சுமார் 60 வயது மதிக்கத் தக்க ஒருவர், நாடி பலன் கேட்க வந்திருந்தார். நான் என்ன விஷயமாக பலன் கேட்கவேண்டும் என்றேன்.

தனது நண்பருக்காக நாடி பலன் கேட்கவேண்டும் என்றவர். தனது நண்பர் ஒரு அரசியல்வாதியென்றும், அவர் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் கூறினார். "இளம் வயதுமுதல் கட்சியில் உள்ளார். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டு, சிறைக்கெல்லாம் சென்றுள்ளார். தொண்டனாக இருந்தவர், கட்சியில் படிப்படியாக உயர்ந்து, ஆட்சி பதவிகளையும் வகித்துள்ளார். இப்போது அவருக்கு கட்சி, அரசியல் இறங்குமுகமாக உள்ளது. இதற்குக் காரணம் அறிந்துகொள்ளவும், வருங்கால அரசியல் வாழ்க்கையில் இழந்தவைகளையெல்லாம் மறுபடியும் அடையவும் அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.

ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். "இவன் அரசியல் வீழ்ச்சிக்கு மூன்றுவிதமான காரணங்கள் உண்டு. இவனுக்கு கட்சியில் பணம் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்தார்கள். அந்தக் கட்சியில் இந்தப் பதவி ஒரு சாபம்பெற்ற பதவி. அந்தக் கட்சி தொடங்கிய நாள்முதல், அந்தப் பதவியை வகித்தவர்கள் அனைவரும் படிப்படியாக, அந்தக் கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் மரியாதைக் குறைந்தோ அல்லது கட்சி தலைமையிடம் கருத்து வேறுபாடு கொண்டோ அல்லது தாங்க ளாகவோ அரசியலிலிருந்து காணாமல் போய்விடுவார்கள். அந்த கட்சிப் பதவிக் குண்டான சாபம், இவன் அரசியல் வாழ்க் கையை காவு வாங்கிவிட்டது.

aa

Advertisment

இவன் இப்பிறவி வாழ்வில், அரசியலில் ஈடுபட்டு, சாதாரண தொண்டனாக இருந்து, படிப்படியாக உயர்ந்து, கட்சியில் இரண்டாம் நிலை பதவி வரை மட்டும் வகிக்கவேண்டும் என்பதுதான் இப்பிறப்பின் விதி. ஆனால் இவன் தன்விதியை அறியாமல், பிறர் பேச்சைக்கேட்டு, தன் தகுதிக்கு மீறி தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டான். தலைமைப் பதவியை, நிரந்தரமாக அனுபவிக்கும் யோகம் இல்லாததால், விதி செயல்பட்டது. தன் அரசியல் வாழ்க்கையை இவனே கெடுத்துக்கொள்ளச் செய்தது. இவனுக்கு கூடாநட்பு கேடாய் முடிந்தது.

அரசியலில் சாதாரண தொண்டனாக இருந்தபோது, அனைத்து மக்களிடமும் எந்தவிதமான பாகுபாடு, ஏற்றத்தாழ்வு பாராமல், சகஜமாகப் பழகிவந்தான்.

ஆனால், மக்கள் ஆதரவால், பதவி, பணம், அந்தஸ்து வந்தபின், வாக்களித்து இவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்த மக்களை மதிக்காமல், அவர்களுக்கு ஒரு நன்மையும் செய்யாமல், அவர்களை இவன் ஒதுக்கி னான். அதனால் மக்கள் இவனை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். மக்கள் ஆதரவு பெரிதாக இராததால் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டான்.

அரசியலிலும், ஆட்சியிலும் பதவிபெற அருள்புரிவது மக்கள்தான் கடவுள் என்பதை இன்னும் உணராமல், இவனும், இவன் மனைவியும் கோவில், கோவிலாக பூஜை, யாகம், ஹோமம், பிரார்த்தனைகளை செய்துபார்த்தார்கள். கடவுளும் தனக்கு உதவி செய்யவில்லை என்று அறிந்து இப்போது என்னை நாடி வந்துள்ளான் என்றார்'' அகத்தியர்.

அகத்தியர் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுகொண்ட அவர், "ஐயா, அகத்தியர் கூறியதை அறிந்து கொண்டேன். அகத்தியரிடம், ஒரு சந்தேகத்திற்குரிய பதிலை மட்டும் கேட்டுச் சொல்லுங்கள்.

அந்தக் கட்சியில், பண நிர்வாகப் பொறுப்பாளராக பதவி வகிப்பவர்கள், அரசியல், ஆட்சி, பதவிகளை இழந்து விடுவார்கள். இது ஒரு சாபத்தின் தாக்கம்தான் காரணம் என்று கூறினார்.

இது நம்பக்கூடியதாக இல்லையே, கட்சிப் பதவிக்கும் ஒரு சாபம் இருக்குமா?'' என்றார்.

"இவன் கேள்விக்கு பதிலைக் கூறுகின்றேன். பாவம்- சாபம்- இவற்றின் செயல்களை வாழ்வின் அனுபவத்தின்மூலம்தான் தெரிந்து கொள்ளமுடியும். இவன் சார்ந்துள்ள கட்சியை தொடங்கிய காலம்முதல் இன்றுவரை, இந்த பணம், பொருள் நிர்வாகப் பதவியை வகித்த அனைவரின் அரசியல் வாழ்க்கை இறுதியில் எப்படி முடிந்தது என்று யோசித்து, கணக்கிட்டுப் பார்க்கச் சொல் இவனுக்கே சாபத்தின் செயல்பற்றிய உண்மை தெரியும்.

இவன் சார்ந்துள்ள கட்சியின் கிராம கிளை முதல், மாநில அளவு பொறுப்பு வரை, இந்த பதவி வகித்த, வகிக்கும் அனைவரின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகிவிடும். மறுபடியும் இவன் அரசியலில் உயர்வுபெற சில வழிமுறைகளைக் கூறுகின்றேன். முடிந்தால் அதன்படி செயல்படச் சொல் என்று சில வழிகளைக் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார் அகத்தியர்.

நாடி படிக்க வந்தவர், கட்சி தொடங்கிய நாள்முதல், இவர்வரை, பண நிர்வாகப் பொறுப்பாளராக யார் யார் இருந்தார்கள் என அவர்களின் பெயர்களை எழுதி வைத்துப் பார்த்துவிட்டு, இறுதியில் அவர்களின் அரசியல் வாழ்க்கை என்ன நிலையானது என்பதையும் அறிந்துகொண்டு, அகத்தியர் கூறிய சாபத்தின் தாக்கம் உண்மைதான் என கூறிவிட்டு விடைப்பெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267