ஒரு பெரியவர், தன் மனைவியுடனும், 36 வயதுடைய தன் மகனுடன், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
அவர்களை அமரவைத்து, "என்ன? காரணமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
"ஐயா, எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உண்டு. இவன் பெரிய மகன். இவனது 28 வயதில் இருந்து, திருமணம் செய்துவைக்க முயற்சித்து, பெண் தேடிவருகின்றோம். ஆனால் பெண்தான் அமையவில்லை. ஜோதிடம் பார்த்து, ஜோதிடர்கள் கூறிய அனைத்துப் பரிகாரங்களையும், கிரக சாந்திகளையும், அவர்கள் கூறிய அனைத்து கோவில்களிலும், கூறிய முறைப்படி செய்தபின்பும், எந்த பலனும் இல்லை. இவன் திருமணத்தடைக்கு சரியான காரணமும் தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர், தங்களிடம் ஜீவநாடியில் பலன் கேட்டால், தடைக்கு காரணம் தெரியும் என்று கூறி, உங்களைப் பார்க்கச் சொன்னார், அதனால்தான் உங்களை நாடிவந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இந்த மகனின் திருமணத்தடைக்கு, இவனைப் பெற்ற தாய், தன் குடும்பத்தில் வாழவந்த மருமகளுக்கும், அவளுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கும் செய்த பாவமும், அதனால் உண்டான சாபமும்தான் காரணம். பெற்றவர்கள் செய்த பாவம், இப்போது பிள்ளையின் வாழ்வை, கெடுத்து, தடுத்து நிற்கின்றது.
அந்த தாய், "நான் செய்த பாவம், என்னைத்தானே பாதிக்கவேண்டும். என் மகனின் திருமணத்தைத் தடுக்கின்றது என்று அகத்தியர் கூறுகின்றாரே, நான் என்ன பாவம் செய்தேன்'' என்றார்.
இந்த தாயின் முற்பிறவியில், இதேபோன்று, தன்மூத்த மகனுக்கு வசதி இல்லாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துவைத்தார்கள்.
அந்தப் பெண்ணிற்கு தந்தை இல்லை, தாய் மட்டும்தான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், இவர்கள் எதிர்பார்த்த சீர்வரிசை தரமுடியவில்லை.
மகன் திருமணம் முடிந்த நாள்முதல், தன் மருமகள் தான் எதிர்பார்த்த அளவு சீர்வரிசையும், வரதட்சணையாக பணம் ஏதும் தரவில்லை என்று தினமும், அவள் குடும்ப ஏழ்மை நிலையைக் குறிப்பிட்டும், கேவலமாக, கீழ்த்தரமாக பேசியும், ஒரு வேலைக்காரியைப்போல் நடத்தினாள். இவள் மகனும் தன் மனைவிக்கு ஆதரவாக, தாயிடம் ஏதும் பரிந்து பேசவில்லை.
மருமகள் கர்ப்பம் தரித்தாள், எளிமையான முறையில் சடங்கு, சம்பிரதாயங்களை முடித்து, பிரசவத்திற்காக, அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அவளுக்கு பிரசவமாகி பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பெறாமல், மருமகள் பெண் குழந்தை பெற்றதை அறிந்து, இந்த தாய் இன்னும் அதிகமான வெறுப்பும், கோபமும் அடைந்தாள்.
மனைவியையும், குழந்தையையும், சென்று பார்க்கக்கூடாது என்று மகனையும் தடுத்துவிட்டாள். மருமகளை வீட்டிற்கு அழைத்துவரக்கூடாது, அவள் பிறந்த வீட்டிலேயே, அவள் தாயுடன் இருக்கட்டும் என்று கூறிவிட்டாள். தாயின் பேச்சை தட்டமுடியாமல், மகனும், தன் மனைவியையும், குழந்தையையும் சென்று பார்க்கவில்லை; தன் வீட்டிற்கு அழைத்துவரவில்லை. முற்பிறவியில் தன் மகனுடன் சேராமல் மருமகளையும், அவள் பெற்ற பிள்ளையையும் பிரித்து வைத்த பாவத்தைச் செய்தவள், அதன்பிறகு இவள் மகன் வேறு திருமணம் செய்துகொள்ளாமல், மனைவி, குழந்தையைப் பற்றிக் கவலைப்படாமல், பல பெண்களிடம் நட்பு உறவுகொண்டு, தன் மனம்போன போக்கில் வாழ்ந்து, தாயின் வாக்கை மீறமுடியாமல், தன் மனைவி, குழந்தையை பார்க்காமல், சேர்ந்துவாழாமல் இறந்தான்.
இவளின் மருமகள், தன் குழந்தையுடன், தன் தாய் வீட்டிலேயே தங்கி விட்டாள். தாயும், மகளும் தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து, வருமானம் தேடி, குழந்தையையும் வளர்த்து, பிழைத்து வந்தார்கள். தன்மகளைப் படிக்க வைத்தாள். அவளும் படித்து, ஒரு சிறிய வேலையைத் தேடிக்கொண்டாள். பெரியவளானதும், தன்னைப் போன்றே, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, தன் உறவுப் பையனுக்கு திருமணம் செய்துவைத்தாள்.
இந்தப் பாவி மகள், தன் முற்பிறவியில், தன் மருமகளை வாழவிடாமல், வீட்டைவிட்டு வெளியேற்றினாள். ஒரு மருமகளுக்கு செய்யவேண்டிய கடமையைச் செய்யவில்லை. இவள் பேச்சைக்கேட்டு, இவள் மகனும், தன்னை நம்பி வாழவந்த தன் மனைவிக்கு ஒரு கணவன் செய்யவேண்டிய பொறுப்பு, கடமைகளைச் செய்யாமல், தான் பெற்ற பிள்ளைக்கு ஒரு தந்தையாகவும் இருந்து ஏதும் செய்யவில்லை. அவர்களை பசியும், பட்டினியுமாய் அலையவைத்தான். இவளின் மருமகளைப் பெற்ற தாய், தன் மகளையும், பேத்தியையும் பார்க்கும்போது எல்லாம், இவள்மேல் உள்ள கோபத்தில், இவள்மீது வாக்கு, சாபத்தை வாரி இறைத்தாள். பெண்ணைப் பெற்றவள் விட்ட சாபம் பெரு மலையாக வளர்ந்து, இவள் மகனுக்கு திருமணத்தடையையும், இவள் வீட்டிற்கு ஒரு மருமகள் வர தடையை தருகின்றது. இவளும் ஒரு பெண்ணாக இருந்து, பெண் குலத்தையே அலட்சியப்படுத்தியதால், இப்பிறவியில், இவள் மகன் ஒரு கன்னியை கரம்பற்றி, திருமணம்செய்ய அளவுகடந்த கால தாமதத்தைத் தருகின்றது. முற்பிறவியில், மருமகளை வெறுத்து ஒதுக்கியதால், இந்த பிறவியில், மகனுக்கு மாங்கல்ய தோஷமாகி தடுக்கின்றது.
எங்கள் மகனின் திருமணத்தடைக்கு, முற்பிறவியில், என் மனைவி அவளின் மருமகளுக்கும், பேத்திக்கும் செய்த பாவமும், குடும்பத்தில் வாழவந்தப் பெண்ணை வதைசெய்து, கொடுமைப்படுத்திய பாவம், பெண்ணாகப் பிறந்து, பெண் குலத்திற்கே துரோகியாக செயல்பட்டாள் என்பதை அகத்தியர்மூலம் அறிந்தோம். இந்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று அவர்தான் கூறவேண்டும்.
அகத்தியன் யான், கிரகங்களைக் கூறி, கோவிலில் கடவுள், கிரகங்களுக்கு பரிகாரம் கூறும் ஜோதிடன் அல்ல. இவற்றுக்குச் செய்யும் பரிகார பூஜைகள் முற்பிறவி பாவ- சாபத்தை தீர்க்காது, எந்தப் பலனையும் தராது. இதுவரை செய்த பரிகாரங்களால் என்ன நன்மையை அடைந்தான். அறிவிருந்தால், அனுபவத்தில் புரிந்துகொள்ளட்டும்.
இந்தப் பெண் சாபத்திற்கு, இவர்கள் பிரச்சினை தீர்ந்து, மகன் திருமணம் நடைபெற பாவ- சாப நிவர்த்தி செய்யவேண்டும். ஆனால், இந்த சாப நிவர்த்தியை இவர்கள் செய்ய சம்மதிப்பார்களா?
அகத்தியர், என்ன செய்யவேண்டும் என்று கூறுகின்றாரோ, அதைத் தடையில்லாமல் செய்கின்றோம்.
என் மகனுக்கு திருமணம் நடந்தால்போதும்.
முற்பிறவியில், இவள் மருமகளையும், பேத்தியையும், அந்தப் பெற்றதாய், உண்ண உணவு, உடை இருப்பிடம் தந்து காப்பாற்றினாள். அதற்கு நிவர்த்தியாக இந்த பிறவியில், மகனின் திருமணம் முடிந்தபிறகு, இந்த மகன் தன் தாய், தந்தை இவர்களைப் பிரிந்து, தன் மனைவி, மாமியாருடன்தான் வசிக்கவேண்டும்.
மாமியாரை ஒரு மகன்போல் இருந்து காப்பாற்றவேண்டும் என்று கூறிவிட்டு, இவளுக்கு மனைவியாக வரப்போகின்றவளைப் பற்றிய விவரங்களைக் கூறினார்.
மூத்த மகன் திருமணம் முடிந்து, தன் மாமியார் வீடு சென்று, அவர்களைக் காப்பாற்றினால்தான் இவர்களின் இரண்டாவது மகனுக்கு திருமணம் நடக்கும்.
அகத்தியன் கூறியதை ஏற்றுகொண்டு செயல்படுவதும், செயல்படாததும் இவர்கள் விருப்பம் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
கணவன்- மனைவி இருவரும் அகத்தியர் கூறியபடியே நிவர்த்திசெய்து, எங்கள் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்துவைக்கின்றோம் என்று கூறி அகத்தியரை வணங்கிவிட்டு சென்றார்கள்.
செல்: 99441 13267