னிதர்களின் அத்தியாவசிய தேவை களில் முக்கிய பங்குவகிப்பது இருப்பிடம். வசிக்கும் இருப்பிடமான சொத்து என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருந்துவருகிறது. இத்தகைய சொத்தை சிலர் ஏதேனும் காரணத்திற்காக விற்க முயலாம்.

குறிப்பாக குடும்பத்தின் சுபதேவைகளாக திருமணம், பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் தேவைகள் அல்லது எதிர்பாராத பெரிய இடர்களை ஈடுசெய்ய அல்லது சிறிய சொத்தை விற்று அதிக முதலீட்டில் பெரிய புதிய சொத்துகள் வாங்குதல் போன்றவற்றிற்காக விற்க முயலலாம். சிலர் விற்கவேண்டும் என்று முடிவு செய்தவுடன் எளிதாக உடனே விற்க முடியும். குறிப்பிட்ட சிலரின் சொத்து கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் விற்க முடிவதில்லை. தேவைக்கு விற்கமுடியாமல் அவசர தேவை களை நிறைவு செய்யமுடியாத சொத்து இருந்து என்ன பயன் என்பது பலரின் ஆதங்கம்.

ss

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்திற்கு ஏக்கரா கணக்கில் சொத்து இருந்தது. அவருக்கு மூன்று பெண் பிள்ளை கள், நான்கு ஆண் பிள்ளைகள். ஜாதகருக்கு நிலையான தொழில் உத்தியோகம் கிடையாது. அவருடைய அனைத்து சொத்துகளும் அவருடைய தந்தையின்மூலம் கிடைத்த பூர்வீகச் சொத்து மற்றும் பிள்ளையில்லாத தாய்மாமன்மூலம் பெற்ற அதிர்ஷ்ட சொத்து. அன்றாட குடும்பத் தேவைகளை தன் நிறைவு செய்ய ஜாதகர் அடிமாட்டு விலைக்கு ஒரு பகுதியை விற்பார். அடிப்படை தேவைகளை நிறைவுசெய்து கொள்வார்கள். இவ்வாறே சொத்தை மிக சொற்ப தொகைக்கு விற்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்தார். குட்டி ஜமீன் என்றுகூட சொல்லலாம். அவ்வளவு சொத்து இருந்தும் ஜாதகரால் அந்த சொத்தை உரிய நேத்தில் உரிய விலைக்கு விற்கவும் முடியவில்லை. அந்த சொத்துகளைச் சுற்றி அரசு அலுவலகங்கள் இருந்தும் அந்த சொத்து ஏன் நல்லவிலைக்கு விற்பனையாக வில்லை? 15 வருடங்களுக்குமுன்பு தனது 90 வயதில் ஜாதகர் இறந்த நிலையில் அவரின் ஆறு பிள்ளைகளுக்கும் சொத்துகள் பிரிக்கப்பட்டது. அவர்களுக்கும் பெரிய அளவில் இவ்வளவு சொத்துகள் இருந்தும் யாருக்கும் பயன்படவில்லை. இது நெருங்கிய உறவினர்களின் குடும்பத்தில் நடந்த சம்பவம். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் நன்கு பரிட்சயமான குடும்பம். 2023-ல் என்னை அணுகினார்கள். சில எளிய தாந்தரீக பரிகார பூஜைகள்மூலம் ஒவ்வொருவரும் தனித்தனியே தங்கள் சொத்துகளை பல கோடிக்கு விற்றுவிட்டார்கள்.

அன்றாடம் ஜாதகம் பார்க்கவரும் நபர் களில் பலர் விற்கமுடியாத சொத்து பிரச்சி னைக்கு வருகிறார்கள். பலர் பயனடைந்தும் உள்ளார்கள். என்னிடம் ஜாதகம் பார்த்த "பாலஜோதிட' வாசகர்களுக்கு ஜாதகத்தை வைத்தே ஒரு சொத்திலுள்ள நிறை குறைகளைக் கூறிவிடு வேன் என்று தெரியும். சில இக்கட்டான பிரச்சினைக்கு பிரசன்னம்மூலமும் தீர்வு கொடுக்கமுடியும்.

ஒரு ஜாதகத்தில் மனிதர்களுக்கு தோஷமுள் ளதுபோல் சொத்திற்கும் சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபம், பெண் சாபம், தெய்வ சாபம், சல்லிய தோஷம், தவறான கிணறு, மூடப்பட்ட கிணறு போன்ற பல்வேறு குற்றங்களால் சொத்தை பயன்படுத்த முடியாத- விற்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இது எனது பலவருட ஆய்வில் நான் கண்ட உண்மை. என் அனுபவத்தில் நான்கண்ட சில தோஷங்களையும் அதை நிவர்த்திசெய்த முறையையும் இந்த கட்டுரையின்மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தனி நபர்களின் சொத்திற்கு இந்த நிலை என்றால் சொத்து வாங்குதல் மற்றும் விற்பனையைத் தொழிலாகக்கொண்ட சில ரியல் எஸ்டேட் துறையினருக்கு சொத்து இருக்கும் இடம்கூட தெரியாது. ஆனால் உட்கார்ந்த இடத்திலிருந்து நிமிடத்தில் ஒரு போனில் சொத்தை விற்று சம்பாதித்து குவிப்பார்கள்.ஒருசிலருக்கு ஒரு சொத்தைக் கூட விற்று காசு பார்க்கமுடியாமல் அடையும் இன்னல்கள் அளப்பரியது. தனி மனிதருக்கு சொத்து விற்பதிலுள்ள இன்னல்கள் என்ன? ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர் எளிதாக சொத்து விற்று காசு பார்ப்பது எப்படி போன்ற வற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

சொத்தும் நான்காம் பாவகமும்

ஒரு மனிதன் தன் வாழ்வில் சரீரரீதியாக அனுபவிக்கும் அனைத்து சுக- துக்கங்களும் சுக ஸ்தானத்தில் அடங்கும். ஒருவருக்கு வாழ்வில் கிடைக்கும் வீடு, வாகன யோகம், பூமி யோகம், கல்வி நிலை, கால்நடை வளர்ப்பு யோகம், தாயின் நிலை ஆகிய வற்றை நான்காம் பாவகம் எனும் சுகஸ்தானம் மூலமே அறியமுடியும். ஒரு ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி, 4-ல் நின்ற கிரகம் பலமாக இருந்தால் சுபகிரகங்கள் சம்பந்தம் இருந்தால் சொத்து உண்டு. ஸ்திர சொத்துகள் அமைய வேண்டுமென்றால், ஒரு ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாயும் பலமுடன் இருக்கவேண்டும். அத்துடன் அந்த ஜாத கத்தில் 9-ஆம் அதிபதியும் வலுவுடன் இருக்க வேண்டும். 5, 9-ஆம் பாவக பலத்திற்கு ஏற்ப சொத்துகளின் எண்ணிக்கை இருக்கும்.

நான்காம் அதிபதி லக்னத்தில்

நான்காம் அதிபதி ஒன்றாமிடமான லக்னத் தில் நின்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கௌரவத்துடன் வாழ்வார்கள். பெரிய பண்ணையாளர்களாக இருப்பார்கள். தாய்வழிப் பூர்வீகச்சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப் படுத்தலாக இருக்கும். இந்த அமைப்பு உள்ளவர்கள் சொத்துவாங்க நினைத்தவுடன் வாங்குவார்கள். இந்த சொத்து தனக்கு வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்றுவிடுவார்கள். இவர்களுக்கு சொத்து வாங்குவது- விற்பது சுலபமாக இருக்கும். இந்த அமைப்புள்ள ரியல் எஸ்டேட் துறையினர் அதிகமாக சம்பாதிப்பார்கள்.

நான்காம் அதிபதி இரண்டில்

சுக ஸ்தானத்துடன் தன ஸ்தானாதிபதி சம்பந்தமிருந்தால் அசையும்- அசையாச் சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பேச்சை மூலதனமாகக்கொண்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம்.

அல்லது சொத்துகளை வாடகைக்குவிட்டு பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்புள்ள ரியல் எஸ்டேட் துறையினருக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதன்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். தாய்மூலம் வருமானம் உண்டு.

இந்த அமைப்பு உள்ளவர்கள் சொத்து வாங்குதல், விற்றல்மூலம் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

நான்காம் அதிபதி மூன்றில்

சுக ஸ்தானத்திற்கு 3-ஆம் அதிபதி சம்பந்தம் இருந்தால் சொத்து வாங்குவதும் விற்பது மிகச் சுலபமாக இருக்கும். லக்ன பாவத்தின் பாவத் பாவம் 3-ஆம் பாவகம் என்பதால் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகையே விலை பேசி விற்றுவிடுவார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் பலகோடி சம்பாதிப்பார்கள். எவ்வளவு பெரிய சொத்தாக இருத்தலும் அதை விற்பனை செய்யும் திறமை இருக்கும். சொத்தில் வில்லங்கம் இருந்தாலும் உடனே அதை சரிசெய்து விடுவார்கள். சொத்திற்கு ஆவணங்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதில் வல்லவர்கள். இந்த அமைப்பு உடையவர்கள் விற்காத, விற்க முடியாத சொத்தின் அருகில்சென்று நின்றாலே சொத்துகள் விற்றுவிடும்.

நான்காம் அதிபதி நான்கில்

சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் தாய், தாய்வழி உறவினர் களின் அன்பும் அனுசரனையும் பெற்றவர்கள். தாய்வழிச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். நல்ல வீடு, மனை யோகம் தாய்வழியில் ஏற்படும். நிலச்சுவாந்தார்கள். இவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால் விற்கவரும் சொத்தில் பணத்தை முதலீடுசெய்து தன் பெயரில் பதிவுசெய்து கொள்வார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொத்தின் மதிப்பு உயரும்போது விற்று பணம் சம்பாதிப்பார்கள். சொத்தின் மதிப்பு உயர்வதையும் எதிர்கால விலை உயர்வை நிர்ணயம் செய்வதில் வல்லவர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவர்களிடம் ஆலோசனை கேட்பார்கள்.

நான்காம் அதிபதி ஐந்தில்

முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீக சொத்து நிச்சயம் உண்டு. வம்சா வழியாக பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு. குலப் பெருமை, கௌரவம் உண்டு. சொத்துகள் குவிந்துகொண்டே இருக்கும். சொத்துகள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் கார்ப்ரேட் நிறுவனத்தினர். சொத்துகள் தொடர் பான ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத் துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும். இவர்களுக்கு கோவில், வழிபாட்டு ஸ்தலங்கள், அரசு அலுவலகங்களுக்கு அருகில் சொத்து இருக்கும்.

நான்காம் அதிபதி ஆறில்

கடன்பெற்று சொத்தை உருவாக்குபவர்கள். மேலும் சொத்தின் மதிப்பைவிட கடன் தொகை அதிகமாகும். வருமானம் முழுவதும் சொத்தை காப்பாற்றவே செலவு செய்பவர்கள். பல வருடங்களாக சொத்து அடமானத்தில் இருக் கும். இந்த அமைப்பினரின் சொத்தை எளிதில் விற்கமுடியாது அல்லது விற்பனையாகாது. 4, 6-ஆம் அதிபதிக்கு குரு,லகன சுபர் சம்பந்தம் இருந்தால் சொத்து எளிதில் விற்க- வாங்க முடியும்.

நான்காம் அதிபதி ஏழில்

இந்த அமைப்பினருக்கு சொத்து வாங்குதல்- விற்றல் இரண்டும் சுலபமாக நடைபெறும். நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவார்கள். இவர்கள் சுய தேவைக்கு வாங்கும் சொத்தைக்கூட மனைவி அல்லது குடும்ப நபர்களின் பெயரில் இணைந்து வாங்குவார்கள். லக்ன சுபர் மற்றும் குரு பார்வை இருந்தால் திருமணத்திற்குபிறகு அடிக்கடி சொத்தை வாங்குவது- விற்பது சுலபமாக நடந்துகொண்டே இருக்கும்.

நான்காம் அதிபதி எட்டில்

நான்காம் அதிபதி எட்டிலிருந்தால் எளிதில் சொத்து அமையாது. அப்படியே சொத்து இருந்தாலும் அதை பயன்படுத்தமுடியாது. சொத்து தொடர்பான ஒருவரின் சாபமே இந்த அமைப்பு. நித்திய கண்டம் பூரண ஆயுள் என சொத்துகளால் தீராத தொல்லை இருக்கும்.

நான்காம் அதிபதி ஒன்பதில்

பூர்வீக சொத்து, தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்து கள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகம் உண்டு. தன்னை சார்ந்தவர் களுக்கு சொத்து தொடர்பான ஆலோசனை வழங்கி வழிநடத்துபவர்கள். வாழ்வின் இறுதிகாலம்வரை சுகமாக வும் அமைதியாகவும் வாழ்க்கை இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் பதவி, புகழ், அந்தஸ்து டன் கோடீஸ்வராக வாழ்வார்கள்.

நான்காம் அதிபதி பத்தில்

சுய உழைப்பில் நிச்சயம் வீடு யோகம் உண்டு.

வீடு, கடை வாடகை, ரியல் எஸ்டேட், கட்டு மானப்பணி, ஒப்பந்த தொழில், டிரேடிங், கமிஷன் விற்பனை லாபம் உண்டு. மாமியார் வழிச் சொத்தால் ஆதாயம் உண்டு. சிந்தித்து செயல் படும் நல்லறிவு மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொத்தை வாங்கி லாபம் வைத்து விற்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

நான்காம் அதிபதி பதினொன்றில்

தாயார் உயர் குடும்பத்தில் பிறந்தவர். நல்ல கல்வியாளர். ஜாதகர் தொட்டது துலங்கும். சுமாரான குடும்பத்தில் பிறந்தாலும் எளிய உழைப்பில் கோடீஸ்வர யோகத்தை அடை வார்கள். சுய உழைப்பில் முன்னேறுவார்கள். வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாளர்களாக- சாதனையாளர்களாக வலம்வருவார்கள். தன் சொத்து கணக்கு ஜாதகருக்கே தெரியாது. ரியல் எஸ்டேட் தொழிலில் சாதனை படைப்பவர்கள்.

நான்காம் அதிபதி பன்னிரண்டில்

ஒருவரின் ஜாதகத்தில் சாபத்தைப் பற்றிக் கூறுமிடம். இந்த அமைப்பு ஒருவரின் சாபத்தால் உருவாகுவது. முன்னேற்றத்திற்காக அதிக பொருள் விரயத்தை சந்திக்க நேரும். சொத்து அமையாது. சொத்து இருந்தாலும் தேவைக்கு பயன்படாது. ஓய்வின்றி குடும்பத்திற்காக இறுதி மூச்சுவரை உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பொதுவாக சுக ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள், லக்ன சுபர் ஆகியவை இருப்பது சிறப்பு. 4-ல் வக்ர, நீச, அஸ்தமன கிரக அமர்வு, தொடர்பு, 4-க்கு ராகு- கேது மாந்தி தொடர்பு ஆகியவை இருந்தால் சொத்து வாங்குதல், விற்றல் சங்கடத்தை ஏற்படுத்தும். இனி அடுத்த வாரம் சொத்துகளுக்கு ஏற்படும் சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், சல்லிய தோஷம், தெய்வ சாபம் ஆகியவற்றுக்கான பரிகாரத்தை உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

தொடரும்...