இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
23
தீப்தா கௌரி என்ற தேவியின் அருளால் சூரியனின் கிரணங்கள் வெளிப்படுகின்றன.
அந்த கிரணங்களின் சக்தியால் மட்டுமே மற்ற கிரகங்கள் இயங்குகின்றன எனும் கோட்பாடின் அடிப்படையில், "தீப்தா' எனும் கிரணங்களின் கணக்கீட்டு முறையுள்ளது. அதன்படி, சூரியனும் மற்ற கிரகங்களும் எத்தனை கிரணங்களைப் (ஒளிக்கதிர்) பெறுகின்றன என்பதைப் பொருத்தே கிரகங்களின் வலிமை அமையும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கணிதம்.
""சாத்திரங்கள் புகழும் சாட்சிநாதரே! இவ்வுலகியல் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் மனிதர்கள் உழல்வதால், ஆன்ம விசாரம் செய்ய முடியாமல் போகிறது. அவ்வாறாயின் ஜீவர்கள், முக்தர்களாகும் வழி எதுவோ?'' என அன்னை கரும்பன்ன சொல்லி, திருப்புறம்பியத்தில் அருள்புரியும் சாட்சிநாதரைப் பணிந்து கேட்டாள்.
அதற்கு சாட்சிநாதர் உரைத்தது- ""கடல் ஆமைகள் இடம் பெயர்ந்தாலும் தங்கள் பிறப்பிடத்தை மறவாததுபோல, எல்லா சப்தங்களுக்கிடையிலும் தாய் தன் குழந்தையின் அழுகுரலைப் பிரித்துணர்வதுபோல, உயரப் பறந்தாலும் பருந்து தன் கால்களில் இடுக்கிய இரையை கவனமாய்ப் பற்றுவதுபோல, எந்த சூழலிலும் விவேகமுள்ளவனுக்கு ஞான தாகம் குறையாது. "தான் யார்' என்ற கேள்வியால் "ஞான வேள்வி' நடத்தி முக்தியடைவான்.''
""சத்யநாதரே! "அர்த்த ரேசிதம' எனும் தாண்டவத்தின் லயமாகிய ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் புதனும், ஆயில்யம் முதல் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைந்திருக்க, ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் குருவும், சுவாதி மூன்றாம் பாதத்தில் சனியும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சந்திரனும், பரணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மபலனை தாங்கள் அருள் கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருக்காலிமேடு எனும் திருத்தலத்தில் அருள்புரியும் திருக்காலீஸ்வரரிடம் அன்னை பிரமராம்பிகை வினா தொடுத்தாள்.
இந்திரனுக்கு சாப விமோசனம் தந்த காரைத்திருநாதர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் தன் மனைவிக்கு பல கொடுமைகளைச் செய்தான். வீண் சந்தேகங்களால் தீராப் பழியைச் சுமத்தினான்.
இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தால், அவள் இளம்வயதிலேயே இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாள். ஜாதகன் தீராத நோய்வாய்ப்பட்டு, நடையிழந்து படுக்கையில் வீழ்ந்தான். ஒருநாள் நள்ளிரவில், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் மாண்டு நரகம் சென்றான். சில காலம் கழித்து, சஞ்சித கர்மாவைச் சுமந்து சோமநாதபுரம் என்ற ஊரில் பிறந்தான். கருணாகரன் என்று பெயரிடப்பட்ட அந்த ஜாதகன் நல்ல முறையில் கல்வி கற்று அதிகாரமான பதவி பெற்றான். ஆனாலும், முன்ஜென்ம வினையால் இளம்வயதைக் கடந்தும் அவனுக்குத் திருமணமாவதில் தடை இருந்து வருகிறது. அதனால் ஏற்பட்ட மனக்கவலையால் அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக, முதலில் பெற்றோருக்குப் பாதபூசை செய்ய வேண்டும். அதன்பின் மூன்று ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்வு பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636