அடைகாக்கும் இயந் திரத்தில் (இன்குபேட்டரில்) ஆயிரக்கணக்கான கோழி முட்டைகள் வைத்து குஞ்சுகளைப் பொரிக்க வைப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம் அல்லது பார்த்தும்கூட இருப்போம்.
ஆனால் பாருங்கள்.. இப்போது, மனிதக் குழந்தைகளை இப்படி கருப்பை இல்லாமல் ஆய்வகத்தில் பிறக்க வைக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஒரு தந்தையின் விந்தணுவையும் தாயின் கரு முட்டையையும் இணைத்து ஆய்வகத்திலுள்ள ஒரு சிறப் பறையில் வளர்க்கிறார் களாம்.
இந்த அமைப்பில், ஒரு கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் பதிவுசெய்து, பெற்றோர்கள் அதை தங்கள் மொபைல் போனில் பார்க்கவும் வசதிசெய்து தருகிறார்களாம். குழந்தை கருவிலிருக்கும்போதே, குரலைப் பதிவுசெய்து, இசை, பாடல் என நம் விருப்பத்திற்குப் பதிவுசெய்யக்கூட முடியுமாம்.
அட... ஆச்சரியமாக இருக்கிறதே என்று, எனக்கும் இந்த செய்தி மற்றும் இது தொடர்பான வீடியோ கிளிப் பார்த்தவுடன் தோன்றியது.
(
நம் மனிதகுலம் எங்கே செல்கிறது? மனிதகுலம் எதைநோக்கிச் செல்கிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனாலும் பாருங்கள், ஒரு பெண் கர்ப்பமுற்று குழந்தைபெற்ற காலம்போய், இப்போது இப்படி நவீன குழந்தைபெறும் சூழல் வந்தாலும், இதுபோல சூழலும் வாய்ப்பும் இயற்கை அன்னைக்குக் கிடையாது. நீரையும் நிலத்தையும் பெண்ணாகப் பார்க்கும் இந்த பூமியில், இயற்கையையும் நாம் பெண்ணாக, அன்னையாகக் கருதுவதுதானே தமிழர் மரபு.
பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா? இல்லையென்றாலும் தினசரி காலண்டரில் தினமும் தேதியைக் கிழிப்பவராக நீங்கள் இருக்கலாமல்லவா? அப்படி தேதியைக் கிழிக்கும்போது, அதிலுள்ள சிலவற்றைப் பார்த்து அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், கரிநாள் இப்படி தெரிந்துகொண்டி ருப்போம். உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் ஆர்வமும் இருந்தால் இந்த மாதம் 29-ஆம் தேதியைப் பாருங்கள்.
அதில் என்னங்க விசேஷம் என்று கேட்டு, அவசர அவசரமாக காலண்டர் பக்கம் போகும் உங்கள் ஆர்வம் புரிகிறது. இந்த 29-ஆம் தேதியன்று "கர்ப்போட்டம்' என்று போட்டிருக்கும்.
கர்ப்போட்டம் என்பது, ஏதோ விசேஷ தினமோ அல்லது மார்கழிமாதக் கோவில் திருநாளோ அல்ல. அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்றுதான் இது.
சூரியனின் சுழற்சியை மையமாகக் கொண்டுதான் சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகின்றன. இதுதவிர வானியல் நட்சத்திரங்கள் இருபத்தேழையும், பன்னிரு ராசி மண்டலங்களாகப் பிரித்துள்ளனர் என்ற அடிப்படையை நாம் அறிவோம்.
அந்தவகையில் தனுர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனுசு ராசியைக் கடக்கும்போது, பூராட நட்சத்திரத்தைக் கடக்கப் பதினான்கு நாட்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை அனுபவத்தில் கண்டுகொள்ளலாம்.
இதெல்லாம் இயற்கை என்று கண்டுகொள்ளாமல், ரசிக்கத் தெரியாமல் இருப்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். வளரும் சமுதாயத்திற்கு நாம் இதை சொல்லித்தர வேண்டாமா? நமது சோதிட அறிவின் நுட்பத்தையும் இயற்கைத் தத்துவத்தையும் நாம் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டாமா?
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்களாகும். (இந்த ஆண்டு 29-12-2022 முதல்.) அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் என புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு பெண்ணின் பத்துமாத கர்ப்ப காலத்துடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், ஒன்பது மாதம் கழித்துப் புரட்டாசிக்குப்பின் மகப்பேறு அடைவார். அதே கோணத்தில்தான் இயற்கை அன்னை. இந்த நாட்களில் மழை முறையாக சூல்கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும் என்று பொருள்கொள்ளுங்கள். சென்ற ஆண்டும் இதைச் சொல்லியிருந்தோம். அதேபோல மழைப் பொழிவிருந்ததை நாம் கண்கூடாகக் கண்டதை "பாலஜோதிடம்' வாசகர்கள் அறிவார்கள்.
இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாகக் கருக் கட்டியிருக்கிறது என்று பொருள். இதனால் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று விவசாயிகள் புரிந்துகொள்வார்கள். மானா வாரிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இதைப் புரிந்துகொண்டு செயல்பட வசதியாக இருக்கும்.
இப்படியல்லாமல், இந்த கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்துவிட்டதென்று பொருள் கொள்ளலாம்.
எனவே மார்கழியில் கனமழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என்பதைக் குறிப்பால் சொல்லும் இந்த கர்ப்போட்டம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் கருக்கொள்ளும் மேகத்தைக் கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது என்பதை நாம் அறிந்துகொண்டு, சூழலியல் புனரமைப்பு செய்ய ஒவ்வொருவரும் கரம்நீட்ட வேண்டும்.
"எனக்கு என்ன விவசாய நிலமா இருக்கு?' என்று ஒதுக்கித் தள்ளாமல், சூழல் பாதுகாப்பை மனதில் நிறுத்தி, அடுத்த தலைமுறைகளுக்கு அரணாக இருக்கவேண்டும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172