"காலையில் பூத்தால் மாலையில் வாடிவிடுவோம்' என நினைத்து பூக்கள் பூப்பதில்லை. "இன்று பூத்து மணம் வீசி அனைவரையும் மகிழ்விப்போம்' என்ற நம்பிக்கையில்தான் பூக்கின்றன. மனித வாழ்வும் அப்படிதான். வாழும் இந்த நொடி மட்டுமே நிஜம் என்பதை உணர்ந்தாலும், ஆசைகளும் தேவைகளும் அதிகப்படியாகதான் இருக்கின்றன. ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் சாலையில் திரியும்போது ஆறுதலுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேவாழ்வில் உயர்வும் பெயரும் புகழும் வரும்போது உண்ண நேரமிருக்காது. சுதந்திரமாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூட முடியாது. கைதிக்கு ஸ்பெஷல் அறை கொடுத்தது போலிருக்கும் வாழ்க்கை. நேரத்திற்கு சாப்பிட்டோம், சுகமாக வாழ்ந்தோம் எனக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவையனைத்தையும் அவரவரின் ஜனன ஜாதகமே நிர்ணயிக்கின்றது.

Advertisment

ஜோதிடரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பலமான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே சுகபோகமான வாழ்க்கை அமையும். 12 வீடுகளில் 9 கிரகங்களும் வலுப்பெற்று அமையப்பெறுவது கோடியில் ஒருவருக்குதான் நடக்கும். அப்படி அமைந்துவிட்டால் அவருக்கு தேவர்களுக்கு ஒப்பான வாழ்க்கை அமையும். ஆனால் வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. எப்பொழுது முன்னேறுவோம்- எப்பொழுது வெட்டுப்பட்டு வீழ்வோம் என நமக்கே தெரியாது.

murugan

ஒருவர் எந்த லக்னத்தில் பிறக்கின்றாரோ அந்த லக்ன பாவத்தைக் கொண்டு அவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கமுடியும். அதேபோல், லக்னாதிபதி அமையும் இடத்தைப் பொருத்தும் அவரது குணநலன்கள், தோற்றம், முகப்பொலிவு, உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம், அவரின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறியமுடியும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த லக்னாதிபதி எந்த கிரகச் சேர்க்கைப் பெற்றால் நல்லது என பார்க்கும்போது, அதில் பல நுணுக்கங்கள் உள்ளன.

Advertisment

லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளின் சேர்க்கைப் பெறுவது சிறப்பு. லக்னாதிபதி சேர்க்கைப்பெறும் கிரகங்கள் சுபகிரகம் மட்டுமின்றி, லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவும் இருக்கவேண்டும்.

நவகிரகங்களில் குரு, சுக்கிரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, அசுபர் சேர்க்கைப்பெற்ற புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை பாவகிரகங்கள் ஆகும்.

சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு. அதேபோல சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு. நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவதும், ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமைந்து பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல யோகத்தை உண்டாக்கும்.

Advertisment

லக்னத்தில் சுபர் இருந்தால் சிறப்பென்றாலும், சுபகிரகமான குரு- மேஷம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும், ரிஷபம், துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும் மாறிவிடும்.

எடுத்துக்காட்டாக மேஷம், கடகம், சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குரு லக்னாதிபதிக்கு நட்பு என்பதால் நற்பலனைத் தரும். ரிஷப, துலா லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரனுக்கு குரு பகை என்பதால் அவ்வளவு சிறப்பான பலனைத் தரமாட்டார்.

ஆதலால் லக்னாதிபதியுடன் சேர்க்கைப் பெறும் கிரகம் சுபராக இருப்பது மட்டுமின்றி, லக்னத்திற்கும் சுபராக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு லக்னத்தில் பாவ கிரகம் அமைவது கெடுதியாகும். சனி பாவகிரகம் என்பதால் மேஷம், விருச்சிகம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமைந்தால் கெடுதலை ஏற்படுத்தும். அதுவே கன்னி, துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே சனி அமையும்போது சோம்பல்தனமும், முன்னேற்றத்தடைகளும் ஏற்படும் என்றாலும் நற்பலனைத் தருவார்.

ஒருவரின் ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வை மற்றும் சுபர் தொடர்புடன் இருந்தால் நல்ல குணநலன்கள், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு, உதவிசெய்யும் குணம் போன்றவை இருக்கும். லக்னாதிபதி 6, 8-க்கு அதிபதிகள் சேர்க்கைப் பெற்று, ராகு அல்லது கேது தொடர்பிருந்தால் முன்கோபமும் முரட்டுத்தனமும் காணப்படும்.

லக்னாதிபதி பகைவீட்டில் இருப்பதும், பாவகிரகப் பார்வை, சேர்க்கைப் பெறுவதும் வாழ்க்கையில் போராட்டத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, சூரியன் லக்னாதிபதியாகி சனியின் வீடுகளான மகரம், கும்பத்தில் இருந்தாலும்; சனி லக்னாதிபதியாகி செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் இருந்தாலும், சூரியனின் வீடான சிம்மத்திலிருந்தாலும் வாழ்க்கையில் நற்பலனை அடையத் தடைகள் ஏற்படும்.

ஒருவரின் லக்ன பாவத்தைக் கொண்டு அவரது தோற்றத்தைத் தெளிவாகக் கூறமுடியும்.

லக்னத்தில் லக்னாதிபதியே அமைந்தாலும் அல்லது லக்னத்தில் வேறு கிரகம் அமைந்தாலும் அந்தந்த கிரகத்தின் இயல்புக்கேற்ப அவரின் தோற்றம் இருக்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறமுண்டு.

சூரியன்- சிவப்பு; சந்திரன்- வெள்ளை; செவ்வாய்- சிவப்பு; குரு- மஞ்சள், பொன் நிறம்; சுக்கிரன்- வெள்ளை; சனி- கருப்பு; ராகு- சாம்பல்; கேது- பல வண்ண கொண்டது ஆகும்.

மேஷம், விருச்சிகம், சிம்மம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே சூரியன், செவ்வாய் இருந்தால் நல்ல சிவப்பான நிறம் கொண்டவராக இருப்பார்கள். அதுவே சனி லக்னத்தில் இருந்தால் மாநிறமாக இருப்பார்கள்.

ஜாதகரீதியாக ஒருவரது தோற்றத்தை இவ்வாறு கூறமுடியும் என்றாலும், அவர் இருக்கும் நாட்டைப் பொருத்து நிறங்கள் மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வெள்ளைநிறத்துடன் இருப்பார்கள். அவர்களுக்குப் பலன்கூறும்போது சனி லக்னத்தில் இருந்தால் கருப்பாக இருப்பார்கள் என கூறிவிடமுடியாது. அதற்கு பதில் சனி லக்னத்தில் இருந்தால் முகத்தோற்றம் அவ்வளவு அழகாக இருக்காது என கூறலாம்.

லக்னாதிபதி கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10 அல்லது திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ல் அல்லது தன லாப ஸ்தானமான 11-ல் அமைந்து சுபர் பார்வை, சுபர் சாரம், சுபர் சேர்க்கைப் பெற்று, பகை, நீசம், வக்ரம் பெறாமலிருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம், செல்வாக்குடன் வாழும் யோகம், சுயமாக சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

லக்னாதிபதி 2, 11-க்கு அதிபதிகளின் சேர்க்கைப்பெற்று சுபர் பார்வை, சேர்க்கையுடன் இருந்தால் தாராள தனவரவு, பொருளாதார மேன்மை, வசதி வாய்ப்பு யாவும் சிறப்பாக அமையும்.

லக்னாதிபதி 3-ஆம் அதிபதி சேர்க்கைப்பெற்றிருந்தால் சுயமுயற்சியால் சாதிக்கும் யோகம் உண்டாகும். 4-ஆம் அதிபதி சேர்க்கைப்பெற்று சுபகிரகத்தொடர்போடு இருந்தால் சுகமான வாழ்வு இருக்கும்.

லக்னாதிபதி 5, 9-க்கு அதிபதிகளின் சேர்க்கை அல்லது தொடர்போடு இருந்தால் பெரியோர்கள் ஆசி, பொருளாதார மேன்மை, செல்வம், செல்வாக்கு உண்டாகும். பொதுவாக 5, 9-க்கு அதிபதிகள் லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருக்கும்.

லக்னாதிபதி 7-ஆம் அதிபதி சேர்க்கை அல்லது தொடர்புடன் இருந்தால் திருமணத்திற்குப்பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம், கூட்டாளிகள்மூலம் சிறப்பு, மகிழ்ச்சியான மணவாழ்க்கை உண்டாகும்.

லக்னாதிபதி 6, 8, 12-ல் அமைந்து, பாவகிரகச் சேர்க்கை, சாரம், வக்ரம் பெற்றால் வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும். இத்துடன் ஜென்ம ராசி என வர்ணிக்கப்படும் சந்திரனும் பலவீனமாக இருந்தால் குழப்பவாதியாகவும், எதிலும் சிந்தித்துச் செயல்படும் திறன் இல்லாதவராகவும் இருப்பார். லக்னாதிபதியைவிட 6, 8-க்கு அதிபதிகள் அதிக பலம்பெற்றால் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

ஜோதிடரீதியாக இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, துலா லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன் 6-ல் உச்சம் பெறும்

போதும், தனுசு லக்னத்திற்கு குரு 8-ல் உச்சம் பெறும்போதும் கெடுதலைச் செய்யாமல் நற்பலன்களை ஏற்படுத்தும்.

செல்: 72001 63001