நவகிரகங்களில் சாயா கிரகம், சர்ப்ப கிரகங்களென வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது ஒருவர் வாழ்வில் பல்வேறு வினோத மான பலன்களை ஏற்படுத்துகிறார்கள். ராகு- கேது அருகில் மற்ற கிரகங்கள் இருக்கின்றபொழுது உடனிருக்கக்கூடிய கிரகங்கள் பலவீனமடைகிறது. குறிப்பாக ராகு- கேதுவுடன் சூரியன், சந்திரன் அமைகின்றபொழுது கிரகண தோஷம் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக சூரியன், சந்திரன் இருவரும் ராகு அல்லது கேதுவுடன் இணைக்கின்றபொழுது சூரிய கிரகணமும், ஒரு கிரகம் ராகுவுடனும் ஒரு கிரகம் கேதுவுடனும் இருக்கின்றபொழுது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.
இதுபோன்று ராகு- கேதுவுடன் சூரியன், சந்திரன் அமைந்து கிரகணம் ஏற்படுகின்றபொழுது ஒருவர் பிறந் திருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்வில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. குறிப்பாக சூரியன் ராகுவுடன் இணைந்திருக்கின்ற ஜாதக நேயர்களுக்கு உடல் பலவீனம், அடிக்கடி உடம்பு பாதிப்புகள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்பார்வை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. அதுபோல தந்தைவழி உறவினர்வகையில் தீராத பகை உண்டாகிறது. அடுத்து சூரியன் வீடான சிம்மத்தில் ராகு அமையப்பெற்றிருந்தால் தந்தைவழி உறவினர்வகையில் தீராத பகை உண்டாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் பூர்வபுண்ணிய ஸ்தானமாகும், ஒன்பதாம் பாவம் தந்தை ஸ்தானமாகும். ஜென்ம லக்னத்திற்கு 5, 9-ல் ராகு- கேது அமையப்பெற்றாலும், சூரியன் ராகு- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும் தந்தைவழி உறவி னர் வகையில் தீராத பகை உண்டாகிறது. குரு போன்ற சுபகிரகப் பார்வை இருந்தால் பாதிப்புகள் குறைகிறது.
அடுத்து சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கைபெற்று கிரகண தோஷத்தில் பிறந்திருந்தால் சந்திரனின் தசை, புக்திக் காலத்தில் மனக்குழப்பம், தேவையற்ற உடம்பு பாதிப்புகள், வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தாய்வழி உறவினர்கள்வகையில் ஒற்றுமைக் குறைவு, மனோதைரியம் இல்லாத நிலை, தற்கொலை எண்ணங்கள் உண்டாகிறது. சந்திரன் சர்ப்ப கிரக சேர்க்கை பெற்று ஜென்ம லக்னத்திற்கு 6, 8, 12-ல் அமையப்பெற்றுவிட்டால் சொல்லவே வேண்டாம். கடுமையான குழப்பவாதியாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஒருவர் கிரகண நேரத்தில் பிறந்திருந்து சந்திர தசை நடைபெற் றால் அல்லது சந்திர புக்தி நடைபெற் றால் கடுமையான மனநிலை பாதிப்பு, வாழ்வில் ஒரு பிடிமானமில்லாத நிலை உண்டாகிறது. இதுபோன்ற அமைப்புள்ளவர்களுக்கு தாய்வழி உறவினர் வகையில் பகை, வயது மூத்த பெண்கள்- உதாரணமாக மூத்த சகோதரி அல்லது மாமியார்வகையில் பகை உண்டாகிறது.
கிரகண தோஷம் உண்டானவர்களுக்கு- குறிப்பாக சூரிய தசை, சந்திர தசை நடைபெறுகின்றபொழுது, அதுபோல ராகு- கேது தசை, புக்தி நடைபெறுகின்றபொழுது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவேண்டியநிலை உண்டாகிறது, உழைப்புக்கான பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் முறையான பரிகாரங்கள் செய்வதன்மூலமாக அவர்களுக்குள்ள தோஷங்கள் குறைந்து வாழ்வில் முன்னேற்றம் உண்டாகிறது.
கிரகண தோஷமுள்ளவர்கள் ராகு- கேது தலங்களான காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று சர்ப்ப சாந்தி செய்வது மிகவும் நல்லது. காளஹஸ்தி சென்று கிரகண தோஷத்திற்காக சர்ப்ப சாந்தி செய்துவருவதும், திருநாகேஸ்வரம் சென்று சர்ப்ப சாந்தி செய்துவருவதும், திருநாகேஸ்வரத்தில் பாலாபிஷேகத்தில் கலந்துகொள்வதும், முடிந்தால் ஒருமுறை இராமேஸ்வரம் சென்றுவருவதும் மிகவும் நல்லது.
பொதுவாக சூரியனால் கிரகண தோஷம் உண்டானவர்களுக்கு தந்தையுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதன்மூலமும், புராதான சிவன் தலங்களுக்குச் சென்று அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்வதன்மூலமாகவும் கிரகண தோஷத்துடைய பாதிப்புகள் குறையும்.
அதுபோல சந்திரனால் கிரகண தோஷம் உண்டானவர்கள், சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் தாயின் குல தெய்வத்தை வழிபட்டுவருவது, பெண் தெய்வத்தை வழிபடுவது, புராதான சிவன் தலத்திலுள்ள பார்வதிதேவிக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது கெடுதியைக் குறைத்து நன்மையைத் தரும். கிரகணதோஷம் உள்ளவர்கள் அம்மன் தலங்களுக்குச் சென்று ராகுகால பூஜையில் கலந்துகொள்வது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது மிகவும் நல்லது.