இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
58
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு பாவத்தின் காரகப்பலனை ஆராயும் போது, அந்த பாவத்திற்கு சாதகமான- பாதக மான பாவங்களையும், சாதகமான பாதகமான கிரகங்களையும், சாதகமான- பாதகமான ராசி வீடுகளையும், சாதக, பாதக கிரகப் பார்வை களையும் கணக்கில் கொண்டால் மட்டுமே துல்லியமான பலன்களை அறியமுடியும். உதாரணத்திற்கு- ஐந்தாம் அதிபதி, எட்டு அல்லது பன்னிரண்டாம் பாவத்தில் அமர்ந்து, அது அபுத்திர ராசிகளாகிய ரிஷபம், விருச்சிகம், மிதுனம், கன்னியாக அமையுமேயானால், கடுமையான புத்திர தோஷம் உண்டாகும். அதேபோல ஐந்தாம் பாவம் குரு, செவ்வாய் தொடர்பு பெறாமல், புதன் தனித்திருக்க, சனியின் பார்வை பெற்றால், ஜாதகருக்கு புத்திர தோஷம் என்ற தீயபலனையும், மந்திர சித்தி, தனயோகம் போன்ற நற்பலன்களையும் தரும்.
பாவ, கிரகத் தொடர்புகள் மற்றும் பார்வை களால், ஒரே அமைப்பினால் ஏற்படும் பல்வேறு பலன்களை அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""விஸ்வநாதரே! உற்றார்- உறவினர் அழுது புலம்ப, ஜீவன்களைக் களவாடும் எமனுக்கு தர்மராஜன் என்ற பெயர் பொருந்துமா? தாங்கள் இதை விளக்கியருள வேண்டுகிறேன்'' என பூங்கொடி நாயகி திருஓமாம்புலியூர் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
ஜலகண்டேஸ்வரர் உரைத்தது- ""காலன் எனும் எமதர்மராஜன், பிறக்கும்போதே ஜீவனின் பிடரியில் அமர்ந்து உயிர்களைக் காலத் தால் செலுத்துகிறான். நீரால் நிரப்பப்பட்ட கலம்போல, காலத்தால் அடைக்கப்பட்ட உயிர் களை, முடிவில் காலத்தில் கொண்டு சேர்க் கிறான். உறக்கத்தில் நித்ரா தேவியும், இளமையில் காமனும், ருணமும், ரோகமும் எடுத்துச்சென்ற காலத்தின் மிகுதியையே காலன் பகிர்ந்து கொள்கிறான். கால மாயையால் இறந்தவருக் காக உறவினர் அழுவதுபோல தோன்றினாலும், உண்மையில் தாங்களும் ஒரு நாள் இதுபோல இறந்துபோவோம் என்றே வருந்துகிறார்கள். கருணைகாட்டுவதே மேலான தர்மம். காலன் கருணையுள்ளவன். உடலை நோயிலிருந்தும், மனதை சோகத்திலிருந்தும் விடுவித்து, மரணத்தால் புதுவாழ்வு தருகிறான்.''
""வன்னீசுவரரே! "விருச்சிகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், கேட்டை மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவோணம் முதல் பாதத்தில் செவ்வாயும், சதயம் இரண்டாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் சூரியனும், ரேவதி மூன்றாம் பாதத்தில் குருவும், கிருத்திகை நான் காம் பாதத்தில் சனியும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருப்பனந்தாள் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசெஞ்சடையப்பரை அன்னை பெரியநாயகி வினவினாள்.
பரமகுரு உரைத்தது- ""பைரவியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் முகுந்தன் எனும் பெயருடன், சத்தியபுரியில் வாழ்ந்துவந்தான். இளம்வயதில் குருகுலத்தில் தங்கிக் கல்வி பயின்று வந்தான். இவனுடைய கல்வி கற்கும் ஆர்வத்தால் மனம் மகிழ்ந்த குருநாதர், இரச வாதம் (செம்பைத் தங்கமாக்குதல்) செய்யும் முறையை அவனுக்கு, ஆபத்துக்காலத்தில் உதவும் அபய மந்திரமாக உபதேசித்தார். தான் கற்றுத்தந்த வித்தையை வேறு எவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்ற சத்தியவாக் கினைப் பெற்றார். சிலகாலம் கழித்து குரு குலக்கல்வி முடிந்து, தன் இல்லம் திரும்பினான்.
பேராசையால், பெரும் செல்வத்தை குவிக்க எண்ணி குருவுக்குச் செய்து கொடுத்த சத்தியத் தைமீறி, மந்திரத்தை வணிகப்படுத்தினான்.
நாளடைவில் இவன் புகழ் காட்டுத்தீயாகப் பரவி, கொள்ளையர்களின் காதுகளை சூடேற்றியது. அவர்கள் பிடியில் சிக்குண்டான். அபய மந்திரம், அபாய மந்திரமானது. முடிவில் அவன் கொல்லப்பட்டான். சிலகாலம் பிரேத ரூபத்தில் அலைந்து திரிந்தவன், காலதேவனின் கட்டளை யால் "கஷாரகர்த்தமம்' எனும் நரகத்தில் தலைகீழாய் விழுந்தான். குரு துரோகத்தின் பலனை அனுபவிக்க பூவுலகம் சென்றான். சித்ர சேனன் என்ற பெயருடன் யமுனாபுரி என்ற ஊரில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தான். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவனா யிருந்தான். ஆனாலும் ஞாபக மறதி நோயால் கல்வியில் பின்தங்கினான். கோடி சூரியன் உதித்தாலும் நீக்கமுடியாத அறியாமையெனும் இருளைப்போக்கும் குருவுக்குக்கொடுத்த வாக்கை மீறியதால் அவதியுறுகிறான்.
* ஏகலைவன்போல குருபக்தியுடன் வாழ்ந் திருந்தால் இந்த நோயின் துன்பம் அவனை அணுகியிருக்காது. இதற்குப் பரிகாரமாக வியாச பௌர்ணமியில் விரதமிருந்து, வியாச பகவானுக்கு ஷோடச உபசாரங்களைச் செய்தபின், தன் குலகுருவுக்குப் பாதபூஜை செய்து நான்கு நமஸ்காரங்களை சமர்ப்பித்தால் மனநோய் நீங்கி சுகம் பெறுவான்.''
* ஏகலைவன்- குரு தட்சணையாக தனது வலதுகைக் கட்டைவிரலையே தந்து, தன் குருபக்தியில் உயர்ந்து நின்றவன்.
(வளரும்)
செல்: 63819 58636
____________
நாடி ரகசியம்
1. பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் குருவும், மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் இருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகர், தொப்புளில் மச்சமுடையவர். உலகப்புகழ் பெறுவார்.
2. பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும், திருவோணம் முதல் பாதத்தில் செவ்வாயும் அமர்ந்தால், ஜாதகருக்கு சுவாசக் கோளாறும், இதய நோயும் இளம்வயதில் உண்டாகும்.
3. பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும், பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும் அமையும் ஜாதகர், பிறர் சொத்துகளை அபகரிப்பதால் சிறை செல்வார்.
கேள்வி: ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது, ஜனன ஜாதகத்திலுள்ள கொடுப்பினை, நடப்பு தசா புக்தி, கோட்சாரப்பலன் போன்றவற்றை எவ்வாறு பொருத்திப் பார்க்க முடியும்?
பதில்: ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் பங்குபெறும் பந்தய வீரரின் திறமையும் வலிமையுமே, ஜனன ஜாதகத்திலுள்ள கொடுப்பினைப் பலன். பந்தயம் நடைபெறும் களம் (மைதானம்) தசாபுக்தியாகும். பந்தயத்தன்று நிலவும் தட்பவெட்ப நிலையே கோட்சாரப் பலன்கள். மழையினால் பந்தயம் ரத்து செய்யப்படுவதைப்போல, கோட்சாரத்தில் உண்டாகும் கோள்களின் கோளாறாலும் பலன்களில் தடையுண்டாகும். ஜாதகத்தில் கொடுப்பினை இருந்தும், அந்த பாக்கியத்தை அடையாமல் போவதற்கு தசாபுக்தியும் காரணமாக அமையும். சிலருக்கு யோகாதிபதியின் தசை நடைபெறாமலே போக வாய்ப்புண்டு. பாக்கியமும் தசாபுக்தியும் சிறப்பாக அமைந்தாலும், நடப்பு தசையின் தசாநாதரும் புக்திநாதரும் கோட்சார கதியில் தற்காலிகப் பகை ஸ்தானங்களில் சஞ்சரித்தாலும் நல்ல பலன் கிடைக்காமல் போகும். இதுபோன்ற முரண்பட்ட ஜாதக அமைப்புடையவர்களுக்கு, அவர்களின் சஞ்சித கர்மாவைக் கண்டறிந்து பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம். வருண ஜெபத்தால், சூல்கொண்ட கார்மேகங்களை ஒன்றுதிரட்டி மழையைப் பொழிவிப்பதுபோல, பரிகாரங்கள் ஜாதகரின் முன்ஜென்ம நல்வினைகளை ஒன்றுசேர்த்து குறித்த காலத்தில் பலன்களைப் பெற்றுத்தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.