சுமார் 55 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்த அவரை, அமர வைத்துவிட்டு, அவரைப் பார்த்தேன். கவலை நிரம்பிய முகம், கண்ணீர் ததும்பிய கண்கள், சரியாகச் சாப்பிடாததால் இளைத்த தேகம், இவர் ஏதோ ஒரு கவலையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்று நினைத்து, அவரை நோக்கி, அம்மா, என்ன விஷயமாக நாடியில் பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.

அந்த அம்மாள் பேசத் தயங்கினார், தடுமாறினார். கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டு வழிந்தது. இதைப் பார்த்த எனக்கும் மனம் கஷ்டமாகிவிட்டது. அவரிடம் அம்மா, "என்னை உங்கள் சகோதரனாக எண்ணிக்கொள்ளுங்கள். எதையும் தயங்காமல் கூறுங்கள். அகத்தியர் எல்லாவற்றிற்கும், காரண காரியத்தைக் கூறி அதற்குத் தீர்வையும், சரியான வழிகளையும் கூறுவார்கள் என்றேன்.

aa

ஐயா, "எனக்கும், என் கணவருக்கும், திருமணம் முடிந்து, 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இருந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தோம். என் கணவர் எனக்கு எதிலும் குறைவைக்கவில்லை. என்றவர், பேசுவதை நிறத்திவிட்டு தேம்பித் தேம்பி அழுதார். நானும் பேசாமல் இருந்தேன். சிறிது நேரத்தில் அவர் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு, ஒருநாள் பகல் சுமார் 11 மணியளவில் நெஞ்சுவலிக்கின்றது என்று கூறினார். அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அடுத்தநாளே அவர் இறந்துவிட்டார்.

என் கணவர் இறந்துபோனதை என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் நினைவு, என்னை வாட்டிக்கொண்டே இருக் கின்றது. மனநிம்மதி இல்லாமல் வாழ்கின்றேன். என் கணவர் திடீரென்று இறந்து போனதற்கு காரணம் என்ன?

நான் இறந்துபோனால், மேலுலகத்தில் என் கணவரின் ஆன்மாவுடன் சேர்ந்து வாழ முடியுமா? என இதுபோன்று இன்னும் சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் எழுத்துவடிவாகத் தோன்றிய அகத்தியர், இந்த மகளின் கேள்விக்கும், நிகழ்வுக்கும் பதிலையும் காரணத்தையும் கூறுகின்றேன், மனதை அமைதிப்படுத்திக்கொண்டு, கவனமாக கேட்டுக்கொள்ளட்டும். முதலில் இவள் கணவனின் இறப்பிற்கு காரணத்தைக் கூறுகின்றேன்.

இவளின் இந்த நிலைக்கு, இவள் போன பிறவியில் செய்த ஒரு பாவச்செயல்தான் காரணம். போன பிறவியிலும் இவர்கள் கணவன், மனைவியாகத்தான் வாழ்ந்தார்கள். சிறிதுகாலம் வாழ்ந்தபின்பு, இவள் தன் கணவனை வெறுத்து வேறு ஒரு ஆணுடன் பழக்கம்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, மாற்றானுடன் சென்றுவிட்டாள். மனைவியின் பிரிவு தாங்காமல், வருந்தியவன், அடுத்த பிறவியிலாவது, அவளுடன் வாழ்க்கை இறுதிவரை வாழவேண்டும் என்று பிரார்த்தித்து, மனைவியின் நினைவாகவே வருந்தி, வாழ்ந்து மறைந்தான்.

சென்ற பிறவியில், இவர்கள் இருவரும், வாழவேண்டிய முழுமையான வாழ்க் கையை வாழ்ந்து முடிக்கவில்லை. குறிப்பிட்ட அளவு தாம்பத்திய உடல் சுகத்தை அனுபவிக்கவில்லை. இவள் செய்த தவறால் இந்த நிலை உண்டானது. அவன் பிரார்த்தனை பலித்தது. தனது முற்பிறவி மனைவியான இவளையே, இப்பிறவியிலும் மனைவியாக அடைந்தான். இவளும் தன் முற்பிறவி கண வணையே மணந்தாள்.

இந்தப் பிறவியில், ஒருவரை, ஒருவர் நேசித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். போன பிறவியில் அனுபவிக்க முடியாமல் போன தாம்பத்திய உடலுறவு கணக்கிணை அனுபவித்து முடித்தார்கள். முற்பிறவி மனைவியுடன் வாழ்ந்து முடிக்கவேண்டிய அனைத்து கர்மவினைக் கணக்கும் தீர்ந்து போனதால், மரணம் அடைந்தான்.

இந்த மகளின் பாவக் கணக்கு இன்னும் தீரவில்லை. இவள் போன பிறவியில் கணவனைப் பிரிந்து சென்றதால், இவளைப் பிரிந்து, அவன்பட்ட வேதனையை, இப்பிறவியில், இப்போது கணவனை இழந்து, அவன் நினைவாகவே வேதனையை அனுபவித்து, அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டு இருக்கின்றாள். போன பிறவியில் கணவனுக்கு செய்த துரோகமும், பாவத்திற் குரிய தண்டணைதான் இப்பிறவியில் கணவன் பிரிவும், இந்த மனவேதனையும் என்பதை புரிந்துக்கொள்ளச் சொல்.

இவளின் இன்னும் ஒரு கேள்விக்கும் பதிலைக் கூறுகின்றேன், இவளுக்கும் இவன் கணவனுக்கும் இந்த பூமியில் இனி பிறவி இல்லை. இதுதான் கடைசிப்பிறவி. இவர்கள் தங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே இவர்கள் மோட்சப் பிறவிகள் என்று தீர்மானிக்கப்பட்டு பிறந்தார்கள். இவர்களின் விந்து, இரத்தம், கருமுட்டை இவற்றின் தொடர்பு பூமியில் இருக்கக்கூடாது என்ற விதிப்படி, இவர்களுக்கு புத்திரபாக்கியம், குழந்தை பிறக்காமல் போனது அடுத்தப் பிறவிக்கு வழி அடைக்கப்பட்டது.

கணவனின், ஆன்மா, கர்மவினைகளை முழுமையாகத் தீர்த்து, காற்று மண்டலத்தில் கலந்து, அமைதியடைந்துவிட்டது. இவள் இன்னும் சிறிது காலம் வாழ்ந்து, கர்மவினைகள் முழுமையாகத் தீர்ந்து இறந்தபின்பு, இவள் ஆன்மாவும் காற்றுமண்டலத்தில் கலந்து, கணவனின் ஆன்மாவுடன் இணைந்து, சாந்தியை அடையும் என்று கூறிவிட்டு, இவள் மனவேதனை படிப்படியாக குறைவதற்கும், வருங்கால வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று சில வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.

ஓலையைப் படித்து முடித்தபின்பு, அந்த அம்மையாரின் முகத்தைப் பார்த்தேன். கொஞ்சம் அமைதி தெரிந்தது. இனி தன்னையறிந்து, கொஞ்சம், கொஞ்சமாத தன் மனவேதனையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்பதைப் புரிந்துகொண்டு, அவரை அனுப்பிவைத்தேன்.

செல்: 99441 13267