கணவன்- மனைவி இருவர் நாடியில் பலன்கேட்க வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.
அவர், "எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. குழந்தை பாக்கியமில்லை. எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா? புத்திரத் தடைக்கு காரணம் என்ன? தடையிருந்தால், தடை நீங்கி, ஒரு குழந்தையை அடைய வழிகேட்டு, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
இந்த மகன், தனக்கு ஒரு குழந்தை இல்லையென்று பொய் சொல்கின்றான். இவனுக்குப் பிறந்த ஒரு மகன் இருக்கின்றான் என்றார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட, கணவன்- மனைவி இருவரும் திகைத்துப் போய், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ஓலையில் கூறுவது சரியாக இல்லையே, எங்களுக்கு குழந்தையேயில்லையே என்றார் அவர்.
அகத்தியன் யான் இவனுக்குத்தான் ஒரு மகன் இருக்கின்றான் என்றுதான் கூறினேனே தவிர, இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கின்றான் என்று கூறவில்லையே என்றவர், இவனுக்கு ஒரு மகன் பிறந்து, வளர்ந்துவருவதை விளக்கமாகக் கூறுகின்றேன். அப்போது இவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று கூறிவிட்டு, மேலும் பலன்களைக் கூறத் தொடங்கினார்.
இந்த மகளைத் திருமணம் செய்வதற்குமுன்பு இவன் ஒரு பெண்ணை விரும்பி, அவளையே திருமணம் செய்துகொள்கின்றேன் என்று சத்தியம்செய்து, நம்பவைத்து, அவளுடன் நெருக்கமாகப் பழகிவந்தான். இவர்கள் உறவில் அவள் இரண்டுமுறை கர்ப்பமானாள்.
அவளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று கர்ப்பத்தைக் கலைத்தான். மறுபடியும் உண்டான உறவுகளில் மூன்றா வது முறையாகக் கர்ப்பம் தரித்தாள். ஆனால் அந்தக் கர்ப்பத்தைக் கலைக்கமுடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அந்தப் பெண், தன்னை மணந்துகொள்ளும்படி இவனை எவ்வளவோ வற்புறுத்தினாள். இவன் ஏதேதோ, காரணங்களைக்கூறி சமாளித்துவந்தான். அவள் வயிற்றில், இவன் குழந்தை வளர்ந்தது. இவள் கர்ப்பம் அடைந்தது ஊர்மக்களுக்குத் தெரிந்தால், அவமானமாகப் பேசுவார்கள் என்று எண்ணி, அவளின் தாய், இவளை அழைத்துக்கொண்டு தான் பிறந்த ஊருக்கு பிறந்த வீட்டிற்கு அழைத்துச்சென்று அங்கேயே வசித்தாள்.
அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந் தது. குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் அந்த மகளும் இறந்துவிட்டாள். இப்போது அந்தக் குழந்தையை, தன் பேரனை, அவள் தாய்தான் வளர்த்துவருகின்றாள். இவனையே நம்பி வாழ்ந்து, இவன் தந்த கருவையும் தன் வயிற்றில் சுமந்தவள், இவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்பது தெரிந்து, தன் வேதனைகளையெல்லாம் நினைத்து, மனம் நொந்து ஒரு சாபமிட்டு இறந்தாள்.
அவனை முழுமையமாக நம்பிய எனக்கு துரோகம் செய்து ஏமாற்றியது மட்டுமல்லாமல், தன்னால் உருவான குழந்தையையும், அனாதையைபோல் தவிக்கவிட்ட அவன், தன் வாழ்வில் எந்தப் பெண்ணை மணந்தாலும், அவளுக்கு கர்ப்பப்பை நோய் உண்டாகி, ஒரு குழந்தையைப் பெறமுடியாமல் போகட்டும். இவன் வம்சம் விளங்க ஒரு வாரிசை அடையமுடியாமல் மனம் நொந்து வாழட்டும் என்று சாபமிட்டு இறந்தாள். அவளின் சாபத்தால், இவன் மனைவி யின் கர்ப்பப்பை வளர்ச்சிக் குறைந்து ஒரு கர்ப்பம் உருவாக முடியாத நிலையில் பலமின்றி உள்ளது.
அகத்தியர் கூறியதைக் கேட்டீர்களா? அவை உண்மையா? மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருந்தால் அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை மறைக்காமல் கூறுங்கள் என்றேன்.
கணவன்- மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அவன் தான் காதலித்தது, அவள் கர்ப்பம் அடைந்தது, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்துபோனது, அவளுக்கு நான் துரோகம் செய்தது அனைத்தும் உண்மைதான் என்றான்.
மருத்துவர்களும் என் மனைவியின் கர்ப்பப்பை வளர்ச்சிக் குறைந்துள்ளது என்றுதான் கூறினார்கள். அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மைதான் என்றான்.
"என் கணவர் அந்தப் பெண்ணிற்கு, செய்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று அகத்தியர் கூறுகின்றாரோ, அதைச் செய்து விடுகின்றோம். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க அகத்தியர்தான் வழிகாட்டவேண்டும்'' என்றார்.
ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். பாதிக்கப்பட்ட பெண் விட்ட சாபம்தீர, கணவன்- மனைவி இருவரும் சேர்ந்துதான் பரிகார நிவர்த்தி செய்யவேண்டும். வழியைக் கூறுகின்றேன். விருப்பம் இருந்தால், முடிந்தால் செய்துகொள்ளட்டும். இவன் காதலிக் குப் பிறந்த இவன் மகனை, இவர்கள் இருவரும் அழைத்துவந்து, ஊர்மக்களும், உறவினர்களும் அறிய, அவனை இவர்கள் மகனாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவளுக்கு உண்டான அவப்பெயரை முதலில் நீக்க வேண்டும். எந்தவிதமான பாரபட்சமுமின்றி, தங்கள் சொந்த மகனைப்போல், அன்புகாட்டி வளர்த்து வர வேண்டும். அந்த மகன்மீது இவர்களுக்கு பாசம் அதிக மாக, அதிகமாக, இவள் கர்ப்பப்பை வளர்ச்சியடைந்து, பலம்பெறும். அவன்மீது பாசத்தில் குறையிருந்தால், எவ்வளவு பணம் செலவுசெய்து, மருத்துவம் பார்த்தா லும், மருந்து சாப்பிட்டாலும், கர்ப்பப்பை பலம் அடையாது.
கர்ப்பம் தரித்து ஒரு குழந்தையைப் பெறமாட்டாள்.
பெற்ற மகனாக நினைத்து அவனை இவள் வளர்த்தால், இறந்துபோனவள் விட்ட சாபம் வரமாக மாறி, இவள் கர்ப்பம் தரித்து, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரு தாயாவாள். இல்லையெல் மலடிதான். இவர்கள் சொத்து அனைத்தையும், அந்த மகனுக்கே தந்துவிடவேண்டும். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை, அந்த மகன் தன் உயிரைப்போல் காப்பாற்றுவான். குழந்தை பிறந்தபிறகு பாசம் மாறினால்.
இவள் பெற்ற பெண் குழந்தை இறந்துபோவாள். இறந்த பெண்விட்ட சாபம் வாழவந்த இவளையும் பாதிக்கும். இவளுக்கு பிறந்த மகளையும் பாதிக்கும். புரிந்து செயல்படட்டும் என்று கூறி ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே அனைத்தையும் செய்கின்றோம் என்று கூறிவிட்டு, என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.
செல்: 99441 13267