ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசிக்கு மாறுவார். அவர் மேஷ ராசியில் இருந்தால் அது சித்திரை மாதமாகும். ரிஷபத்திற்குப் போகும்போது வைகாசி மாதமாகும். இவ்விதமே சூரியன் நகரும்போது மாதங்கள் மாறும்.
இதில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சிபெறுவார். மேஷத்தில் உச்சம்பெறுவார். துலாத்தில் நீசமாகிவிடுவார். மேலும் விருச்சிகம், தனுசு, கடகம், மீனம் ஆகிய ராசிகள் சூரியனுக்கு நட்பு வீடுகள். ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்குப் பகை வீடுகளாகும்.
இவ்வாண்டு சித்திரை 1-ஆம் தேதி, ஏப்ரல்- 14 அன்று சூரியன் தனது உச்சவீடான மேஷ ராசிக்குள் கம்பீரமாக நுழைவார். ஆனால் அங்கு ஏற்கெனவே ராகு இருந்து, "வா ராசா வா' என்று வரவேற்பு கொடுப்பார். (வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என இரண்டின்படியும் ராகு சித்திரை மாதம் மேஷ ராசியில்தான் இருப்பார்.) இந்த ராகுவின் வரவேற்பைக் கண்ட சூரியன் கலவரமடைந்துவிடுவார். ஏனெனில் சூரியன், ராகு இணைவு எப்போதும் ஒரு கிரகண இருள் நிலையைக் கொடுத்துவிடும். ராகுவின் மறைவுத் தன்மையிலுள்ள சூரியனால் தனது முழுத் திறமையை வெளிப் படுத்த இயலாது. அவர் பொலிவிழந்து விடுவார். செயலற்ற நிலைக்குத் தள்ளப்படுவார். சரி; இதன் பின் விளைவுகள் எவ்விதம் அமையும்?
முதலில், சித்திரை மாதம் என்றாலே வெயில் கொளுத்தும் என்னும் கருத்து உடைபடும். இந்த சித்திரையில் வெயில் சுமாராகதான் இருக்கும். இதை நம்பி யாரும் வற்றல், வடகம் போடவேண்டாம். ராகு ஒரு வறண்ட கிரகம். எனவே அதிக உஷ்ணம், வெயில் இல்லாமல் ஒரு வறட்சிநிலை காணப்படும். சிம்ம, மேஷ ராசியினரின் நிலை சற்று சங்கடமாகதான் இருக்கும்.
அரசாங்கம் தனது திட்டப் பணிகளை செயல்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்படும். வறட்சி பரவும். இதுவரையில் லஞ்சப் பணத்தில் திளைத்த அதிகாரிகள் சற்று பின்னடைவைக் காண்பர். கண் பாதிப்பு ஏற்படும். லஞ்சப் பணப் பரிவர்த்தனையில் குழப்ப நிலை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தீய பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டு; கவனம் தேவை. சில தந்தைகள் அளவுக்கு மீறி மது அருந்துவர். கலைத்துறை விரும்பத் தகாத விஷயங்களை சந்திக்கும்.
பங்கு வர்த்தகத்தில் சில பங்குகள் மிக உயர்வை சந்திக்கும். சில நம்பகமான பங்குகள் பாதாளத்தில் சரியக்கூடும். அறுவை சிகிச்சையின்போது அதிக கவனம் தேவை. சட்டப்புறம் பான செயல்கள் அதிகம் நடக்கும். அரசுக்கு எதிரான போராட்டம் வேறு மதத்தினரால் ஏற்படும். ஏமாற்றுவேலை மிகும். வெளிநாட்டுப் பயண விஷயங்களில் கவனம் தேவை. எதிர்மறைச் செயல்கள் புரிவோர் ஏற்றம் பெறுவர்.
ஏப்ரல்- 14 முதல் மே- 14 வரை (சித்திரை மாதம்) மேஷத்தில் உச்ச சூரியன் ராகுவுடன் இருப்பார். அதிலும் குறிப்பாக மே- 11 முதல் மே- 14-ஆம் தேதிவரை சூரியனும் ராகுவும் கிருத்திகை 1-ஆம் பாதத்தில் சஞ்சரிப்பர். ராசி, அம்சம் இரண்டிலும் ஒன்றாக இருந்து வர்க்கோத்தமம் பெறுவர். இது நன்மைதரும் வர்க்கோத்தமம் அல்ல. மேலும் இரு கிரகங்களும் ஒரே நட்சத்திர சாரத்தில் நிற்பதால் கிரக யுத்தமும் பெறுவர்.
எனவே இந்த சித்திரை மாதம்- குறிப்பாக மே- 11 முதல் 14 வரை அரசு சார்ந்த விஷயம், ஆபரேஷன், பயண திட்டம், கண் சம்பந்தம், தந்தையுடனான உறவு, மலை, காடு சஞ்சாரம் என இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதய பாராயணம், துர்க்கை வழிபாடு நல்லது. கூடியமட்டும் அமைதியாக இருக்கவும்.
செல்: 94449 61845