சுமார் 70 வயதுடைய பெரியவர், நாடியில் பலன்கேட்க வந்தார்.
அவர் தான் ஒரு ஜோதிட ரென்றும், மேலும் தன்னைப் பற்றி சில விவரங்களையும் கூறிவிட்டு, "எனக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்கு 36 வயது; இளைய வனுக்கு 32 வயது. இருவருக்கும் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது'' என்றார்.
"ஜோதிடராகிய நீங்கள், அவர்கள் ஜாதகம்மூலம் திருமணத் தடைக்குக் காரண மறிந்து, பரிகாரங்களைச் செய்ய வில்லையா?''
"ஜாதகத்தில் கிரகங்கள் நிலை, தோஷமறிந்து நானும் பரிகாரங்களைச் செய்தேன். வேறு ஜோதிடர்களிடமும் பலன் கேட்டு, அவர்கள் கூறிய சாந்திப் பரிகாரங்களையும் செய்தேன். ஆனால் தடை விலகி, திருமணமும் நடக்கவில்லை. இப்போது அகத்தி யரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவ நாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன் கூறினார்.
"இந்த ஜோதிடனின் இளைய மகனுக்கு முதலில் திருமணம் நடந்து முடிந்தால்தான், அதன்பிறகு மூத்த மகனுக்குத் திருமணம் நடக்கும். இளைய மகனுக்கு உறவில் பெண் வளர்ந்துவருகிறாள்!
அவனுக்கு திரு மணத்தை முடிக்கச் சொல்.''
"அகத்தியர் கூறுவது உண்மை தான். எனது தங்கையின் பேத்தியை இளைய மகனுக்கு மணம் முடிக்க உறுதி செய்துள் ளோம். இவனைத் திருமணம் செய்து கொள்ளவே வளர்ந்துவருகிறாள். ஆனால், அண்ணன் இருக்க தம்பிக்கு எப்படித் திருமணம் செய்வது? இது முறையல்லவே'' என்றார்.
"ஊரும், உறவும், என்ன சொல்லுமென்று யோசிக்கும் இவன், தன் வம்ச சாபம்பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறான்? இவன் வம்சத்தில் ஒரு பாட்டனுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு குழந்தையில்லையென்று, அவளே தன் தங்கையை இரண்டாந்தாரமாக, தனது கணவனுக்கு மணம் முடித்து வைத்தாள். இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் முதல் மனைவிக்கு குடும்பத்தினரிடம் பாசமும், மரியாதையும் குறைந்தது. அதன்பிறகு முதல் மனைவி கர்ப்பமடைந்து அவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.
அக்காளுக்கு மகன் பிறந்தவுடன், சொத்தில் பங்குபோட ஒருவன் பிறந்துவிட்டான் என்று எண்ணிய தங்கை, அக்காவையும், அவள் மகனையும் கீழ்த்தரமாக நடத்தத் தொடங்கினாள். கணவனும் தன் இளைய மனைவியின் பேச்சைக்கேட்டு, அவர்களை சரியாக கவனிக்காமல் அலட்சியப்படுத்தினான்.
இரண்டு மகன்களும் திருமண வயதை அடைந்தார்கள். இளைய மனைவி பெற்ற முதல் மகனுக்கு சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், முதல் மனைவியின் மகனுக்குத் திருமணம் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
முதல் மனைவி, தன் மகனின் திருமணத்திற்கு கணவனோ, குடும்பத்தினரோ எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டு தன் உறவிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள். அப்போது அவள் மனம் வெறுத்து, இந்த வம்சம் விளங்க ஒரு வாரிசு பிறக்கவேண்டு மென்று, உடன்பிறந்த தங்கைக்கு என் வாழ்வை விட்டுக்கொடுத்தேன். ஆனால் பணம், சொத்திற்கு ஆசைப்பட்டு, அக்காள் என்று பாராமல் என்னையும், என் மகனையும் ஒதுக்கிவிட்டாள். என் கணவனையும் எங்கள்மீது பாசம் காட்டவிடாமல், ஒரு மகனுக்குத் தந்தை செய்யவேண்டிய கடமை யைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டாள்.
இந்த வம்சத்தில் இனி பிறக்கும் ஆண் குழந்தைகளில் இளைய மகனுக்குத் திருமணம் நடந்தபின்புதான் மூத்த மகனுக்குத் திருமணம் நடக்கவேண்டும்' என்று மனம் வருந்தி சாபமிட்டாள். இந்தப் பிறவியில் அந்த சாபம், இவன் மூத்த மகனைப் பற்றிக்கொண்டது.
வம்சத்தில் அந்த தாய்விட்ட சாபம் நீங்கவும், மூத்த மகன் திருமணம் நடக்கவும், தம்பிக்கு முதலில் திருமணம் செய்துவைக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் திருமணம் முடியாது.''
"இரண்டு மகன்களில், மூத்தவனுக்கு மட்டும், இந்த சாபம் பாதிப்பு தருவது ஏன்?''
"வம்சத்தில் உண்டான ஊழ்வினை, சாபப்பதிவுகள் யாரைப் பற்றுகின்றதோ, யார் அனுபவிக்கவேண்டுமென்ற விதி உள்ளதோ, அவர்கள் வாழ்க்கையில் மட்டும் பாதிப்பைத் தரும்'' என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலை யிலிருந்து மறைந்தார்.
"ஜீவநாடிமூலம் என் மகன்கள் திருமணத் தடைக்குக் காரணம் அறிந்தேன். அகத்தியர் கூறியபடியே செயல்படுகின்றேன். ஆனால் எனது சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள். ஜாதகத்தைக்கொண்டு யாருக்கு முதலில் திருமணமென்று அறிந்துகொள்ள முடியாதா?'' என்றார்.
"வேத ஜோதிடமுறையில் கிரகங்களைக் கொண்டு, பாவம், பாவாதிபதிகளைக் கொண்டு அறியமுடியாது. ஜோதிடர்கள் கூறும் பலன் கணக்கு வேறு; கர்மவினை, விதிக் கணக்கு வேறு. ஆனால் சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடம்மூலம் இதை அறிந்துகொள்ளலாம்'' என்று கூறி, அவரின் இரண்டு மகன்களின் ஜாதகம்மூலம் விளக்கிக் கூறி அனுப்பிவைத்தேன்.
செல்: 99441 13267