ரு நல்ல காரியத்தை மேற்கொள்ளும் பொழுது எந்த நேரத்தில் செய்யவேண்டும் என அறிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் உண்டு. நாம் ஒரு நல்ல நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால் அது நமக்கு சாதகமாக இருக்குமென்ற நம்பிக்கையில் கேட்கிறார்கள். பொதுவாக எந்தவொரு செயலைச் செய்வதென்றா லும் நாள், நேரம் பார்த்து செய்யும்வேண்டுமென்று கூறுவார்கள். நாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்கள் நல்ல நேரத்தில் செய்தால் அது சாதகமாக இருக்கும் என்பது உண்மை.

பொதுவாக நல்ல நேரம் பார்க்கும்பொழுது மாதத்தில் ஐந்து அல்லது ஆறு முகூர்த்த நாட்கள்தான் வரும். அந்த ஐந்து அல்லது ஆறு முகூர்த்த நாட்கள் தனிப்பட்ட மனிதருக்கு ஒத்துவருமா என பார்த்துதான் செய்யவேண்டும். முகூர்த்த நேரங்கள் குறிக்கின்றபொழுது என்னென்ன விஷயத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென பார்ப்போம்.

ss

குறிப்பாக ஒரு தனி மனிதனுக்கு திருமணம், திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள், வீடு குடிபோதல், மனை பூஜை செய்தல் ஆகிய நிகழ்வுகளை மேற்கொள்ளும்பொழுது மிக முக்கியமாக தாராபலன் இருக்கிறதா என பார்க்கவேண்டும். ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 9-ஆகிய நட்சத்திரங் கள் தாராபலனுள்ள நட்சத்திரங்களாகும். அடுத்து சந்திராஷ்டமம் வராத நாட்களாக இருக்கவேண்டும். அடுத்து ஜென்ம நட்சத்திரத்திற்கு 7-ஆவது நட்சத்திரம் இருக்கக்கூடாது. இந்த அடிப்படையில் ஒரு நல்ல நேரம் குறிக்கும்பொழுதுதான் அது நமக்கு மிகவும் சாதகமான நேரமாக இருக்கும்.

Advertisment

திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் மேற்கொள் ளும்பொழுது குரு, சுக்கிரன் ஆகிய சுப கிரகங்கள் அஸ்தங்கம் இல்லாத நேரங்களில் நாள் குறிப்பது மிகவும் நல்லது. திருமண நாள் குறிக்கும்பொழுது ஆண்- பெண் இருவருக்கும் தாராபலன் இருந்தால் மிகமிகச் சிறப்பு அல்லது இருவரில் ஒருவருக்கு தாராபலன் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் 7-ஆவது நட்சத்திரம் கூடாது.

சுப காரியங்கள் மேற்கொள்ளும்பொழுது சில குறிப்பிட்ட நட்சத்திரங்களில் மேற்கொண்டால் அது மிகவும் சிறப்பு. குறிப்பாக 27 நட்சத்திரங்களில் ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் சுப காரியங்கள் மேற்கொள்வது மிகமிக நல்லது. அஸ்வினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் செய்யலாம். திதிகளில் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதிசி, திரயோதசி ஆகியவை மிமிக நல்லது. மேற்கூறிய திதி, நட்சத்திர நாட்களில் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நல்ல காரியங்கள் மேற்கொள்ளலாம். மேற்கூறிய திதி, கிழமை, நட்சத்திர நாட்களில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய லக்னம் உள்ள நேரங்கள் மிகவும் நல்லது.

திருமண முகூர்த்தத்திற்கு, முகூர்த்த லக்னத்திற்கு 3, 6, 11-ல் பாவிகள் இருப்பது நல்லது. 7-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கக்கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு 6, 8-ல் சுக்கிரன், புதன் இருப்பது நல்லதல்ல. முகூர்த்த லக்னத் தில் குரு, சுக்கிரன் ஆகிய சுப கிரகங்கள் இருந்தால் தோஷ நிவர்த்தியுண்டு என்ற கருத்துண்டு. அனைத்து சுப காரியத்தையும் வளர்பிறையில் மேற்கொள்வது மிகவும் நல்லதென்றாலும், தேய்பிறைக் காலங்களிலும் பௌர்ணமிமுதல் அஷ்டமிக்குள் உள்ள நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். அமாவாசைக்கு முன் இரண்டு மூன்று நாட்கள் முடிந்தவரை சுப காரியங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

Advertisment

கரிநாள், தனிய நாள், அசுப திதி வரக்கூடிய நாட்களில் திருமணம் செய்யக்கூடாதென்றாலும், தவிர்க்கமுடியாத நேரங்களில் திருமணம் செய்தே ஆகவேண்டுமென்ற ஒரு கட்டாய நிலையில் பிரம்ம முகூர்த்த நேரமான சூரிய உதயத்துக்குமுன்பு குறிப்பாக அதிகாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் திருமண சுப முகூர்த்தம் செய்யலாம். சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய உதயத்திற்குப் பின்பும் எந்தவிதமான தோஷமும் இல்லை என்றொரு கருத்துண்டு.

குருபலம் இருக்கும்பொழுதுதான் திருமணம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குருபலன் இல்லாதபொழுதும் ஜாதகரீதியாக சுபகிரக தசாபுக்தி நடைபெறும்பொழுது திருமணம் செய்யலாம். குருபலம் இல்லாத காலத்திலும், கோட்சாரத்தில் குரு வக்ரகதியில் சஞ்சரிக்கும்பொழுது திருமணம் செய்யலாம்.

கத்திரி காலத்தில் திருமணம் செய்யலாமா என்று பலர் கேட்கிறார்கள். குறிப்பாக கத்திரி காலத்தில் புதுமனைப் புகுதல், மனைபூஜை செய்யக்கூடாதே தவிர, திருமணம் சார்ந்த சுப காரியங்கள் தாராளமாக செய்யலாம். மணமகன்- மணமகளுக்கு அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும்பொழுது திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்து கிடையாது. மணமகன்- மணமகளுக்கு சுப கிரக தசை, புக்தி நடந்தால் நல்ல காரியங்கள் மேற்கொள்ளலாம்.

தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் திருமணம் செய்யக்கூடாத மாதங்கள் என இருந்தாலும், மாசி, பங்குனி மாதங்களில் சிலர் திருமணம் செய்கிறார்கள். ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்கள் ஆடி, புரட்டாசி மாதங்களிலும் திருமணம் செய்கிறார்கள். தமிழர்கள் காலை நேரங்களில் திருமணம் செய்கின்றனர். ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்கள் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் திருமணம் செய்கிறார்கள். சனிக்கிழமை நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றாலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் சனிக்கிழமையும் திருமணம் செய்கிறார்கள்.

திருமணம் சார்ந்த முக்கிய நிகழ்வான நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல் போன்றவை மேற்கொள்வதற்கு திருமணத்திற்குக் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றாலும், நிச்சயம், பெண் பார்த்தல் போன்ற நிகழ்வுகளுக்கு சனி, செவ்வாய் ஆகிய கிழமைகளைத் தவிர மாலை நேரங்களில்- குறிப்பாக ஆறு மணிக்குமேல் குரு, சுக்கிரன், புதன் ஆகிய சுப கிரகங்களின் ஓரைகளில் நல்ல காரியங்கள் மேற்கொள்ளலாம்.

புதிய வீடு குடிபோக மேற்கூறிய விதிகளைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் புதிய வீடு குடிபோக கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் மேற்கொள்வது மிகவும் உத்தமம்.

ஒரு சுப காரியம் மேற்கொள்ள மேற்கூறிய விதிகளைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் குரு, சுக்கிரன், புதன் ஆகிய சுப ஓரைகளில் மேற்கொள்ளும்பொழுது அது நல்ல பலனைத் தரும். குறிப்பாக பணம் கொடுக்கல்- வாங்கல், பத்திரப்பதிவு, ஒப்பந்தம் செய்தல், பதவியேற்றல் போன்ற செயல்களை முகூர்த்த நாட்களில் குரு, சுக்கிரன், புதன் ஆகிய சுப ஓரைகளில் செய்வது மிகவும் நல்லது.