ஜோதிட சூட்சுமத்தில் கிரக அவஸ்தை களும் அடக்கம். ஒரு கிரகம் சாதகம் செய்யுமா- பாதகம் செய்யுமா என்பதை நிர்ணயிக்க இதுவும் ஒரு வழியாகும். கிரக அவஸ்தை நிலைகள் பலன்களுக்கு சற்று ஒத்துவருகின்றன. கிரக அவஸ்தையில் இரண்டுவித நிலைகள் உள்ளன. ஒன்று கிரகங்களின் தசவித அவஸ்தைகள்- அதாவது ராசி, அம்சம் ஆகிய இரு சக்கரங்களில், ஒரு கிரகத்தின் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமபலம்; அடுத்ததாக அந்த கிரகங்களுக்கு நீசம், அஸ்தங்கம், பகைவீடு, சத்ருகிரகத் தொடர்பு, பாவகிரகங்களின் சாரம், வீடுகளில் இருப்பது, ஸ்தம்பனம் பெற்றிருப்பது, பலவீன கிரகங்களின் பார்வை மற்றும் தொடர்பில் இருப்பது ஆகியவற்றாலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. அதனை ஒரு பட்டியலிட்டு பத்துவித கிரக அவஸ்தைகளாகக் காட்டபட்டுள்ளது.

மனித வாழ்க்கையில் ஒரு நல்ல நிகழ்வு நம்மை சந்தோஷப் படுத்தும்போது, "என்ன இது, ஒரு சுப அவஸ்தையாக இருக்கிறதே' என்று மகிழ்ச்சி கொள்வோம். அதேசமயம் பாதிப்புகள் வரும்போது, "என்னடா இந்த பெரிய அவஸ்தைக்கு உள்ளாகி இருக்கிறோம்' என்று வேதனை அடைகிறோம். அதேபோல் கிரகங் களுக்கும் இத்தகைய நிலைகளை சாஸ்திர கர்த்தாக்கள் நிர்ணயித்திருக்கிறார்கள்.

ss

முதலில் சொன்ன தசவித அவஸ்தைக்கு அதன் பலனை எப்படி அறிவதென்று அங்கேயே தரப்பட்டுள்ளது. இரண்டாவதாக டிகிரி. ஒரு பாவம் முப்பது பாகை கொண்டது. பன்னிரண்டு ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசி என்று அட்டவணைப்படுத்தி, அந்த முப்பது பாகையை ஐந்து அவஸ்தைகளாக அட்டவணைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கக்கூடிய அந்தப் பாகை ஆண் ராசியா, பெண் ராசியா என்பதைப் பார்த்து, எந்த பாகையிலுள்ளது- அது எந்த அவஸ்தை- சுபமா, அசுபமா என தாங்கள் அறிந்துகொள்ளலாம். இதில் சுப கிரக அவஸ்தையில் முக்கிய கிரகங்களான லக்னாதிபதி, ராசியாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதி பதி, ஜீவனாதிபதி இவர்கள் இருப்பது நன்மை. பலவீன அவஸ்தைகளில் கெட்ட ஆதிபத்திய கிரகங்கள் இருப்பது ஒருவகையில் சாதகமே. இதற்கும்மேல் டிகிரி அவஸ்தையில் சூட்சும ஆய்வாகிய சனி, ராகு- கேதுக்கள், சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன், குரு, சந்திரன் இவர்கள் எந்த அவஸ்தையில் குறிப்பாக இருந்தால் பாதகம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அவஸ்தை தொடர்புடைய கிரக தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் கண்டம், பிரிவுகள், பிரச்சினைகள், வழக்குகள், பண இழப்புகள் போன்ற நிகழ்வுகள் ஏற்படும். இதற்குரிய பரிகாரம் குலதெய்வ பூஜைகள். மேலும் எந்த கிரகங்களால் இந்த அவஸ்தை ஏற்பட்டிருக்கிறதோ. அந்த கிரகங்களுக்கு உண்டான அதிதேவதைகள், அதன் ஆலயங்கள் சென்று வழிபடவேண்டும். குறிப்பாக தாரா பலம், சந்திர கோட்சாரம் இவற்றை அறிந்து சென்று குறிப்பிட்ட நாளில் வணங்கவேண்டும். இன்னும் பஞ்சபட்சி அறிந்திருந்தால் அதன்மூலம் கால நேரங்களை அறிந்து, அந்த நாளில் சென்று ஆலய வழிபாடு செய்தால் இந்த பாதகங்களிலிருந்து இறையருளால் தப்பித்துக்கொள்ளமுடியும்.

தீப்த அவஸ்தை (உச்சம், மூலத் திரிகோணம்)

தீப்த அவஸ்தையென்பது உச்ச ராசியில் அல்லது மூலத்திரிகோண ராசியில் ஒரு கிரகம் அமைவதாகும். தீப்த அவஸ்தையில் இடம் பெற்றிருந்தால் அந்த கிரக தசையில் அந்த ஜாதகர் அரச வாழ்வை அனுபவிப்பார். தனவானாவார். கீர்த்தி, வித்தை, சௌகரியம் போன்ற அனைத்தையும் இந்த ஜாதகர் பெறுவர் என்பது சாஸ்திர விதி.

ஸ்வஸ்த அவஸ்தை

ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் இருப்பதாகும். ஜீவனாதிபதி இப்படிப்பட்ட அவஸ்தையில் இடம்பெற்றிருந்தால், தனது தசையில் உடல் ஆரோக்கியம், தன, தான்ய, சம்பத்தின் மிகுதியான சேர்க்கை போன்றவற்றை வாரி வழங்கும்.

முருதிக அவஸ்தை

ஒரு கிரகம் நட்பு வீட்டில் இருப்பதைக் குறிக்கும். அரசு ஆதரவு, அதிக சுகம், சம்பத்து ஆகியவற்றைத் தரும்.

சாந்த அவஸ்தை

ஒரு கிரகம் சுபகிரக சாரத்தில் இருப்பது அல்லது சுபர் இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். சௌகரியம், சம்பத்து, அரசு ஆதரவு, உற்சாகம் போன்றவற்றைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

ஸக்த அவஸ்தை

ஒரு கிரகம் அம்சத்தில் உச்சம், ஆட்சிபெற்று பிரகாசமாய் இருப்பதைக் குறிக்கும். இந்த ஜாதகருக்கு கல்வி, ஞானம், தன சம்பத்து, தானதர்ம காரியங்கள் போன்றவற்றைத் தரும்.

பீடிதா அவஸ்தை

ஒரு கிரகம் பகை கிரகத்துடன் கூட்டாக அமைந்து கிரக யுத்தத்தில் தோல்வி காண்பதைக் குறிக்கும். பயம், இழப்பு, சத்ருக்கள், இளைய சகோதர பாதிப்பு நடைபெறும்.

தீன அவஸ்தை

ஒரு கிரகம் அம்சத்தில் பகை இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். இந்த ஜாதகருக்குத் தரித்திரம், பீடை வழக்கு விவகாரம், பிரிவு ஏற்படுத்தும்.

விகல அவஸ்தை

ஒரு கிரகம் நீச இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். தனது தசையை நடத்தும்போது அந்த ஜாதகருக்கு நோய் நொடிகளையும், மனச்சோர்வையும் கவலையையும், ஏதேனும் இழப்புகளையும் உண்டாக்கும்.

கல அவஸ்தை

ஒரு கிரகம் பாவ கிரக சாரம் அல்லது அம்சத்தில் பாவ கிரகங்களின் இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். அதிசாரம் அமைவது. இதனால் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தி, எதிலும் தெளிவில்லாதவராக ஆக்கிவிடும். அபவாதம், வெளியிட பாதிப்பு, இடமாற்றம் உண்டாக்கும்.

பீத அவஸ்தை

ஒரு கிரகம் சூரியனுடன் கூடி அஸ்தங்கம், ஸ்தம்பனம் பெற்றிருப்பதைக் குறிக்கும். ஜீவனாதிபதி இப்படிப்பட்ட கிரக அவஸ்தை யில் இருந்து, அக்கிரகம் தனது தசையை நடத்தினால் ஜாதகருக்கு அடிக்கடி சத்ரு தொல்லை, பயம், இழப்பு, பாதகம், தண்டனை, மாரகம், கண்டம் ஏற்படுத்தும் என்பது சாஸ்திர விதி.

குறிப்பு: இந்த அவஸ்தைகளிலிருந்து கிரகங்கள் தசாபுக்தி நடத்தினால், ஜனனம், கோட்சாரம் இரண்டின்படியும் நாம் ஆராயவேண்டும். இதற்கு இயற்கை பரிகாரம்- எந்த அவஸ்தைகயில் கிரகம் இருக்கிறதோ. அது தாராபலம் உள்ள நட்சத்திர டிகிரி அல்லது யோகம் தரும். புஷ்கராம்ச புள்ளி நட்சத்திர சாரத்தில் இருப்பின் அல்லது இக்கிரக அவஸ்தையுள்ள கிரகங்களை சுபர்கள் பார்த்தால், சுபர், யோகர்கள் தொடர்பு ராசியின் அதிர்ஷ்ட பாகையில் இவர்கள் இருந்தால், இந்த பாதிப்பான அவஸ்தையில் இருந்து நீங்கி சாதகமான பலனை இறைசக்தி தரும். தான தர்மம், ஓமம், பூஜை, ஜெபம், தொழுகை, ஆலய தரிசனம்மூலம் பாதிப்பான அவஸ்தையிலிருந்து விடுபடலாம்.

செல்: 94431 37989