சுமார் 82 வயதுடைய பெரியவர், பத்து வயது பேரனுடன் நாடியில் பலன்காண வந்திருந்தார்.
"இவன் எனது கொள்ளுப்பேரன். எங்கள் வீட்டில் ஒரு ஆண் உருவத்தைப் பார்த்ததாகப் பலமுறை கூறியுள்ளான். ஆனால் நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. ஒருநாள் நானும் அவனும் ஒன்றாக இருக்கும்போது, "தாத்தா, அதோ பார்... ஒருவர் அந்த ரூமுக்குள் செல்கிறார்' என்றான். நானும் அவன் கூறிய பக்கம் பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. "யாரும் இல்லையடா' என்றேன். ஆனால் அவன் தான் பார்த்தது நிஜம் என்றான். அவன் கூறுவது உண்மையா? உண்மையானால், அந்த உருவம் யார் என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடிவந்தேன்'' என்றார்.
பெரியவர் கூறியது ஆச்சரியமாகவும், நம்பமுடியாததாகவும் இருந்தது. "இதைப் பற்றி வேறு யாரிடமாவது விளக்கம் கேட்டீர்களா?'' என்றேன்.
"யாகம் செய்துவைப்பவர்கள், குறி சொல்லும் பூசாரிகள் மந்திரிவாதிகள் என பலரிடம் கேட்டேன். அவர்கள் பரிகாரங் களைச் செய்யக் சொன் னார்கள். சிலர் எங்கள் குலதெய்வக் கோவில் சென்று படையல் போட்டு, கிடா வெட்டி வணங்கச் சொன்னார் கள். அவர்கள் கூறியதையெல்லாம் செய்தேன்.
ஆனால் பலனில்லை. அந்த உருவத்தை அவ்வப்போது இன்னும் வீட்டில் பார்ப்பதாகக் கூறுகிறான்.''
அவர் கூறியதைக்கேட்டு, அரை மனதுடன் ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இவன் பாரம்பரியமான செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்து தலைமுறைக்குமுன்பு இவன் முன்னோர்களால் கட்டப்பட்ட வீட்டில்தான் இப்போதும் வசித்துவருகிறான். அந்த வீட்டில்தான் பேரனும் ஒரு உருவத்தைப் பார்த்ததாகக் கூறுகிறான். இவன் பேரன் கூறுவது உண்மைதான். அது இவன் வமச முன்னோர்களில் ஒருவன் ஆத்மாதான்.
வம்ச முன்னோர்கள் காலத்தில், இவன் தந்தையின் பாட்டன் ஒருவன் வேறு ஊருக்குப் பயணம் சென்றபோது, விபத்தில் இறந்தான். உயிர் விடும்போது, "வாழவேண்டிய வயதில் தனது இளம் மனைவி, சிறு வயது குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் போகிறோமே, அவர்கள் நிலை என்னவாகுமோ' என எண்ணியே இறந்தான். அதனால் அவன் ஆத்மா சாந்தியடையவில்லை. அவன் இறந்தபிற்கு அந்த குடும்பத்தில் பல குழப்பங்களும், சிரமங்களும் உண்டானது. காரணம் புரியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.
அந்த ஊரிலேயே வசிக்கும் இவன் உறவினர் ஒருவன், "வெளியூர் சென்று விபத்தில் இறந்துபோனவனின் ஆத்மா அமைதியில்லாமல் இருக்கிறது. தன் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறது. இது என் கனவில் தோன்றிக் கூறியது' என்றான்.
தங்கள் வீட்டில் ஏற்படும் சிரமங்களுக்கு அந்த ஆத்மாதான் காரணமென்று எண்ணி, விபத்தில் அவன் உயிர்விட்ட இடத்தில் இருந்து, பிடிமண் எடுத்துவந்து, தாங்கள் வசிக்கும் வீட்டில் வைத்து, அதை பூஜையறை என்று கூறி இதுநாள்வரை தெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். குடும்பத்தில் எந்த சிரமும் ஏற்படாமல், முன்னோரின் ஆத்மா பாதுகாத்து வருகிறது. அந்த உருவம் இவன் முன்னோர்களில் ஒருவன்தான்.''
"வம்ச முன்னோரின் ஆத்மா, மற்ற வாரிசுகளாகிய எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் என் பேரனுக்கு மட்டும் தெரிவது ஏன்?''
"ஒருவர் இறந்துவிட்டால், மண், நீர், வெப்பம் ஆகியவற்றால் உருவான உடல் அழியும். ஆனால் ஆன்மா, உயிர் அழியாது. அது அந்தப் பிறவியில் செய்த பாவ- சாப- புண்ணியத்தையும், செய்துமுடிக்க வேண்டிய செயல்களையும் அடுத்த பிறவியில் செய்யவேண்டும். அவரவர் வம்சத்திலேயே பிறந்து கர்மவினையைத்தீர்க்க ஒரு உடல் தேவை. இத்தனைத் தலைமுறையாக அந்த முன்னோரின் ஆத்மாவுக்குத் தகுந்த உடல் அமையவில்லை. இப்போது இந்தப் பேரனின் உடல் அமைந்தது. விபத்தில் இறந்தவனின் ஆத்மா அந்த வம்சத்தில் பிறந்தது. அந்தப் பாட்டன்தான் இந்தப் பேரன். அதனால்தான் இவன் கண்களுக்கு மட்டும் அந்த உருவம் தெரிகிறது. பேரனிடம் அந்த உருவம் வீட்டு சாமியறையில் நுழைந்ததா என்று கேள்.''
அந்தப் பையனிடம் கேட்டபோது "ஆமாம்'' என்றான்.
"விபத்தில் இறந்தவனின் பெயர் சிவன், பெருமாள் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர். இந்த சிறுவனின் பெயரும் இந்த இரண்டு கடவுள்களின் பெயர்களும் இணைந்த பெயர் தானே?''
"உண்மைதான். என் பேரனின் பெயர் சங்கரநாராயணன். இறந்து போனவர் இத்தனை தலைமுறையாக வம்சத்தில் பிறக்காமல், 5-ஆவது தலைமுறையில் பிறந்துள்ளதாக அகத்தியர் கூறுகிறார். இவ்வளவு காலம் அந்த ஆத்மா எங்கே இருந்தது?'' என்றார்.
"ஒரு குடும்பத்தில் இறந்தவரின் ஆத்மா, பூர்வ ஜென்ம பாவ- சாபங்களை, மன ஆசைகளை அனுபவித்துத் தீர்க்க, சரியான உடல் கிடைக்கும்வரை, தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மரணமைடைந்த வீட்டைச் சுற்றியும் வீட்டிலேயே உருவமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும். இறந்தபின்பு, உடல் மட்டும் சுடுகாட்டிற்குச் செல்லுமே தவிர ஆன்மா வீட்டிலேயே நிலையாக வாழும்.''
"இறந்தவர்களுக்கு கடல், நதி, புண்ணியத் தலங்கள், தீர்த்தங்களில் திதி, தர்ப்பணம் கொடுக்கச் சொல்கிறார்கள். இதனால் இறந்தவர்களின் பசி, தாகம் தீருமா?''
"இது சிலரின் நம்பிக்கைச் சார்ந்த செயல்கள் தானே தவிர வேறில்லை. முன்னோர் பூஜை, படைப்பு ஆகியவற்றை அவரவர் வசிக்கும் வீட்டிலேயே முறையாகச் செய்தால் மட்டுமே முன்னோரின் அருள், ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்'' என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
இறந்தவர்களின் ஆத்மா எங்கே இருக்கும்- எப்பொது எப்படி மறுபடியும் பிறக்கும் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267