நாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்திருந்தனர். அவர் களிடம் என்ன காரியமாக பலன்காண வந்துள்ளீர்கள் என்றேன்.
ஐயா, "எங்கள் இருவருக்கும், திருமணம் முடிந்து, சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் இருவருக்கும் எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், நான் எதைச் சொன்னாலும் அவள் மறுத்து, தடுத்துப் பேசுகின்றாள். வீட்டில் நிம்மதி இல்லை.
இருவருக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்து, ஒரு ஐயரை வைத்து, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை முறையாக செய்துதான் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இருவருக்கும் ஒற்றுமையை குலைக்க செய்துவைத்த, ஏவல், பில்லி, சூனியமா? அல்லது எங்கள் விதியே இதுதானா என்று காரணம் அறிந்துகொள்ளவும், வாழ்வில் ஒற்றுமை, நிம்மதி உண்டாக வும், அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளோம்'' என்றார்.
ஓலையைப் படிக்கத் தொடங்கி னேன். இவர்கள் இடையே கருத்து வேறுபாடும், நிம்மதி குறைவும் இவனால்தான் உண்டாகின்றது. கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை அடிமைபோல், அடக்கிவைக்க நினைத்து செயல்படுகின்றான். கட்டிய மனைவியை மதிப்பது இல்லை. இதுவரை இவன் ஊருக்கு, சாதிக்கு, கோவிலுக்கு, தெய்வத்திற்கு, பிறருக்கு நன்மை செய்கின்றேன் என்று வெட்டி நியாயம் பேசிக்கொண்டு, வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு அலைகின்றானே தவிர, தன் மனைவி, குழந்தை, குடும்ப உயர்வுக்கு எதனையும் செய்யவில்லை.
இந்த பிறவியில், இவன் உழைப்பால், செயலால், இவன் குடும்பத்தை உயர்த்தவும் முடியாது. செல்வ சிறப்பை அடையவும் முடியாது. ஏன்? இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாது, வருங்காலத்தில் இவன் மனைவி தான் இவனையும் காப்பாற்றுவாள் என்பதை புரிந்துகொள்ளச் சொல்.
அதற்கு இவன் வம்சத்தில், முன்னோர்கள் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதி அமைப்பைக் கூறுகின்றேன்.
இவன் வம்சத்தில் நான்கு தலைமுறைகளுக்குமுன்பு, இவன் தந்தையின் பாட்டனார் கால வாழ்வில், அவனின் சகோதரர்களிடையே நிலம், சொத்து, சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, ஒருவொருக்கொருவர் பகைமையுடன் வாழ்ந்தார்கள். அப்போது, அந்த சகோதரர்கள் ஏவல், பில்லி, சூனியம் என மாந்தீரீக செயல்களைச் செய்து, ஏதாவது ஒரு பொருளை இவர்கள் வீட்டின்முன்பு போட்டுவிடுவார்கள். மேலும் சாடையாக ஏதாவது பேசி வம்பு செய்வார்கள்.
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்றதால், இவன் பாட்டி, தன் கணவனிடம், இனி உன் சகோதரர்கள் வசிக்கும் இந்த ஊரில் வாழவேண்டாம். என் பெற்றோர்கள், சகோதரர்கள் வசிக்கும் ஊரில் சென்று வாழலாம் என்று கூறி, தன் கணவனையும், குழந்தைகளையும், அழைத்துக்கொண்டு தன் கணவன் ஊரைவிட்டு, வந்துவிட்டாள்.
அவளின் பெற்றோரும், சகோதரர்களும், தங்கள் ஊரிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொடுத்து, வசிக்கச் செய்து, வாழ்க்கைக்கு உதவியும் செய்து காப்பாற்றினார்கள்.
இவன் பாட்டன், தான் உழைத்து கொண்டுவரும் பணத்தை, இவன் பாட்டியிடம் கொடுத்துவிடுவான். அந்தப் பணத்துடன் தானும் உழைத்து சம்பாதித்த பணத்தையும்கொண்டு, குடும்பத்தை நிர்வாகம் செய்து, கணவனையும், குழந்தைகளையும் காப்பாற்றினாள்.
மேலும் சிறிது, சிறிதாக பணம் சேர்த்து, கொஞ்சம், கொஞ்சமாக நிலபுலன்களை வாங்கி, குடும்ப பொருளாதாரத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தினாள். இன்று இவன் அனுபவிக்கும் பூர்வீக சொத்து, இவன் தந்தையின் பாட்டி, ஒரு பெண் தன் அறிவால், திறமை யால், தன் வம்சவாரிசுகளுக்கு சம்பாதித்து வைத்த சொத்துதான் என்பதை புரிந்துகொள்ளச் சொல்.
வம்ச முன்னோர்களில், தங்கள் குடும்பத்திற்காகவும், தங்களின் வம்ச வாரிசுகளின் நல்வாழ்விற்காகவும், உழைத்து, பூமி, வீடு, நிலம், மனை, நகைகள் என அனைத்தையும் சம்பாதித்து, குடும்ப பெருமையை, பொருளாதாரத்தை உயர்த்திய வம்ச முன்னோர் களையே தமிழ்மக்கள் குடும்ப குலதெய்வமாக வணங்கிவந்தார்கள். இவன் குடும்பத்தில் தந்தைவழி பாட்டியும், அவளுக்கு துணையாக இருந்த பாட்டனும், ஊரைவிட்டு, தங்களிடம் அடைக்கலமாக வந்த இவர்களை காப்பாற்றிய தாய்மாமன்கள் (கருப்பு சாமி, முனீஸ்வரன்) இவனுக்கு காவல் தெய்வங்களாவார்கள். ஒவ்வொருவர் குடும்பத்திலும் பாட்டன், பாட்டி, தாய்மாமன் இவர்களே அவரவர் குலதெய்வம் ஆவார்கள். இன்றும் நமது வம்ச முன்னோர்களே குலதெய்வமாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றார்கள்.
(இன்றையநாளில், வம்ச முன்னோர்களை வணங்காமல் இவன், பெருமாள், இராமன், விநாயகர், முருகன், லட்சுமி, துர்க்கை, பார்வதி என்று ஏதேதோ தெய்வங்களை வணங்கிக்கொண்டு, ஊர், ஊராக, காடு, மலையெல்லாம் அலைந்து, திரிந்துகொண்டு இருக்கின்றார்கள். இந்த தெய்வங்கள் காப்பாற்றுமா? கஷ்டம் தீர்க்குமா?)
இவன் பாட்டன் காலத்திலும் இவன் பாட்டிதான் குடும்பத்தைக் காப்பாற்றினாள். இவன் தகப்பன் காலத்திலும், இவன் தாய்தான் குடும்பத்தைக் காப்பாற்றினாள். இது உண்மையா? பொய்யா? என்று அவனையே கேள்.
இவன் வம்சத்திற்கு இவளின் பாட்டி தந்த வரம் இது. வாழவந்த பெண்ணால்தான் குடும்பம் மேன்மை அடையும். அந்த குடும்பத்தில் பிறந்த ஆண்களால் உயர்வை அடையமுடியாது என்பதை தெரிந்துகொள்ளச் சொல். இவன் வம்ச முன்னோர் களைப்போல், இவள் மனைவி கூறுவதைக்கேட்டு செயல்பட்டு வாழ்ந்தால் தான், குடும்ப குலதெய்வ அருள் கிடைக்கும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடு நீங்கி, குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனைவியின் அறிவு திறமையால், குடும்பம் உயர்வை அடையமுடியும். இது இவன் வம்ச விதி.
இவன் வம்சத்தில் வருங்காலத்தில் வாரிசுகளாகப் பிறக்கும், மகன்கள், பேரன்கள், வாழ்விலும், அவர்கள் தங்கள் மனைவியை மதித்து அவர்கள் பேச்சை மதித்து, குடும்ப நிர்வாகத்தில் பங்கேற்கசெய்து வாழவேண்டும். அப்போதுதான், வாரிசுகளின் வாழ்விலும், உயர்வும், செல்வம், செல்வாக்கு உண்டாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதை விளக்கமாக கூறி அவர்களை அனுப்பிவைத்தேன். பொதுவாக இதுபோன்று, முன்னோர் கள் வாழ்வில் பெண்களால் சொத்து அடைந்தவர்கள் தங்கள் மனைவியை மதித்து, அவர்களை குடும்ப நிர்வாகம் செய்ய அனுமதித்து வாழ்ந்தால், வீட்டில் கணவன்- மனைவியிடையே பிரச்சினை, கருத்து வேறுபாடு என்பது வராது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.
செல்: 99441 13267