சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

Advertisment

சுமார் 46 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரும்படிக் கூறினேன். அவர் "நமச்சிவாயம்' எனக் கூறியபடியே அமர்ந்தார். காவி வேட்டி, அதே நிறத்தில் சட்டை, துண்டு, நெற்றியில் திருநூறுபூசி, கழுத்தில் ஒரேயொரு ருத்திராட்சக் கொட்டையைக் கட்டியிருந்தார். இவர் மிகமிக தீவிரமான சிவபக்தர் போலும் என்று நினைத்துக்கொண்டே, "என்ன விஷயமாக பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.

""ஐயா எனக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னோர் தேடி வைத்த ஒரு வீடும், கொஞ்சம் நிலமும் உள்ளது. அதில் வரும் கொஞ்சம் வருமானத்தில் கஷ்ட ஜீவனம் செய்து வாழ்கின்றோம். இந்த வயதுவரை சுயமாக நான் ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை என்பதே உண்மை.

Advertisment

உங்களைப் பார்த்தால் சிவ தீட்சைப் பெற்று, ருத்திராட்சம் கட்டி, தினமும் முறைப்படி சிவபூஜை செய்துவருபவர்போல் தோன்றுகின்றது. உங்கள் பூஜையும், கூறும் மந்திரமும், வணங்கும் சிவனும்கூட உங்கள் கஷ்டத்தை தீர்க்கவில்லையா? என்றேன்.

சிவனை வணங்கியும், வாழ்வில் சிரமம் தீரவில்லை. பிழைப்பிற்கு ஒரு வழியும் காட்டவில்லை. எந்த வருமானமுமின்றி எதிர்காலவாழ்க்கை இருளாகத் தெரிகின்றது. அதனால்தான், என் வருங்கால வாழ்க்கை வருமானத்திற்கு வழிகேட்டு, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர். எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

சிவனால் தீர்க்கமுடியாத, இவன் வாழ்க்கை சிரமங்களை, அகத்திய சித்தன் தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையில், தனது முற்பிறவி பாவ- சாபம் தோஷம், கர்மவினை, விதிபற்றிக் கேள்வி கேட்காமல், இப்பிறவி வாழ்க்கை நல்லபடியாக அமைய என்ன செய்யவேண்டும்? என்று வழிகேட்டு வந்துள்ளான்.

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், இப்பிறவி வாழ்வில் என்ன? தொழில், வியாபாரமும், உத்தியோகம் செய்து பிழைக்கவேண்டும் என்று அவரர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுத்தான் பிறக்கின்றார்கள். பிறந்த பிறகு யாருக்கும் ஜீவனத்திற்கு தொழில் தீர்மானித்து அமைவது இல்லை என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும். இவன் என்னவிதமான தொழிலை எப்படி செய்து வாழவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதைக் கூறுகின்றேன். அதனை நடைமுறை வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து, வருங்கால வாழ்வை வளமானதாக அமைத்துக்கொள்ளச் சொல்.

இந்த பிறவியில், இவன் தன் சொந்தப் பணத்தையோ அல்லது கடன் வாங்கி பண முதலீடுசெய்து தொழில், வியாபாரம் செய்தால், அது விருத்தியடையாது. அந்தத் தொழில் நட்டம் உண்டாகும். தொழில் அழியும். பண முதலீடு இல்லாமல் தன் உழைப்பு, அறிவைகொண்டு, தொழில், வியாபாரம் செய்தால், அந்தத் தொழிலில் விருத்தியும் நல்ல வருமானமும் கொண்டு வாழ்வான்.

இந்த மகன், தன் உடை, தோற்றம் இவைகள்மூலம், தன்னை ஒரு சிவனடியார், சிவபக்தன்போல் காட்டிக்கொள்கின்றான். பக்தனாக இருப்பவனுக்கு பரமன் எந்த நன்மையும் செய்யமாட்டான். தன்னை எவ்வழியிலாவது பயன்படுத்திக்கொண்டு வாழ்பவனுக்கே பரமனின் அருட்கடாட்சம் தருவேன். இனிவரும் காலத்தில் தன்னை ஒரு சிவத்தொண்டனாக அடையாளப்படுத்திக்கொண்டு வாழச்சொல். தன் பெருக்கு முன்னால், "சிவத்தொண்டன்' என்ற அடைமொழியை சேர்த்து, எல்லாரும் கூப்பிடும்படி செய்து கொள்ளச்சொல்.

கலியுகத்தில், கடவுளை உருவாக்கியவர்கள், தங்களின் கை முதலீடு பணம் போடாமல், பலவிதமான முறைகளில், கடவுளை முன்னிறுத்தி, மூலதனமாக வைத்து, செயல்பட்டு பணம் சம்பாதித்து பிழைப்பார்கள். கலியுகத்தில், ஆன்மிகமும், அரசாட்சியும்தான் முதலீடு இல்லாமல் தொடங்கி பணம் சம்பாதிக்கும் தொழில்களாகும். இவன் ஆன்மிக சம்பந்தமாக செய்யவேண்டிய தொழிலைக் கூறுகின்றேன்.

இவன் வசிக்கும் ஊருக்கு அருகில், அரசர்கள் கால, புராதனமான சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஓரளவு மக்கள் வருவது உண்டு. ஆனால் அந்தக் கோவில் நிர்வாகம், எதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக செயல்படுவது இல்லை. சிவனைப் போன்ற பக்தர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு, அந்தக் கோவிலில் சில விழாக்களைச் செய்யச் சொல்.

அந்தக் கோவிலில், திதி, நட்சத்திரம், பிரதோஷம், கிரகப் பெயர்ச்சி, பௌர்ணமி போன்ற நாட்களில், விசேஷ பூஜைகள், திருவீதி உலா, விளக்கு பூஜை போன்ற இன்னும் பலவிதமான வழிபாடுகளை செய்வதாக கூறி, மக்களிடம் பணம் வசூலித்து செய்யச் சொல். இவனை நம்பி எல்லாரும் பணம் தருவார்கள். தெய்வ காரியமும் நடக்கும். அந்தக் கோவிலும் பிரசித்தம் அடையும். இவனுக்கு வருமானமும், பெருமையும் சேரும். வறுமையும் தீரும். தெய்வத்தை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிப்பதே தெய்வ வசியமாகும் என்று பிழைக்க வழி கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

ஓலையில் அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், கடவுள் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பது பாவமல்லவா? என்றார்.

அகத்தியரிடம், பிழைப்பதற்கு வழி கேட்டீர்கள், அவரும் வழி கூறிவிட்டார். அதனை செய்வதும், செய்யாததும் உங்கள் விருப்பம். அகத்தியர் இந்த உலகில் நடைமுறையில் இல்லாததைக் கூறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

கலியுகத்தில், அவரவர் விருப்பப்படி பல கடவுள்களை உருவாக்கி, அதனை மூலதனமாக வைத்து, மடம், பீடம் வைத்தும், சிலர் கடவுளைப்பற்றி கதைகள், பாடல்கள் கூறி பிரசங்கம் செய்தும், இன்னும் சிலர் ஹோமம், யாகம், பூஜை, வழிபாடு என்றும், சிலர் ஆடல், பாடல், நாட்டியம் போன்ற கலைகள்மூலமும், இன்னும் சிலர் கடவுள் போன்று வேடமனிந்து, பணம் சம்பாதித்து வாழ்கின்றார்கள். கடவுளைக் காப்பாற்றுகின்றேன் என்று கூறி அரசியலில் பணம், பதவியை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களுக்கு வராத பாவம் உங்களுக்கும் வராது.

பாமர மக்கள் கோவில்களில் சென்று, பணம் செலவழித்து தங்கள். வாழ்வின் பிரச்சினைகள், தடைகள், வறுமைகள் தீர வழிபாடு செய்கின்றார்கள். ஆனால், ஆன்மிக குருமார்களும், கடவுள் பெயரை சொல்லி பிழைக்கின்றவர்களும், மக்களிடம் பணம் கேட்டு வாங்கிக்கொள்கின்றார்கள் என்றேன்.

அகத்தியர் கூறியபடியே, சிவத்தொண்டு புரிந்து, செயல்பட்டு எங்கள் ஊர் சிவன் கோவிலை பிரசித்தமான கோவிலாகச் செய்வேன் என்று கூறி விடைபெற்று சென்றார்.

செல்: 99441 13267