பிறவி எண்- 4
ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பிரம்மாண்ட எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணம் பலிதமாகுமா என்பதை சுய ஜாதகத்தில் ராகு நின்ற நிலையை வைத்தே முடிவுசெய்யவேண்டும்.
பிறப்பு ஜாதகத்தில் ராகு சுய சாரத்தில் நின்றாலும், சாரப் பரிவர்தனை பெற்றாலும் இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு சுபப் பலன்கள் குறைவுபடும். இவர்களின் நிராசையால் பழிவாங்கும் குணம் அதிகரிக்கிறது. சிலர் கிடைப் பதை உண்டு வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத் திற்கு எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள்.
பிறவி எண்- 4, விதி எண்- 1
ராகு மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சூரியனும் ராகுவும் பலம்பெற்றால் அரசியல், ஆன்மிகம், பொறுப்பான நிர்வாகப் பதவிகளில் தனித் திறமை யுடன் ஜொலிக்கிறார் கள். ஆன்மபலம் நிறைந்தவர்கள். வம்சா வளியாக அரசியல் அல்லது அரசு உத்தி யோகம்மூலம் வருமானமுண்டு. தந்தையால் ஆதாயமுண்டு. திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தோல்விபயம் இல்லாதவர்கள். விடாமுயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, மங்காத புகழ், எதையும் சமாளிக்கும் திறன், நல்ல உடற்கட்டு, ஸ்திரபுத்தி, நல்ல கல்வியறிவு, வீடு, வாகன வசதி, சொகுசு வாழ்க்கை, ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை, போகசுகம் உண்டு. தந்தை, தந்தைவழி முன்னோர்களின் ஆதரவு கிடைக்கும். பெயரில் ராகு, சூரியனின் ஆதிக்கம் அதிகமிருந்தால் பிரம்மாண்டமான முன்னேற்றமுண்டு.
சுய ஜாதகத்தில் ராகுவும் சூரியனும் பலம்குறைந்தால் ஆன்மிகம் என்ற போர்வையில் லௌகீக நாட்டத்துடன் வாழ்கிறார்கள். அல்லது மனசாட்சியைக் கழற்றி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு லௌகீக ஆர்வத்தில் துணிந்து சட்டத்திற்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடுகிறார் கள். சிலர் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வதா?
குலமரபை மறந்து லௌகீகம் எனும் மாயையில் ஈடுபடுவதா என்ற குழப்பத்தில் சித்த பிரம்மையுடன் வாழ்கிறார்கள். சிலரால் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடிவதில்லை. வசதிகுறைந்த, வாஸ்துக் குறைபாடு நிறைந்த சொத்து அமையும். இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால், இவர் களுடைய சொத்துகள் உறவுகளால் பராமரிக் கப்படுகிறது அல்லது அபகரிக்கபடுகிறது. ஆரோக்கிய கேடு, கண் பாதிப்பு அதிக மிருக்கும். தந்தையால் பயனிருக்காது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.
பிறவி எண்- 4, விதி எண்- 2
ராகு மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் சந்திரனும் பலம்பெற்றால் முயற்சி, திறமை, முன் னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், லாப முண்டு. நம்பிக்கை, நாணயம் மிகுந்தவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். இவரின் முயற்சி, திட்டமிடுதலுக்கு குடும்ப உறவு கள் பக்கபலமாக இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். வாக்கு வண்மையால் கொடுத்த வாக்கைக் காப்பாற்று பவர்கள். பொருளீட்டுவதிலும், தனம் சேர்ப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில், கமிஷன் அடிப்படையான தொழிலில், உணவுத் தொழிலில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப் பார்கள். இளகிய மனம் படைத்தவர்களாகவும், அண்டை, அயலாருடன் ஒட்டி உறவாடு பவர்களாகவும் இருப்பார்கள். நீர்வளம் மிகுந்த இடத்தில் வீடு, மனை அமையும்.
தாய்வழியில் அதிக உறவினர்கள் இருப் பார்கள்.
பிறந்த ஜாதகத்தில் சந்திரன், ராகு பலமிழந்து நின்றால் அடிக்கடி உடல்நல பாதிப்பிருக்கும். சிறுநீரகக் கோளாறுகள், சளித்தொல்லை, மனச்சோர்வு, மூலவியாதிகள் தோன்றும். உணவுப்பிரியர்கள் என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள்.
அஜீரணம் தொடர்பான உடல் உபாதை கள் எப்பொழுதும் உண்டு. சிலர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் அனுசரணை இருக்காது. மன சஞ்சலம், பய உணர்வு அதிகமாக இருக்கும். இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மிகுதியாக இருக்கும்.
பரிகாரம்
திங்கட்கிழமை காளியம்மனை வழிபடவும்.
பிறவி எண்- 4, விதி எண்- 3
ராகு மற்றும் குருவின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும், குருவும் பலம்பெற்றால் தைரியம், வீரம், பூர்வபுண்ணியம், பாக்கியம் மிகுந்தவர். மதப்பற்றும் சீர்திருத்த நோக்கமும் உண்டு. வாரிசுகளாலும், சுய உழைப்பாலும் அதிர்ஷ்டம் தேடிவரும். ஜாதகர் முயற்சியை மூலதனமாகக்கொண்டு முன்னேறுபவர். தன்னைப்பற்றி உயர்வான சிந்தனையுண்டு. சகல யோகங்களையும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். சுமாரான குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட படிப்படியாக கோடீஸ்வர யோகம் அடைவார்கள். வட்டித்தொழில் அல்லது பணம் அதிகம் புழங்கும் தொழிலில் ஆர்வமுண்டு. நிறைந்த இன்பம், செல்வம், கல்வியறிவு நிரம்பப் பெற்றவர்கள். உறவுகளிடம் மதிப்பு, மரியாதை இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும். பிறரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, உதவிகள் வழங்குவார்கள். தாயார், உற்றார்- உறவினர்களால் போற்றப்படுவார்கள். கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர்கொள்ளும் வல்லமையுள்ளவராக இருப்பர்.
சுய ஜாதகத்தில் ராகுவும், குருவும் பலம்குறைந்தால் அடிக்கடி மதம் மாறுவார்கள் அல்லது மத நம்பிக்கை குறைந்த வர்களாக இருப்பார்கள். குறுக்குவழியில் முன்னேறுவார்கள். யாரையும் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். முயற்சிகள், திட்டமிடுதல் தோல்வி தரும். உறவுகளிடம் பகை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் சிறிய முயற்சிகூட பலிதமாகாமல், அடிப்படைத் தேவைக்குக்கூட போராடும் நிலை இருக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை பதஞ்சலி முனிவரை வழிபடவேண்டும்.
பிறவி எண்- 4, விதி எண்- 4
தனித்த ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். ராகு சுப ஆதிக்கம் பெற்றால் தாத்தா, பாட்ட னாரின் குணம், உருவ அமைப்புடையவர்கள். தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சியுண்டு. சிறிய முயற்சியில் பெரிய நன்மையுண்டு. உழைக்காத வருமானமுண்டு. கடினமாக உழைக்க விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன்மூலம் ஆதாயம் தேடுவார்கள். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். ஆதாயமில்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விஷயமும் வேகமாகவும், தனக்கு சாதகமாகவும் நடக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். திறமையான, திட்டமிட்ட அணுகுமுறையுடைய, பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாகத் திகழ்கிறார்கள். தன் வாழ்வில் நடக்கும் எத்தகைய நிலைகளையும், சம்பவங்களையும் மிகவும் சர்வசாதாரனமாக எதிர்கொள்வார்கள். அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை அதிகமாக இருக்கும். வருமானம் உயர உயர, சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால் பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள்.
ராகு ஜாதகத்தில் அசுபத் தன்மையுடன் இருந்தால் சொத்து விரயம், தூக்கமின்மை ஏற்படும். உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள். செல்வ நிலையும் சீராக இருக்காது. சோம்பேறித்தனம், பயந்தகுணம் போன்ற பலன்கள் ஏற்படும். ஜாதகர் மனோ பலம் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த, நிரந்தர தொழில், உத்தியோகம் அமையாது. சிலர் குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்டபெயர் எடுப்பார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
பிறவி எண்- 4, விதி எண்- 5
ராகு மற்றும் புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் புதனும் பலம்பெற்றால் அழகான தோற்றப் பொலிவு, அன்பு, நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். பள்ளிப் படிப்பில் முதன்மை யான மாணவராகத் திகழ்வார்கள். சுறுசுறுப் பாக புதிய தொழில் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்துமுடிக்கும் மனப் பான்மை உள்ளவர்கள். செய்யும் தொழில் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டே இருப்பவர்கள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதிமந்திரியாகத் திகழ்வார்கள். சுயமுயற்சி யால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகளைத் தேடித்தேடி உருவாக்குவார்கள். தளராத முயற்சியுடைய வர்கள். எதிர்காலத்தில் நடக்கப்போவதை வரும்முன் அறியும் தீர்க்கதரிசிகள். திட்டமிடுதலில் ராஜதந்திரி. இவர்களின் ஆலோசனைக்காக இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். இவர்களின் வளர்ச்சியில் தாய்மாமன் மதிமந்திரியாக இருப்பார்.
சுய ஜாதகத்தில் ராகுவும் புதனும் பலம்குறைந்தால், தலைகீழே நின்றா லும் படிப்பு வராது. குறிப்பாக கணிதம் இவர்களின் காலை வாரும். பள்ளிக்குச் செல்லாமல் அனுபவப் பாடத்தில், மனக் கணக்கில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். காதல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெறுவார்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். இவர்கள் வாங்கும் சொத்தில் எல்லைத் தகராறு இருக்கும். முறையான பட்டா இருக்காது அல்லது காலம் தாழ்ந்து கிடைக்கும்.
ஜாமின், காசோலை வழக்குண்டு. தாய் மாமன் சகுனியாக இருப்பார்.
பரிகாரம்
புதன்கிழமை மதுரை மீனாட்சியை வழிபடவேண்டும்.
பிறவி எண்- 4, விதி எண்- 6
ராகு மற்றும் சுக்கிரனின் அதிர்வலைகள் கலந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் பலம்பெற்றால் வாழ்க்கை வாழ்வதற்கே- வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசிபெற்றவர்கள். காதல், காமம் என வாலிப வயதைக் கடப்பார்கள். பலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். தம்பதிகள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்வார்கள். திருமணத்திற்குப்பிறகு வெற்றி வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் தேடிவரும். வெற்றிக்குப்பின் வாழ்க்கைத் துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும்.
சுய ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் பலமிழந்தால் காதல், காமத்தில் பருவவயதில் வாழ்க்கையைத் தொலைப்பார்கள். ஐம்பதில் மட்டுமல்ல; எண்பதிலும் காதல், காமம் என தரம்கெட்டு வாழ்வார்கள். இத்தகையவர்கள் தன் செயலுக்குத் தாமே பொறுப்பேற்று வருந்தி திருந்தவேண்டும். சுயக் கட்டுப்பாடில்லாமல் வாழ்பவர்களுக்குப் பரிகாரம் சொல்லக் கூடாது.
பிறவி எண்- 4, விதி எண்- 7
ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். ராகுவும் கேதுவும் எதிரெதிர் துருவங்கள். ராகு லௌகீகம், கேது ஆன்மிகம். வாழ்க்கை போராட்டம், அதிருப்தி மற்றும் துக்கம் நிறைந்ததாக இருக்கும். இவர்களுக்கு பூர்வபுண்ணியத்தில் தடையுள்ளது என அர்த்தம். ஜாதகர் முன்விளைவுகள் சார்ந்த, அனுவிக்கவேண்டிய வினைப்பதிவு மிகுதியாக உள்ளது என பொருள். பூர்வீக சொத்து கிடைப்பது கடினம். குழந்தைகள் பற்றிய கவலை, அவர்களின் எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகமிருக்கும். பிறருக்காகத் தியாகம் செய்தே வாழவேண்டிய நிலையிருக்கும். அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கும் நிலையும், ஒரு கௌரவத்திற்காக வாழவேண்டிய நிலையும் இருக்கும். இத்தகைய இணைவு ஒரு நபரை செம்மைப்படுத்துவதோடு விலைமதிப்பற்ற அனுபவங்களையும் தரும்.
பரிகாரம்
குலதெய்வ அருள், ஆன்மிக சிந்தனை, நிதானம், சகிப்புத் தன்மை, பொறுமையின்மூலம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கமுடியும்.
பிறவி எண்- 4, விதி எண்- 8
ராகு மற்றும் சனியின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் சனியும் பலம்பெற்றால் பிறக்கும்போது சாதாரண மனிதராக இருப்பார். வாழ்நாள் முடிவில் சாதனை மனிதராக சரித்திரத்தில் இடம்பிடிப்பவர்கள். சமூதாயத்தால் மதிக்கக்கூடிய நபராக இருப்பார்கள். தொழிலில் இமாலய வளர்ச்சி இருக்கும். ஏதாவது ஒரு துறையில் பிரபலமடைவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை, குழந்தைகளால் பெருமையடைவார்கள். பூர்வீகச் சொத்துகளால் ஆதாயமுண்டு. முன்னோர்களின் சாஸ்திர சம்பிரதாயத்தை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடுள்ளவராக இருப்பர். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். சிற்றப்பா, மூத்த சகோதர ஆதாயமுண்டு.
சுய ஜாதகத்தில் சனி, ராகு பலம்குறைந்த வர்கள் முதலீடில்லாத தொழில் செய்வது சிறப்பு. தொழில் தொடர்பான ஏக்கம் இருக்கும். ஆனால் தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்காது. எதிரிகள் தொல்லையால், கடன்களால் வாழ்க்கை வலி, வேதனை நிறைந்த தாக இருக்கும். பூர்வீகத்தில் வாழமுடியாது. பூர்வீக சொத்து கைநழுவிச் செல்லும். போட்டி, பொறாமைகள் அதிகமிருக்கும். மூத்த சகோதரவழி, பங்காளிகளின்வழிகளில் பிரச்சினைகளைக் கொடுத்து அதை சமாளிக்கவும் வைக்கும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை அதிகப்படுத்தி உடலில் தளர்சியையும், ஒருசிலருக்கு அறுவை சிகிச்சையையும் தந்து, "நித்திய கண்டம், பூரண ஆயுள்' என மன இறுக்கத்தை அதிகமாக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை ராகு வேளையில் பத்ரகாளியை வழிபடவும்.
பிறவி எண்- 4, விதி எண்- 9
ராகு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் பலம்பெற்றால் வாழ்நாள் முழுவதும் சொந்த வீட்டிலேயே இருப்பார்கள். சொத்துகள் குவிந்துகொண்டே இருக்கும். சொத்துகள்மூலம் நிரந்தர வருமானமுண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறப் பவர்களுக்கு இந்த அமைப்பிருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத் துடனும், தன்நம்பிக்கையுடனும் இருக்கும்.
சுய ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் பலம்குறைந்தால் பல தலைமுறையாக முன்னேற்றமின்மை, சொந்த பூமியை பல தலைமுறையாகப் பயன்படுத்தவும், விற்கவும் முடியாமை, வாங்கிய நிலத்தில் வீடுகட்ட முடியாமை, வீடு கட்டும்பொழுது தொடர் அசம்பாவிதம், பாதிகட்டிய நிலையில் வீட்டுவேலை நின்றுவிடுவது, பேய், பிசாசு, பில்லி, சூன்யம் இருப்பதுபோன்ற உணர்வு, வீட்டில் யாரோ இருப்பது போன்ற உணர்வு, நீங்காத நோய், தலைமுறையாகத் தொடர்நோயால் அவதி, வாஸ்துக் குற்றமுள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இன்மை, கட்டிய வீடு தலைமுறையாக அடமானத்திலேயே இருப்பதுபோன்ற குறைபாடுகள் இருக்கும்.
மேலும் ஆண்களுக்கு உடன்பிறந்தவர் களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் கிரக எண்களின் சேர்க்கை. பல பெண்களுக்கு திருமணத்தை நடத் துவதில் சிரமத்தைத் தரும். திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத் தும். கணவரை கௌரவப்படுத்தி சமுதாயத்தில் வலம்வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். கணவனை பாம்பென்று தாண்டவும் முடியாமல் பழுதென்று மிதிக்கவும் முடியாமல் வாழவைக்கிறது.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் காலபைரவரை வழிபடவும்.
(தொடரும்)
செல்: 98652 20406