மனிதர்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் தாம் செய்யும் செயல்கள் விருத்தியுடையதாக இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு சிலருக்கு காரிய சித்தி, காரிய விருத்தி இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சிறு செயலை சாதிப்பது கூட குதிரைக்கு கொம்பு முளைத்தது போல் இருக்கும்.
ஒருசிலர் செய்யும் செயல் ஏன் விருத்தி யாகிறது என்ற ரகசியம் தெரிய அனை வருக்கும் ஆர்வம் இருக்கும். மனித வாழ்க்கைக்கும் புராதன சம்பவங் களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. நவகிரகங்கள் ஒன்பது. நிழல் கிரகங்களான ராகு- கேதுவை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களுக்கும் வாரத்தின் ஏழு நாட்கள் உள்ளது. ராகு- கேதுவிற்கு வார நாட்களில் கிழமை இல்லாத காரணத்தால் தினசரி ஒன்றரை மணி நேரம் ராகுகாலம், எம கண்டமாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சனி, ஷேஸ்டா தேவியின் புதல்வனான குளிகனுக்கு ராகு- கேதுவைப்போல் தினமும் ஒன்றரைமணி நேரம் குளிகை நேரம் என்ற பெயரில் வழங்கப் பட்டுள்ளது. இந்த குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் அசுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆனால் எந்த நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். இந்தக் காலத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் அசுப காரியங்களைத் தவிர்ப்பதுடன் வாழ்வில் திரும்பவும் நடைபெறக்கூடாத சுபநிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக்கூடாது. இத்தகைய சிறப்புகளைக்கொண்ட குளிகன் பிறந்த கதையை பார்க்கலாம்.
குளிகன் பிறந்த கதை
"இராவணின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது இராவணன் தன் குலகுருவான சுக்ராச்சாரி யாரைச் சந்தித்து, யாராலும் வெல்லமுடியாத அழகும் அறிவும்கொண்ட மகன் தனக்கு பிறக்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு அவர் "அனைத்து கிரகங் களும் ஒரே கட்டத்தில் இருக்கும் போது குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை எல்லா சிறப்புகளையும் பெற்ற தாக இருக்கும்'' என்று கூறினார். இதைக் கேட்ட இராவணன் உடனே நவகிரகங்களை சிறைபிடித்து ஒரே அறையில் அடைத்தான். நவகிரகங்கள் தாங்கள் ஒரே இடத்தில் இருப்பதை எண்ணி, நடக்கவிருக்கும் விபரீதத்தை நினைத்து பயந்தனர்.
அதே சமயம் மண்டோதரிக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு பெரும் தவிப்பில் இருந்தாள். இதைக் கேள்விப்பட்ட நவகிரகங்கள், "தங்களால்தான் இவ்வாறு நடக்கிறதோ?' என்று எண்ணி பயந்து குருவிடம் யோசனை கேட்டனர். "இதிலிருந்து விடுபட உங்கள் ஒன்பது பேரைத்தவிர நல்லது செய்யும் இன்னொரு வரை சிருஷ்டித்து அவ னுக்கென்று தனியாக ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கொடுத்தால் நன்மை உண்டாகும். இதனால் மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் நடக்கும். நீங்களும் விடுதலையாகலாம்'' என்று கூறினார் குரு. இதனால் சனீஸ்வரர் தனது சக்தியினால் தன் மனைவி ஜேஸ்டாதேவிக்கு ஒரு மகனைப் பிறக்க செய்தார். அவனே குளிகன் ஆவான். குளிகன் பிறக்கும்போது மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் ஆனது. பிறக் கும்போதே நல்லதை நடத்திவைத்த குளிகன் நவகிரங்களால் பாராட்டப்பட்டான். அவன் பிறந்த நேரம் குளிகை நேரமென்று தினமும் பகலிலும், இரவிலும் ஒன்றரை மணி நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் செய்யும் எந்த காரியமும் கைக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ராகு காலம், எமகண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை. ராசி பலன் பகுதியில் நாளிதழ், வார இதழ், காலண்டர் போன்றவற்றில் குளிகை நேரம் என்று குறிப்பிட்டு இருக்கும். அதேபோல் ஜாதகக் கட்டத்தில் மாந்தி என்று குறிப்பிடப் பட்டு இருக்கும் மாந்தியே குளிகன் ஆவார். பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப்படுகிறது. குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பத்தை செழிக்க வைக்கும். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட் டது என்பதால் சனிபகவானை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம். காரிய விருத்தி தரும் குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.
குளிகை நேரத்தில் செய்யக்கூடிய செயல்கள்
சுப செயலான நகை, நிலம், வீடு, வாகனம் வாங்குவது, பத்திரப் பதிவு செய்வது புதிய தொழில் தொடங்குவது, வங்கிக் கணக்கில் பணம் போடுவது, அடமானப் பொருளை மீட்பது போன்ற நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். மேலும் விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம். வீட்டில் பெண்கள், குழந்தைகள் உண்டியலில் தினமும் பணம்போட்டு வந்தால் சேமிப்பு மலைபோல் வளரும். புதிய அணிமணிகள் அணியலாம். பிறந்தநாள் கொண்டாடலாம். ஆயுஷ் ஹோமம் செய்ய லாம். மிகக்குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள், குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால் கடன் விரைவில் அடை படும். கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிமுதல் 1.30 மணிவரை மற்றும் சனிக் கிழமை காலை 6.00 மணிமுதல் 7.30 மணிக் குள் கடனில் சிறுபகுதியை கொடுத்துவர கடன்தொகை எளிதில் குறையும்.
குளிகை நேரத்தில் செய்யக்கூடாத செயல்கள்
பெண் பார்க்கச்செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, இண்டர்வியூக்கு செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுபோல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்கவேண்டும். நோய்க்கு மருத்துவரை அணுகக்கூடாது. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து சாப்பிடக்கூடாது.
கிழமைகள் குளிகை நேரம்
ஞாயிறு 3.00-4.30
திங்கள் 1.30-3.00
செவ்வாய் 12.00-1.30
புதன் 10.30-12.00
வியாழன் 9.00-10.30
வெள்ளி 7.30-9.00
சனி 6.00-7.30
ஒருவரது கர்மவினைகளை நீக்கும் வல்லமைபெற்ற தெய்வம் கால பைரவர். ராகு காலத்தைவிட குளிகை கால மந்திர ஜெபம் கோடி மடங்கு சக்திவாய்ந்ததது. தினமும் குளிகை நேரத்தில் அவரவரின் காரிய வெற்றிக்கு உரிய மந்திரத்தை நம்பிக்கையுடன் பாராயணம் செய்வதால் நலம் பல பெறமுடியும். சனிக்கிழமை மாலை நேரத்தில் குளிகனை வணங்கலாம். சனீஸ்வரரை வணங்கும்போது குளிகனையும் சேர்த்து வணங்குவது சிறப்பு. ஆகவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்திபெற நல்வாழ்த்துகள்.
செல்: 98652 20406