இப்போ சனிப்பெயர்ச்சி வருதாமே... நமக்கு எப்படி இருக்கப்போகுதோ' என்று அறிந்துகொள்ளும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்.
ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி வரும்போதும், சிலருக்கு அஷ்டமச் சனியாக, சிலருக்கு அர்த்தாஷ்டமச் சனியாக, சிலருக்கு ஏழரைச் சனியாக, சிலருக்கு ஜென்மச் சனியாக இருக்கும்.
எப்படியிருந்தாலும் நாம் பலன்களைத் தெரிந்துகொள்ளாமல் விடுவோமா என்ன?
"அதெல்லாம் சரி; இந்த சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கும் சொல்லுங்க' என்று கேட்பவர்கள் "பாலஜோதிடம்' வழங்கும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை வாங்கித் தெரிந்துகொள்ளுங்கள்.
அஷ்டமத்துச் சனி என்பது ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவதுதான். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பத்திற்கு வரும் சனி என்பதால் கடக ராசி அன்பர்களுக்கு இது அஷ்டமச் சனியாக அமைகிறது.
இப்போது, அஷ்டமச் சனி ஒவ்வொரு சனிப்பெயர்சியிலும் ஒருசிலருக்கு வரும் என்ற நிலையைச் சொல்லாமல், இவையெல்லாம் இருந்தால் அது அஷ்டமச் சனியைப்போல என்று ஒரு தமிழ்ப் பாட்டு சொல்கிறது.
அந்த பாட்டை எழுதியவர் நம்ம பாட்டிதான். ஆம்; ஔவையார் அருளிய தனிப்பாட்டில் வரும் அந்தப் பாடலை சுவைத்துப் பாருங்களேன்.
"காலையிலே பல்கலை நூல்பயிலாத தலைமகனும் ஆலைஎரி போன்ற அயலானும் சால மனைக் கட்டழிக்கும் மனையாளும் இம் மூவர் தனக்கு அஷ்டமத்து சனி,' எளிதாகப் பொருள் விளங்கும் இந்தப் பாடலில் சொல்லவரும் செய்திகளைப் பாருங்கள். அதிகாலையில் எழுந்து அறநூல்களைப் படிக்காத குடும்பத் தலைவன் என்றால் அங்கே அஷ்டமத்துச் சனி என்கிறார்.
ஒரு குடும்பத் தலைவன் அதிகாலையில் எழுந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் எழுந்திருப்பார்கள் என்ற கருத்தைச் சொல்லவரும் இந்த அற வாழ்க்கையை நாம் தெரிந்துகொண்டால், அஷ்டமத்துச் சனிக்கான பரிகாரத்தை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.
"ஆலைஎரி போன்ற' எனும்போதே நமக்கு வடசென்னைதான் நினைவில் வரும். ஆலையிலிருந்து வரும் நெருப்பு எத்தனை சூடாக இருக்குமோ, அத்தனை சூடாக அண்டைவீட்டுத் தோழர்கள் அமைந்துவிட்டால் அங்கே அஷ்டமத்துச் சனி என்கிறார். இன்சொல் பேசவேண்டும். அதுவே ஆரோக்கியமான நல்லுறவைப் பெற்றுத்தரும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதுதானே.
"யாவர்க்குமாம் இன்னுரை தானே' என்று திருமூலர் சொல்வதுபோல, அன்போடு அண்டை, அயலாருடன் நட்புகொண்டு பழகுதல் அஷ்டமச் சனிக்கான எளிய பரிகாரம்.
வரவுக்குமீறிய செலவுசெய்யும் மனையாட்டி இருந்துவிட்டால்- அதுவும் தனக்கு அஷ்டமச்சனி என்று ஔவையார் சொல்வதை நோக்கும்போது, அஷ்டமச் சனியை வேறு எங்கே யும் தேடிப் பார்க்கத் தேவையில்லை என்பது போல தோன்றுகிறதா?
வாரம்தோறும் பியூட்டி பார்லர் போகும் பெண்கள், பீரோவில் அடுக்கிவைத்த ஆடைகளை ஒதுக்கி விட்டு, தேவையில்லாமல் ஆடைகளை வாங்கிக் குவிக்கும் இல்லத் தரசி, வீட்டில் தின் பண்டங்களைச் செய்ய சோம்பல்பட்டு, பாக்கெட்டில் அடைத்துவைத்த ஆரோக் கியமில்லாத தின் பண்டங்களை வாங்கித் தின்பதுடன், தன் பிள்ளைகளுக்கும் தந்து பணத்தை விரயமாக்கும் மனையாட்டி என ஒரு குட்டி பட்டியலைப் போட்டுக்காட்டாமல், சுருக்கமாக வரவுக்குமீறிய செலவுசெய்யும் மனையாட்டி என்று குறித்துச் சொல்லி, இந்த மூவரில் மூன்றுமோ ஏதாவதொன்றோ ஒருவருக்கு அமைந்துவிட்டால்கூட, அது அவருக்கு அஷ்டமச்சனி என்று சொல்கிறார் ஔவையார்.
அதுசரி; அஷ்டமச்சனி என்றால் அத்தனை துன்பமா என்று கேட்கவருகிறீர்கள். ஏழரைச் சனியைவிட அஷ்டமச் சனியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் குறிப்பு. ஏனென்றால், சனி ராசிக்கு எட்டாமிடத்தில், வரும்போது, சனியின் பார்வை, 10-ஆமிடம், 2-ஆமிடம் மற்றும் 5-ஆமிடங்களில் விழுகிறது.
அதனால் 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்தை பாதிக்கும். 2-ஆமிடமான குடும்பத்தை பாதிக்கும். 5-ஆமிடமான பூர்வபுண்ணிய பலன்களை பாதிக்கும்.
ஒரு மனிதருக்கு நிம்மதியைத் தருவதே இந்த மூன்றுதானே. அதனால்தான் அஷ்டமச்சனி என்றால் அலட்சியம் காட்டக்கூடாதென்று எச்சரிக்கையாக சொல்கிறோம்.
இத்தனை பிரச்சினைகளை அஷ்டமச்சனி தருமென்றாலும் ஒருசிலருக்கு அஷ்டமச் சனி நன்மை தரும் சூழலும் உண்டு.
ஓருவர் ஜாதகத்தில் ராசி அல்லது லக்ன கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்று லக்ன யோகராகி அவர் தசை நடைபெறும் காலங்களில் அஷ்டமத்துச்சனி வந்தால் ஜாதகருக்கு பூமியாலும் மனையாலும் வாகனத் தாலும் யோகம் அமையும். ஆனாலும் மன சஞ்சலம் இருக்கும்.
ஓருவர் ஜாதகத்தில் தனாதிபதி, லாபாதிபதி தசை நடந்து ஆட்சி, உச்சம் பெற்று நல்ல இடங்களிலிருந்து, சனிக்கு நட்பு கிரகமாக இருந்தால் அஷ்டமத்துச்சனி நடந்தாலும் அரசியல் மூலமாகவும் வெளிநாட்டுத் தொடர் பாலும் யோகத்தை அடைய வாய்ப்புண்டு. இருந்தாலும் உடல்நலனில் பாதிப்பேற்படும்.
இவர்களுக்கு பரிகாரமாக நாம் சொல்வது உணவும் ஒழுக்கமும்தான். முடிந்தவரை அதிகாலையில் எழுந்திருக்கப் பழகுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை, எட்டு மணி நேரமாவது மௌனவிரதம் கடைப்பிடியுங்கள். வாய்ப்பு கிடைப்பவர்கள் சனிக்கிழமைதோறும், வெள்ளை எள்ளை தேவைக்கேற்ப வறுத்துப் பொடித்து (மொத்தமாகப் பொடித்து வைத்துக்கொள்ளக் கூடாது) சாதத்தில் கலந்து உப்பு சேர்க்காமல் சாப்பிடலாம். சுவை விரும்பியென்றால், கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
பஞ்சமுக ஆஞ்சனேயர், பஞ்சமுக கணபதி போன்ற பஞ்சமுக மூர்த்திகளை வழிபாடு செய்யுங்கள். தமிழ் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் திருஞான சம்பந்தர் அருளிய பச்சைப் பதிகத்தை தினமும் தவறாமல் படனம் செய்யுங்கள் அல்லது ஆடியோவில் கேளுங்கள். உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வன்னி மரத்தை வலம்வந்து வழிபாடு செய்யுங்கள்.
இவை எதுவுமே செய்யமுடியாதென்றால், சனிப் பிரதோஷத்தன்று திருமுறைப் படனம் செய்து சிவ வழிபாடு செய்யுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172