"எப்படியோ... இருட்டில் இருந்த எங்களை இப்படி வெளிச்சத்திற்கு கொண்டுவந்துட்டீங்க ஐயா' என்று குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்துசொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்...
நாம் என்னதான் செய்தாலும், சிலசமயம் நமக்கு கெட்டபெயர் (அவப்பெயர்) வந்துவிடுகிறது. அது குடும்பத்தில் இருக்கலாம் அல்லது அலுவலகத்தில் இருக்கலாம் அல்லது நண்பர்கள் மத்தியில்கூட இருக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? வாக்குதான்.
அதாங்க பேச்சு... சாதாரணமாக எதேச்சையாக சொல்லியிருப்போம். அதைத் தவறாக எடுத்துக்கொண்டு, நம்மை சண்டையில் மாட்டிவிடும் அளவுக்குக் கொண்டுபோகும்.
முதலில் இந்த வாக்கு எப்படித் தோன்றுகிறதென்பதை நாம் புரிந்துகொண்டால், மற்றது சுலபமாகும். என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும், எப்போது பேசவேண்டும், யாரிடம் பேச வேண்டும், ஏன் பேசவேண்டும் என்னும் ஐந்து படிநிலைகளை வைத்து பேசப் பழகிவிட்டால் தவறு தவறாகக்கூட வராது.
"என்னங்க... பேசக்கூட சொல்லித் தரனுமா?' என்று கேட்கிறீர்கள்; புரிகிறது. இப்போது "அதுக்குக்கூட தனியா வகுப்பு எடுத்துக்கிட்டுதானுங்க இருக்கோம்' என்று சொல்பவர்களும் உண்டு.
வாக்கு எப்படி அமைகிறதென்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இது புதிய சிந்தனையாகக்கூட இருக்கும். வாக்கு என்பது காதினால் கேட்கும் ஓசையன்று. அவ்வோசை வழியே எழுந்து பொருள் உணர்வை உண்டாக்குகின்ற ஆற்றலே வாக்கு. சொற்கள் பொருட்களைப் பற்றுக்கோடாகக் கொண்டுதான் இயங்கும். இது வெளிப்படும்போது பேச்சாக அமையும்.
சொல் உலகத்தில், வாக்கு ஐந்து நிலைப்படும். அவை சூக்கும வாக்கு, பைசந்தி வாக்கு, மத்திமை வாக்கு, சூக்கும வைகரி மற்றும் தூல வைகரி என்று சாத்திரத்தில் சொல்வார்கள்.
அட! ஒரு சொல்லைச் சொல்ல இத்தனை யோசனையா என்று சிந்திக்கிறீர்களா? உண்மைதான். திருக்குறளில்கூட திருவள்ளுவர்-
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்'
என்று, ஒரு குறளில் "சொல்' என்ற சொல்லை ஐந்துமுறை பயன்படுத்தியிருக் கிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா!
அதனால்தான் ஞானிகள் அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பார்கள். நம்மில் பலர் மௌன விரதம்கூட வாரத்தில் சில நாட்கள் என, கையால் எழுதிக் காண்பித்து விரதமிருப்பார்கள்.
"மோனம் என்பது ஞான வரம்பு' என்று ஔவைப் பாட்டியும் சொல்லியிருக்கிறார். பாட்டி சொல்லைத் தட்டலாமா?
சாதாரணமாக சொல்லக்கூடிய ஒரு சொல், மற்றவர்களுக்கு அது தவறாகப் பதிந்து, உறவுகளே பிரிவுகளாகிவிடும் நிலையும் வந்திருப்பதை அவரவர் அனுபவத்தில் உணர்ந்தி ருக்கலாம். சில தம்பதிகளின் மணமுறிவுக்குக் கூட இது காரணமாக இருக்கலாம்.
"சரி; அப்போ எப்படி பேசுறது?' என்று கேட்கிறீர்கள். புரிகிறது. இத்தனை வயதுக்குப்பிறகு எப்படிப பேசுவதென சொல்லிக்கொடுக்க முடியுமா அல்லது தெரிந்தோ தெரியாமலோ இப்படிப் பழகியபிறகு நம்மை மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா?
அப்படியென்றால்?
உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். "ல/' என்று போட்டிருக்கும். இது லக்னம். இதுதான் முதலிடம். இதற்கு அடுத்த ராசிக் கட்டம்தான் இரண்டாமிடம். இந்த இரண்டாமிடம்தான் வாக்கு ஸ்தானம். இந்த வாக்கில் யார் இருக்கிறார்கள் அல்லது இந்த வாக்குக்கு உரியவர் எந்த இடத்தில் யாருடன் இருக்கிறார் என்பதை வைத்து, அவர் இயல்பாக எப்படிப் பேசுவார் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
அவர் இயல்புக்கு மாறாகப் பேசினால் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது இயல்பே அப்படிதான் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால், பிரிவுமில்லை... உறவும் நட்பும் நலமாகவே இருக்கும்.
ஒன்பது கிரகங்களில் இந்த வாக்கு ஸ்தானத்தில் ஒன்று அல்லது அதற்குமேல் கிரகங்கள் இருக்கும் அல்லது ஒன்றுமில்லாமலும் இருக்கும். அங்கே இருக்கும் கிரகம் எந்த நட்சத்திரத்தின் காலில் நிற்கிறது என்பதை வைத்து, இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டால் ஜாதகர் என்ன பேசுவார்- எப்போது பேசுவார்- ஏன் பேசுவார்- எப்படிப் பேசுவார்- எதற்குப் பேசுவார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
"மனதில் உறுதிவேண்டும்' என்று சொன்ன எட்டயபுரத்து எரிமலை பாரதி, "வாக்கினிலே இனிமைவேண்டும்' என்றும் சொல்லியிருக்கி றாரே.
உதாரணமாக சிலவற்றை சொல்லட் டுமா? (இது புரிதலுக்கு மட்டும்தான்.) இரண்டாமிடத்தில் சனி இருந்தால், "அவ்வளவுதான் போங்க...' என்று சொல்லும்படி இருக்கும்.
சூரியன், செவ்வாய் சம்பந்தத்துடன் இருந்தால், அவர்கள் பேச்சு கடுமையும் கொடுமையும் கொண்டதாக இருக்கும்.
அடுத்தவர்கள் மனம்கோணப் பேச இவர்களால் மட்டுமே முடியுமென்று சொல்லிவிடலாம்.
இரண்டாமிடத்தில் புதன் இருந்தால், தேனொழுகப் பேசினாலும் பேச்சில் பயனில்லை.
கேது இருந்தால் ஆரோக்கியமில்லைதான் என்றாலும், கேது குரு நட்சத்திரத்தில் இருந்தால் அதன் சிறப்பின் அளவை சொல்லத்தான் வேண்டுமா? அது தெய்வவாக்குதான்!
இப்படி இந்த இடத்தில் நிற்கும் கிரகம், ஸ்தானாதிபதி, கிரகம் நின்ற நட்சத்திர சாரம் என்பதை வைத்து அவர் பேச்சு எங்கே தொடங்கி எங்கே முடியுமென்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இரண்டாமிடம் வாக்கு மட்டுமல்ல; தனம், குடும்பம், கல்வி, அதிர்ஷ்டம் என பல காரகத்துவம் பெற்ற பாவகம் என்றாலும், இந்த வாரம் வாக்குபற்றி சிந்திக்க எடுத்துக்கொண்டோம்.
அடுத்த ஒரு வாய்ப்பில், மற்ற காரகங்களை சிந்திக்க எடுத்துக்கொள்ள திருவருள் துணைசெய்யும். உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் உங்களை நல்வழிப்படுத்துவார்.
நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172