நாங்களும் செய்யாத முயற்சி இல்லை. எல்லா மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்திருக்கிறோம். எங்கள் ஜாதி சங்க இடங்களில்கூட பதிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பாருங்க.. எங்க பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லை. அல்லது பெண்ணிற்கு வரன் கிடைக்கவில்லை என்று வருந்தி புலம்புபவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.
நாங்கள் ஜாதி விவரம்கூட பார்ப்பதில்லை. எந்த ஜாதி மதமானாலும் பரவாயில்லை என்று திறந்த மனதுடன் இருக்கிறோம். எங்கள் பிள்ளை களுக்கு திருமணம் ஆகவில்லை. அல்லது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறவில்லை என்று சொல்பவர்கள் இப்பவும் இருக்கதான் செய்கிறார்கள்.
"என்னமோ போங்க சார். நான் போறதுக்குள்ள இந்த பேரப் பிள்ளை களுக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டிப்பார்க்கனும்னு நினைக்கிறேன். ஆனால் பாருங்க ஒன்றும் குதிரவில்லை' என தனது ஆதங்கத்தை சொல்லி புலம்பும் பெரிசுகளும் இருக்கதான் செய்கிறது.
சரி; உண்மையிலேயே என்னதான் பிரச்சினை? ஏன் இவர்களுக்குத் திருமணம் ஆகவில்லையென்று கவுன்சிலிங் செய்தால்கூட பொதுவாக காரணத்தை சொல்லிவிட முடிவதில்லை என்பதுதான் அனுபவ உண்மை. இவர்களுக்கு சோதிடரீதியாக சில சிந்தனைகளைச் சொல்லலாம். அதை சொல்வதற்குதான் இந்த வார சிந்தனை.
தோஷங்கள், சாபங்கள் என சோதிடரீதியாக சொல்லும் சில வழிமுறை களில், சாங்கியம் செய்தல், பரிகாரம் செய்தல் போன்ற வழிபாட்டு முறைகள் இருந்தாலும் சோதிடரீதியாக சில விவரங்களைத் தெரிந்துகொண்டால் நமக்கு சிந்தனை தெளிவாகும் இல்லையா.
இதில் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம், சர்ப்ப சாபம் போன்றவைதான் மனம் கூடாத நிலைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுவும் காலசர்ப்ப தோஷம் என்று வேறு சொல்வார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்; புரிகிறது.
சோதிடத்தில், ராகு- கேது என்ற கிரகங்களை சர்ப்பமாக உருவகித்து நமக்கு காட்டியிருப்பார்கள். நிழல் கிரகம், சாயா கிரகம் என்று அவரவர் கள் பழகி வளர்ந்த வழக்கப்படி அவைகளைச் சொல்வார்கள். ஒருசிலர் இந்த நிழல் கிரகத்தை பொருட்டாகவே கருதாமல், மற்ற கிரகங்களை வைத்து பலன் சொல்வார்கள். வேறு சிலர், சர்ப்ப கிரகங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஜாதகத்தைப் பார்த்து சோதிட பலன் சொல்வார்கள். இதில் அது சரியா அல்லது இது சரியா என்று சொல்வது நமக்கு நோக்கமில்லை, எனினும் இந்த சிந்தனையில் சொல்லவந்தது என்னவென்றால், இவை நமது நடைமுறை வாழ்க்கையில் எப்படி நம்மை ஆள்கின்றது என்பதை தெரிந்துகொள்வதற்கே அன்றி வேறில்லை.
திருமணத் தடை, சந்ததி விருத்தி அடையாமை, தொழில் முன்னேற்றம் இல்லாமை, வாழ்வில் வளர்ச்சி இல்லாமை, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக் கப் பெறாமை, நம்முடைய முயற்சிக்கு இன்னொருவர் எதுவுமே செய்யாமல் பெயர் வாங்கிக்கொண்டு போவது என ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் தடைக்கும், ஒவ்வொரு அசைவிற்கும் இந்த சர்ப்ப கிரக நிலைகளே முன்னிலை வகிக்கிறது.
அதுவும் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்ப்ப கிரகப் பெயர்ச்சியில் தொடங்கி இன்றுவரை அதிக துன்பங்களில் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் கடக ராசி/லக்ன அன்பர்கள்தான். இதைப் படித்துக் கொண்டிருக்கும் கடக ராசி/லக்ன அன்பர்கள், கண்களில் நீர் கசிய "ஆமாம்' என்று நிச்சயமாக சொல்வார்கள்.
அதிலும் கால சர்ப்ப தோஷம் என்று சொல்லு வார்கள் பாருங்கள் என்று தொடங்கினால் பலருக்கு தலையே சுற்றும். சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்த சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப சாந்தி பற்றி சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்கவரும் உங்கள் ஆர்வம் புரிகிறது. அதற்காக தான் இந்த சிந்தனை.
சர்ப்ப தோஷம் என தொடங்கினால், பொதுவாக காளஹஸ்தி திருநாகேஸ்வரம் போன்ற திருத்தலங் களை சொல்லுவார்கள். சர்ப்ப கிரக நிலைகளை கொண்டு அதற்கான திருத்தல வழிபாட்டு முறையை செய்தால் அன்றி பூரண பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் அவரவர் அனுபவ உண்மையாக இருக்கும்.
இதில் குறிப்பாக சில விஷயங்களை சொல்கிறோம் குறித்துக்கொள்ளுங்கள். ராகு- கேது என்ற கிரகத்திற்குள் மற்ற கிரக அமைப்பு இருந்தால் சர்ப்ப நிலைகளுக்கு ஏற்ப அதனை கால சர்ப்ப தோஷம் என்று சொல்லும் முறையும் உண்டு. அதிலும் ஆறு வகை தோஷம் உண்டு. பன்னிரண்டு வகை சாபம் உண்டு. அதிலும் கொடிபிடித்து செல்லும் கிரகம் ராகுவா? கேதுவா என்பதை ஒட்டி சொல்லும் முறையும் உண்டு.
மற்ற கிரகங்கள் வலவோட்டாக (clockwise) செல்லும்போது, சர்ப்ப கிரகங்கள் மட்டும் எதிர் திசையில் (anticlockwise) செல்லும் என்பதைத் தெரிந்துகொள்ளும்போதே, இந்த கிரக பாதிப்புகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும் இல்லையா! குடும்பத்தில் வளமும் அதிர்ஷ்டமும் பெருகிட, நீர்வளம், நீடித்த ஆயுள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைத் தரும் தெய்வ வழிபாடு நாக வழிபாடுதான். சிலருக்கு குல தெய்வமே நாகமாக இருக்கும். சிலர் குடும்ப சூழல் காரணமாக இதனை மறந்து வேறொரு தெய்வத்தை வணங்கிகொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு சர்ப்ப சாபம் ஏற்பட்டு பல தடைகள் வந்து கொண்டு இருப்பதை அனுபவத்தில் அவரவர்கள் தெரிந்து இருப்பார்கள்.
முயற்சியில் தடை என்றால் அங்கே முதலில் வந்து நிற்பது இந்த சர்ப்பங்கள்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கிராமத்து பக்கங்களில் ஒரு நல்ல காரியம் பேசும்போது, பாம்புகள் தென்பட்டால், அந்த செயலை இப்பவும் தொடர மாட்டார்கள் என்பதுதான் அனுபவ உண்மை.
ஆனால் பாருங்கள், பாம்புகளால் விவசாயநிலம் வளம்பெறுகிறது. பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலங்காலமாக தொடர்ந்து வந்துள்ளது.
பஞ்சமி திதி அன்று நாக வழிபாடு என்பதால்தான் விவசாய நிலங்களை பஞ்சமி திதி அன்று உழவு செய்ய கூடாது என்ற சம்பிரதாயமும் உண்டு. குறிப்பாக நாக பஞ்சமி அன்று குடும்ப வளர்ச்சி கருதி செய்யவே கூடாது என்பதுதான் இந்துக்களின் வழிபாட்டு முறை. ஆடிமாத வளர்பிறை பஞ்சமி தான் நாக பஞ்சமி என்பதை நம்மில் பலர் அறிந் திருக்கலாம்.
பாயசம் வைத்து நைவேத்திய வழிபடும் முறையே நாக வழிபாட்டின் அடிப்படை என்பதில்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கும். இதிலும் அஷ்ட நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பிங்களன், சங்கன், பத்மன், மஹாபத்மன் இவைகள் இன்னமும் பூமியில் வாழ்வதால், நாக வழிபாடு மக்கள் மத்தியில் பூஜிக்கும் தெய்வமாக கருதப்படுகிறது. இந்த நாக வழிபாடு மற்றும் சிந்தனைகள் சமணத்திலும் பௌத்தத்திலும், கிருத்துவத்திலும்கூட உண்டு. சில குடும்பங்களில் நாகத்தை சொல்லி பெயர் வைத்து இருப்பார்கள். "நாக'ராஜன், "நாக'லட்சுமி, "நாக'நாதன், "நாக'சௌந்தரம், "நாக'சுப்பிரமனியன் என்பதுபோல.
காஞ்சிபுரத்திலுள்ள முருகபெருமான் கோவிலில் நாக சுப்பிரமணிய சன்னதியே உண்டு என்றால் வியப்பாகதான் இருக்கும். இந்த திருக்கோவிலில் நவ கிரகங்கள் அனைத்தும் சூரியனுக்கு பின்புறத்தை காட்டியபடி, அதாவது நம்மை பார்த்தபடி இருக்கும். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அம்சம் என்பதை இந்த சர்ப்ப கிரக சிந்தனையில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
அறிவியல்ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், சுமார் 3,600-க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ள இந்த உலகில், முட்டையிட்டு மட்டுமல்ல, குட்டி போட்டும் இனப்பெருக்கம் செய்வது இந்த பாம்பு இனம் மட்டுமே என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பாம்புகளை பற்றி இவ்வளவு விஷயம் இருக்குதா? இதை எப்படி சோதிடத்தில்.... என்று யோசிக்கிறீர்கள், புரிகிறது. இதன் தொடர்ச்சியை அடுத்த வார சிந்தனையில் தொடர்வோம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172