"கொடு' என்பவர்களைவிட, "எடு' என்பவர்கள் இன்றையநாளில் அதிகமாகிவிட்டனர்.
இறந்தவர்களுக்குத் திதி அல்லது தர்ப்பணம் தரவேண்டுமென்று சொன்னால் பலரும் அதனைச் செய்யாமல், அதற்குக் காரணம் தேடுகின்றனர். மக்கள் மத்தியில் மாற்றம் வந்துவிட்டது.
"ஜீன்ஸ் போட்டால் பொண்ணு, சுடிதார் போட்டால் ஆன்டி, சேலை கட்டினால் பாட்டி' என சேர்த்துச் சொல்லும்படி காலம் மாறிவிட்டது. "ஒட்டிக்கோ கட்டிக்கோ' என உடைகள், நாகரீகம் என்ற பெயரில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
காலத்திற்கேற்ப வாழப் பழகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும், இன்றைய இளைய செல்லங்களுக்கு நமது தமிழ்க் கலாச்சாரத்தை சொல்லிப் புரியவைக்க வேண்டாமா என்ற ஏக்கம்தான் இதுபோன்ற சிந்தனைகளை எழுத வைக்கிறது.
இன்றையநாளில் இளைய தலைமுறைகள் அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படி சொல்லித் தருபவர்களும் குறைவு. அதனால் அதைக்கேட்டுக் கொள்பவர்களும் குறைவு. தவறுகளும் தவறவிட்டவையும் இருபக்கமும் உள்ளன. நாமும் இதை இப்படியே விட்டுவிட முடியுமா என்ன?
இப்போது பாருங்கள்... மஹாளய பக்ஷம் தொடங்கிவிட்டது. மஹாளய பக்ஷம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்கள். இந்த பதினைந்து நாட்களில் செய்யவேண்டிய சடங்குகள், அதனால் கிடைக்கும் பயன்கள், எப்படி இறந்தவர்களுக்கு, எப்போது இந்த திதி தரவேண்டுமென சொல்லத் தொடங்கினால் ஒருசில பக்கம் போதாது.
அது தொடர்பான சில சிந்தனைகளைத் தேவைக்கேற்ப உங்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களும் அறியச்செய்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.
பிறப்பென ஒன்றிருந்தால் இறப்பென நிச்சயம் இருக்கும்தானே. கரு உருவாகி அது திருவாக வேண்டுமென்பதுதான் பிறப்பின் நோக்கம். இது இப்படியே நடக்கிறதா என்றால், அது ஒரு பில்லியன் டாலர் கேள்வியாகதான் நம் முன்வந்து நிற்கும். இது சரியுமல்ல; தவறுமல்ல. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும். இதுதான் பக்குவம் வந்த மனதின் நிலை.
இந்த உலகில் பிறந்த எவரும் ஏதோவொரு வகையில் துன்பத்தை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுத்துச்சொல்ல ஒருவரும் இருக்கமுடியாது. அவரவர் வினைவழியே அவரவருக்குப் பிறப்பு. இன்ப- துன்பங்கள், பேறு, இழவு, இன்பமொடு பிணி, மூப்பு, சாக்காடு இவ்வுறும் முன் கரு உட்பட்டது என சாத்திரம் சொல்லும். இதனை பூர்வஜென்ம புண்ணியமென ஐந்தாம் பாவத்தைக் காட்டி சோதிடம் சொல்லும்.
கடிகாரம் தோன்றுவதற்குமுன்பு முன்னோர்கள் சூரியனைப் பார்த்து நேரத்தைக் கணித்தார்கள்.
அப்படியானால் சூரியன் தோன்றுவதற்கு முன்னால் என யோசித்துப் பார்த்தால் இருட்டாகவே இருக்கிறது. அந்த கொடிய இருளில் கிடந்த உயிர்கள்மீது இரக்கம்கொண்டு இறைவன் அந்த உயிர்கள் உய்யும்பொருட்டு லோகங் களை படைத்துக் கொடுத்தான்.
உடலைப்பெற்ற அந்த உயிர்கள் விருப்பு- வெறுப்புக்கேற்ப நல்லன மற்றும் அல்லன செய்து வினையைக் குவித்துக்கொள்கின்றன. இந்த வினை அனுபவமே பிறப்பும் இறப்புமாக வருகிறது. இந்த பிறப்பு- இறப்பானது உடலுக்கே அன்றி உயிருக்கில்லை.
நம்மில் பலரும் பிறப்புக்குச் செய்யும் சிறப்பை இறப்புக்குச் செய்வதில்லை. இங்கேதான் தொடங்குகிறது சிக்கல். இந்த தொடர்ச்சியில் நன்றி மறந்து நலன்கெட்டு, வளம் குறைந்து என வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம்.
நம்மை மீட்டுப் பேணிக் காத்தவருக்கு நன்றிசொல்ல வேண்டாமா? இந்த நன்றி தெரிவிக்கும் உணர்வு எல்லா உயிர்களிடத்தும் உண்டு. மற்ற உயிர்கள் வயிற்றுக்கு உணவு கிடைக்கும்வரைதான் நன்றிகாட்டும். அப்படி நன்றிகாட்டுவதால் அவை மேல்நிலையை அடைகின்றன. அப்படி நன்றிகாட்டும் செயல்தான் பிதுரர் வழிபாடு.
"சரி; இருப்பவர்களுக்குதானே நன்றிசொல்ல வேண்டும். இறந்துவிட்டால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? அப்படி நன்றிசொன்னால் அது அவர்களுக்குப் போய்ச் சேருமா? "இதெல் லாம் சும்மா சார்.. யாரோ பிழைப்பு நடத்த இப்படி ஒன்றைச் செய்துவிட்டுப் போய் விட்டார்கள்' என்பர் சிலர்.
இறந்தவர்களுக்குதானே திதி தரவேண்டும்... அப்படியென்றால் அந்த திதி கொடுக்கும் சடங்கில் இறந்தவர்கள் பெயரைச் சொல்லிதானே சடங்கு செய்கிறார்கள். பெயர் உடலுக்கு தானே? அந்த உடலைதான் எரித்து அல்லது புதைத்துவிட்டோமே! அப்படி எரித்து அல்லது புதைத்துவிட்ட உயிரற்ற அந்த உடலுக்கு அதன் பெயரைச் சொல்லி சடங்கு செய்வது மூடத்தனம் இல்லையா என கேட்க சிலர் நம்முன் வந்து நிற்பர்.
"புரியாத மொழியில் என்னவோ சொல்றாங்க.
புரிந்துகொள்ள நமக்கும் தெரியவில்லை. புரிகிற மாதிரி சொல்ல அவர்களுக்கும் தெரியவில்லை. என்னமோ போங்க சார், என்னோட பர்ஸை காலி பண்ண இப்படி எதையாவது சொல்லி சிக்கவைத்து விடுகிறார் கள்' என்று சந்தேகங்களை மூட்டைகட்டிக் கொண்டுவந்து நம்மிடம் கொட்டுவார்கள்.
பித்ரு சாபம், பித்ரு தோஷம், பிரேத சாபம் என சோதிடத்தைப் பார்த்துக் குறிப்புகள் சொன்னால் சோதிடர்களையும் சேர்த்து ஒரு திட்டு திட்டிவிட்டுப் போவார்கள். பிறருக்குக் கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமைப்படாத ஒரே விஷயம் மரணம் மட்டும்தான். அந்த மரணத்தை வெல்ல யாராலும் முடியாது. எந்த அறிவியலாலும் முடியாது. ஆனால் இந்த இறப்பு சடங்கிலும் சரி;
இறந்தபிறகு செய்யவேண்டிய சடங்குகளிலும் சரி- பலரும் அக்கறை கொள்வதில்லை.
இதில் அடிப்படை உணர்வு நன்றி தெரிவித்தல்தான். ஆனால் சிலர், தன்னை வளர்த்து பெயர், பதவி என வாங்கிக் கொடுத்த சிலரிடம்கூட நன்றிகாட்டாமல் எட்டி உதைக்கும் ஈன குணத்துடன் இருப்பார்கள். இங்கேதான் தவறுகளும் சிக்கல்களும் சேர்கின்றன. "நன்றி மறப்பது நன்றன்று' என சொன்ன வள்ளுவரும், இந்த பிதுரர் வழிபாடு பற்றி சொல்லாமலில்லை. "தென்புலத்தார்' என்று இவர்களை சிறப்பு சொல்லிக் காட்டுகிறார்.
இந்த சிக்கல்களை ஜாதகத்தில் நமக்கு அடையாளம் காட்டுபவர்கள் இருள் கிரகங் களும், ஒளி கிரங்களும்தான். பூர்வபுண்ணிய ஸ்தானமென சொல்லப்படும் ஐந்தாம் பாவக மும், சௌபாக்கியம் என சொல்லப்படும் ஒன்பதாம் பாவகமும்தான். இந்த இடங்களி லுள்ள கிரகச் சேர்க்கை இந்த தோஷங்களை கோடிட்டுக் காட்டிவிடும். இந்த தோஷங் களைப் பட்டியலிட்டு சொன்னால் பயமாக தான் இருக்கும்.
மஹாளய அமாவாசையில் பிதுரர் வழிபாடு மட்டுமே சிந்தனையில் இருக்கட்டும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172