சென்னையில் உள்ள எனது ஜோதிட நிலையத்திற்கு, ஒரு தாயும், அவரது மகளும் வந்தார்கள். அவர்களிடம், அம்மா என்ன விஷயமாக நாடியில் பலன் கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.

"ஐயா, நான் அரசு அலுவலகம் ஒன்றில், கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வருகின்றேன். இவள் எனது மகள். இந்திய அரசுப் பணிக்கு தேர்வு எழுதியுள்ளாள். அதில் தேர்ச்சி பெறுவாளா? அந்த வேலை இவளுக்கு கிடைக்குமா? என்று ஜோதிடர்களிடம் பலன் கேட்டபோது இவளுக்கு அரசுத் துறையில் பணி செய்யும் வாய்ப்பு இல்லை என்று, ஜாதகத்தில் கிரக அமைப்பு உள்ளது. அதனால் அரசு வேலை கிடைக்காது என்று கூறுகின்றார்கள்.

சிலர் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால், அந்த வேலை கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். அவ்வளவு பணம் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மகள் இந்தப் பரீட்சையில் பாஸ் செய்து விடுவாளா? அந்த உத்யோகம் இவளுக்கு கிடைக்குமா? என்று கேட்கத்தான் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார் அந்த தாய்.

Advertisment

ss

ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். எழுத்து வடிவாகத் தோன்றிய அகத்தியர், இந்தப் பெண் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிபுரிவாள். முதலில் இந்த தாயைப் பற்றிக் கூறுகின்றேன். இவளின் தந்தைக்கு இவள் ஒரே மகள். இவளின் தந்தையும், இவளைப் போலவே அரசுப் பணியில் இருந்தான். அப்போது அவளுக்கு மேலதிகாரியாக, ஒரு பெண் பதவி வகித்தாள். அவளுக்கு கிடைத்த மதிப்பு, மரியாதையைப் பார்த்து, தன் மகளையும், நன்கு படிக்கவைத்து, அதுபோல் உயர்ந்த பதவி வகிக்கவேண்டும். மதிப்பு, மரியாதையுடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், இவளின் இளம் வயதிலேயே தந்தை இறந்து விட்டான். வாரிசு அடிப்படையில் இவளின் கல்வித் தகுதிக்கு தகுந்த அளவு, கடைநிலை ஊழியர் பதவியை அரசு வழங்கியது. இவளின் தந்தை இறந்து, தன் மகளுக்கு வாழ்க்கையைக் கொடுத்தான்.

இவளின் தந்தை இறந்துபோனதால், தந்தையின் நியாயமான ஆசை, தன் மகளின்மூலம் நிறைவேறாமல் போனது. அந்த ஆத்மா, தன் ஆசையை இப்போது, இவளின் மகள், அதாவது, தன் பேத்தியின்மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்து செயல்படுகின்றது.

இவள் மகள் பிறந்ததுமுதல், இவள் தந்தையின், ஆன்மாவின், பாதுகாப்பில் பார்வையில், வளர்ந்தாள் என்பதே உண்மை. இந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது, படித்த அரசு ஆரம்பப் பள்ளிக்கு அருகில் உள்ள அரச மரத்தடியில் ஒரு விநாயகர் சிலை இருந்தது. அப்பள்ளியில் படிக்கும் இவளைச் சேர்ந்த சிறுமிகள் சிலர். பள்ளிக்கு வரும்போது, தனக்கு நல்ல படிப்பு வரவேண்டும் என்று வணங்கிவிட்டு வருவார்கள். ஆனால் அது போன்று இப்பெண் செய்வது இல்லை. படித்தால்தான். படிப்பு வரும், கடவுள் பக்தியால் படிப்பு வராது என்ற எண்ணத்தை தாத்தாவின் ஆத்மா, இவளுக்கு உணர்த்தி வைத்தது. இளம் வயதிலேயே மாயையில் சிக்காமல், நடைமுறை உண்மைகளை போதித்து வந்தது.

இவள் தாயும், நன்கு படித்துக்கொள் என்று இவளிடம் கூறுவாளே தவிர என்ன வேலைக்கு என்ன பாடத்தை எடுத்துப் படிக்கவேண்டும் என்று கூறுவது கிடையாது. தன் மகள் ஏதாவது ஒரு பட்டம் வாங்கினால் போதும் என்றுதான் நினைத்தாள். தாயும், மகளும், எதிர்கால கல்வி, வேலை பற்றி கனவு காணவில்லை. கற்பனையில் வாழவில்லை... எதனையும் திட்டமிட்டுச் செயல்படவில்லை.

இந்தப் பெண், வீட்டில் தாய்க்கு உதவியாக இருந்துகொண்டு, படிப்பிலும், கவனமாக இருந்தாள். ஒரு பட்டமும் பெற்றாள். அதற்குமேல் படிக்க பொருளாதார வசதி இல்லாததால் ஏதாவது, ஒரு வேலைக்குச் செல்லலாம் என முயற்சி செய்தாள், எந்த வேலையும் கிடைக்கவில்லை.

சென்னையில் இவள் வசிக்கும் பகுதிக்கு அருகில், இந்திய அரசுப்பணிக்கு பயிற்சி தரும் நிலையம் ஒன்று இருந்தது. தன் தாயிடம் அனுமதி பெற்று அங்கு சென்று படித்தாள், அந்த பயிற்சி நிலையம்மூலம் உதவி பெற்று, முதல் தேர்வு உழைத்துப்படித்து, அடுத்த நிலை தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவைப் பற்றி அறிய தாயும், மகளும், என்னைத் தேடிவந்துள்ளார்கள்.

இந்தப் பெண்ணின் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும், இவள் தாத்தாவின் ஆத்மாவின், விருப்பப்படியே நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. இந்த தேர்விலும் வெற்றி பெறுவாள். இவளுக்கு இந்த மாநிலப் பகுதியில் உத்யோகம் அமையாது. அண்டை மாநிலத்தில், இந்திய அரசுப்பணி ஏற்று, அதிகாரப் பதவியை அடைவாள்.

இந்தப் பெண்ணின் வாழ்க்கையில், இவளுக்கு கணவனாக வருபவனும் இவளைப் போன்றே நிர்வாகப் பணியில் இருப்பான். இவள் தாத்தாவின் ஆசி முழுமையாக இவளுக்குண்டு. இவள் அரசுப்பணி ஏற்றவுடன், அந்த ஆத்மாவும் தனது முற்பிறவி ஆசை நிறைவேறியதால், அமைதி கொண்டு, சாந்தி அடையும் என்று கூறிவிட்டு, அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அந்த தாயிடம், வம்ச முன்னோர்களுக்கு, வருடம் தவறாமல் வழிபாடு செய்யும் முறையைக் கூறி அனுப்பிவைத்தேன். தாயும், மகளும் அகத்தியரையும், தனது முன்னோர்களையும் வணங்கிவிட்டு மகிழ்ச்சி யுடன் விடைபெற்றனர்.

இருவரும் சென்ற பின்பு, அந்தப் பெண்ணின் ஜாதகத்தில், அவள் பிறந்த நேரத்தை, தமிழ் சோதிட முறையில், துல்லியமாகக் கணக்கிட்டுப்பார்த்தேன்.

அவள் பிறந்த நேரத்தில், இப்பிறவி விதியைப் பற்றிக்கூறும் விதிக்கிரகமும், வாழ்க்கையை வழி நடத்தும் "கதி' கிரகமும் நன்றாகவே அமைந்து இருந்தது. இவளின் விதி கிரகம். இளமையில் வறுமையையும், பின் வயதில் வாழ்வில் செல்வ நிலையைக் குறிப்பிட்டது. வாழ்வின் "கதி' கிரகம், அவள் உயர்ந்த பதவியை அடைந்து, மதிப்பு, மரியாதையுடன் வாழ்வாள் என்று வெளிப்படுத்தியது.

மனிதனாகப் பிறந்து, தனது நியாயமான ஆசைகள் நிறைவேறாமல் இறப்பவர்களின் ஆத்மா, தனது வம்சவாரிசுகளின்மூலம், தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் என்றும், ஒவ்வொருவருக்கும், அவர்களின் முன்னோர்களின் அருளும், ஆசியும், பாதுகாப்பு மட்டும் இருந்தால் அவர்களின் இப்பிறவி விதியும் வாழ்க்கையின் "கதி'யும் சிறப்பாக அமைந்துவிடும் என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

செல்: 99441 13267