செவ்வாய் தோஷம், புனர்பூ தோஷம், தார தோஷம், சர்ப்ப தோஷம் என அச்சுறுத்தும் ஜோதிட இனம், ஏனோ விஷக்கன்யா தோஷத்தை பிரபலப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி ஜோதிட நூல்கள் கூறும் விஷக்கன்யா ஜாதக அமைப்பென்ன? அதற்கான விதிவிலக்கென்ன? அதற்கான பரிகாரம் என்ன என்பதனை தற்போது காண இருக்கிறோம்.
விஷக் கன்னிகை தோஷம் அமைந்த பெண்மணி கணவனை இழப்பவளும், பணம், செல்வத்தை இவள்மூலமாக இழக்கவும் நேரிடுமெனவும், தனது குலத்திற்கே தீங்கு செய்பவள் எனவும் ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. தீய யோக அமைப்பு களை எதற்காக ஜாதகத்தின்மூலம் கண்டறிவது என்றால், அத்தகைய தீய அமைப்பைத் தருகின்ற ஜாதக அமைப்பு ஒருவருடைய ஜாதகத் தில் காணப்பட்டால் அவற்றை உணர்ந்து அவற்றிலிருந்து நாம் முற்றிலும் விடுபடுவதற்கும், அதற் கான பரிகாரங்களைச் செய்து கொள்வதற்காகத்தான் இத்தகைய யோகங்கள் ஜாதகத்தின்மூலமாக கண்டறியப்படுகின்றன என ஜோதிட சாஸ்திர நூல்கள் வலியுறுத்துகின்றன. அதற்கான கோள் அமைப்புகளைக் காணலாம்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் இருக்கும் ராசிக்கு இருபுறமும் பாவகிரகம் இருந்தாலும்- அதாவது லக்னம் மற்றும் சந்திரன் பாபகர்த்தாரி யோகத்தைப் பெற்றாலும் விஷக்கன்யா யோக அமைப்பாகும். லக்னம் மற்றும் சந்திரனுக்கு இருபுறமும் அமரும் பாவ கிரகத்திற்கு சுபகிரகப் பார்வை ஏற்பட்டால் மேற்கண்ட விஷக்கன்யா தீமை யோகம் அமைவதில்லை என உணரவேண்டும்.
பத்ரா திதிகளான துவிதியை, சப்தமி, துவாதசி என்னும் திதிகளுடன் சனி, செவ்வாய், ஞாயிறு என்னும் கிழமைகளும், ஆயில்யம், சதயம், கார்த்திகை என்னும் நட்சத்திரங்களும் வரிசையாக இணைந்து வருகின்ற நாளில் பிறக்கும் பெண்மணி விஷக்கன்யா யோகத்தைப் பெற்றவராவார். அதாவது துவிதியை, சனி, ஆயில்யம் ஒன்றாக வரும் நாளிலும், செவ்வாய், சப்தமி, சதய நட்சத்திரம் ஒன்றாக வரும் நாளிலும், ஞாயிறு, கார்த்திகை, துவாதசி ஒன்றாக வரும் நாளிலும் பிறக்கும் பெண் விஷக்கன்யா யோகத்தைப் பெற்றவராவார். துவாதசியும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வருகின்ற நாளை தத்தயோகமென்று சொல்வார்கள். அவற்றுடன் சதய நட்சத்திரம் சேர்ந்துவரும் நாளில் பிறக்கும் பெண்ணும், சனிக்கிழமை, துவிதியை, ஆயில்ய நட்சத்திரமும் இணைந்து வரும்நாளில் பிறக்கும் பெண்ணும் விஷக்கன்யா யோகத்தைப் பெற்றவராக இருப்பார்.
ஞாயிறு- பரணி, திங்கள்- சித்திரை, செவ்வாய்- உத்திராடம், புதன்- அவிட்டம், வியாழன்- கேட்டை, வெள்ளி- உத்திராடம், சனி- ரேவதி இணைந்து வருகின்ற நாட்களில் பிறக்கின்றவர்களும் விஷக்கன்யா யோகம் பெற்றவர்கள்.
இத்தகைய அமைப்பில் பிறக்கும் ஆண்களுக்கும் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பதில்லை. எனினும் பெண்களுக்கு மட்டுமே இத்தகைய பலன்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுக்கு விதிவிலக்காக ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீடு, அவ்வாறு சந்திரனுக்கு ஏழாம் வீடு ஆகியவற்றின் அதிபதிகள் வலுவாக இருந்தாலும், ஏழாம் வீட்டில் சுபகிரகச் சேர்க்கை, பார்வை ஏற்படுவதும், ஏழாம் வீட்டிற்கு சுபகிரகப் பார்வை, சேர்க்கை ஏற்பட்டாலும், சந்திரன் நின்ற ராசியின் அதிபதி சுபஸ்தானங்களான கேந்திர- திரிகோணங்கள் மற்றும் 11-2 ஆகிய வீடுகளில் அமர்ந்தாலும் விஷக்கன்யா யோகம் வேலைசெய்யாமல் நன்மையான பலன்களை ஏற்படுகின்றது என்பதனை நாம் உணரவேண்டும்.
இத்தகைய விஷக்கன்யா யோகம் ஒரு ஜாதகத்தில் அமைந்ததென்றால் அவற்றின்மூலமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிப்படையாமல் இருப்பதற்காக, அதற்குப் பரிகாரமாக மகளிர் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பதும், அதுபோன்று கும்ப விவாகம் என்று சொல்லக்கூடிய பரிகாரச் சடங்கைச் செய்துகொள்வதும் தீமையிலிருந்து விடுபடுவதற்காக சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உபாயமாகும்.
எனவே ஒரு ஜாதகத்தில் விஷக்கன்யா யோகமென்று கூறி வருந்திக் கொண்டிருக்காமல், அதற்கான பரிகாரத்தைச் செய்துகொண்டால் நல்ல திருமணம் கைகூடி சிறப்பான வாழ்வு அமையும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
செல்: 97913 67954