காலையில், "ஏய்... டைம் ஆயிடுச்சு... அந்த சானலை திருப்பு... ராசி பலன் முடிஞ்சிடப் போகுது' என சொல்லிக்கொண்டே.. ஆவலுடன் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கும் பலரை எனக்குத் தெரியும்.
"அட போங்க ஐயா... நானும் அப்படித்தான்' என்று வெட்கப்பட்டுக்கொண்டு நீங்கள் சொல்வது புரிகிறது.
இதுகுறித்து இந்த வாரம் சிந்திக்கலா மென்றுதான் சில பொட்டலங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.
ராசிபலன் என்பது அன்றைய கோட்சார ஜாதகத்தை வைத்துப் பலன் சொல்லுவது தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இது சரியா- தவறா என்று சொல்லி மற்றவர் களை சங்கடப்படுத்துவது நமது நோக்கமல்ல.
"என்னவோ சார்... இது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் ராசி பலன் கேட்டால்தான் எங்களுக்கு ஒரு லோட்டா காபி குடித்த மாதிரி' என்று சொல்லும் அபிமானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ராசிபலனை விடுங்கள். "இந்த சந்திராஷ்டமம்னு ஒண்ணிருக்கே... அதுவும் இந்த ராசிக்கு இன்னிக்கு சந்திராஷ்டமம்னு சொல்லுவாங்க பாருங்க...' என்று சொல்லவரும் உங்கள் எண்ணம் புரிகிறது. அதைக்குறித்து இந்த வாரம் சிந்திப்போம்.
சந்திராஷ்டமம் என்பது ஒருவர் பிறந்த ராசிக்கு சந்திரன் எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தைக் கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். அஷ்டமத்திற்கு வருவது என்பதைப் புரிந்துகொண்டால் இது சுலபமாகப் புரியும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்து, ராசியைதான் சொல்வோம். ராசியென்பது சந்திரன் எந்த ராசியில் நிற்கி றதோ அந்த இடம்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
சரி; இந்த சந்திராஷ்டமம் வந்தால் என்ன ஆகும்? மனக் குழப்பம் வரும். எதையும் முடிவெடுக்க முடியாது. நல்ல காரியங்களைச் செய்யக்கூடாதென்பதுபோல சொல்லிவைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் என்ன ஆகும் தெரியுமா? ஒன்றுமாகாது என்பதுதான் வெளிப்படையான உண்மை. சந்திராஷ்டமம் என்றால் ஏதோ ஆகாத தினம் போல அஞ்சத் தேவையில்லை.
"என்னங்க அய்யா.. நாங்க சந்திராஷ்டமம் பற்றி என்னமோ நினைச்சிக்கிட்டிருந்தோம்.. நீங்க "புஸ்க்'னு இப்படி சொல்லிட்டீங்க' என்று கேட்க வருகிறீர்கள்; புரிகிறது. வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகதான் புதிய சிந்தனைகளை இயல்பான நடையில் உங்களுக்கு "பாலஜோதிடம்' தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறது.
பயப்படக்கூடிய அளவில் சந்திராஷ்டமம் பாதிப்பு ஒன்றும் தராது என்ற எண்ணத்தை முதலில் பதித்துக்கொண்டு... சொல்லவருவதை இயல்பான போக்கில் சிந்தித்துப் பாருங்கள்.
ட்ராபிக் அதிகமாக இருக்கக்கூடிய சாலையில் பயணம் செய்தால் நமது வண்டியை எப்படி ஓட்டுவோம் என்பதை நினைத்துப் பாருங்கள். வண்டியைவிட்டு இறங்கிப் போய்விடுவோமா அல்லது வீட்டிற்குத் திரும்பப் போய்விடுவோமா?
அவ்வளவுதான் சந்திராஷடமம்.. ட்ராபிக் அதிகமாக இருக்கக்கூடிய சாலையில் எப்போதுமே ட்ராபிக் இருக்காது. சில மணி நேரத்தில் அது சரியான இயல்பு நிலைக்கு வந்துவிடும். அல்லது பணியிலிருக்கும் காவலர்கள் அதனை சரிசெய்துவிடுவார்கள். ட்ராபிக்கை உதாரணமாகச் சொன்னதற்கு என்ன காரணம் தெரியுமா? பயணம் என்பதற்கு காரகமே சந்திரன்தான் என்பதால்தான் "அப்படின்னா சந்திராஷடமம் பற்றி பயப் படத் தேவையில்லையா? அன்னிக்கு நல்ல காரியங்களை செய்யலாமா?' என்று கேட்க நினைக்கிறீர்கள். புரிகிறது.
நல்ல காரியங்களைச் செய்ய நாள் பார்க்கவேண்டுமா? ராகு காலத்தில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது.
அஷ்டமி, நவமியில் செய்யக்கூடாது. சந்திராஷ்டமத்திலும் செய்யக் கூடாதென்றால் எப்போதுதான் செய்வ தென பகுத்தறிவாளர்கள் என சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பத்தில் பதில் மற்றும் விளக்கம் சொல்லலாம்.
இப்போது அவர்களை அந்தப் பக்கம் வைத்துவிட்டு, சொல்லவரும் விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
எட்டாம் இடத்திலிருந்து நேர் பார்வையாக அது தனம், வாக்கு, குடும்பம் என இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால், அந்தஸ்தான அமைப்புகள் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
முக்கியமான விசேஷ நாட்களில் மகா சங்கல்பம் செய்வதுண்டு. அதை நீங்களும் கவனித்திருக்கலாம். அல்லது செய்துகூட இருக்கலாம். அதுசமயம், "தாரா பலம் சந்திர பலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம் ததேவா' என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப் பார்கள். இதில் தாராபலன் என்று சொல் கிறார்களே... சந்திர பலன் என்று சொல் கிறார்களே என்பதுதான் இந்த வாரம் நாம் எடுத்துக்கொள்ளும் சிந்தனை. உதாரணமாக சொல்கிறேன். சரியாக உள்ளதா சொல்லுங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 17-ஆவது நட்சத்திரம் அன்றைய நட்சத்திரமாக வந்தால், அன்று சந்திராஷ்டமம் இல்லையா.
சரி; இப்போது தாரா பலனை எடுத்துக் கொள்வோம். சந்திரன் கோட்சாரரீதியாக பலனை தாரைமூலமாக வழங்குவதாக நம்பப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம்வரை எண்ணிவருகிற எண்களுக்கு பலன்களும் விடை 9-க்குமேல் வந்தால் 9-ஆல் வகுக்க வரும் மீதியைக் கொண்டும் தாராபலன் சொல்லப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1 முதல் 9 வரைக்கும் ஜென்ம தாரை மைத்திர தாரை, பரம மைத்திர தாரை என பலன் சொல்வார்கள்.
இப்போது பாருங்கள். எந்த நட்சத்திரத் திற்கு எந்த நாள் சந்திராஷ்டமமாக வருகிறதோ. அந்தநாளில் தாராபலன் சிறப்பாக இருக்கும். அது மைத்திர தாரையாகவோ அல்லது பரம மைத்திர தாரையாகவோ இருக்கும்.
உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் பூசம், பூச நட்சத்திரத்திற்கு சந்திராஷடம தினம் சதய நட்சத்திரத்தின் அன்று. இல்லையா. இதேநாளில் தாராபலன் பார்த்தால், மைத்ர தாரை என்று வரும். இதன் பலன் புதிய முயற்சி மேற்கொள்ளுதல், புதிய செயல்கள் செய்தல் என்பதுபோல வரும்.
இப்போது சொல்லுங்கள். தாராபலன் நன்றாக இருக்கிறது என அந்த நாளை நல்ல நாளாக சொல்லலாமா அல்லது சந்திராஷ்ட மம் என்று அந்த நாளில் நல்லது செய்யாமல் தவிர்க்கலாமா? இந்த சிந்தனையில் சிந்தித்தால், சந்திராஷ் டமத்தினால் கெடுபலன்கள் வராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
சந்திரன் உச்ச, நீச, ஆட்சி வீட்டுக்காரர் களுக்கு சந்திராஷ்டம பாதிப்பிருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஜனன ஜாதகத்தில் 6, 12-ஆமிடத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு பாதிப்பிருக்காது. இதேபோல குரு, சுக்கிரன் பார்வை எட்டாமிடத்தில் பதிவது, சந்திராஷ்டமம் அடையும் நட்சத்திரங்கள் குரு அல்லது சுக்கிரன் நட்சத்திரமாக இருப்பது இவர் களுக்கு பாதிப்பிருக்காது என சில பொது விதிகளும் உண்டு.
இதனால்தான் சந்திராஷ்டம தினத்தின் போது, அன்றைய நாளுக்குரிய உணவுகளை எடுத்துக்கொண்டால் சந்திராஷ்டமம் பற்றிய பயமோ கவலையோ தேவையே இல்லாதது.
உணவு மனதை மாற்றும் என்ற இயல்பான அறிவியல் சிந்தனையை வைத்து சிந்தித்தால் கருப்பு சட்டைகள்கூட சோதிடத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
சந்திராஷடம பயமின்றி, இனி, இறை நம்பிக்கையோடு, பயமின்றி ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)