ நிவர்த்தியும்

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில், அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பாலபிஷேகம்செய்து வழிபடவேண்டும். ஜனனகால ஜாதகதில் கடுமையான சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள், 13, 22, 31-ஆம் தேதியில் பிறந்தவர்கள், ராகு- கேது தசை நடப்பவர்கள், ஜனன ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு- கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி, பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால், ஜாதகத்திலுள்ள அனைத்துவிதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தியாகும். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

அத்துடன், கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவதொரு ரூபத்தில் அடுக்கடுக் காக வந்துகொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு, வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பிவரும்.

மாங்கல்ய தோஷம்

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனனகால ஜாதகத்தில் எட்டாமிடக் கேது, செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும், சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும், விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வழிபட, அனைத்துத் தடை, தாமதங்களும் விலகி சுபப் பலன் தேடிவரும்.

புனர்பூ தோஷ நிவர்த்தி

22-8-2020 விநாயகர் சதுர்த்தி அன்று, சந்திரன் தன் சொந்த நட்சத்திரமான அஸ்தத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனிக் கிழமையும், சதுர்த்தி திதியும், சந்திரனின் நட்சத்திரமும் சேர்ந்த இந்த நாளில் விநாயகரை வழிபட, ஜனனகால ஜாதகத்தில் சனி, சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் கடுமையான புனர்பூ தோஷம் மற்றும் சந்திர தோஷம் அகலும்.

ஜாதகத்தில் கேது தசை மற்றும் கேது புக்தி நடப்பில் இருப்பவர்களுக்கு, நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவகையான இன்னல்களுக்கும் விநாயகரை வழிபடுவதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். நிம்மதியும் உண்டாகும்.

விநாயகர் சதுர்த்தி விரதமுறைகள்

அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாகக் குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து ஒரு மனையை வைத்து கோலமிட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை யிலையை வைக்கவேண்டும். இலையின் நுனி வடக்குப் பார்த்ததுபோல இருப்பது நல்லது.

இலையின்மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்கவேண்டும். களிமண் பிள்ளையார், உலோகம், கற்சிலை விக்ரகங் களையும், படத்தையும் வைக்கலாம்.

விநாயகருக்குக் கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்தியம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றும் 21 என்ற கணக்கில் வைக்கலாம். பூஜையின்போது மண் அகலில் நெய் தீபமேற்றவேண்டும்.

அதன்பிறகு, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லிப் பூக்களால் அலங்காரம் செய்து, 21 வகை இலைகள் மற்றும் அறுகம்புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்தும் அர்ச்சனை செய்யலாம். விநாயகர் பாடல்கள், விநாயகர் அகவல், காரியசித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிறகு, கற்பூரம்காட்டி விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தைப் பட்டினியாக இருந்து அனுஷ்டிப்பது சிறப்பு.

உலகில் மனிதனுக்குப் போதுமென்னும் எண்ணம் தோன்றுவது உணவருந்தும்போது தான்! ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் அனைத்து செல்வங்களும் தேடிவரும். எனவே, இயன்ற உணவுகளை- தானதர்மங்களைச் செய்ய பலன் இரட்டிப்பாகும்.

ஆன்மிகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்துகொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டும், பலர் பார்க்கும்படி கோவிலுக்கு நன்கொடை கொடுத்தும், பலர் முன்னிலையில் அடுத்தவருக்கு உதவி செய்வதும் மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே ஆன்மிகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறுபல சிந்தனையுடன் பூஜைசெய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித தீய சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, "எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் தெரியாது, உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இந்த உடலையும் ஆன்மாவையும் நீயே வழிநடத்திச் செல்' என விநாயகரிடம் சரணடைந்து வழிபட. நவகிரக தோஷங்கள் நீங்கும். பொன், பொருள் ஆபரணங்கள் சேரும்.

செல்: 98652 20406

___________

மன நிம்மதி

"ஓம் சுமுகாய நமஹ'

இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரமாகும். எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார விநாயகரின் திருவுருவத்தோடு நினைத்துத் துதித்தால், மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சியுணர்வு உண்டாகும்.

விருட்சமும் விநாயகரும்

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும்.

வன்னி மரத்தடி விநாயகர், கிரக தோஷங்கள் விலக்குவார்.

ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால், தீராத- நாட்பட்ட நோய்கள் மறையும்.

நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.

_______________

பணவரவை அதிகரிக்கும் குன்றின் மணி

கருப்பு வண்ணத்தையும் சிகப்பு வண்ணத் தையும் ஒன்றாகச் சேர்த்ததுபோல் இருக்கும் குன்றின் மணியை நாம் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. விநாயகர் சதுர்த்தியன்று மண் பிள்ளையாருக்கு கண்ணாக இதை வைப்பார்கள். கிராமப் புறங்களில் விளையும் இந்தக் குன்றின் மணிக்கு சக்தி அதிகமுள்ளது. வீட்டில் பணக்கஷ்டங்கள் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த சிகப்பு, கருப்பு குன்றின் மணியை நம் வீட்டுப் பூஜையறையில் வைக்கலாம். வீண்விரயங்களையும் தவிர்க்கும் சக்தியானது இந்த சிகப்பு, கருப்பு குன்றின் மணிக்கு உள்ளது.