"காதல்... காதல்... காதல்... காதல் போயின் சாதல்... சாதல்... சாதல்...' என்பது முண்டாசுக் கவிஞன் பாரதியார் நமக்குத் தந்த குயில் பாட்டு.
சங்க இலக்கியங்களிலும் காதல் இருந்தது. பக்திப் பனுவல்களிலும் தன்னைப் பெண்ணாகவும் கடவுளை ஆணாகவும் எண்ணி செய்த ஆழ்வார் பாசுரங்கள், கோவை போன்ற அகப்பொருள் பாடல்கள் என பல சான்றுகளைக் காட்டமுடியும்.
முன்பெல்லாம் இருந்த காதல், வழக்கொழிந்து போயிற்று என்று சொல்லுமளவுக்கு இப்போது காதல் மன இறுக்கத் தளர்ச்சிக்காகவும், பொழுது போக்காகவும் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
சேர்ந்துவாழும் காதலர்களைப்போல, காதலில் பிரிவும் இருந்திருக்கிறது. இன்றையநாளில் அது சாதியால், சமுதாய அந்தஸ்தால், பணத்தால், பெற்றோர்களின் ஈகோவால், காதலர்களுக்குள்ளே உள்ள ஈகோவால் என பல காரணங்களைச் சொல்லமுடியும்.
முன்பெல்லாம் காதல் தோல்வி யென்றால், உயிரைக்கூட மாய்த்துக் கொள்ளும் இளசுகள் இருந்தன.
அதன்பிறகு, காதல் தோல்வி என்றால், "தேவதாஸ்' படத்தை அடைமொழியாக வைத்து "என்னப்பா, தேவதாஸ் மாதிரி தாடி வச்சிருக்கே?' என்று கேலிபேசுவார்கள். அடுத்துவரும் காலங்களில் அந்த நிலை மாறி, காதல் என்றால் பிரிவும் வரத்தானே செய்யும் என மனதைத் தேற்றிக்கொண்டு, "எங்கிருந்தாலும் வாழ்க' என அவரவர் பாதையில் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு மனதை தேற்றிக்கொண்டனர்.
இதனையடுத்து, காதல் தோல்வி யென்றால், விவாகரத்து செய்துவிட்டு வரும்வரை காத்திருக்கிறேன் என்ற நிலையில்... தொடர்ந்து என்னவெல்லாம் வருமோ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
ஒருதலைக் காதலை "கைக்கிளை' என தமிழ் இலக்கியங்கள் சொல்லும். காதல் எப்படி செய்யவேண்டும்-
அதன் நிலைப்பாடு என்ன என்பதையும், காதலர்களைத் தலைவன்- தலைவி என்று அடையாளபப்படுத்தி காதலை நமக்குக் கற்றுத்தருவது தமிழிலுள்ள சங்க இலக்கியங்களைத் தவிர வேறென்ன இருக்கிறது சொல்லுங்கள்.
இதனால்தான், "யாமறிந்த மொழி களிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று, 29 இந்திய மொழிகளையும், மூன்று அந்நிய மொழி களையும் கற்றுணர்ந்தபிறகே தைரியமாக, பாரதியும் சொன்னானோ என்பதில் சந்தேகம் யாருக்குமிருக்க வாய்ப்பில்லை.
"சரி... இந்தக் காதலைப்பற்றி என்னதான் தமிழ் சங்க இலக்கியங்களில் சொல்லியிருக்கு?' என கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. இலக்கியங்களிலிருந்து சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் சோதிடத்தில் காதலைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
"காதலா... காதலா... காதலால் தவிக்கிறேன்' என்று பாடினாலும், "காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை' என்று ஓடினா லும், காதல் என்று சொன்னதும் காதலர் களுக்கும் கன்னியர்களுக்கும், ஏன்- வயதான அன்றைய இளைஞர்களுக்கும் கிளுகிளுப்பு இல்லாமலா இருக்கும்.
ஒருஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வதுபோல இந்தக் காதலைச் சொல்ல வேண்டாமா என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
சோதிடத்தில் காதல் என்று சொன்னதும் கண் முன்னால் வந்துநிற்பவர் புதன்தான். அட... புதனுக்கு மிதுனமும் கன்னியும்தான் ஆட்சிவீடு என்று சொல்கிறீர்கள்; சரிதான். இந்த புதனின் வீட்டிற்கு இரண்டாமிடத்தில் கேது இருந்தால் காதல் வரும்.
ஜாதகத்தைப் பார்த்து ஒருவர் காதல் செய்வாரென்று சொல்ல புதனுடன் கேதுவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். புதன் கோணத்தில் கேது இருந்தால் காதல் தேடிமட்டும் அல்ல; ஓடியும் வரும்.
"அப்போ, அந்த காதல் எப்படி... (நிறைவேறும்)' என்று சொல்லி நெளியும்போதே புரிகிறது; அதைச் சொல்வதற்குதான் இந்த வாரச் செய்தி...
காதலுக்கு பார்வை முக்கியமல்லவா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றுதானே அர்த்தம். ஆம்; வளர்பிறை சந்திரனோடு குருவோ, சுக்கிரனோ கேதுவுடன் இணைவுபெற்ற புதனைப் பார்த்தால், ஆஹா... ஓஹோதான். காதல் நிறைவேறும்.
காதல், குடும்பம், வாழ்க்கையெல்லாம் இன்பத்தில் திளைப்பதற்காகவோ, வாரிசுகளைப் பெற்றெடுப்பதற்காகவோ மட்டுமல்ல. குடும்பமென்பது அறச் செயல்களை செய்யவேண்டும் என்பதற் காகதான் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள்.
கண்ணகியைவிட்டு கோவலன் விலகியபோது, கோவலன் பிரிவை எண்ணி வருந்தியதைவிட, கண்ணகி, கணவனுடன் சேர்ந்து செய்யவேண்டிய அறச் செயல்களை செய்யமுடியவில்லையே என்றுதான் வருத்தியதை சிலப்பதிகாரத்தில் வரும் செய்யுள்களைப் படித்துப் பாருங்கள்.
காதலைச் சொல்லியாச்சு. அப்படின்னா காதல் தோல்வி வந்தால்? அங்கேதான் இணைவுபெற்ற புதன், கேதுவை செவ்வாய் தனது பார்வையால் பார்ப்பார். அங்கே காதல் முறிவு அல்லது நிறைவேறாத காதல், காதல் தோல்வி என முடியும்.
"நாங்கள் காதலுக்கு சில்வர் ஜூபிளி கூட கொண்டாடப் போகிறோம்' என்று சொல்வதுபோல, "நாங்களும்தான் இத்தனை வருஷமா காதலிக்கிறோம்' என்று சொல்பவர்கள் ஜாதகத்தைப் பாருங்கள். செவ்வாய்க்கு பதில் இந்த இணைவுபெற்ற கிரகங்களை சனி பார்த்துக்கொண்டிருப்பார்.
"அட... இவ்வளவுதான் காதலா?' என்று யோசிக்காமல், தசாபுக்தி, காதலைச் சொல்லும் நேரம், அன்றைய கோட்சாரம், அதனால்வரும் காதல் சந்திப்பில் சண்டை என ஒவ்வொரு விஷயங்களையும் சோதிட சாஸ்திரம் குறித்துக் காட்டுகிறதென்றால், சோதிடத்தை சும்மா விட்டுவிட முடியுமா என்ன!
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172